Saturday, December 31, 2011

சமையலறையில் விடுகதைப் போட்டி


பரம்பரையாக நீண்டகாலமாக வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தவைதான் விடுகதைகள். பாட்டிமார்கள் குழந்தைகளின் அறிவை வளர்க்க, சிந்திக்க வைக்க விடுகதை கூறுவார்கள்.

ஓய்ந்திருக்கும் வேளைகளில் விடுகதைகளைச் சொல்லி  அவிழ்க்க முடியுமா என கேட்பதுண்டு. கணவன் மனைவி, காதலன் காதலியும் விடுகதைகளை ஒருவருக்கு ஒருவர் வீசி திக்குமுக்காட வைப்பதுண்டு.

  • நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கியங்கள் இவற்றுள் விடுகதையும் ஒன்று எனச் சொல்லலாம். 
  • விடுகதைகள் ஓரிரு வரிகளில் மறைமுகமாக விபரித்து எடுத்துச் சொல்லப்படுபவை. 
  • சிந்தனையைத் தூண்டி வைப்பது இதன் நோக்கம்.
விடுகதையை புதிர், வெடி, நொடி என்றும் சொல்லுவார்கள்.

சில விடுகதைகள் சொல்கிறேன். உங்களால் விடுவிக்க முடிகின்றதா?

  1. குச்சி உடம்பில் குண்டுத் தலை, தீக்குச்சியுமல்ல, அது என்ன?
  2. சடசட மாங்காய் சங்கிலி ரோடு விழுந்தா கறுப்பு, தின்னால் தித்திப்பு. அது என்ன?
  3. குண்டப்பன் குழியில் வீழ்ந்தான். எழுந்தான், எல்லார் வாயிலும் விழுந்தான் அவன் யார்?
  4. ஊளை மூக்கன் சந்தைக்குப் போறான். அவன் யார்?
  5. வெள்ளைக்காரனுக்கு கறுப்புத் தொப்பி அது என்ன?
  6. மரத்து மேலே பழம் பழத்து மேலை மரம் அது என்ன?
  7. காற்றுப் புகாத வெள்ளைக் கூண்டில் மஞ்சள் புறா மயங்கிக் கிடக்கு அது என்ன?
  8. உச்சிக் குடும்பியன் சந்தைக்கு வந்தான். அவன் யார்?
  9. அம்மா போடும் வட்டம் பளபளக்கும் வட்டம், சுவையைக் கூட்டும் வட்டம், சுட்டுத் தின்ன இஸ்டம் அது என்ன?
  10. நாலு மூலைச் சதுரப் பெட்டி, அதன் மேல் ஓடுமாம் குதிரைக் குட்டி அவர்கள் யார்?
  11. பச்சைக் கதவு. வெள்ளை யன்னல் திறந்தால் கறுப்பு ராஜா அது யார்?
  12. சொறி பிடிச்சவனை கறி சமைத்து சோறெல்லாம் கசப்பு அவன் யார்?
விடைகள் சொல்லிவிட்டீர்களா?

விடைகளைச் சரிபார்க்க  கீழே வாருங்கள்.


 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 .................................
 ..................................................................
...................................................................................................
..................................................................
 .................................
 


உங்களுக்கு எத்தனை விடைகள் சரி்யாக வந்தன?


3 மார்க்குக்கு கீழே விடை தெரிந்தவர்களுக்கு ஹோம்வேக் நிறையவே இருக்கிறது. இன்னும் கொஞ்சம் சமையலும் தமிழும் கற்றுக் கொண்டு அடுத்த பரீட்சைக்கு வாங்க.

6 விடுகதைகளுக்கு மேலே கண்டு பிடித்தவர்களுக்கு பாஸ் சேர்டிபிக்கற் கிடைக்கிறது.

எல்லா விடைகளையும் சரியாகச் சொன்னவர்களுக்கு  ஒரு பரிசு தரலாமா.....

12 விடுகதைகளுக்கும் சரியான விடைகளை கண்டு பிடித்தவர்களுக்கு சின்னுரேஸ்டி விடுகதை  வெற்றிக் கேடயம் வழங்கப்படுகிறது. எடுத்துக்கொண்டு சென்று உங்கள் வீட்டில் சேமியுங்கள்.



10 எடுத்தவர்களின் அழும் ஓசை காதில் விழுகிறது சரி நீங்களும் கேடயத்தை பிடித்துக் கொள்ளுங்கோ....

பிறக்கும் 2012 அனைவருக்கும்  சகல சிறப்புகளும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய  வாழ்த்துகிறேன்.

- மாதேவி -

Sunday, December 4, 2011

பனம் பழத்தில் பதமான பணியாரம்

சிறுவயதில் பனம்பழம் சாப்பிடதில்லையா?

மாம்பழமும் பனம்பழமும் யாழின் தனித்துவத்திற்கு அடையாளமான பழங்களாகும்.

தின்னத் தின்ன ஆசை..

பனம்பழம் நன்கு கனிய முன்னர் நுங்கு என அழைக்கப்படும். நுங்கை வெட்டி நுங்கை அதன் மூளில் வைத்துச் சுவைத்ததை என்றும் மறக்க முடியாது.

முற்றிய சீக்காயை ஆசையால் நிறையச் சாப்பிட்டு வயிற்றுக் குத்து வந்தவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.

சூப்பப் போறார் பனம் பழத்தை..

ஏழைகளின் உணவாகவும் பனம்பழப் பொருட்கள் இடம் வகித்திருக்கின்றன என்பதையும் மறக்க முடியாது. பனம்பழம் துவர்ப்பும் இனிப்பும் கலந்த அலாதியான சுவையைக் கொடுக்கும்.

பனம்பழத்தை பழமாகவும் அவித்தும் சுட்டும் உண்பார்கள்.  சுவைக்குப் பனங்களியுடன் புளியும் கலந்து சாப்பிடுவார்கள். சண்டைக் காலத்தில் சவர்க்காரம் ஆனை விலை விற்ற போது பனம்பழத்தை தோய்த்து உடைகளைக் கழுவிய காலம் நினைவுக்கு வருகிறது.

கழுவிய உடைகளை உலரவிட்ட நேரம் மாடுகளும் அவற்றைச் சுவைத்துப் பார்த்தது பொய்க் கதையல்ல.

பனம்பழக் காலத்தில் வீடுகளில் செய்யும் பனங்காய்ப் பணியாரம். ஓலைப் பெட்டியில் அமர்ந்து தென் இலங்கையில் உள்ளோர் சுவைக்கப் பயணமாகும். ரெயில் ஏறி பயணித்த காலமும் ஒன்று இருந்தது.

இப்பொழுது இரயிலும் ஓலைப் பெட்டிகளும் யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போய்விட்டன.

கொழும்பில் பம்பலப்பிட்டி கற்பகம் பனம்பொருள் கடையில் பனம்பொருட்கள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இது பனை அபிவிருத்தி சபையினால் நடாத்தப்படுகிறது.


பனம் களியும் போத்தல்களில் கிடைக்கிறது.

பனம்பழக் காலத்தில் புத்தளம், சிலாபத்திலிருந்து வரும் பனம் பழங்கள் ரூபா 100- 150 என கொழும்பில் விற்பனையாகும்.

'....பச்சோலை சல சலத்து,
நுங்குக்கண் முற்றி, அடிக்கண் கறுத்து, நுனி சிவந்து
பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனந்துண்டமே!..'


நம் ஊர் பனங்காணி

என ஒளவையார் பனம்பழத்தின் அழகை அருமையாகப் பாடியுள்ளார்.

 '..சேரனும், சோழனும்,
பாண்டியனும் ஒளவை சொற்படியே
மங்கலமாயுண்ட தெய்வப் பனம்பழம்..'


எனச் சோமசுந்தரப் புலவர் என எமது பனம்பழத்தை விதந்து பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..

இன்று நாம் செய்யப்போகும் பனங்காய்ப் பணியாரத்துக்கான களி யாழ்ப்பாணத்திலிருந்து எனது நண்பியின் அக்கா அனுப்பியது. பனங்காயைப் பிழிந்து களி எடுத்து காச்சி போத்தலில் நண்பிக்கு அனுப்பியிருந்தார்.

நண்பியின் தயவால் கிடைத்த களியில் நான் செய்தது. பயணப்பட்டு வந்த களியில் செய்த பணியாரத்தின் சுவைக்கு ஈடு ஏதும் உண்டா.

சென்ற வருடம் யாழ் சென்ற போது எமது தோட்டத்து பனம் பழத்தை கொழும்பு கொண்டுவந்து பணியாரம் செய்தேன். 

செய்வோமா பணியாரம்.

நன்கு பழுத்த ஒன்று அல்லது இரண்டு பனம் பழத்தை நன்கு கழுவி எடுங்கள். மேலுள்ள மூளைக் கழட்டி விடுங்கள்.

துணியும் துவைக்கலாம், மாடும் நாமும் சாப்பிடுவோம்.


பனம் பழத்தின் மேலுள்ள நாரை சிறிய மேசைக் கத்தியினால் பழத்தின் மேல் பகுதியிலிருந்து நீள் பக்கமாக சீவி எடுங்கள்.

நார் வெட்டும் கைகள் பத்திரம்.

வெட்டி அகற்றிய பின்மீண்டும் பழத்தை தண்ணீரில் நன்கு கழுவுங்கள்.
பழத்தைப் பிரித்து இரண்டு மூன்றாக விதையுடன் பிரியும்.

அவற்றைப் பிழிந்து அதிலுள்ள களியை இரு கைகளாலும் அழுத்தி எடுங்கள்.

களி தும்புகளுடன் கூடி இருக்கும். மெல்லிய வெள்ளைத்துணி அல்லது கண்ணறைத் துணியை வைத்து களியை வடித்தெடுங்கள்.

வடித்தெடுத்த களியை அடுப்பில் வைத்து சீனி சேர்த்து  பச்சை வாடை போக காச்சி எடுங்கள். ஆறவையுங்கள்.


இப்பொழுது காச்சிய பனம்களி தயாராகிவிட்டது.

பணியாரத்துக்கு தேவையான பொருட்கள்

பனங்களி - 1 கப்
சீனி- ¼ கப்
பொரிக்க எண்ணெய் - அரை லீட்டர்.
அவித்த மைதாமா அல்லது வறுத்த உழுந்துமா அல்லது அரிசிமா - ¼ கப்
உப்பு சிறிதளவு.

பனங்களியும் நான் சுட்ட பலகாரமும்

செய்முறை

காச்சிய பனங்களியுடன் மைதாமா உப்பு சேர்த்து கிளறி எடுங்கள்.
தாச்சியில் எண்ணையை விட்டு நன்கு கொதிக்க மாவைக் கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுங்கள். மீதிக் களியையும் அவ்வாறே செய்து கொள்ளுங்கள்.

ரிசூ பேப்பரில் போட்டு ஓயில் வடியவிட்டு ஆற வைத்த பின் இரண்டு மூன்று நாட்கள் வைத்துச் சாப்பிடுங்கள்.

மீண்டும் மீண்டும் சாப்பிட்டு உடனேயே தட்டுக் காலியாகிவிடும்.

சற்று நேரத்தில் காலியாகப் போகும் ..


குறிப்பு -
  • (மைதாமா கலந்தால் மெதுமையான பணியாரம் கிடைக்கும்.
  • அரிசிமா, உழுந்துமா சற்று உரமாக இருக்கும். 
  • மா கலக்காமல் தனியே களியிலும் செய்வார்கள் இது கடித்துச் சாப்பிடும் போது களிப் பிடியாக இருக்கும்.
0.0.0.0.0.0

Monday, November 28, 2011

கோடைக்கு நுங்கு பதநீரும் வாய்ருசிக்கு பனம் பட்சணங்களும்

பனை. இது வெட்ப வலயப் பிரதேசத்திற்கான தாவரம் . இயற்கையாகவே வளரும். புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம்.


கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம், கற்பகதரு என்கிறார்கள்.

தேசிய வளங்களான தேயிலை இரப்பர் தென்னையுடன் பனையும்அடங்கும்.

இளம் கன்றுகள் வடலி என அழைக்கப்படும்.


பனைகள் உயர்ந்து 30 மீட்டர் வரை வளரும். உச்சியில் முப்பது நாற்பது வரையிலான விசிறி வடிவமான ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.


பொதுவாக பனைகளுக்கு கிளைகள் இல்லை. அபூர்வமாகவே கிளைப் பனைகள் காணப்படும். இது வல்லிபுரத்துக் கோவிலடிக் கிளைப் பனை.


பனை விதை நாட்டப்பட்டு முதிர்வடைவதற்கு 15 வருடங்கள் வரை எடுக்கும். 20 வருடங்களின் பின்னர் வருடம் ஒன்றிற்கு ஆறாயிரம் ரூபா தொடக்கம் பதினையாயிரும் வரை வருமானத்தைத் தரும்.

ஒரு பனையிலிருந்து நூறுக்கும் அதிகமான பலன்களைப் பெறலாம் என்கிறார்கள். 20 வருடங்கள் முதல் 90 வருடங்கள் வரை பனைகள் மூலம் வருமானம் கிட்டும். மரத்தின் சகல பாகங்களும் பலன் தரக் கூடியன.

பனை அபிவிருத்தி சபை ஒன்று இலங்கையில் 1978ல் உருவாக்கப்பட்டது. இதனால் பனம்பொருள் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட்டன.

' தொப்பென்று விழுந்தான் தொப்பிகழண்டான் ' அவன் யார் ?  என்ற சிறுவயதில் நொடி விளையாட்டுக்களும் நினைவில் வந்து செல்கின்றதல்லவா.

பனையிலிருந்து நுங்கு,சீக்காய், பனம் பழம் கிடைக்கும்.


பனம் பழத்தை பாத்தியிலிட்டு பனங்கிழங்கு, பூரான், பச்சை ஒடியல், புளுக்கொடியல், பனாட்டு, பனங்காய் பணியாரம், பாணி, பதநீர், வினாகிரி, கள்ளு,  சாராயம், கல்லக்காரம், பனஞ்சீனி, பனங்கட்டி, கோடியல், ஜீஸ், ஜாம், எனப் பலவும் ஒடியல் மாவில் கூழ், பிட்டும், தயாரிக்கலாம்.

பதநீர் உடலுக்கு குளிர்ச்சி என்பார்கள். அது உடல் நலத்திற்கு நல்லது என்பார்கள். பதநீரை எமது ஊரில் கருப்பணி என்றும் கூறுவர்.

ஆனால் கள்ளு போதை ஏற்றும்.

""....நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்கள் அங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாஞ்
சிதைத்தவர் குடித்தலாலே...""

இவ்வாறு யாழப்பாணத்தைத் தனது பெயரிலேயே சூடிக் கொண்ட மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் அன்று பாடினார்.

பச்சை ஓலை ஆடு மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். குருத்தோலையை வெட்டி எடுத்து காயவிட்டு பெட்டி, பாய், தடுக்கு, கூடை, சுளகு, உமல், பனங்கட்டிக் குட்டான், நீத்துப்பெட்டி, கொட்டைப்பெட்டி, விசிறி, இடியப்பத் தட்டுகள், தொப்பி, அழகிய கைவினைப் பொருட்கள், கைப்பைகள் எனப்பலவும் தயாரிக்கின்றார்கள்.


காய்ந்த ஓலைகள் வீட்டுக் கூரை மேயவும், வீட்டைச் சுற்றி வேலி அடைப்பதற்கும்  உதவுகின்றன.

"காய்ந்தோலை விழக் குருத்தோலை சிரிக்கும் " என்ற பழமொழியும் தெரிந்தது தானே.


மூரி மட்டையிலும் வேலி அடைப்பார்கள். பொதுவாக வெறும் காணிகளைச் சுற்றி வேலி அடைக்கவே மூரி மட்டையைப் பயன்படுத்துகிறார்கள்.

பனையோலையின் காம்பு மிக நீண்டது. இது பனை மட்டை எனப்படுகிறது. காய்ந்த பின் அதனை மூரி மட்டை என்பார்கள்.


அக்காலத்தில் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்கான துலா செய்வதற்கு பனை மரம் பயன்பட்டது.

துலா. நன்றி:- கட்டற்ற கலைக்களஞ்சியமான ...
ta.wikipedia.org

கிணறு இறைக்க கிணற்றுப் பட்டையும் வைத்திருந்தார்கள்.

... பட்டையால தண்ணி வார்க்க துலா மிதிச்சுப் ...
நன்றி:- newjaffna.com

தும்புக் கைத்தொழில் தொழிற்சாலை இயங்கியது. காய்ந்த ஏனைய பாகங்கள் விறகுக்காகப் பயன்படும். வீடு கட்டும்போது வளை, தீராந்தி, பனஞ்சிலாகை எனவும் பலவாறு பனை மரம் உபயோகப்படுகிறது.

ஆதிகாலத்தில் எமது அறிவையும், கல்வியையும் எதிர்காலப் பரம்பரையினருக்கு பாதுகாத்துக் கொடுக்கும் பொக்கிசங்களாக இருந்தவை ஏடுகளே. பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதில் எழுத்தாணிகளால் குறித்து வைத்தே எமது இலக்கியங்களும் பேணப்பட்டன.

உ.வே.சா கண்டெடுத்த ஓலைச்சுவடிகள் சில இவை என
ta.wikipedia.org சொல்கிறது.

இப்போதும் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குவது எனச்சொல்வார்கள். அன்றைய நாளில் ஏட்டுச் சுவடியுடன் செல்வது நமது தொன்று தொட்ட வழக்கமாக இருந்துவருகின்றது.

யுத்த காலத்தில், சென்றிப் பொயின்றுகளுக்காவும் பங்கர் மூடிகளுக்காகவும் பெரும் தொகையான மரங்கள் அழித்தொழிக்கப்பட்டன.
இராணுவ காவலரண் நன்றி:- tamilswin.blogspot.com

ஏவப்பட்ட செல்களின் தாக்கத்தால் தலையிழந்தன பெருமளவான பனைகள்.

செல்வீச்சினால் தலையிழந்த பனைகள் மனிதர்கள் போலவே... நன்றி:- panoramio.com

பனைகள் எங்கு தோன்றின என்பதற்கு சரியான சான்று இல்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம், இலங்கை இந்தியா, இந்தேனீசியா, தாய்லந்து, மலேசியா, மியன்மார், சீனா, வியட்நாமிலும், மேற்கு ஆபிரிக்க நாடான கொங்கோவிலும் பனைகள் காணப்படுகின்றன.

பனைச் சமையல் அடுத்த இடுகையில்..

:- மாதேவி -:
0.0.0.0.0.0.0