Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

Saturday, April 24, 2010

கோடை காலத்துக்கு மணத்தக்காளி சட்னி


“பச்சை நிறமே…பச்சை நிறமே.. இச்சை கொடுக்கும் பச்சை நிறமே” மனக்கண்ணில் மாதவனும் ஷாலினியும் பறப்பது… தெரிகிறதே.

இலைகள்

நாளாந்தம் உண்ணும் அரிசி, கோதுமை மாப்பொருள் உணவுடன் எமது உடலுக்குத் தேவையான விட்டமின்களையும், கனிப்பொருள்களையும் பெறுவதற்கு இலை வகைகள், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்ண வேணடும்.

இரும்பு கல்சியம், பொட்டாசியம், மக்னீசியம், அயடின் போன்ற கனியங்கள் முக்கியமானவை. இலைவகைகளில் உடல் வளர்ச்சிக்கும் தேவையான விற்றமின் ஏ, பீ சுண்ணாம்பு இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன என்பது அறிந்ததுதான்.

அரிசி உணவோடு கீரை

அரிசி உணவில் விற்றமின் ஏ குறைவாக இருப்பதால் நாங்கள் நாளாந்தம் உண்ணும் உணவில் 50கிராம் ஆவது கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இலகுவாக மலிவாகக் கிடைக்கும் கீரைகளை வாங்கிச் சமைத்துக் கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை


கீரை வகையில் மணத்தக்காளி கீரையும் சிறந்தது. இதன் பொட்டானிக்கல் பெயர் Solnum nigrum ஆகும்.

மணத்தக்காளி என்பது இங்கு மருவி மணித்தக்காளி ஆயிற்று.
மணிமணி போல் பழங்கள் இருப்பதால் அவ்வாறு வந்ததோ?

இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம்.
சிறிய வெள்ளைப் பூக்களுடன் மலரும்.
இதன் காய் மிகவும் சிறிதாக கொத்துக் கொத்தாகக் காய்த்துத் தொங்கும். காய் முற்றிவர கத்தரிப்பூ நிறமாக மாற்றமடையும்.


இன்னொரு இன வகையின் பழம் இளம் சிகப்பு நிறமாக இருக்கும். இப் பழங்கள் இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். நேரடியாகவே உண்ணலாம்.

சிறிய வயதில் விரும்பி உண்டதில்லையா?
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான பழம் இது.



மணத்தக்காளி இலையில் சட்னி, பச்சடி, கூட்டு, பொரியல், ரசம், சொதி செய்யலாம். காய், பழத்தில் புளிக் குழம்பு செய்து கொள்ளலாம்.

வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள்.

கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது.

வீட்டு வைத்தியத்தில்

கிராமங்களில் இதன் நன்மையை அறிந்து அதிகம் பயன்படுத்துவர்.

குடல் புண்ணுக்கும் சுகம் தரும். மூல நோய்க்கும் சிறந்தது என்பர்.

கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய விற்றமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.

மணத்தக்காளி சட்னி

இன்று சட்னி செய்து கொள்வோமா?
இரண்டு முறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்-
முறை - 1



மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
செத்தல் மிளகாய் - 1
பூண்டு – 2-4
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
பழப்புளி – தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ ரீ ஸ்பூன்

தேவையான பொருட்கள்-
முறை - 2


மணத்தக்காளிக் கீரை – 1 பிடி
மிளகு - ¼ ரீ ஸ்பூன்
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(விரும்பினால்)
சின்ன வெங்காயம் - 6
தேங்காய்த் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு.
தேசிச் சாறு - 1 ரீ ஸ்ப+ன்

செய்முறை - 1

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

ஓயிலில் செத்தல் மிளகாய், பூண்டு வதக்கி எடுத்து வையுங்கள்.

மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி, கிர்…கிர் எனத் தட்டி எடுத்திட வேண்டியதுதான்.

செய்முறை – 2

கீரையை துப்பரவு செய்து ஒவ்வொரு இலையாக ஆய்ந்து எடுங்கள்.

சிறிதளவு தண்ணீர் விட்டு நிறம்மாறாது அவித்து எடுங்கள்.

தேசிச்சாறு தவிர்த்து மீதி எல்லாப் பொருட்களையும் மிக்சி ஜாரில் கொட்டி,அரைத்து எடுங்கள்.

பரிமாறும் கோப்பையில் எடுத்து வைத்து விடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக் கலந்துவிடுங்கள்.

குறிப்பு

(தேங்காய்த் துருவலை லேசாக வறுத்து அரைத்துக்கொண்டால் சட்னி கெடாமல் இருக்கும். சுவையிலும் வித்தியாசத்தைத் தரும்.)

மாதேவி.

Tuesday, January 12, 2010

வாழைக்காய் வறமிளகாய் சட்னி



வாழைக்காய் வறமிளகாய் சட்னி

வாழையின் பயன்கள், போசாக்குகள் பற்றி ஏற்கனவே நிறையக் கூறியாய் விட்டது.

அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

சோளகக் காற்று வீசும் காலத்திலும் சுழன்றடிக்கும் சூறாவளிக்காற்று வந்த பொழுதுகளிலும் முதலில் முறிந்து விழுவது வாழைதான்.

நிலத்தில் விழுந்த வாழைமரங்களில் இருக்கும் பிஞ்சுக்காய்களை என்ன செய்வது என்பது எல்லோருக்கும் பெரும்பாடாக இருக்கும்.

காயை முழுதாக அவித்தெடுத்து வறை, தேங்காய் சம்பல்,சட்னி,பொரியல் செய்துகொள்வார்கள். இவ் வழியே பாரம் பரியமாக நடைமுறையில் இருந்து வந்த சமையல் முறைதான் இச் செய்முறை.

நமது முன்னோர்கள் மரக்கறிகளின் தோலிலுள்ள சத்துக்கள் பற்றியும் நிறையவே அறிந்திருந்தார்கள்.

சமையலில் உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பால் பிசுக்கு, போன்ற காய்கறி வகைகளை தோல் நீக்காது தோலுடன் சமைத்து உண்டனர்.

இவ்வாறுதான் வாழைக்காயின் உட்தோலையும் எடுத்து சமையல் செய்து வந்தார்கள்.

இச் சமையல் முறைகள் இப்பொழுது பெரும்பாலும் வழக்கில் இல்லை.

ஒரு வாழைக்காயை வைத்து இருவகைச் சமையல் செய்து விடுவார்கள்.

உட் சதைப்பகுதியை தேங்காய் பால்கறி அல்லது கூட்டு, குழம்பு, காரக்கறியாகச் செய்து கொள்வார் இல்லாது போனால் செய்யும் சாம்பாரிலும் கலப்பர்.

அதன் வெளித்தோலை சட்னி, இடிசம்பல் செய்து விடுவார்கள். பொருளும் வீண்போகாது சத்தும் கிடைக்கும்.

இவை புதிய தலை முறையினருக்கு தெரிந்திருக்கவும் மாட்டாது
உரலில் இட்டு இடிக்கும் சம்பலின் சுவையும் அம்மியில் வைத்து பசையாக கட்டியாக உருட்டி அரைத்தெடுக்கும் சட்னியின் சுவையும் அட ..அட...

உங்கள் நாக்கு உறுண்டு பிரளுதா... அம்மா பாட்டியின் ஞாபகங்கள் வந்து விட்டதா?

கள்ளமாக எடுத்துத் திண்ட சம்பல்களின் ருசி ஞாபகங்கள் வந்திருக்குமே!

திருமணமாகாதவர்கள் உரல்,அம்மி.ஆட்டுக் கல்லுடன் இருக்கும் சம்பலை வாயில் எடுத்து வைத்து ருசி பார்த்தால் கல்யாணத்தன்று கட்டாயம் மழைபெய்யும்.

இதை நான் சொல்லவில்லை முன்னோர்கள் சொல்லுவார்கள்.

எங்கள் சிறுவயதில் சம்பல் இடிக்கும் போது கூறுவார்கள்.

திருமணமானவர்களுக்கு விதிவிலக்கா ? நீங்களே சொல்லுங்கள்.

இன்று இச்சமையலைச் செய்வோமா.

தேவையான பொருட்கள்



வாழைக்காய் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
வறமிளகாய் - 5 - 7 ( காரத்திற்கேற்ப)
சாம்பார் வெங்காயம் - 7 -10
பூண்டு – 2 - 4 பல்லு
சீரகம் - 1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
உப்பு – ( தேவைக்கேற்ப )
புளி - ( தேவைக்கேற்ப )
ஓயில் - ½ ரீ ஸ்பூன்

செய்முறை


வாழைக்காயின் மேல் தோலை நார்வாங்கி வீசிவிடுங்கள். நாற்புறமும் இருக்கும் உட்தோலை சீவி எடுத்து அலசி சிறிது தண்ணீர்விட்டு அவித்து எடுங்கள்.

ஒயிலில் வறமிளகாய் , பூண்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உரலில் இடிப்பதாக இருந்தால் இப்போதெல்லாம் இது எங்கே???

சிறிய ஈய உரல் வைத்திருப்பவர்கள் செய்து கொள்ளலாம் .


அவித்தெடுத்த வாழைக்காய் தோல்களை 2 அங்குலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

முதலில் மிளகாயை உரலில் போட்டு இடியுங்கள். இத்துடன் உப்பு சீரகம் சேர்த்து இடித்துவிட்டு பூண்டையும் சேர்த்து இடித்து விடுங்கள்.

அடுத்து கறிவேற்பிலை , வெங்காயம் இரண்டையும் போட்டு புளி சேர்த்து இடியுங்கள்.

தேங்காய் துருவல் சேர்த்து நன்கு இடியுங்கள்.

இதனுடன் வாழைக்காய் துண்டுகளைக் கொட்டி இடித்துக் கொள்ளுங்கள்.

பசையாகும் வாழைக்காய் உலக்கையை எடுக்கவிடாது சற்று இழுத்துக்கொள்ளும். மூச்சைப் பிடித்து கைகளை இழுத்துக் எடுத்துக் கொண்டு (கைகளுக்கும், உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்) வாழைக்காய் தேங்காயுடன் சேரும்வரை நன்றாக இடித்து எடுங்கள்.

இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி...

யார் அங்கே உரலுடன் இருக்கும் போது வாயில் வைத்துப் பார்ப்பது? நல்ல பிள்ளையாக சற்றுப் பொறுத்திருங்கள்.

நல்ல காலம் எனது திருமணத்தில் மழை பெய்யவில்லை!!

இதோ கோப்பையில் வைத்துத் தருகிறேன்.

(உரல் வைத்திராதவர்களுக்கு இருக்கிறதே மிக்சி லேசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.)

மாதேவி