Showing posts with label அடுக்களைப் பொருட்கள். Show all posts
Showing posts with label அடுக்களைப் பொருட்கள். Show all posts

Saturday, April 23, 2011

கனவாகிப்போன அடுக்களைப் பொருட்கள்

சமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்.


குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.


அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.


நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.

மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.

அகப்பை கூடு

வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.

கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug )    ரீ பொட்; (Pot) இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை  நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.




சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.



அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.


ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின. 

இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven) பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.       

அரிக்கன் லாம்பு (விளக்கு)
இரவில் வெளிச்சம் ஏற்ற கைவிளக்கு, குப்பி விளக்கு, அரிக்கன் விளக்கு, வைத்திருப்பார்கள்.


நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.


மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.

காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.


இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.

கைக் கோடரி

விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.  

சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.

கல்லடுப்பு

பின் களிமண்ணால்  அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.

இரும்பு அடுப்பு

குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர். 

பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.

மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர  பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.

அம்மி
கல்லாலான ஆட்டுக்கல்லு, அம்மி, தோசை, இட்லி மா, சட்னி, மசாலாச் சரக்கு, அரைப்பதற்கும்.
ஆட்டுக்கல்லு

திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.

உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
 
திரிகை
 இலங்கையில் விசேடமாக இடிசம்பல் இடிப்பதற்கும், பனம்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, துவைக்கவும்; பயன்பட்டன.


பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை

மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..

இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் 

பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.

இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….

டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…

சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.

ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……

Sunday, November 14, 2010

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி