சோக்கான தோடம்பழம்
அம்மாவுக்கு ஒரு பழம்
அப்பாவிற்கு இரண்டு பழம்
பாட்டிக்கு ஒரு பழம்
அண்ணாவுக்கு ஒரு பழம்
தம்பிக்கும் எனக்கும் பாதிப் பழம்."
சிறுவயதில் ஆசிரியர் அபிநயத்துடன் சொல்லிக் கொடுத்து பாடிய பாடலின் நினைவுதான் இது.
பாடும்பொழுது கடைசி வரி பாடு முன்பே கவலை வந்துவிடும்.
"எனக்குப் பாதிப் பழம்" எனப் பாட விரும்பம் வராது.
அப்பாவின் அந்த இரண்டு பழத்தில் எனக்கு என்று மாற்றிப்பாடவே எண்ணம் வரும். எப்பொழுது அப்பாவின் இரண்டு பழத்தையும் பறிக்கலாம் என்ற நினைவே இருக்கும்.
இது எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படும் இயல்பான குணமே. என்னையும் எப்பொழுது பெரியவனாக நினைப்பார்கள் என்ற ஆதங்கம் அவர்களுக்கு மேலோங்கி நிற்பதில் வியப்பில்லை.
"அணிலே அணிலே ஓடி வா
கொய்யா மரம் ஏறி வா
குண்டும் பழம் கொண்டு வா ...."
பாலர் வகுப்பில் அனைவரும் விரும்பிப் பாடிய பாடல்தான்.
'குண்டுப்பழம்' என்று சொல்லும் போதே எல்லோர் முகங்களில் மகிழ்ச்சியும், 'கொறித்துக் கொறித்துத் தின்னலாம்' எனப் பாடுகையில் வாயில் சிரிப்புமாக ரசித்து ருசித்து கூட்டாகப் பாடிய நாட்கள் அழியாத தொடர்களாக வந்து போய்க் கொண்டே இருக்கின்றன.
இப்பொழுது இதைப் படிக்கும்போது உங்களுக்கும் எத்தனையோ 'பழப் பாடல்கள்' நினைவுகளில் வந்து போகலாம்.
கொழும்பு கண்டி வீதியில் பயணம் செய்யும்போது கஜுகமவில் (Cadju Gama) கஜீ (முந்திரி) விற்பனை செய்யும் அழகிய பெண்களைக் காணலாம்.
இரவில் வீதி ஓரங்களில் அமைக்கப்பட்ட குடிலில் பெற்றோல் மக்ஸ் வெளிச்சத்தில், அடர் வரணத்தில் பூக்களுடன் கூடிய பாரம்பரிய சிங்கள உடையான கம்பாயம் உடுத்திய பெண்களைக் காணலாம்.
கைகளிலே சுருக்கு வைத்துத் தைத்த டீப் நெக்குடன் கூடிய உடலை எடுப்பாகக் காட்டும் சிறிய பிளவுஸ் அணிந்திருப்பார்கள். அவர்கள் அழகை ரசிப்பதற்காகவே வாகனங்களை நிறுத்தி கஜீ வாங்குவோர் அதிகம்.
ரம்புட்டான், மங்குஸ்தான், அன்னாசி, டூரியான், பட்டர் புருட், கொய்யாப் பழங்கள் குவிந்து கிடப்பதையும் இப் பாதையால் பயணம் செய்வோர் கண்டு களிக்கக் கூடியதாக இருக்கும்.
பழங்களிலே யாழ்ப்பாணத்து கறுத்தக் கொழும்பு மாம்பழமும், ஊட்டி அப்பிளும், நுவரெலியா பியர்ஸ்சும், மல்வானை ரம்புட்டானும், மலை வாழப்பழமும், முல்லைத்தீவு பலாப்பழமும், அவுஸ்திரேலியன் மன்டரினும் என வேறு பலவும் சுவையில் பிரபலம் அடைந்துள்ளன.
இப்பொழுது கொழும்பு நகர் வீதிகளில் கூட தெருவோரங்களில் தள்ளு வண்டிகளில் எல்லா வகைப் பழங்களும் குறிப்பாக கறுத்தக் கொழும்பு மாம்பழமும், குவியல் குவியல்களாக கொட்டிக் கிடக்கின்றன. சீனிஆகாதோர் தவிர்த்து ஏனைய எல்லோருக்குமே கொண்டாட்டம்தான்.
பழங்கள் கெடாமல் இருப்பதற்கும், பளபளப்பு ஊட்டுவதற்கும் ரசாயன ஊட்டிகள் பயன்படுத்தப்படுவது வேதனைக்கு உரியதே. சம்பந்தப்பட்டோர் கவனத்தில் கொள்வார்களா?
பளபளப்பான, நீண்ட காலம் குளிர் ஊட்டியில் தவங் கிடந்த பழங்களை வாங்கி உபயோகிப்பதைத் தவிர்த்து இயன்றவரை புத்தம் புதிய பிரஸ் ஆன, மருந்தடிக்காத பழங்களை உண்பது நல்லது.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதையெல்லாம் தேட முடியுமா?
இலகுவாகத் தயாரிக்கக் கூடிய புருட் சலட்
இதில் கலரிங், எசன்ஸ், கஸ்ராட், பால், எவையுமே சேர்க்கப்படவில்லை. அதனால் ஹெல்த்திற்கும் நன்மை தரும்.
இரண்டு மூன்று வகை பழவகைகள் இருந்தாலே இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம். விரும்பினால் நட்ஸ் பிளம்ஸ் சேருங்கள்.
தேவையான பொருட்கள்.
ஆப்பிள் - 1
ஒரேன்ஞ் - 1
பைன் அப்பிள் - 2 துண்டுகள்
பப்பாளி சிறியது – ½
கிறேப்ஸ் அல்லது மாதுளை முத்துக்கள் - சிறிதளவு
தேன் - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சீனி- 2 ரீ ஸ்பூன்
லைம் ஜீஸ் - பாதி
தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்
1. பழங்களை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து ஒரு புருட் போளில் வையுங்கள்.
2. தண்ணீருடன் எலும்மிச்சம் சாறு சேர்த்துக் கலக்கி;க் கொள்ளுங்கள். இத்துடன் சீனி அல்லது தேன் கலந்து விடுங்கள்.
3. பழங்கள் மேல் ஊற்றி பிரிஜ் இல் வைத்து விரும்பிய நேரம் சாப்பிட்டுக் கொள்ளுங்கள்.
கவனத்திற்கு
எலும்மிச்சம் சாறை புருட் சலட்டில் சேர்க்கும் பழங்களின் புளிப்பின் தன்மையைப் பொறுத்து அளவைக் கூட்டிக் குறையுங்கள்.
மாதேவி