Showing posts with label சிப்ஸ். Show all posts
Showing posts with label சிப்ஸ். Show all posts

Tuesday, December 29, 2009

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

செவ்வாய் காலை பரபரப்பாகவே விடிந்தது.

காலை உணவு முடித்து விரைந்தேன் வெள்ளவத்தை மார்க்கட்.

கண்கள் சுற்றி வந்தது எதை வாங்கலாம், எப்படிச் சமைக்கலாம்?

கத்தரி, பாவல், வெண்டி, புடொல், முள்ளங்கி...எனப் பரவியிருந்தது.

அதை அடுத்து ....

இன்றைக்கு சந்தைக்கு வந்துவிட்டதே!
மனம் துள்ளியது.

தம்பி ரிஷான் கேட்டிருந்த பொருள் அல்லவா?

விற்றுக்கொண்டிருந்த
'மல்லி'யை நோக்கி

'தெல் கீயத ?'

'திகாய் அக்கே கண்ட'


இன்று என்ன இவ்வளவு மலிவாகச் சொல்கிறான்.

கிடைத்தது மிச்சம்.

பையனிடம் மீண்டும் வாய் கொடுக்காமல், வந்த சிரிப்பையும் அடக்கி
வாயைக் கடித்தபடி நல்ல காயாகப் பார்த்துப் பொறுக்கினேன்.

'யாழ்ப்பாணத்துச் சனங்களுக்கெண்டால்' சாதாரண விலையிலும் 10-20 ருபா கூட விற்பார்கள்.

காசை கொடுத்துவிட்டு காயை வாங்கிக் கொண்டேன்.

அட சற்று அவன் பார்வை சரி.....இல்லை.

அட பயப்படாதீர்கள் என்னை நோக்கியல்ல!

தான் தந்த பலாக்காய் போட்ட ரிசுப் பையின் மேல்தான்! அவன் ஏக்கப் பெரு மூச்சு விடாத குறை.

யாழ்தேவிப் வாசகர்களுக்கு என்று தெரிந்துவிட்டால்......விலையும் மூன்று மடங்காகிவிடும்.

புகை வண்டிபோல் கூவிச் சத்தமிடாது, கடுகதியில் அடுத்த கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

இப்படி சமைத்தகாய் இருமடங்காகச் சுவைக்கும்தானே.

வெப்பவலயப் பிரதேசங்களில் இது வளரும். மலாய்தீவு, மேற்குப் பசுபிக் தாயகமாகக் கொண்ட மரம்.

இலங்கையின் தென்பகுதிகளில் கூடுதலாகப் பயிரிடப்பட்டிருக்கும்.
ஏனைய பிரதேசங்களிலும் பரவலாகவுள்ளது.

பயன்கொடுக்கும் காலத்தில் ஒரே மரம் இருநூறுக்கும் மேற்பட்ட காய்களைத் தரக் கூடியது.

காபோஹைதரேற் கூடியளவு உள்ளது. விற்றமின் சி யும் உண்டு.

முற்றிய பலாக்காயை தேர்ந்தெடுப்பது ஒரு கலை.
அனுபவம் கை கூடவேண்டும்.

வெளித்தோல் விரிந்த கட்டங்களாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பேன்.

விரலால் சுண்டிப் பார்த்தால் காயிலிருந்து 'டங்' என சத்தம் தெறிக்கும்.

தெறித்தது.

அப்படி எடுத்த காயில், சமைத்த கறியின் ருசியைச் சுவைத்துப் பார்க்க வாங்களேன்.

ஈரப்பலாக்காய்க் கறி


தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தேங்காய்ப் பால் - ¼ கப்
பூண்டு- 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு - தேவைக்கேற்ப
கடுகு- சிறிதளவு
கறிவேற்பிலை- சிறிதளவு
ஒயில் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.

உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.

தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.

ஒயிலில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.

வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள்.

மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.

பலாக்காய் சிப்ஸ்



பலாக்காயை மிகவும் மெல்லிய 2' நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

அடுப்பை மிதமாக வைத்து ஒயிலில் அவற்றைப் போட்டு கவனமாக அடிக்கடி கிளறுங்கள்.

பொரிந்து நன்கு கலகலப்பாக வந்ததும் எடுத்து எண்ணையை வடியவிடுங்கள்.

மிளகாய் பொடி, உப்பு பொடி சேர்த்துப் பிரட்டுங்கள்.

ஆறியதும் கண்ணாடிப் போத்தலில் காற்று நுளையாதபடி அடைத்து வையுங்கள்.

நல்ல மொறுமொறுப்பாய் இருக்கும்.

இரண்டுகால் எலிகள் தின்னாது விட்டால் 2-3 நாட்களுக்கு கெடாது இருக்கும்.

(பொரித்த பின் மிளகாய் பொடி, உப்பு பொடி என்பவற்றை குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்ப வகை வகையான காரத்தில் சேர்க்கலாம்)

மாதேவி

Saturday, August 29, 2009

வத்தாளை கிழங்கு சிப்ஸ்

படர்ந்து வளரும் கொடி இனத்தைச் சேர்ந்த கிழங்கு வகைகளில் இதுவும் ஒன்று. மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த இது இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் வளருகிறது.

இலங்கையில் வத்தாளை என்பதை தமிழ்நாட்டில் வள்ளிச் சீனிக் கிழங்கு என்பர். Sweet potatoes என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவதை தாவரவியலில் Ipomoea batatas எனப்படும்.

ஆபிரிக்காவில் நயமி Nyami என அழைக்கப்பட்டதே Yam என ஆங்கிலத்தில் மருவியது என்கிறார்கள் மொழி வல்லுணர்கள். அதிக மாப்பொருளும், ஈரலிப்புத் தன்மையும் கொண்ட இது உருளைக்கிழங்கு போல் மஞ்சளாக அல்லாது இளம் கத்தரிப்பூ நிறம் கொண்டது.

போஷணைக் கிழங்கு

இதில் மாப்பொருள் 28 சதவிகிதமும், 2 சதவிகித புரதமும் உண்டு. ஆயினும் உருளைக் கிழங்கில் 28 சதவிகிதம் மட்டுமே மாப்பொருள் உண்டென்பது குறிப்பிடத்தக்கது. நார்ப்பொருள் அதிகம் உண்டு.

இவ்வாறு பல்வேறு போஷணைப் பொருட்கள் கொண்டதால் பல நாடுகளில் பிரதான உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் அதிகளவு விற்றமின் ஏ, மற்றும் சீ (Vitamin A, C) உள்ளது. பொட்டாசியம், போலிக் அமிலம், விற்றமின் B6 ஆகியனவும் உண்டு.

சுவையான கிழங்கு

இனிப்புச் சுவை கூடியது. சேமித்து வைக்கும் போதும் சமைக்கும் போதும் இதன் இனிப்புத் தன்மை மேலும் அதிகரிக்கும். அதனால் சிறுவர்கள் விரும்பி உண்பர்.

கிழங்கை அவித்து எடுத்து காலை உணவாகவும், ஈவினிங் சிற்றுண்டியாகவும் உண்பதுண்டு.

பச்சை மிளகாய், மஞ்சள் இட்டு தேங்காயப் பால் கறியாகவும், மிளகாய்ப் பொடி இட்டு குழம்பாகவும், அவித்தெடுத்த கிழங்கை சலட் வகைகளிலும் கலந்து கொள்ளலாம்.

வேண்டியவை

வத்தாளைக் கிழங்கு – 2
மிளகாய்த் தூள் – ½ ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப
பொரிப்பதற்கு ஓயில் ¼ லீட்டர்
விரும்பினால்
மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சிறிதளவு

செய்து கொள்வோம்


கிழங்கின் தோலை நீக்கி தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளுங்கள். தோல் நீக்கியவுடன் கிழங்கு கறுக்கும் தன்மை அடைந்துவிடும். அதனால் பெரிக்கும் நேரம் சீவி எடுத்துக் கொள்ளுங்கள்.

கிழங்கை மெல்லிய வட்டங்களாகச் சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய கிழங்காக இருந்தால், இடையே கீறி வெட்டிக் கொள்ளுங்கள்.

தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டங்களைப் போட்டு பிரவுன் கலரில் பொரித்து எடுங்கள்.

அடிக்கடி கிளறிக் கொண்டால் ஒரு புறமாகக் கருகிவிடாமல் இருக்கும்.

இறுதியில் விரைவில் பொரிந்துவிடும் ஆதலால் கவனமாக தீயைச் சற்றுக் குறைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் வடியவிட்டு சற்று ஆற உப்பு, மிளகாய்ப் பொடி தூவிக் கொள்ளுங்கள்.

உப்பு, இனிப்பு, உறைப்புச் சுவையுடன் இருக்கும் சிப்ஸ் அனைவரும் விரும்பிக் கொறிப்பார்கள்.

போத்தலில் இட்டு இறுக மூடி வைத்துக் கொண்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு கொறித்துக் கொள்ளலாம்.

மிளகாய்ப் பொடி பிடிக்காதவர்கள் உப்பு, மஞ்சள் பொடி, சிறிதளவு மிளகுப் பொடி, பெருங்காயப் பொடியை முதலே பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மாதேவி