Saturday, August 31, 2013

உணவுக் கண்காட்சி - பண்ணையிலிருந்து சமையலறைக்கு

பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் (BMICH)  கடந்த 23,24, 25ம் திகதிகளில் Profood propack  'பண்ணையிலிருந்து சமையலறைக்கு' என்ற தொனியில் அங்காடிகளின் கண்காட்சி நடைபெற்றது.


 இக்கண்காட்சி 12 வருடங்களாக நடை பெற்று வருகிறது.  விவசாயம் சம்பந்தமான Agbiz கண்காட்சி 8 வது வருடமாக நடாத்தப்பட்டது.20 கம்பனிகள் 4 பல்கலைக் கழகங்கள், 252 கடைகள் அடங்கியதாக இக் கண்காட்சி இடம் பெற்றது.

ஏறத்தாள 22,500 பார்வையாளர்கள் கண்டு களித்ததாக சொல்கிறார்கள். கண்காட்சியின் விசேட அம்சமாக புதிய விவசாய கண்டுபிடிப்புகளும், உணவு பதனிடுதல், நவீன பொதியிடல் தொழில் நுட்பங்கள், நகர்ப்புற விவசாய செயல்முறைகள், விவசாயம் வியாபாரம் சார்ந்து உள்ளடங்கியதாக இக் கண்காட்சி அமைந்தது.


பார்வையாளர்களுக்கு உணவுப் பொருட்களில் விலை தள்ளுபடிகள், மணித்தியாலயத்திற்கு ஒருமுறை அதிஷ்ட சீட்டிழுப்புகள் எனப் பலவும் நடாத்தப்பட்டிருந்தன.


நானும் கண்காட்சியை சென்று பார்க்க விரும்பியிருந்தேன். விருந்தினர் வருகையால் செல்ல முடியவில்லை. மகள் நண்பிகளுடன் சென்று எனக்கான தகவல்களையும், புகைப்படங்களையும் கிளிக்கி வந்திருந்தாள்.அவற்றை இங்கு தருகின்றேன்.

இக்காட்சி வருடாவருடம் நடாத்தப்படும்போது பலரும் ஆவல் எதிர்பார்ப்புடன் சென்று வருகிறார்கள். விதை பொருட்கள் பெறப்படுவது தொடங்கி உற்பத்தி செய்யப்பட்டு பொதியாக்கப்பட்டு விற்பனைக்கு எடுத்து வருவது வரை நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும் இங்கு எடுத்துக் காட்டினார்கள்.


விவசாயத்திற்கு பயன்படுத்தும் தொழில் நுட்ப மிஷின்கள் பலவும் காட்சி படுத்தப் பட்டிருந்தன.

 இத்துறைகளில் ஈடுபட்டுள்ளோர்கள்.அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து தமது அனுபவங்களையும்  தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடிந்ததால் பல நன்மைகளை பெற்றதாக இலங்கை உணவு பதனிடுவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

கலந்து கொண்ட மக்களும் பலஅனுபவங்களையும் பெற்று மகிழ்வுடன் வீடு திரும்பினர்.


கண்காட்சியில் பங்கு பற்றியோருக்கு விசேட கழிவு விலைகளில் பானங்கள் உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சுவைத்துப் பார்த்து பொருட்கள் வாங்கக் கூடியதான முறையிலும் அமைந்திருந்தது இதன் சிறப்பம்சம் என்றாள் மகள்.


கண்காட்சியுடன் இணைந்ததாக குக்கிங் ஸ்டுடியோ சமையல் கூடம் பிரபல 'சினமன் கிறான்ட் ஹோட்டல் " சமையல் கலைஞர்களால் செய்து காட்டப்பட்டனவாம். இதில் கீழைத் தேய மேலைத் தேச உணவு வகைகள் இடம் பெற்றன என்று சொல்கிறார்கள்.

நெல்லி யூஸ், கரும்புச் சாறு, புளுபெரி பாதாம் ஐஸ்கிறீம் வகைகள்,   மலிவு விலைகளில் வாங்கிச் சாப்பிடதாக மகள் சொன்னாள். எனக்கு ஒலிவ் ஒயில், சூரியகாந்தி ஒயில் போத்தல்கள் வாங்கிவந்து தந்தாள்.

முந்திரிகை கண்ணாடி குவளை தூண்களுள் காட்சிக்கு

கண்காட்சியில் இடம்பெற்ற  கடைகள், உணவுகள், பானங்கள், பொதியிடல், இயந்திர வகைகள், என அவற்றில் சிறப்பானவைக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

நாடுகள் பலவற்றின் உற்பத்திப் பொருட்கள் அடங்கியிருந்தன. இந்திய உற்பத்திப்பொருட்கள் பலவும்  இருந்தனவாம்.


மஜிக் ரைஸ்,சுவீட்ஸ்,சினக்ஸ்,அணில்சேமியா எனப் பலதும் என்றாள்.


சீன பியஸ், அப்பிள் பழவகைகள் இருந்தன.

கனேடியன் தூதுவராலயம், பருப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் அதன் சமையல் முறைகள் பற்றியும் விளக்கினார்கள்.


பழங்களை நீரகற்றி (Dehydrate)  பக்கற்றுகளில் பொதியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.


 கஜீ ஸ்டோல்  அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது.



உடன் வறுத்து சுடச்சுடக் கொடுத்தார்கள்.

கடை மேல் கூரையில் முழு முந்திரிகை.


பிளாஸ்டிக் அல்லாத சுற்றாடல் பாதுகாப்பிற்கு உகந்த  மீள உபயோகிக்கக் கூடிய பனை ஓலையால் செய்யப்பட்ட பைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது மிகவும் வரவேற்பிற்குரியது..


வாசனைச் சரக்குகள் சிறிய மண் பானைகளி்ல் இடப்பட்டு அழகுற காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


பழங்கள்,  டிரகன் பழம் மரத்துடன்.


 பலவிதகாய்கறிகள்,


தாவரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


நிச்சயம் இவ்வகையான கண்காட்சிகள் பலருக்கும் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை. காட்சியை  சிறப்பாக நடாத்தியவர்களை பாராட்டுவோம்.

-: மாதேவி :-

Saturday, August 10, 2013

பிஞ்சு மென் விரலாளில் குழம்பு


வெண்டை, வெண்டி, வெண்டிக்காய், Ladies finger என அழைக்கப்படுகிறது. சிறிய 2 மீற்றர் உயரம் வரை வளரக் கூடிய தாவரம். சொரசொரப்பான தண்டுகளையும் இலைகளையும் கொண்டிருக்கும். மல்லோ என அழைக்கப்படும். 



Malvacea  குடும்பத்தைச் சார்ந்தது. அறிவியல் பெயர் Abeimoschus esculentus ஆகும். எதியோப்பிய உயர்நிலப் பகுதியே இதன் தாயகமாகக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவில் ஓக்ரா என்று அழைக்கின்றார்கள். வேறும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. Bhindiஅல்லது  gumbo எனவும் அழைப்பார்கள்.

வெள்ளை மஞ்சள் நிறங்களுக்கு இடைப்பட்ட சாயல்களில் இதன் பூக்கள் காணப்படுகின்றன.


இதழ்களில் செந்நிற அல்லது ஊதா நிறத்தில் புள்ளிகள் இருக்கும். வெண்டியில் பால் வெண்டை எனவும் வெளிறிய மென் பச்சைநிறத்தில் ஓர் இனம் இருக்கின்றது.

சிகப்புக் கலரிலும் வெண்டைக் காய்கள் இருக்கின்றன. 


சாடிகளில் வைத்தும் வளர்க்கும் செடி வகை இனம் இது என்பதால் பல்கணி வீட்டுத் தோட்டங்களுக்கு வளர்க்க உகந்த காய்கறிச் செடியாகும்.


மிகப் பெரிய 0.5 மீற்றர் நீளமுள்ள வெண்டைக் காய் கேரள மாநிலத்தில் பாஸ்கரன் உன்னி என்பவரது தோட்டத்தில் விளைந்து சாதனை படைத்துள்ளது. இது 'சத்கீர்த்தி' எனற இன வகையைச் சார்ந்தது.

வேளாந்துறை அதிகாரிகள் 'லிம்கா புக் ஒவ் ரெகோட்ஸ் அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்கள்.

வெண்டை ஹெல்தியான உணவாகக் கொள்ளப்படுகின்றது.

அன்ரிஒக்சிடன்ட், கல்சியம், பொட்டாசியம், விட்டமின் சீ பெருமளவு அடங்கியது. நாரப்பொருள் அதிகம் இருப்பதால் நீரிழிவு, கொல்ஸ்டரோல், மூலவியாதி  நோயாளிகளுக்கு நல்லது.

உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை இக்காயில் உள்ள பெக்டினில் இருக்கின்றது. கொழுப்பு இல்லாததால் உடல் எடையைக் குறைப்பதற்கும் உகந்த உணவாகக் கொள்ளப்படுகின்றது. நோயாளர்கள் ஸ்டீம் செய்து உண்பது சிறந்தது.






Okra, raw
Nutritional value per 100 g (3.5 oz)
33 kcal (140 kJ)
7.45 g
1.48 g
3.2 g
0.19 g
2.00 g
90.17 g
Vitamin A equiv.
36 μg (5%)
0.2 mg (17%)
0.06 mg (5%)
1 mg (7%)
23 mg (28%)
0.27 mg (2%)
31.3 μg (30%)
82 mg (8%)
0.62 mg (5%)
57 mg (16%)
299 mg (6%)
0.58 mg (6%)
Percentages are roughly approximated
from US recommendations for adults.
Source: USDA Nutrient Database



இலங்கை இந்திய பாகிஸ்தானிய சமையல்களில் பிரபலமானது.

பால்கறி, மோர்க் குழம்பு, தோசை, பச்சடி, பொரியல், வறுவல், மண்டி, ஸ்டப், எனப் பலவாறு இடம்பிடிக்கின்றது.

வெண்டைக் காய்சாம்பார் என்ற பெயரைக் கேட்டாலே ஓட்டம் பிடிப்பார் பலர் உண்டு. அவர்களையும் சாப்பிட வைக்க இந்த பொரித்த குழம்பு கை கொடுக்கும்.

சாதம் பிட்டு, இடியாப்பம், பாண், ரொட்டி, நாண் உணவுகளுக்கு சாப்பிட சுவையானது.

காய்கள் வாங்கும்போது பிஞ்சுக் காய்களாக தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுங்கள். காய்களின் நுனிப் பகுதியை உடைத்தால் முறிந்தவிடும் காய்கள் பிஞ்சாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரித்த குழம்பு 



தேவையானவை
  • வெண்டைக்காய்  - 15-20
  • பம்பாய் வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • கட்டித் தேங்காய்ப் பால் - ¼ கப்
  • மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
  • மல்லித்தூள் - ½ ரீஸ்பூன்
  • சீரகத்தூள் -  ¼ ரீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - சிறிதளவு
  • புளிக்கரைசல் உப்பு தேவையான அளவு
  • பூண்டு - 5 பல்லு
  • வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
  • சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
  • கடுகு  - ¼ ரீ ஸ்பூன்
  • கறிவேற்பிலை - 2 இலைகள்
  • ரம்பை இலை  - 2 துண்டு
  • ஓயில் - ¼ லீட்டர்


செய்முறை

வெண்டைக் காயைக் கழுவி துடைத்து உலர வையுங்கள் வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டி வையுங்கள். பூண்டைத் தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.


காய்களை  2 அங்குல நீள் துண்டுகளாக வெட்டுங்கள்.

எண்ணெயைக் காய விட்டு கொதித்ததும் காய்களைப் போட்டு நன்கு பிறவுன் கலர் வரும் வரை இடையிடையே கிளறிக்கொண்டு பொரித்து எடுங்கள்.

சிறிதளவு ஓயிலில் கடுகு, பூடு, சோம்பு, வெந்தயம், தாளித்து வெங்காயம,; பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள்.

சிவந்ததும் கருவேற்பிலை, ரம்பை போட்டு இறக்குங்கள். காய்களைக் கொட்டி தூள் வகைகள் உப்பு புளிகரைசல் விட்டு கொதிக்க வையுங்கள். கொதித்ததும் தேங்காய்ப் பால் ஊற்றி ஒருகொதி வர இறக்குங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு சாப்பிட தயாராகிவிடும்.

மாதேவி