பாற் பொருட்களில் ஒன்றுதான் தயிர்.
தயிர்
செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், விரத நாட்கள், பொங்கல் பண்டிகைகளின்போது இதற்கு இருக்கும் மரியாதை சந்தை, கடைகள், கொம்பிளக்ஸ், அனைதிலும் எல்லாம் விற்று முடிவிற்கு வந்துவிடும்.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டால் கால்வலியும், புதுச் செருப்பு வாங்க வேண்டிய தேவையும் வந்துவிடாது தப்பித்துக் கொள்ளலாம்.
பசுப்பால், ஆட்டுப்பால், எருமைப்பால் ஆகியவற்றில் தயிர் போடும் வழக்கம் இருந்திருக்கிறது. இப்பொழுது பதப்படுத்திய பால்மாக்களிலும் வீடுகளில் தயிர் செய்து கொள்கிறார்கள்.
இந்தியா, நேபாள், இலங்கை போன்ற ஆசிய நாடுகளில் பெரும்பாலும் தயாரித்துக் கொள்கிறார்கள். மேலை நாடுகளில் இது யோகட் ஆக வேடம் போட்டு வருகிறது.
எருமைத் தயிர் பசும்தயிரைவிட மிகவும் கட்டியாகவும், சுவை கூடுதலாகவும் இருக்கும். எருமை என்று மற்றோரை ஏளனம் செய்வோரும் தயிர் என்றவுடன் ஆகா என வெட்டி வெட்டிச் சாப்பிட தயாராவர்.
சத்துக்கள்
அதிக கொழுப்பு, புரதம் அடங்கியது. லக்டோஸ், விட்டமின், தாதுப் பொருட்கள் இருக்கின்றன.
150 கிராம் வழமையான தயிரில் கலோரி 163, மாப்பொருள் 23.6 கிராம், புரதம் 7.7 கிராம், நிரப்பிய கொழுப்பு 4.2 கிராம், நிரப்பாத கொழுப்பு 2.3 கிராம், கல்சியம் 240 மி.கிராம் இருக்கிறது.
150 கிராம் குறைந்த கொழுப்புத் தயிரில் (Low-fat Curd) கலோரி 85, மாப்பொருள் 11 கிராம், புரதம் 7.7 கிராம், நிரப்பிய கொழுப்பு 1.2 கிராம், நிரப்பாத கொழுப்பு 0.8 கிராம், கல்சியம் 285 மி.கிராம் இருக்கிறது
தயாரிப்பு
பால் காச்சி எடுக்கப்பட்டு ஆறவிடப்பட்டு, பின் உறையெனக் கூறப்படும் ஏற்கனவே புளித்திருந்த தயிரிலிருந்து சில துளிகள் ஒரு ரீ ஸ்பூன் அளவில் கலந்து 10-12 மணி நேரம் சாதாரண அறை வெப்பத்தில் பாதுகாத்து எடுக்கப்படும்.
பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வரும் போஷாக்கு நிறைந்த உணவு இது.
ஆதிதொட்டு மண்சட்டியில் தயாரிக்கப்பட்டு வாட்டிய வாழை இலை அல்லது பேப்பரால் மூடிக் கட்டப்பட்டு ஒன்றின் மேல் ஒன்றாக சட்டிகள் அடுக்கப்பட்டு ஓலை அல்லது நாரினால் தயாரிக்கப்பட்ட உறியில் வைத்து தூக்கி எடுத்து வருவர்.
தற்பொழுது பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைக்கப்பட்டும் விற்பனையாகின்றன.
மட்டக்களப்புத் தயிர்
இலங்கையில் மட்டக்களப்புப் பகுதியில் தயாராகும் எருமைத் தயிருக்கு நீண்டகாலம் தொட்டே பெயரும் கிராக்கியும் இருந்து வருகின்றன.
நாற்திசையும் விருப்ப உணவாகும்
தயிரைப் பொதுவாக சாதத்தில் இட்டு பிசைந்து சாப்பிடுவார்கள்.
தென்பகுதியில் கித்துள் பாணிவிட்டு அருந்தும் வழக்கம் உண்டு.
தென்பகுதி மக்களின் பாரம்பரிய உணவு இது. கித்துள்கம என்ற இடம் கித்துள் பனி (பாணி)க்குப் பேர் பெற்றது. பாம் இனத்தைச் சேர்ந்த கித்துள் மரங்கள் பெரும்பாலும் இங்கு பயிரிடப்பட்டுள்ளமையால் இப் பெயர் உண்டாயிற்று.
ஊரின் பெயரைக் கேட்டாலே கித்துள் கக்குறு (பனங்கட்டி போன்றது) வாயில் இனிக்கும்.
விழாக்கள், விசேட விருந்து உபசார நாட்களில் இந்த வகை டெசேட்டை பழங்கள் நட்ஸ் போன்ற சில பொருட்களைக் கலந்து எடுத்து ரிச்சாக பரிமாறலாம்.
சுவையானதும் சத்து மிகுந்ததுவுமான டெசேட்டாக இதை மாற்றமுறச்செய்யலாம். கொழுப்பு அதிகம் இருந்தாலும் விழாக்களின் போது ஓரிரு தடவை சாப்பிடுவதில் தவறில்லை.
குறிப்பாக பச்சிலர்ஸ் மிக இலகுவாகத் தயாரிக்கக் கூடியது. தயாரிப்பதுடன் சுவையில் கோப்பையையும் காலி செய்து விடுவார்கள்.
மாற்று இனிப்புகள்
கித்துல்பாணி இல்லையே என கவலை வேண்டாம்.
இருக்கவே இருக்கிறது தேன், கோல்டன் சிரப், கராமல்பாணி, சொக்ளட் கலவை ஏதாவதொன்றை விட்டுக்கொள்ளலாம்.
கேட் பனி புருட்ஸ் டெஸேட்
தேவையான பொருட்கள்
எருமைத் தயிர் - 1 சட்டி
வாழைப்பழம் - 4-5(கப்பல் அல்லது ஆனை)
சிவப்பு ஆப்பிள் - 1
கித்துள் பாணி – சிறிய போத்தல்
ரெய்சின் - 25 கிராம்
செரி – 25 கிராம்
கஜூ - 50 கிராம்
செய்முறை
கஜூவை உடைத்து வையுங்கள்
செரியை சிறிதாக வெட்டி வையுங்கள்.
பரிமாறும் நேரம் வாழைப்பழத்தை நீளவாட்டில் இரண்டாக வெட்டி அதை 2 அங்குல துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
அப்பிளை தோலுடன் மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி விடுங்கள்.
சிறிய போல்களை எடுத்து, வெட்டி எடுத்த தயிர் கட்டியை வையுங்கள்.
வாழைப்பழத் துண்டுகள் 5-6யை அதைச்சுற்றவைத்து மேலே கித்துள் பாணி 2 டேபிள் ஸ்பூன் விட்டுவிடுங்கள்.
அதன்மேல் கஜூ, செரி, ரெய்சின் தூவிவிடுங்கள்.
ஆப்பிள் துண்டுகள் 4-5யை சிவப்புப் தோல் வெளியே தெரியும்படி குத்தி வைத்துப் பரிமாறுங்கள்.
அதற்கு முதலே கண்ணும் வாயும் சாப்பிட்டிருக்குமே.
மாதேவி