தேவையான பொருட்கள்
Wednesday, December 24, 2008
மாங்கோ மில்க் புடிங் வித் கிறீம்
தேவையான பொருட்கள்
Saturday, December 20, 2008
கீரை வித் மாங்காய் சலட்
சாதாரண கீரை மசியல், கீரைப் பொரியல், இரண்டும் சாப்பிட்டு அலுக்கும் போது இப்படி செய்து கொண்டால் சுவை கொடுக்கும்.
சலட் செய்முறை
Saturday, December 13, 2008
பாசிப்பயறு முளை சலட்
தேவையான பொருட்கள்
1. முழுப் பாசிப்பயறு – 1 கப்
2. தக்காளி – 2
3. வெங்காயம் - 1
4. குடமிளகாய் - 1 (விரும்பிய வர்ணத்தில்)
முறை 1
ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் தேவையான அளவு
தேசிக்காய் சிறிதளவு
முறை 2
சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள், உப்பு தேவையான அளவு
ஒயில் 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.
செய்முறை
பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.
வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.
மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.
துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.
மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.
எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.
(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)
சலட் செய்யும் முறை 1
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.
முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.
பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.
சலட் செய்யும் முறை 2
தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.
நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.
அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.
விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.
:- மாதேவி -:
Wednesday, December 3, 2008
பிறந்தநாள் சிற்றுண்டி
Monday, November 24, 2008
பிரைட் ரைஸ்
Monday, November 17, 2008
கறி ரொட்டி
ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து விடக் கூடியது. இரவிலே மாவைத் தயாரித்து வைத்துக் கொண்டால் காலையிலே செய்து கொள்ளலாம். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் போதும் செய்து எடுத்துச் செல்லலாம்.
கறி ரொட்டி
தேவையான பொருட்கள் மேல் மாவுக்கு
1. மைதா மா – 2 கப்
2. ஈஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
3. உப்பு சிறிதளவு
4. மார்ஜரீன் - 1 டேபிள் ஸ்பூன்
கறி தயாரிக்க
1. மீன் துண்டுகள் - 1 கப்
2. வெங்காயம் - 1
3. பூண்டு - 2
4. சீரகப் பவுடர் – ½ ரீ ஸ்பூன்
5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்
6. மிளகாய்த் தூள் - ரீ ஸ்பூன்
7. மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்
8. கறிவேற்பிலை சிறிதளவு
9. உப்பு, புளி தேவையான அளவு
10. ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. தயாரிக்கும் மாவை 5-6 மணித்தியாலங்கள் முன்பு குழைத்து வைத்துவிடுங்கள். மா, ஈஸ்ட், உப்பு, மார்ஜரீன் கலந்து வையுங்கள். தண்ணீரை எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி பூரிமா பதத்தில் தயார்த்து வையுங்கள்.
2. எண்ணெயில் கடுகு தாளித்து, வெங்காயம், உள்ளி லேசாக வதக்கி கறிவேற்பிலை சேர்த்து உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள், சீரகத் தூள் சேர்த்து கரைத்த புளிக் கரைசல் விட்டு மீன் துண்டங்களைப் போட்டு அவித்து எடுத்து, ஆற முள்ளை நீக்கி சற்று மசித்து எடுங்கள்.
3. மாவை சிறு பந்து போல எடுத்து, போர்ட்டில் வைத்து ரோலரால் மெல்லியதாக உருட்டி, கறியை வைத்து பார்சல் போல மடித்து வையுங்கள். அதை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
4. தோசைக் கல்லிலும் செய்து கொள்ளலாம். தோசைக் கல்லில் செய்வதாக இருந்தால் பூரி போன்று வட்டமாக உருட்டி கறியை வைத்து இன்னொரு பூரியால் மூடி மேலே சற்று உருட்டிவிட்டால் அமர்ந்து வரும். இதை மெல்லிய தீயில் இரு புறமும் விரும்பிய எண்ணையை விட்டு சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
5. அவசரத்திற்கு செய்வதாயின் மாவை எடுத்து கிண்ணம் போல செய்து, அதற்குள் கறியை வைத்து மூடி கையால் தட்டியும் செய்து கொள்ளலாம்.
6. சதுரம், முக்கோணி, அரை வட்டம் என நாளுக்கு ஒவ்வொன்றாக விரும்பிய வௌ;வேறு கறிவகைகளில் செய்து அசத்துங்கள்.
:- மாதேவி -:
Thursday, November 6, 2008
பிஸி பேளா பாத்
மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் விரும்புவர்.
சாதத்துடன் பருப்பும் சேர்வதால் போஷாக்கைக் கொடுக்கும். பசியையும் தணிக்கும்.
டயபடிஸ், கொலஸ்டரோல் உள்ளோரும் நெய் தவிர்த்து செய்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
1. அரிசி - 1 கப்
2. துவரம் பருப்பு – ½ கப்
3. தக்காளி – 5
4. சின்ன வெங்காயம் - 10, அல்லது பெரிய வெங்காயம்
5. பெருங்காயம்- சிறிதளவு
6. மஞ்சள் பொடி – சிறிதளவு
7. புளி - சிறிதளவு
8. உப்பு தேவைக்கு ஏற்ப
9. நெய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க
கடலைப் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
வெந்தயம் ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4-5
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டுங்கள்.
வதங்கியதும் உப்பு புளி விட்டு அரைத்த பொடி சேர்த்து கொதிக்க, ரைஸ் போட்டு கிளறி இறக்குங்கள்.
பரிமாறும் பிளேட்டில் போடுங்கள்.
விரும்பிய கறியுடன் பரிமாறுங்கள்.
பப்படம் சுவை கொடுக்கும்
:- மாதேவி -:
Tuesday, November 4, 2008
கிழங்கு பட்டாணி சூப்
சாப்பாட்டின் முன் பசியைத் தூண்டுவதற்காக அருந்தும் உணவாகக் கருதப்படுகிறது. அதே நேரம் பல்வேறு முறைகளில் தயாரித்துக் கொள்ளலாம். சேர்க்கும் பொருட்களுக்கு அமைய போஷாக்குச் செறிவும் வேறுபடும்.
குழந்தைகள் முதல் சகல வயதினருக்கும் உகந்தது. உண்ண விருப்பமின்றி இருக்கும் நோயாளர்களுக்கு சக்தியையும், விற்றமின்களையும் கொடுப்பதுடன், இலகுவாக அருந்தவும் கூடியது. எளிதில் ஜீரணமடையும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஹெல்த் சூப் பொருத்தமானது. அவை பசியைத் தணிப்பதுடன், கலோரி அளவும் குறைவாக இருப்பதால் எடையைக் குறைக்க உதவும்.
கிழங்கு பட்டாணி சூப்
Tuesday, October 28, 2008
நலந் தரும் பழங்கள்
Tuesday, October 21, 2008
யாரடி நீ மோகினி?
இனிய இடுகை நெஞ்சங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
தீபாவளிக் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிட்டது. சரவணாஸ், ஜெயச்சந்திரன், ஆர்.எம்.கே.வி விளம்பரங்கள் தொலைக்காட்சியில் அசத்துகின்றன.
நீங்கள் டிரஸ் எடுத்தாகிவிட்டதா? சற்றுப் பொறுங்கள். பட்டாசும் வாங்கி விட்டீர்களா?
விருந்தினர்களையும் வீட்டில் உள்ளோரையும் அசத்த உணவு மெனு தயாரித்து விட்டீர்களா? நிச்சயம் தயாரித்து இருப்பீர்கள். சுவையான காலை, மதிய, இரவு விருந்துகள். அத்துடன் தின்பண்டங்களும் தயாரிப்பதில் பொழுதைத் தொலைத்துக் கொண்டிருப்பீர்கள்.
இவ்வேளையில் மதியம் மற்றும் இரவு உணவின் பின்பு பரிமாறுவதற்கு ஏற்ற ஒரு ஸ்பெஷல். சைவப்பிரியர்களும் விரும்பி முட்டை இல்லாமல் இலகுவாக தயாரித்துக் கொள்ளக் கூடியதாக பால் புடிங் டெஸேட் வகைகள் சில.
விருந்தினர் வருகையின் போது சாப்பாட்டின் பின் வழங்குவதற்கு வழமையாகச் செய்து கொள்ளும் ரவா கேசரி, பாயாசம், குலாப்ஜாம் தவிர்த்து இவற்றைச் செய்து பரிமாறிக் கொள்ளலாம். கண்ணைக் கவர்வதுடன் வித்தியாசமாகவும் இருக்கும்.
ஜெலி வகைகள், பதப்படுத்தப்பட்ட பழவகைகள், பாதாம் பிட்ஸா, முந்திரி, நிலக்கடலை, பருப்புவகைகளில் ஏதாவதை விருப்பம் போல் இவற்றுடன் கலந்து தோற்றத்திலும் சுவையிலும் கலக்க வையுங்கள். அழகிலும் கவர்ச்சியிலும் ‘நம்பர் வன்’ என்பதால் மோகினி என்போமா?
ருசியுடனும் வர்ணத்துடனும் கூடியதாகையால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.
‘மோகினி’யின் ருசியில் மயங்கி மேலதிகமாக டிரெஸ் ஒன்றும் கிடைக்கும். எல்லாம் அயித்தான் கையில்தான் ..….
திரி லேயேர்ஸ் புடிங்
1.கராமல் புடிங்
தேவையான பொருட்கள்
1) கராமல் புடிங் மிக்ஸ் - 1 பைக்கற்
2) பால் - 400 மி.லி
3) சீனி – 2 டேபிள் ஸ்பூன்
4) கஜீ – 10-15 (சிறியதாக உடைத்து, வறுத்துக் கொள்ளுங்கள்)
செய்முறை
1. புடிங் மிக்ஸில் உள்ள கரமல் டொபிங்கை பெரிய கிளாஸ் போலில் ஊற்றி வையுங்கள்.
2. பாலில் கரமல் கலவையைக் கரைத்து பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சீனி கலந்து விடுங்கள்.கொதித்து கலவை சற்றுத் தடிப்பாகும் வரை கலக்கி எடுங்கள்.
3. அடுப்பில் இருந்து எடுத்து கராமலுக்கு மேல் ஊற்றி விடுங்கள்
4. சற்று ஆற, வறுத்த கஜூவை மேலே தூவி பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
இரண்டு மணித்தியாலயத்தின் பின்பு ஸ்ரோபெரியைத் தயாரியுங்கள்.
2.ஸ்ரோபெரி புடிங்
தேவையான பொருட்கள்
1) ஸ்ரோபெரி புடிங் மிக்ஸ் - 1 பைக்கற்
2) பால் - 500 மி.லி
3) சீனி – 2 டேபிள் ஸ்பூன்
4) ஸ்ரோபெரி அல்லது செரி – 4-5
ஒரு கப் பாலில் டெஸேட் கலவையை கரைத்துக் கொள்ளவும். மிகுதியாக உள்ள பாலை அக் கலவையோடு சேர்க்கவும்.
சீனி கலந்து அடுப்பில் வைத்து கொதித்து கலவை சற்று தடிப்பாக வர அடுப்பில் இருந்து இறக்கி சற்று ஆற, முன்பு பிரிட்ஜில் தயாரித்து வைத்திருந்த கராமல் மேல் ஊற்றி செரி சேர்த்து பிரிட்ஜில் வையுங்கள்.
மீண்டும் 2-3 மணித்தியாலங்கள் பிரிட்ஜில் வைத்து எடுங்கள்.
மூன்று மணித்தியாலயத்தின் பின்பு கஸ்டர்ட் தயாரியுங்கள்.
3.கஸ்டர்ட் புடிங்
தேவையான பொருட்கள்
கஸ்டர்ட் மிக்ஸ் - 4 டேபிள் ஸ்பூன்
பால் - 400 மி.லி
சீனி – 6 டேபிள் ஸ்பூன்
வனிலா சில துளிகள்
ஜெலி – 2-3 வர்ணங்களில்
செய்முறை
ஒரு கப் பாலில் கஸ்டர்ட்டை கரைத்து எடுத்து பாலில் ஊற்றி விடுங்கள். சீனி சேர்த்து அடுப்பில் வைத்து கவனமாகக் கிளறுங்கள்.
கட்டி படாமலும் இறுகாமலும் அளவான ஸோஸ் பதத்தில் எடுத்து இறக்கி சற்று ஆற, வனிலா சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து எடுத்த ஸ்ரோபெரி மேல் ஊற்றி விடுங்கள்.
செரி, ஜெலி, துண்டங்கள் கலந்து விடுங்கள்.
மீண்டும் பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.
பரிமாறு முன் வேறொரு அழகான பிளேட்டில் புடிங் போலை தலை கீழாகக் கொட்டி எடுத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
வெட்டிப் பரிமாறுங்கள்.
மூவகை வர்ணத்துடன் முச் சுவைகளுடனும் கூடிய நட்ஸ், செரி, ஜெலி கலந்த கராமல், ஸ்ரோபெரி, கஸ்டர்ட் புடிங் தயார்.
இது குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும். ருசியிலும் கூட.
குறிப்பு
இங்கு 2 நாளில் தட்டுக் காலியாகி விடும்.
-: மாதேவி :-
Wednesday, October 15, 2008
பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்
கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்
கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்
அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.
ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.
சுவைப்போமா?
தேங்காய்ப் பால் கத்தரி
தேவையான பொருட்கள்
1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 2
2. வாழைக்காய் - 1
3. சின்ன வெங்காயம் - 5,6
4. பச்சை மிளகாய் - 2
5. வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் - ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு
தாளிக்க
1. சின்ன வெங்காயம் - 3,4
2. தாளிதக் கலவை - 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.
கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.
வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.
வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.
திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.
எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.
குறிப்பு
வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.
அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.
-: மாதேவி :-
Tuesday, October 7, 2008
வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்
சலட் என்ற பெயரைக் கேட்டாலே அநேகம் பேருக்கு பசி கெட்டுவிடும். செமியாது, சாப்பிடுவதற்கு அலர்ஜி என்றெல்லாம் சாட்டுச் சொல்லுவார்கள். இதை எப்படித்தான் மேலைத் தேசத்தவர்கள் சாப்பிடுகிறார்களோ என்ற கேள்வியும் கேட்பார்கள்.
உடலுக்கு வேண்டிய சத்துக்கள் பலவும் அதில் அடங்கியுள்ளதை அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். எங்களில் பலர் இப்பொழுது சிலகாலமாகத்தான் உண்ண முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். உப்பு, காரம், புளிப்பு அதிகம் சேர்த்து, சப்புக்கொட்டி உண்ணும் ஆசிய நாட்டவரக்ளுக்கு இது சுவையற்றதாக, சாப்பிடச் சிரமமாக இருக்கலாம். எங்கள் ருசிக்கு ஏற்ப உப்பு, காரம் சற்றுச் சேர்த்து தயாரித்துக் கொண்டால் சாப்பிடப் பழகிவிடும்.
உடற்பருமன் உடையவர்கள் உடல் எடையைக் குறைக்கவும் ஏனையோர் அழகாகவும், சருமம் பளபளப்பாகவும், ஹெல்தியாகவும் இருக்க சலட் கைகொடுக்கும். கொலஸ்டரோல், நீரிழிவு, பிரஸர் நோயுள்ளவர்கள் தினமும் ஒருவகை சலட் சாப்பிடுவது நல்லது. இது அவர்கள் உடல் நலத்தைப் பேண உதவும்.
ஏன் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்குமே உகந்தது. விட்டமின், கனிமங்கள், நார்ப்பொருள் நிறைந்தது. கலோரி அளவு மிகக் குறைவு என்பதால்தான் மேற்கூறிய நோயாளர்களுக்கு உகந்தது. மாமிச உணவை மட்டும் உண்பவர்களுக்கு அத்தியாவசியமானது. மலச்சிக்கலையும் நீக்கும்.
சலட் தயாரிப்பு முறைகளில் சில மாற்றங்கள் செய்து தயாரித்துக் கொண்டால் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக அமையும். சிறுவர்களையும் கவரும் விதத்தில் தயார்த்துக் கொள்ளலாம்.
இது வெஜிட்டபிள்ஸ், புருட்ஸ் இரண்டும் சேர்ந்த சலட். இரண்டும் சேர்வதால் வெஜிட்டபிள் தனியே சாப்பிட விரும்பாதவர்களும் விரும்பி உண்பார்கள்.
வெஜிட்டபிள் அன்ட் புருட் சலட்
தேவையான பொருட்கள்
1. உருளைக்கிழங்கு – 1
2. கரட் - 1
3. வெள்ளரி – 1
4. தக்காளி -1
5. விதையில்லாத பச்சைத் திராட்சைப்பழம் - 10
6. விதையில்லாத சிவத்த திராட்சைப்பழம் - 10
7. பைன் அப்பிள் ¼ துண்டு
8. சிறிய சிவத்த அப்பிள் - 1
9. சிறிய பச்சை அப்பிள் - 1
10. ஆரேன்ஜ் - 1 (விரும்பினால்)
11. லெட்டியுஸ் - 6 இலைகள்
12. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்
13. உப்பு சிறிதளவு
14. பெப்பர் சிறிதளவு
தயாரித்தல்
உருளைக்கிழங்கு கரட்டை சிறு துண்டுகளாக வெட்டி நீராவியில் அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வெள்ளரி, தக்காளி சிறு துண்டுகளாக, அப்பிள் தோலுடன் வெட்டிக் கொள்ளுங்கள். திராட்சையை வெட்டாமல் அப்படியே எடுங்கள். ஆரேன்ஜ்யை தோல் நீக்கி, சுளைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உப்பு நீரில் கழுவி எடுத்த லெட்டியுஸ் இலைகளை சலட் பிளேட்டில் சுற்றிவர வட்டமாக அடுக்கிவிடுங்கள்.
புருட்ஸ், வெஸிட்டபில் அனைத்தையும் உப்பு பெப்பர் கலந்து பிளேட்டின் நடுவில் வைத்து மேலே பிரஸ் கிறீம் போட்டு பரிமாறுங்கள்.
கலர்புல் சலட்டாக இருப்பதால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதுடன், பழ வகைகளும் சேர்வதால் பல்சுவையையும் தரும்.
-: மாதேவி :-
Sunday, October 5, 2008
ரம்பை, சேர
சேர, ரம்பை இவை என்ன?
பெயரைப் போலவே கவர்ச்சியாக இருக்கும் தமிழ் நடிகைகளா?
இல்லை! வாசனை ஊட்டிகள்.
பிரியாணி, இறைச்சி, மீன், பருப்பு, கிழங்கு கறிவகைகள், சொதி, ஆகியவற்றிற்கு வாசனை ஊட்டுவதற்காகப் போடும் இலைவகைகள்.
கறிவேற்பிலை போன்றது. ஆனால் இவற்றைச் சாப்பிட முடியாது. எடுத்து ஓரமாக வைத்துவிட்டு வாசனையூட்டப்பட்ட உணவைத்தான்; சாப்பிட வேண்டும்.
சிங்களச் சமையலில் நிச்சயம் இவை இரண்டும் முக்கிய இடம் பெறும். 4-5 அங்குலத் துண்டுகளாக வெட்டிப் போடுவார்கள்.
இங்கு கறிவேற்பிலையுடன் இவை இரண்டையும் சேர்த்துக் கட்டி விற்பார்கள்.
தனியாக வெட்டப்பட்ட இலையாக இருப்பது ரம்பை. இதனை டவுன் பான்டா இலை, வாச இலை, சோற்று இலை எனவும் சிலர் கூறுவர்.
நுனி வெட்டிய செடிபோல இருப்பது சேர. சேரவின் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. படத்தைப் பார்த்து நீங்கள் யாராவது தெரிந்தால் கூறுங்கள்.
ரம்பை இலை பற்றி இணையத்தில் வந்த பதிவு இது.
Ramba Illai, is knwon as Rhempey in Singhala and in North India but more commonly known as Daun Pandan or Pandan Leaf in Malaysia,Philipines,Singapore and Indonesia, in Tamil it is known as Thaazhai or Kehtaki, in Hindi and sanskrit also it is known as Ketaki..commercially available throughout india as Ketaki Water, botanical name is Pandanus... its rarely bloomed flower used in Serpent Worhip buy Tamilians known as Thaalampoo.
http://www.spiceindiaonline.com/glossary
-: மாதேவி :-Tuesday, September 30, 2008
சமையலறையில் மருத்துவம்
“எதிரி வீட்டில் சாப்பிடப் போவதாக இருந்தால் நாலு மிளகுடன் போ” என்பார்கள் முன்னோர்கள். விஷத்தை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டென்பர்.
இப்பொழுது வயிற்று வலி அல்லது வயிற்றுப் பொருமல் என்றால் என்ன செய்வீர்கள்? இரண்டு மூன்று வறுத்த அல்லது சுட்ட உள்ளியைச் சாப்பிடுவீர்களா?
எனது சிறு வயதில் வரதகணபதிப்பிள்ளைப் பரியாரியாரின் 'சக்தி உள்ளிக் குளிகை' எங்கள் பிரதேசம் எங்கும் பிரபலம். தூரதேசம் செல்பவர்களின் பிரயாணப் பைகளில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இன்று ஹார்லிக் பில் பல நிறுவனங்களால் வர்த்தக ரீதியாகத் தயாரிக்கப்படுகின்றன. நன்றாக விலை போகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எமது மருத்துவ முறைகள். சித்தர்கள் தமது நுண்ணறிவால் பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணங்களை இனங்கண்டு தாமும் பயன்படுத்தி மக்களுக்கும் அறிமுகப்படுத்தினார்கள். அவற்றில் பல மூலிகைகள் மருத்துவர்களின் களஞ்சியங்களையும், மருந்துப் பெட்டிகளையும் கடந்து எமது அம்மாமார்களின் சமையலறையிலும் இடம் பிடித்தன. குடிநீர்களாகவும் கசாயங்களாகவும் மாறி கைவைத்தியமாக உயிர் காத்தன.
மற்றும் பல மூலிகைகள் எமது உணவுகளுக்கு சுவையூட்டிகளாகவும், வாசனைத் திரவியங்களாகவும் பல் பயன் தந்தன.
மேலைநாட்டு வைத்திய முறைகள் எங்களுக்கு அறிமுகமாகி ஒரு சில நூற்றாண்டுகள் மட்டுமே ஆகிறது. அதுவரையும், ஏன் இன்றும் கூட எம்மவர் பலர் தமது ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு எமது பாரம்பரிய முறைகளையே நாடுகிறார்கள்.
ஆயினும் இன்றைய நாகரீகப் புதுயுகத்தில் அவற்றையெல்லாம் பலரும் மறந்து எடுத்ததற்கெல்லாம் வைத்தியர்களையும் பார்மஸிகளையும் நாடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
சமையலறையில் மருந்திருக்க ஏன் இந்த ஓட்டம்?
சாதாரண காய்ச்சல், தடிமன் சளி, மூட்டுவலி, இருமல், வயிற்றுக் கோளாறு, சிறுநீரக்கடுப்பு போன்ற பல நோய்களுக்கு பாரம்பரிய முறைகள் கைகொடுக்கும். நோய் தொடங்கிய ஆரம்ப நாட்களில் அவற்றைப் பருகி சுகம் காணலாம், இல்லையேல் மருத்துவரை நாடுவதில் தவறில்லை.
மருந்துச் சிரட்டை ஞாபகம் வரவில்லையா? வீடுகளில் பரியாரியாரின் மருந்துக் குளிகைகளை உரைப்பதற்கு பயன்படுத்துலார்களே. சிறிய தேங்காய் மூடிகளை நன்கு வழவழப்பாகச் சீவி கவனமாக வைத்திருப்பார்கள். அடிக்கடி யாருக்காவது தேவையும் வரும்.
பாரம்பரிய குடிநீர்வகைகள்
சளி இருமலுக்கான குடிநீர்
தூதுவளம் இலை 10-15, மிளகு ½ ரீ ஸ்பூன், அதிமதுரம் 1 துண்டு, தண்ணீர் ஒரு கப் ஆகியவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் இட்டு அவித்து எடுத்து குடியுங்கள். சளி நீங்கும்.
காய்ச்சலுக்கான குடிநீர்
மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼ கப் நீர் விட்டு அவித்து எடுத்து, நாள் ஒன்றுக்கு 2-3 தடவை நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்துவது காய்ச்சலைத் தணிக்கும். திப்பலி வேர்க்கொம்பு சேர்வதால் காய்ச்சலுடன் கூடிய உடல் வலியும் நீங்கும். மிளகு சேர்ப்பதால் இருமல் மறையும்.
வயிற்றுப் போக்கு, உணவு செமிபாடடையாமை
2 தேக்கரண்டி வெந்தயத்தை சிறிதளவு நீரில் ஊறவைத்து எடுத்து நீருடன் வெந்தயத்தையும் சாப்பிட தொல்லைகள் நீங்கிச் சுகம் கிட்டும்.
சலக்கடுப்பு, சிறுநீர் போகாமை
தேங்காயப்பூ கீரையை அவித்துக் குடிப்பது நன்மை தரும்.
சாதாரண சளிக்கு
வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலைகளை தினமும் சப்பிச் சாப்பிட்டுவர சளித் தொல்லை தீரும்.
வரட்டு இருமலுக்கு
பனம் கல்லக்காரம் இரண்டு மூன்று துண்டுகளை வாயில் போட்டு கரையவிடுங்கள்.
முக்கிய குறிப்பு
நான் மருத்துவன் அல்ல. இவை நானறிந்த பாரம்பரிய கைவைத்தியத்தில் சில. நீங்களும் உங்களது வீட்டு வைத்தியங்களைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
:- மாதேவி -:
Saturday, September 27, 2008
உருளைக்கிழங்கு வெங்காய வறுவல்
முதல்முதல் சமையல் செய்யப் பழகுவோருக்கும், Bachelors க்கும் உகந்தது.
ருசியாகவும் இலகுவாகவும் தயாரிக்கக் கூடியது என்பதால் அவர்கள் விரும்புவார்கள்.
அவசர யுகத்தில் அனைவருக்கும் ஏற்றது.
செத்தல் மிளகாய் வெட்டுத்தூள் சேர்ப்பதால் அழகையும் கொடுக்கும்.
சாதம், பிரியாணி, புட்டு, சப்பாத்தி, அப்பம், தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்.
1. உருளைக்கிழங்கு – 4
2. வெங்காயம் - 2 (நீளவாட்டில் வெட்டியது)
3. செத்தல் வெட்டுத்தூள் - 2 ரீ ஸ்பூன் (செத்தல் 4-5 யை இடித்தும் எடுக்கலாம்)
4. இஞ்சி பேஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
5. கடுகு – ¼ ரீ ஸ்பூன்
6. பட்டை(கறுவா) – 1 துண்டு
7. கறிவேற்பிலை சிறிதளவு
8. உப்பு தேவையான அளவு
9. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
விரும்பினால்
1. ரம்பை – 2 துண்டு
2. சேர – 2 துண்டு
3. மல்லித்தழை சிறிதளவு
4. எலும்மிச்சைச் சாறு – 1 ரீ ஸ்பூன்
5. பெருங்காயப் பொடி சிறிதளவு
செய்முறை
1. கிழங்கை அவித்து எடுத்து பெரிய துண்டங்களாக வெட்டி வைக்கவும்.
2. எண்ணெயில் கடுகு பட்டை தாளித்து இஞ்சி பேஸ்ட் வதங்க (விரும்பினால் பெருங்காயப் பொடி சேர்க்கவும்) வெங்காயம் சேர்த்து மெல்லிய பிரவும் நிறம் வரும்வரை வதக்கவும்.
3. வதங்க வெட்டுத்தூள் சேர்த்து பச்சை வாசம்போக கிளறி கறிவேற்பிலை போட்டு வதக்கவும். (விரும்பினால் ரம்பை, சேர, சேர்க்கவும்)
4. கிழங்கைக் கொட்டி உப்புப் போட்டு 2 நிமிடம் கிளறி எடுக்கவும்.
5. விரும்பினால் எலும்மிச்சைச் சாறு விட்டு மல்லித்தழை தூவவும்.
-: மாதேவி :-
Tuesday, September 23, 2008
காரம் சுண்டல்
அகிலம் எல்லாவற்றிற்கும் அன்னையாக விளங்கும் ஆதிபராசக்தியை வணங்கும் முகமாக கொண்டாடப்படும் விழா நவராத்திரியாகும். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அன்னையைத் துதித்து வணங்குவர்.
முதன் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையம்மனை வழிபடுவர். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தைத் தரும்படி வேண்டி இலக்ஷிமிதேவியை வணங்குவர். இறுதி மூன்று நாட்களும் கல்வியை நல்கும்படி சரஸ்வதிதேவியைப் பிராத்திப்பர். பத்து நாளும் கோயில்களில் விசேட பூசை நடைபெறும். வீடுகளில் கொலுவைத்து மாலையில் அன்னையை வணங்கிப் பூசித்து குங்குமம், பிரசாதம் கொடுத்து மகிழ்வர். ஒன்பதாம் நாள் இல்லங்கள் தோறும் சரஸ்வதிதேவியைத் துதித்து விமர்சையாக பிரசாதங்கள் படைத்து விழாக் கொண்டாடுவர்.
பத்தாம் நாள் விஜயதசமி. அன்று பாலருக்கு ஏடு தொடக்கும் நாள் விசேடமாகக் கொண்டாடப்படும். அன்னையை வணங்கி கல்விச் செல்வத்தைத் தந்தருளும்படி பிரார்த்தித்து நெற்தானியத்தில் ஓம் எனும் பிரணவத்தை எழுதி கல்வி தொடங்குவர். அனைத்துச் சக்திகளையும் கொண்ட தேவி மகிசாசுரனுடன் போரிட்டு வென்றதாக புராண வரலாறு கூறுகிறது. ஆதலால் அம்மனுக்கு மகிசாசுரவர்த்தனி என்ற பெயரும் வரக் காரணமாயிற்று.
விஜயதசமியன்று இரவு வெற்றி நாளாக சூரன் போர் இடம் பெறும். மானம்பூ எனச் சிறப்பாகக் கொண்டாடப்படும். போருக்கும் புறப்படும் அலங்காரத்துடன் அம்மன் சூலம் தாங்கி வீதிவலம் வந்து மகிசாசுரனை அழித்த காட்சிப்படலமாக வாழை மரத்தை வெட்டி குங்குமம் பூசி சொக்கப்பானையை எரித்து மகிழ்ச்சி கொண்டாடும் விழா நடைபெறும்.
இருவாரங்களில் ஆரம்பமாக இருக்கும் நவராத்திரி விழாவில் பிரசாதம் படைத்து மகிழ இக் காரம் சுண்டலை செய்து கொள்ளுவோம்.
தேவையான பொருட்கள்
1. கடலை ¼ கிலோ
2. மாங்காய் பாதி
3. வெங்காயம் - 1
4. காய்ந்த மிளகாய் - 2
5. தக்காளி – 1
6. கரட் - 1
7. உப்பு தேவையான அளவு
கார சோஸ் தயாரிக்க
1. மிளகாய்ப் பொடி ½ ரீ ஸ்பூன்
2. தக்காளிச் சாறு – 1 கப்
3. உப்பு தேவையான அளவு
4. எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்
5. தண்ணி - ½ கப்
தாளிக்க
கடுகு - ½ ரீ ஸ்பூன்
சீரகம் - ½ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
தேங்காய்த் துண்டுகள் - ¼ கப் (விரும்பினால்)
ஒயில் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடலையை 5-6 மணிநேரம் ஊறவைத்து எடுத்து குக்கரில் சிறிது உப்புச் சேர்த்து தண்ணீர் விட்டு 3 விசில் வைத்து எடுங்கள்.
மாங்காய், வெங்காயம், காய்ந்த மிளகாய், தக்காளி, கரட் ஆகியவற்றை தனித்தனியே சிறியதாக வெட்டி வையுங்கள்.
ஒயில் விட்டு கடுகு, சீரகம், கறிவேற்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய் வெங்காயம் வதக்கி தேங்காயத் துண்டுகள் சேர்த்துக் கிளறி, வெட்டிய மாங்காய், தக்காளி, கரட் லேசாகக் கிளறி கடலையைக் கொட்டி பிரட்டி இறக்குங்கள்.
ஒரு ரீ ஸ்பூன் ஒயிலில் தக்காளிச் சாறைவிட்டு வாடை போகக் கிளறி, ½ கப் தண்ணீர், மிளகாயப் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க இறக்கி வையுங்கள்.
சுண்டல் பரிமாறு முன் சோசை ஊற்றி விடுங்கள்.
குறிப்பு
கௌபீ, தட்டைப் பயறு, கடலைப் பருப்பு, பட்டாணி, மொச்சை போன்ற எல்லாவகை பருப்பு வகைகளிலும் இவ்வாறு செய்து கொள்ளலாம்.
காரம் சுண்டலை கடதாசியில் கோர்ன் போல சுருட்டிச் சாப்பிடுவது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கொண்டாட்டம்தான்.
-: மாதேவி :-
Monday, September 15, 2008
மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்
வெல்கம் மலேசியா.
அடர்ந்த இரப்பர், தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டு கண்ணைப் பறிக்கும் பச்சைப் பசேல் என்ற மலைச் சரிவுகளுடன் கூடி, கொள்ளை அழகுடன் விளங்கும் இந்நாடு சீதோஸ்ன நிலையால் அனைவரையும் கவர்ந்து அழைக்கும். சிங்கையின் நெருக்கடியான அவசர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, ஆனந்தமான இயற்கைச் சூழல்களுடன் கலந்து, ரசித்து மகிழக் கூடிய காட்சிகள் அடங்கிய நாடு இது. வெண்முகில்கள் மலைச் சிகரங்களில் முட்டிச் செல்லும் அழகோ அழகுதான்.
அந்நாட்டு உணவு வகை ஒன்று நீங்களும் சமைத்து ருசித்துப் பாருங்களேன்.
சேர்விங் பரிமாறல், போட்டோகிராவ் மை டியர் சுவீட்டி சின்னு.
மலேசியன் ஸ்டைல் ஹொட் சிக்கின்
தேவையான பொருட்கள்
1. போன் லெஸ் சிக்கின் - ½ கிலோ
2. மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
3. இஞ்சி உள்ளி பேஸ்ட் -1 ரீ ஸ்பூன்
4. உப்பு தேவையான அளவு
5. பொரிக்க எண்ணெய் - ¼ லீட்டர்
கிறேவிக்கு
1. வெங்காயம் - 2
2. தக்காளி -4
3. செத்தல் - 4
4. இஞ்சி உள்ளி பேஸ்ட் -1 ரீ ஸ்பூன்
5. உப்பு தேவையான அளவு
6. கறிவேற்பிலை – சிறிதளவு
7. எண்ணெய் - 3 டேபில் ஸ்பூன்
செய்முறை
1. இறைச்சியில் இஞ்சி, உள்ளி பேஸ்ட், உப்பு, மிளகாய்ப் பொடி பிரட்டி ½ மணித்தியாலம் ஊறவிட்டு, எண்ணெயில் பொரித்து எடுத்து வையுங்கள்.
2. செத்தலை சிறிது தண்ணீர்; விட்டு கூட்டாக அரைத்து எடுத்து வையுங்கள்.
3. வெங்காயம், தக்காளி சிறிதாக வெட்டி வையுங்கள்.
4. ஒரு டேபில் ஸ்பூன் எண்ணெயில் இஞ்சி உள்ளி பேஸ்ட் வதக்கி, செத்தல் கூட்டைப் போட்டு பச்சை வாடை போக, மணம் வரும் மட்டும் கிளறி, எடுத்து வையுங்கள்.
5. இரண்டு டேபில் ஸ்பூன் ஓயில் விட்டு வெங்காயம் தாளித்து தக்காளி சேர்த்துக் கிளறி உப்பு போட்டு எண்ணெய் மேலே வருமட்டும் கிளறி, கறிவேற்பிலை சேர்த்துப் பொரித்த இறைச்சியைக் கொட்டிக் கிளறி இறக்கி வையுங்கள்.
6. சேர்விங் பிளேட்டை எடுத்து, இறைச்சியைப் போட்டு, இதன் மேல் மிளகாய்க் கூட்டைக் கொட்டி பரிமாறுங்கள்.
குறிப்பு
சாதம், புரியாணி ரைஸ், மசாலா ரைஸ், ஸ்ரிங்கொப்பர் புரியாணி, ரொட்டி, நாண், பரோட்டா, புட்டு, அப்பம் அனைத்திற்கும் சுப்பர் சுவை கொடுக்கும்.
விரும்பினால் மல்லித்தழை அல்லது செலறி தூவிக் கொள்ளுங்கள்.
:- மாதேவி :-
Thursday, September 11, 2008
மண் சுமக்க வைத்தது
இதன் ருசியில் மயங்கியவராக நாம் முதன் முதலில் அறிந்தது இவரைத்தான். எல்லாம் வல்லவராக எங்கும் நிறைந்தவரான அவரே மயங்கினால் நானும் நீங்களும் எம்மாத்திரம். தமிழ் இந்துக்கள் யாவரும் அறிந்த கதைதான்.
எமது முதற் கடவுள் சிவனாரே மண் சுமக்கும் கூலியாளியாக உருமாறி செம்மனச் செல்வியாரிடம் வேலைக்குப் பேரம் பேசினார். உதிர்ந்த பிட்டுக்கள் எல்லாம் தனக்கு தந்தால் போதும் மண் அள்ளிப் போடுவதாகச் சொன்னார். அன்று ஆச்சி அவித்த பிட்டுக்கள் உதிர்ந்தன அவன் லீலையால்.
எல்லாம் உதிர்ந்ததால் அளவுக்கு அதிகமாக உண்டு, உண்ட களைப்பால் நித்திரை செய்தான். வேலை செய்து முடியாததால் பாண்டிய மன்னனின் காவலாளியிடம் சவுக்கடி வாங்கிய கதையை சிறுவயதில் படித்தோம். படித்த நாட்களில் அதன் ருசியை கனவுகளிலும் கண்டு பசி கொண்டு எழும்பினோம்.
ரிச் நட்ஸ் குழல் பிட்டு
தேவையான பொருட்கள்
• வறுத்த அரிசிமா – 2 கப்
• அவித்த மைதா – ¼ கப்
• தேங்காய்த் துருவல் - ½ மூடி
• உப்பு சிறிதளவு
• வாழையிலை -1
• அவித்த கடலைப் பருப்பு- 1 கப்
• வெல்லத் தூள் - ¼ கிலோ
• பிளம்ஸ் 100 கிராம்
• கஜூ- 100 கிராம் (பொடித்தது)
• ஏலத்தூள் - ½ ரீ ஸ்பூன்
செய்முறை
மாவைப் பாத்திரத்தில் போட்டு உப்புக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்தெடுத்து சிறிது சிறிதாக ஊற்றி மரக்கரண்டிக் காம்பால் கிளறுங்கள். மா உதிரி உதிரியாக வருமட்டும் கிளற வேண்டும். சிறுசிறு உருண்டைகள் போல உருண்டு வரும். சற்று சூடு ஆற கைகளாலும் உருத்திக் கொள்ளலாம். அல்லது ஒரு நீளமான ரேயில் போட்டு விளிம்பில்லாத டம்ளரால் கொத்தி ஒரே அளவானதாக செய்து கொள்ளுங்கள்.
வாழையிலையை எடுத்து சுடுநீரில் கழுவி வைத்துக்கொள்ளுங்கள்.
பிட்டுப் பாத்திரத்தை எடுத்து நீர்விட்டுக் கொதிக்க வையுங்கள்.
அவித்த கடலைப் பருப்பு, வெல்லத் தூள், பிளம்ஸ், கஜூ-,தேங்காய்த் துருவல், ஏலத்தூள் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். குழலை எடுத்து அடியில் தட்டை நேராக வைத்து சிறிதளவு பருப்பு கலவையை தூவி விடுங்கள். பிட்டு மாவை மெதுவாக கையில் நிறைத்து எடுத்து குழலில் போடுங்கள். மீண்டும் பருப்பு கலவையை போட்டு அதன் மேல் புட்டுமா என்ற ஒழுங்கில் போட்டு முடிவில் பருப்புக் கலவையுடன் முடியுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்து ஆவி வெளிவர குழலை மேலே வைத்து மூடியால் மூடிவிடுங்கள். பிட்டு அவிய 3-5 நிமிடங்கள் எடுக்கும். ஆவி குழலிருந்து வெளிவரும். கமகமக்கும் பிட்டு மணமும் சேர்ந்து வரும். ஆவி 2-3 தடவை வெளிவந்ததும் குழலை இறக்கி மூடியைத் திறந்துவிடுங்கள்.
வாழையிலையை ரே ஒன்றில் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பிட்டுக்குழல் சற்று ஆறியிருக்கும். குழலை எடுத்து சரித்து மெதுவாக பிட்டுத் தடியினால் தள்ளுங்கள். பிட்டு உடையாது வாழையிலையில் அழகாக வந்து சேரும். (சூட்டுடன் தள்ளினால் உதிர்ந்துவிடும்) மிகுதி மாவையையும் முன்போலவே செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
வாசமான இனிய நட்ஸ் பிட்டு தயாராகிவிட்டது. இனிப்பானதால் மாம்பழம், பலாப்பழம் இரண்டில் ஒன்றை சேர்த்துச் சாப்பிட்டால் சுவை அமிர்தம்தான். வாழைப்பழம் சேர்த்துக் கொண்டால் செகண்ட் கிரேட் மட்டுமே.
குறிப்பு
இனிப்பில்லாது தனியே தேங்காய்த் துருவலை மட்டும் சேர்த்து செய்து கொண்டு கறி, சம்பல், குழம்புவகை, சொதி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.
கிழங்கு, கத்தரிக்காய், வாழைக்காய், மரவள்ளி சிப்ஸ்சும் சுவைதரும்.
எல்லா வகை அசைவ கறிகளும் மெருகூட்டும்.
மைதா, குரக்கன்மா, ஆட்டா, கோதுமை மா வகைகளிலும் இதே போன்று செய்து கொள்ளலாம்.
சாம்பார் வெங்காய சிப்ஸ்ம் சுவை கொடுக்கும்.
வெங்காய சிப்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்.
1. சாம்பார் வெங்காயம் - ¼ கிலோ
2. பச்சை மிளகாய் - 1
3. உப்பு தேவையான அளவு
4. மிளகாய்ப் பொடி – ¼ ரீ ஸ்பூன்
5. மஞ்சள் பொடி சிறிதளவு
6. பொரிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய்.
செய்முறை
வெங்காயத்தை நீளவாக்கில் ஒரே அளவாக வெட்டி வையுங்கள். பச்சை மிளகாயை துண்டங்களாக வெட்டி எடுங்கள். மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி பிரட்டி வையுங்கள்.
எண்ணெய் கொதித்ததும் உப்பை வெங்காயத்தில் சேர்த்துப் பிரட்டி எண்ணெயில் போடுங்கள். கவனமாக இடையிடையே பிரட்ட வேண்டும். அரை வேக்காடு பொரிந்த பின் அடிக்கடி கிளற வேண்டும்.
பொரிந்து வரும்போது விரைவில் கருகக் கூடும் என்பதால் தீயை அளவாக வைத்து பிரட்டிக் கொள்ளுங்கள். கலகலப்பாக சிவந்த நிறத்தில் வர எடுத்து பேப்பரில் போட்டு எண்ணெய் வடிய விடுங்கள்.
கமகமக்கும் வெங்காய சிப்ஸ் தயார்.
குறிப்பு
1. உப்பை முன்பே பிரட்டி வைக்கக் கூடாது. தண்ணீர் விட்டுவிடும்.
2. பொரிக்கும் நெற்வடியில் போட்டும் பொரித்துக் கொள்ளலாம்.
நன்றி:- மண் சுமக்கும் சிவனாரின் படம் சிவமுருகனின் ஆவணி மூலத் திருவிழா பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.
-: மாதேவி :-
Monday, September 8, 2008
பாம்புபோல இழுபடும் சாப்பாடு
இது இங்கு அறிமுகமான ஆரம்ப காலங்களில் வீட்டில் தயாரிக்கும்போது
கொள்ளுப் பாட்டியுடன் வீடடில் சண்டைதான் என அம்மா கூறுவார் . "பாம்புபோல இழுபடும் இது என்ன சாப்பாடு" என ஒரே புறுபுறுப்புத்தானாம். சமையல் இரண்டு வேலையாகிவிடும் அன்று.
ஒன்று பாட்டிக்கு மட்டும் பிறிம்பாக. தம்பி அவங்களோ விரும்பி ரசித்து உண்ணுவார்கள். இப்பொழுது பெரும்பாலான குழந்தைகளின் மிகவும் விரும்பிய உணவாக 2 minutes favouite ஆகிவிட்டது.
ஒவ்வொரு நாளும் இலங்கை இந்திய சாப்பாடு சாப்பிடும் எங்களுக்கு சற்று மாறுதலாக
மேற்குலக சாப்பாடு. அதிலும் எங்களுர் மிளகாய்ப்பொடியும் கலந்து செய்து
கொண்டால் சுவை கூடும். சுவைத்துத்தான் பார்ப்போமே.
அவித்து எடுத்த நூடில்ஸ் - 200 கிராம்
முட்டை – 2 மார்ஜரின் - 50 கிராம்
எலும்பில்லாத இறைச்சி – 200 கிராம்
கரட் - 100 கிராம் பீன்ஸ் -100 கிராம்
வெங்காயம் - 1
அவித்த கிழங்கு – 200 கிராம்
மிளகாய்த்தூள் - ¼ ரீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
மசாலத் தூள் - சிறிதளவு இஞ்சி
உள்ளிப் பேஸ்ட் சிறிதளவு
மிளகு தூள் - ½ ரீ ஸ்பூன்
எண்ணெய் - 2 ரீ ஸ்பூன்
அலங்கரிக்க
அவித்த முட்டை -1 (துண்டுகளாக வெட்டி வையுங்கள்)
பாஸ்லி சிறிதளவு
தக்காளி -1 (துண்டுகளாக வெட்டி வையுங்கள்)
பரிமாற
சில்லி சோஸ்
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு, இஞ்சி உள்ளி வதக்கி வெங்காயம் மெல்லிய நிறத்தில் வதக்கி, இறைச்சி சேர்த்து மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், மசாலா, உப்பு
சேர்த்து தண்ணீர் ½ கப் விட்டு அவித்து எடுங்கள்.
கரட் பீன்ஸ்சில் உப்பு மிளகு சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள். கிழங்கை எடுத்து நன்றாக மசித்து உப்பு மிளகு தூள் சேர்த்து வையுங்கள். ஒரு முட்டையை நன்கு அடித்து, இத்துடன் கலந்து கொள்ளுங்கள்.
அவன் போல் அல்லது ரேயை எடுத்து மாஜரின் தடவி
கிழங்கு பேஸ்டை அடியில் போட்டு நன்கு தடவி விடுங்கள். கிழங்கின் மேல்
சிறிது மாஜரின் பூசிக்கொள்ளுங்கள். ஒரு முட்டையை அடித்து நூடில்ஸ் மரக்கறி
இறைச்சிக் கலவையுடன் கலந்து கிழங்கின் மேல் போட்டு, மிகுதி மாஜரீனையும் போட்டுக்கொள்ளுங்கள். அவனை (Oven)180 C – 360oF சூடாக்கி நூடில்சை வைத்து 20 நிமிடம் பேக் செய்து எடுத்து சேர்விங் பிளேட்டில் தலைகீழாக மாற்றி அலங்கரித்து சில்லி சோஸ்சுடன் பரிமாறுங்கள்.
குறிப்பு
சைவப்பிரியரிகளுக்கு முட்டைக்குப் பதில் ½ கோப்பை பாலில் ½ தேக்கரண்டி
கோர்ன் பிளவர் சேர்த்து கரைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். அசைவத்தில் மீனிலும்
இறுக்கமான கறி தயாரித்து சேர்த்துக் கொள்ளலாம்.
Thursday, September 4, 2008
அம்மன் கோவில் ஞாபகம் வந்திடுச்சே ஆசையில் ஓடிப் போனேன்.
பரந்த வெளி. சுழற்றி வீசும் அனல் காற்றின் வெப்பம். துடித்துப் பதைத்து மதிய வெப்பத்தில் பாதம் சிவக்க ஓடினால் வாவா என அழைக்கும் ஆல மரக் கூடல். வேர் விட்டு கிளை பரப்பி விசாலித்து நிழலைத் தந்து கொண்டு வழிப்போக்கர்களின் ஓய்விடமாய்…
மரத்தைத் தாங்கும் விழுதுகளில் தொங்கி ஆடும் சிறுவர்களின் கூச்சல் கல்லடுப்புகளில் அவியும் நீர்ப்பாளையம். படைப்பதின் மணம் காற்றில் பரவி ஊரெங்கும் கமழும். கோடை நோய்களைத் தணிக்க, வெப்பத்திற்கு இதமாக அம்மனுக்கு குளிர்த்தி செய்யும் அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.
பூசைப் படையலுக்கு கற்பூர ஆரத்தி!
சாம்பார் சாதம், அவிசு, ஒண்டாக் காச்சல், கறிச்சோறு
இப்படி எத்தனையோ பெயர்களில் அழைக்கலாம்.
தேவையான பொருட்கள்
நாட்டுப்புழுங்கல் அரிசி – 1கப்
கிராமத்து காய்கறிகள்
மஞ்சள் பிஞ்சுப் பூசணி (தோலுடன்) - ¼ கிலோ
பயித்தங்காய் - 150 கிராம்
கத்தரிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 150 கிராம்
புடலங்காய் - 150 கிராம்
பலாக்கொட்டை – 10
முளைக்கீரை சிறிய கட்டு -1
தக்காளி -3
கரட் -1 (விரும்பினால்)
துவரம்பருப்பு – ¼ கப்
வறுத்துத் தோல் நீக்கிய பாசிப்பயறு – ¼ கப்
தேங்காய்ப்பால் -1 கப்
மிளகாயத்தூள் -2 தேக்கரண்டி
தனியா -1தேக்கரண்டி
சீரகத் தூள் - 1தேக்கரண்டி
மஞ்சள்பொடி சிறிதளவு
புளி – இரண்டு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
சாம்பார் வெங்காயம் - 6-7
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் - 2 டேபில் ஸ்பூன்
மரவள்ளி – ¼ கிலோ
உப்பு சிறிதளவு
பொரிப்பதற்கு தேங்காய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - ¼ லீட்டர்
மேலதிக தேவைக்கு
வாழை இலை -1
கொட்டாஞ் சோறு ருசிக்கு 1 வெற்றுத் தேங்காய் மூடி
செய்முறை
நாட்டுப் புழுங்கல் என்றால் மரக்கறியும் அவிவதற்கான தண்ணீரையும் சேர்த்துவிட்டு, அரிசி பருப்பை அவியவிடுங்கள். அரைவேக்காடு அவிந்ததும் மரக்கறிகள், மிளகாய்ப் பொடிவகைகள், உப்பு சேருங்கள்.
15 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி மூடிவிடுங்கள். 10 நிமிடங்களின் பின் கீரை தக்காளி சேர்த்து மூடிவிடுங்கள். 5 நிமிடத்தின் பின் புளிக்கரைசல் ஊற்றி கிளறுங்கள். பின் தேங்காய்ப்பாலையும் விட்டுக் கிளறி சிம்மில் வையுங்கள். இறுக நெய்விட்டு தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள்.
தேங்காயின் அடி மூடியை எடுத்து வாள்பிளேட் கொண்டு வெளித் தும்பை நன்றாகச் சுத்தம் செய்து, 6-7 மணித்தியாலம் தண்ணீரில் ஊறப் போட்டு Steal வூல் கொண்டு உட்புறம் வெளிப்புறம் தேய்த்து உப்பு நீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
மரவள்ளியை 2-3 அங்குல நீள் துண்டுகளாக மெல்லியதாகச் சீவி சற்று வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பேப்பர் ஒன்றில் போட்டு பான் காற்றின் கீழ் வைத்துவிட்டால் ஈரம் உலர்ந்திருக்கும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, உப்பு மிளகாய்த்தூள் தூவிவிடுங்கள். ஒரு மாதமளவில் கெடாமல் இருக்கும். விரும்பிய பொது கொறித்துக் கொள்ளுங்கள்.
கொட்டாஞ் சோற்றுக் கோப்பை, சட்டி இதிலும் போட்டுக் கொள்ளுங்கள்.
குறிப்பு
பிரஸர் குக்கர், ரைஸ்குக்கர், மைக்ரோ விலும் செய்து கொள்ளலாம். கிராமத்து காய்கறிகள் இல்லாத இடத்தில் பீன்ஸ், கரம், கோவா சேர்த்து செய்து கொள்ளலாம். மசாலா விரும்பினால் பட்டை, கராம்பு, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.
-: மாதேவி :-
Friday, August 29, 2008
உலகமயமானது இது
கவனமாக பொக்கற்றில் பதுக்கி தங்கை எனக்காக கொண்டு வந்திருந்தான். மெத்தென கோல்டன் கலரில் என்னைக் கவர்ந்தது. சாப்பிட்டால் கொண்டு வந்த அண்ணனுக்கே அரைவாசி கொடுக்கவே அரைமனம்தான். அவ்வளவு சுவை! பேர் என்னவென்றே தெரியாது. அடுத்த ஸ்போர்ட்ஸ் எப்போவெனக் காத்திருந்தேன்.
பதின்னான்காவது வயதில் நானே செய்யக் கற்றுக் கொண்டேன். அதன் பின் அண்ணனுக்கு அடிக்கடி பரிசு கிடைத்தது. முன்பு தந்ததற்காக.
இங்குதான் கிடைக்கும் என்று எண்ணயிருந்தேன். சீனா, ஜப்பான், பிலிப்பையஸ் என உலகமயமானதுதான்.
கட்லட்
கறி செய்யத் தேவையான பொருட்கள்
எலும்பில்லாத கோழி ¼ கிலோ
உருளைக்கிழங்கு -1
வெங்காயம் - 2
இஞ்சி உள்ளி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்
மிளகு தூள் - 1/4 ரீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை சிறிதளவு
உப்பு சிறிதளவு
இறைச்சிச் சரக்குத் தூள் - 1/2 ரீ ஸ்பூன்
தேசிச்சாறு சில துளிகள்
எண்ணெய் - 2 டேபில் ஸ்பூன்
தோய்ப்பதற்கு தேவையான பொருட்கள்
முட்டை வெள்ளைக்கரு -2
ரஸ்க் தூள் - 1/2 பைக்கற்
பொரிப்பதற்கு
எண்ணெய் ¼ லீட்டர்
சோஸ் தயாரிக்க
தக்காளிப்பழம் - 4(சுடுநீரில் போட்டு தோலை நீக்கி மசித்து எடுங்கள்)
சிலி சோஸ் - ¼ கப்
வெங்காயம் - 1/2
இஞ்சி பேஸ்ட் - ½ ரீ ஸ்பூன்
வினாகிரி - ½ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு-
எண்ணெய் 2 ரீ ஸ்பூன்
செய்முறை
இறைச்சியை அரைத்து எடுத்து உப்பு, மிளகாய்த் தூள், இஞ்சி, உள்ளி பேஸ்ட் கலந்து பத்து நிமிடம் வையுங்கள்.
கிழங்கை அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்
வெங்காயம் சிறிதாக வெட்டி வையுங்கள்.
கறிவேற்பிலையை நான்கு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
தாச்சியில் எண்ணெயை விட்டு, வெங்காயத்தை மெல்லிய நிறத்தில் வதக்கி கறிவேற்பிலை சேர்த்து இறைச்சியைப் போட்டு கிளறி, மூடி போட்டு இரண்டு நிமிடம் விடுங்கள்.
திறந்து பிரட்டிவிட்டு ½ கப் தண்ணி விட்டு மூடிவிடுங்கள்.
இறைச்சி அவிந்து இறுக்கமாக வர அவித்த கிழங்கை மசித்து சேர்த்து, மிளகு தூள், இறைச்சிச் சரக்கு தூவி அடுப்பை நிறுத்தி சில துளி எலுமிச்சம்சாறு விட்டு பிரட்டி ஆறவிடுங்கள். பின்பு சிறு சிறு உருண்மைகளாக உருட்டி சற்றுத் தட்டி வையுங்கள்.
முட்டை வெள்ளைக் கருவை அடித்து எடுங்கள். ரஸ்க் தூளை ஒரு கோப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். தட்டிய கலவைகளை முட்டையில் தோய்த்து ரஸ்க்கில் நன்றாகப் பிரட்டி பிளேட் ஒன்றில் வையுங்கள்.
தாச்சியில் எண்ணெயை விட்டு நன்கு கொதித்த பின் உருண்டைகளைப் போட்டு பொன்நிறமாகப் பொரித்து எடுங்கள். ரிசு பேப்பரில் போட்டு எண்ணெயை வடிய விடுங்கள்.
இந் நேரம் சோஸ் தயாரியுங்கள். எண்ணெய் 2 ரீ ஸ்பூன் விட்டு வெங்காயம் லேசாக வதக்கி இஞசிப் பேஸ்ட் சேர்த்து கிளறி தக்காளிச் சாறைவிட்டு நன்கு வதங்க விடுங்கள். வதங்கியதும் உப்பு, வினாகிரி, சில்லி சோஸ் கலந்து இறக்கி சிறிய பரிமாறும் போலில் ஊற்றி வையுங்கள்.
கட்லட்டுகளை அழகாகப் பிளேட்டில் அடுக்கி சோஸையும் வைத்து வெங்காயத் துண்டங்கள் எலமிச்சை துண்டங்களுடன் பரிமாறுங்கள். விரும்பினால் வெட்டிய மல்லித் தளை தூவிவிடுங்கள்.
குறிப்பு
அசைவம் உண்பவர்கள் முட்டை, மீன், விரும்பிய இறைச்சி வகைகளிலும் செய்து கொள்ளலாம். சைவம் உண்பவர்கள் கிழங்கு, கரட், லீக்ஸ், கொண்டு கட்டிக்கறி தயாரித்தும், வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, கத்தரிக்காயிலும் செய்து கொள்ளலாம். முட்டைக்குப் பதில் மைதாமா கரைசலில் தோய்த்து ரஸ்க் தூளில் நன்றாகப் பிரட்டி பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
:-மாதேவி:-