Wednesday, February 4, 2009

கீரை சாப்பிட வாங்க

இயற்கையாகவே இலகுவாகக் கிடைக்கக் கூடிய தாவர உணவு இது. விலை குறைந்த போதும் போஷாக்கு மிகுந்தது. பல வகை உணவுகளிலும் சேர்த்துத் தயாரிக்கக் கூடியது.

இரும்புச்சத்து

இதிலுள்ள இரும்பு, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. இரும்புச் சத்துக் குறைவு இரத்த சோகையை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் அறிவோம். அதைத் தடுப்பதற்கு கூடியளவில் கீரைகளை நாளாந்தம் எமது உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

குழந்தைகளுக்கும் இளவயதினருக்கும் கர்ப்பிணிகளுக்கும் மிகவும் முக்கியமானது. அனைவருமே உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.

இலைவகைகள் பலவகையானவை. முளைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்காணி, அகத்தி, வல்லாரை என அடுக்கி கொண்டே போகலாம். கோவா, லீக்ஸ்ம் இலை வகைகளில் அடங்கும்.

கிழங்குகளின் இலைகள்


வத்தாளை, மரவெள்ளி, பீற்ரூட், கரட், முள்ளங்கி, கோலி ப்ளவர், பூசணி இலைகளும் உண்ணப்படுகின்றன. இவற்றில் கிழங்கை விட இலைகளே அதிக சத்துள்ளவை.

எனவே இவற்றின் இலைகளை வீசத் தேவையில்லை. இலைகளை சிறியதாக வெட்டி பருப்பு வகைகளுடன் சமைத்துக் கொள்ளலாம். பொரியல், சூப், சொதி வகைகள் செய்து கொள்ளலாம்.

எமது உணவு அரிசி உணவாக இருப்பதால் தினமும் 50கிராம் ஆவது பச்சையிலைகளை உணவில் சேர்ப்பது மிகவும் அவசியமாகும். இலைகளிலிருந்து இரும்பு, புரதம், கல்சியம், கரட்டீன், நார்ப் பொருள் என்பன எமது உடலுக்குக் கிடைக்கின்றன.

புற்றுநோயைத் தடுக்கும்


இலைகளை அதிகம் உண்பவர்களுக்கு பெருங் குடல், சிறுநீரகம், சுவாசப்பை, மார்பு ஆகியவற்றில் புற்றுநோய் உண்டாவது ஏனையவர்களைவிடக் குறைவு என சில ஆய்வுகள் கூறுகின்றன.

மலச்சிக்கலையும் தடுக்கும்

கீரையில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை ஏற்படுத்தாமல் தடுக்கின்றது. வல்லாரையில் 68.8 மி.கிராம் இரும்பும், பஸன் இலைகளில் 25.5, வத்தாளையிலையில் 16.3, பீட்ரூட் இலையில் 16.2 உண்டு.

'பொன்னை எறிந்தாலும் பொடிக் கீரையை எறியாதே'
'வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் கீரை'
போன்ற பழமொழிகள் உண்டு

கீரை வகைகளின் போஷாக்கு

கொத்த மல்லி,புதினா, கறிவேற்பிலை இல்லாத இலங்கை இந்திய சமையலே இல்லை என்றே கூறலாம். சட்னி, கறிவகைகள்,சூப், பிரியாணி, பூட் டெகரேசன், ஹெல்த், என அசத்தும் இவற்றை குயீன்ஸ் ஒவ் கிறீன் லீவ்ஸ் எனக் கூறினால் மிகையில்லை.

பார்ஸ்லி, செலரி, லெடியுஸ்- மேலைத் தேச உணவுகளில் அசத்தும் இவை சலட், சான்ட்விச், புரியாணி, அலங்கரிப்பதற்காகவும் பயன்படுகின்றன.

முளைக் கீரை சிறுகீரை, அகத்திக் கீரை, அறக்கீரை, காட்டுக்கீரை, மூக்கிறைச்சிக்கீரை, ஆகியன கீரை மசியல், மோர்க் குழப்பு, பொரியல், காரக் குழம்பு, பச்சடி, புட்டு, வடை, சொதி செய்து கொள்ள பயன்படும்.

அகத்திக் கீரையில் அதிகளவு புரதம் (8.4கிராம்), கல்சியம் (1130 மிகி), கரட்டீன் (5280 மைக்ரோ கிறாம்) உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

வெந்தயக் கீரை இதில் கனிம உப்புகள், புரதம், விற்றமின் அடங்கியுள்ளன. வெந்தயக் கீரையுடன் உருளைக்கிழங்கு சேர்த்து வட இந்தியாவில் உணவுகள் தயாரிப்பார்கள். சட்னி, சப்பாத்தி, ரொட்டி, கறி, துவையல், புரியாணி ஆகியன தயாரித்துக் கொள்ளலாம்.

வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும், கண் பார்வைக்கு நல்லது எனக் கூறப்படுகிறது. கஞ்சி, ரொட்டி, சட்னி, சலட் தாயாரிப்பில் பயன்படுகிறது.

பொன்னாங்காணிக் கீரை இரும்பு 2.8(கிராம்), கரோட்டின் (3900 மைக்ரோ கிறாம்) ஆகியன அதிகம் உண்டு. புரதம் 2.7 உள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளக்கும் என முன்னோர் கூறுவர். தலை முடி வளர்த்திக்கும், கண் பார்வைக்கும் நன்மை தரும் என்று சொல்லப்படுகிறது. பால்கறி, பாற்சொதி, பொரியல் செய்து கொள்ளலாம்.


முருங்கைக் கீரை இரும்பு 7.0(கிராம்), கரோட்டின் (3600 மைக்ரோ கிறாம்), கல்சியம் (440 மிகி) உண்டு. குளிர் காலத்திற்கு ஏற்ற உணவாகக் கருதப்படும் இது வெயில் காலத்தில் சாப்பிடுவது வெப்பம் தரும் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு விஞ்ஞான பூர்வ ஆதாரம் இருந்தால் கூறுங்கள்.

கர்ப்பணித் தாய்மாருக்கு உகந்த இலை. பொரியல், பாற்சொதி, ரொட்டி, அடை, வடை, சூப், சாம்பார் சாதம் அவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதேவி

8 comments:

  1. Hi

    We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

    Please check your blog post link here

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Sincerely Yours

    Valaipookkal Team

    ReplyDelete
  2. பொன்னாங்காணிக் கீரையை கரிசலாங்கண்ணிக்கீரை என்றும் சொல்வதா?

    ReplyDelete
  3. மாதேவி கீரையின் பயன்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இழை தழையினைச் சாப்பிடுகிறாரென்று கமெண்ட்ஸ் வேறு வரும். அந்த அளவுக்கு நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் சிறிதும் அக்கரையின்றி இருப்போர் மத்தியில் தங்களது இப்பதிவு சற்று ஆறுதலைத் தருகிறது.

    எனக்குப் பிடித்த கீரை : முருங்கைக் கீரையும் பருப்பு சேர்ந்த கலவைதான். தண்டுக்கீரையில் பருப்புச் சேர்த்துச் செய்யும் கூட்டு வெகு சுவையாக இருக்கும். உடலுக்கு நல்ல புத்துணார்ச்சி தரும்.

    ReplyDelete
  4. very good for every body

    ReplyDelete
  5. நீங்கள் கூறியதுபோல கமெண்ட்ஸ் பார்த்தால் நலமாக வாழ முடியாது.
    முருங்கைக் கீரையும் பருப்பு சேரும்போது இரும்புச்சத்து, நார்ப்பொருளுடன் புரதமும் கிடைக்கிறதல்லவா?
    கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி. அனாமதேயம்.
    பொன்னாங்காணிக் கீரை வேறு, கரிசலாங்கண்ணிக் கீரை வேறு.

    ReplyDelete
  8. நன்றி சிகபாலன்

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்