Saturday, July 20, 2013

கொக்கரக்கோ கோழி அக்கா... சின்னுவின் ஹொஸ்டல் சமையல்


சிறுவயதிலிருந்தே கோழிக் குஞ்சுகள் என்றால் அப்படி ஒரு ஆசை. மஞ்சள், சிகப்பு, ஆரெஞ் கலர் பூசிய கோழிக் குஞ்சுகள் சந்தையில் விற்பனைக்கு வரும்.


ஆசை தீர பார்த்து நிற்பேன். எத்தனையோ தடவை அம்மாவைக் கேட்டும் வாங்கித் தரவில்லை. அதனால் கவலைதான். இப்பொழுதும் ஆசைதான் என்ன செய்ய?



'கொத்தித் திரியும் அந்தக் கோழி அதைக் கூட்டி விளையாடு பாப்பா' என்றான் பாரதி. பாடல் படித்தவுடன் சரி. அவற்றைக் கூட்டி விளையாட என்னால் முடியவில்லையே. கோழிக் குஞ்சுகளை அம்மாக் கோழி தனது செட்டைகளால் அணைத்து அழைத்துச் செல்லும் அழகே தனிதான்.


கால்களால் நிலத்தைக் கிண்டி தனது குஞ்சுகளை கொக்.... கொக் என அழைத்து உணவு கொடுப்பதைக் கண்டு மயங்கியிருக்கின்றேன்.

அண்மையில் ஒரு வீட்டில் கோழிக் குஞ்சுகளைக் கண்டேன். படம் எடுத்துக் கொண்டேன்.


சில நாட்களின் பின் வளர்ந்து இருப்பார்கள் என்று ஆவலுடன் சென்றேன். அங்கு பார்த்தால் கோழிக் குஞ்சுகள் சட்டிகளில் ஏறாமலே வயிற்றுக்குள் சென்றுவிட்டன என்றார்கள்.

அட!!!

பூனையாருக்கு ரெம்பப் பிடித்து எல்லாக் குஞ்சுகளையும் நாள்வீதம் பிடித்து விழுங்கிவிட்டாராம்.

கோழி முட்டையும் பொரித்துச் சாப்பிட எனக்குப் பிடிக்கும். கோழிக் கறியும் விரும்பிச் சுவைப்பேன். புரெய்லர் கோழிகள் நாட்டுக் கோழிகள் பிடிக்கும்.

புரெய்லர் இனம் 42 நாட்கள் வளர்த்து இறைச்சிக்காக விற்கப்படுகிறது.


நெருப்புக் கோழி முட்டை மிகவும் பெரிதாக இருக்கும். இதன் முட்டை 12 பேருக்கு போதுமானதாக இருக்கும்.

வான்கோழி முட்டையும் பெரியது.

சிறிலங்கன், தாய், வியட்னாம் சமையல்களில் லெமன் கிராஸ் முக்கிய இடத்தை வகிக்கிறது. சதன் ஏசியன் சமையல்களில் பொதுவாக உபயோகிப்பார்கள்.


விருந்துசாப்பிட வருகிறீர்களா ?

இலகுவான லெமன் கிராஸ் போட்ட ஹொஸ்டல் சமையல் செய்திருக்கின்றேன்.

சிக்கன் லெமன் கிராஸ்


எலும்பில்லாத கோழி இறைச்சி -  ¼ கிலோ
பச்சை மிளகாய் அல்லது செத்தல் - 1
பூண்டு -2 பல்லு
லேமன் கிராஸ் - 1
மிளகாய்த் தூள் - ½ தேக்கரண்டி
மல்லித் தூள் - 1 தேக்கரண்டி
மசாலாத் தூள ;- ¼ தேக்கரண்டி
லெமன்¬ - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
தண்ணி அல்லது தேங்காய் பால் - ¼ கப் அளவில்.

செய்வோமா 


லெமென் கிராசை 3 - 4 அங்குல நீளமாக வெட்டி எடுங்கள்.

வெங்காயம் பூண்டு மிளகாய் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

இறைச்சியை மிளகாய்த் தூள், மல்லித் தூள், உப்பு. லெமென் கிராஸ் கலந்து 15-20 நிமிடங்கள் ஊறவிடுங்கள்.

பானில் ஓயில் விட்டு வெங்காயம், பூண்டு, மிளகாய், லேசாக வதக்குங்கள்.

ஊறிய இறைச்சியை கொட்டிப் பிரட்டுங்கள்.

2 நிமிடம் வேகவிடுங்கள்.

மீண்டும் பிரட்டி தண்ணீர் அல்லது பால் விட்டு தட்டுப் போட்டு மூடிவிடுங்கள்
5 நிமிடத்தில் திறந்து மசாலாத் தூள் போட்டு கிளறுங்கள்

இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்திருந்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
லெமன்சாறு விட்டு பிரட்டிவிடுங்கள்.


இரண்டு துண்டை எடுத்து சுவைத்துப் பாருங்கள்.

தோழி பூனைகள் வந்து களவாடுவதற்கு முன்
கறியை உள்ளே எடுத்து வைத்துவிடுங்கள்.

- சின்னு -

0.0.0.0.

Thursday, July 4, 2013

கொட்டெப் பாக்கும் கொழுந்து வெற்றிலையும்.. ...சமைக்காமலே......




பச்சை பச்சை டக்டக் பால்பால் டக்டக் குந்து மணி டக்டக் குதிரைவால் டக்டக் அவர்கள் யார் ? 



வெற்றிலை மங்களப் பொருளின் அடையாளம். கோயில்களில் நைவேத்தியப் பொருட்களில் முக்கிய இடம் வகிக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள்.


விழாக்களில் முகப்புவாயில்களில் வெற்றிலை வைத்து வரவேற்பார்கள். பண்டிகைகளில் முக்கிய இடம் வகிக்கின்றன.


வெற்றிலையைச் சுருட்டி பாக்கு, பணம் வைத்து பூப்பெய்திய பெண்ணின் இரு கைகளிலும் விரல்களுக்கு இடையே நிமிர்த்தி வைத்திருக்கக் கொடுத்து அழைத்துச் சென்று நீராட்டுவது வழக்கமாக இருக்கின்றது. திருமண நிச்சயதார்த்தத்தில் வெற்றிலை, பாக்கு, பழம் மாற்றுவது பழைய காலந்தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.


வெற்றிலையில் லஷ்மி உறைவாள் என்பார்கள். சித்திரைப் புதுவருடத்தன்று வெற்றிலையில் நெல்லு மணிகள். குங்குமம், மஞ்சள், பூ, பணம் வைத்து கைவிசேசம் கொடுக்கும் வழக்கம் இந்துக்களின் பண்பாக இருந்து வருகின்றது.

பௌத்தர்களும் சித்திரை வருடத்தன்று வெற்றிலை வைத்து பெரியோரை வணங்கி ஆசி பெறுவார்கள். புதுமணத் தம்பதிகள் வரவேற்பு , விழா பிரதம விருந்தினர்களை வரவேற்க  வெற்றிலை கொடுத்து வரவேற்கும் வழக்கமும் பௌத்தர்களிடம் இருக்கிறது.


அரசர்கள், நாட்டாண்மைமார்கள் வெற்றிலை போட அழகிய வெற்றிலைப் பெட்டியும், வெற்றிலை துப்புவதற்கு கோளாம்பி தூக்க ஒருவரும் கூடவே இருப்பார்கள்.

வெற்றிலைத் தட்டமும் பாரம்பரிய தமிழர் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது.


வெற்றிலைத் தட்டம், பாக்கு வெட்டி, பாக்கு உரல் இல்லாத வீடுகளே இருக்காது.


வெற்றிலை மூலிகைத் தாவரமாகும். மருத்துவ குணங்கள் அடங்கியது என்கிறார்கள்.


சமையலில் கஷாயம், ரசம், செய்கின்றார்கள். தோசை, அடை மாக்களில் கலக்கின்றார்கள். மூலிகைகளாக சாதம்,சலட் வகைகளில் கலந்துகொள்கின்றார்கள். வறுத்த தேங்காய் துருவல், நட்ஸ், மாதுளை முத்துக்கள், மல்லிதழை,புதினா கலந்து எடுத்து இலைகளில் வைத்து பரிமாறுகின்றார்கள்.  சிக்கன் கறிகளில் அரைத்த வெற்றிலை கலவை கலந்து சமைக்கப்படுகின்றது.
வியட்னாமிய சமையலில் wild Betel leaf (la lot) அரைத்த மாட்டிறைச்சியை மசாலாக்கள் கலந்து இலைகளில்வைத்து சுற்றி எடுத்து கிரில், பார்பிக்யூ, ப்ரை களாக செய்து கொள்வது பிரசித்தமாக விளங்குகின்றது.

வெற்றிலை மலேசியாவில் தோன்றிய செடியாகும். Piper Betel மிளகு குடும்பத்தைச் சார்ந்தது. இலங்கை இந்தியா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் அதிகம் காணப்படுகிறது. கும்பகோணம் வெற்றிலைக்கு பெயர்பெற்றது.

மிகவும் அழகிய கொடிதான் இலையும் அழகானது நாகஇலை, நாகவல்லி, திரையல், வேந்தன் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களை தாங்கி நிற்கின்றது.

வெற்றிலையை அழகுக்காக பல்கனிகளிலும் சாடிகளில் வளர்க்கலாம். மங்களப் பொருளாக கொள்வதில் தவறில்லை.


கமுகு மரம் பினாங்கு மாநிலத்தின் சின்னமாக இருக்கின்றது. இங்கு பாக்கு மரங்கள் அதிகம். கமுகுமரம் நிழல்தரும், குளிர்மையாக இருக்கும். பச்சை மஞ்சள் நிறங்களில் பாக்குகள் அழகாககுலைகளாக பழுத்துத் தொங்கும்.
Arecanut > Betel nut    என்கின்றோம்.  சில சாப்பாட்டுக்கடைகளில் சாதத்தில் பாக்கை கலந்து சமைத்துவிடுவார்கள். ஆட்டு இறைச்சி கறி மென்மையாக வருவதற்காக சீவல்பாக்கு சிலவற்றை கலப்பதுண்டு.

பல்வேறுசிறப்புக்களும் கொண்ட வெற்றிலை, பாக்கு, ஆபத்தான விளைவுகளையும் தருகின்றது.


விவசாயிகள், தொழிலாளர்கள், மலையக மக்கள் பெரும்பாலும் வெற்றிலை போடும் வழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அப்பொழுது இதன் தீமையையும் எடுத்துக் கூறுங்கள். அவர்களிடம் விழிப்புணர்த்தவே இப்பகிர்வு.

வெற்றிலை போடுவது அல்லது வெற்றிலை சப்புவது எனச் சொல்லும்போது அது வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் சேர்ந்து உண்ணப்படுவதையே குறிக்கிறது.

யாழ்குடா புகையிலை பயிர்செய்கைக்கு பெயர் பெற்று விளங்குகிறது. வடக்கன் புகையிலை மிகுந்த காரமானது.  பலருக்கு மயக்கம், மரணங்கள் கூட ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

வெற்றிலை பாக்கு சப்புவதால் இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தாய்வானில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. இருதய நோய்கள் இரண்டு விதத்தில் வரலாம் என்கிறார்கள். இருதயத்திற்கான இரத்த ஓட்டம் குறைவடைவதாலும், இருதயத் துடிப்பு லயத்தில் ஏற்படுகிற திடீர் மாற்றங்களாலும் நேர்கிறது. இவற்றிற்கு காரணமாக இருப்பது பாக்கில் உள்ள
Arecoline என்ற இராசாயனமும் புகையிலையில் உள்ள நிக்கடினும் ஆகும்.

அதேபோல ஆஸ்த்மா தூண்டப்படுவதற்கு வெற்றிலை சாப்பிடுதல் மற்றொரு காரணமாகிறது.


புகைத்தலுக்கு அடிமையாவதற்குக் காரணம் அதிலுள்ள நிக்கரின் ஆகும். வெற்றிலை போடும்போதும் புகையிலை சேர்ப்பதால் பலரும் அதற்கு அடிமையாகிறார்கள். இதனால்தான் புகைத்தலை கைவிடும்போது எரிச்சல், சினம், மனச்சோர்வு, அதிக பசி, மீண்டும் புகைக்க வேண்டும் என்ற அடக்கமுடியாத தவனம் ஏற்படுவது போலவே வெற்றிலை சப்புவதைக் நிறுத்தும்போதும் ஏற்படுகிறது.

இதற்கு மாற்று வழி மீண்டும் புகைப்பதோ வெற்றிலை போட ஆரம்பிப்பதோ இல்லை. மன அடக்கப் பயிற்சிகள் வேறு உற்சாகமூட்டும் பணிகளில் ஈடுபட்டு மறப்பதே ஏற்றது. முடியாவிட்டால் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை மேற்கொண்டு கைவிடவும் நேரலாம்.


அத்துடன் முரசு கரைதல் அதன் காரணமாக பல்லின் வேர்கள் வெளிப்படுவது, பற்கூச்சம், பற்சொத்தை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

தொடர்ந்து சப்பிக் கொண்டே வாயில் குதப்பி வைத்திருப்பதால் வாயின் உட்புறத் தோலில் வெண்நிறமான படலம் தோன்றும். leukoplakia என்ற இது வாய்ப்புற்று நோய் ஏற்படுவதன் ஆரம்ப நிலை என மருத்துவர்கள் சொல்கிறார்கள். இதில் பின்பு புண்கள் ஏற்படும். புற்றுநோயாக மாறும்.  கவனம்.


வாய்ப்புற்று மட்டுமின்றி உதட்டு புற்று, தொண்டை புற்றுநோய் ஆகியவையும் ஏற்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை சப்பினால் புகைப்பதனால் ஏற்படுவது போன்ற ஆபத்துக்களைக் கொண்டு வரும்.

வெற்றிலை ,பீடா கடைகளுக்குக் குறைவில்லை. பான் என்பது ஹிந்தி, பர்னா என்பது சமஸ்கிருதம்.

வெற்றிலையுடன் கலர் பாக்கு, இனிப்புத் தூள்கள், கலர்த் தேங்காய்த் துருவல், குங்குமப்பூ, ஏலம், தங்க பஸ்பம், வாசனைகள், கலந்து சுற்றி மடித்து மேலே கராம்பும் குத்தி வைத்திருப்பார்கள். பச்சை பசேலென வா வா என அழைக்கும். பார்க்க அழகாகத்தான் இருக்கும். கையும் எடுக்க நீளும். உசாராகிவிடுங்கள்....விதியும் ஓர் ஓரம் நின்று பார்த்துச் சிரிக்கலாம்.


மங்களப் பொருளாக மட்டும் நிலைத்து வாழ வழி செய்வோம். பாமரர்களுக்கு அறிவுறுத்துவோம்.

எனது படங்களைவிட  ஏனைய படங்கள்  இணையத்திலிருந்து எடுத்து இணைத்துக்கொண்டேன் . நன்றி.

-: மாதேவி :-

Saturday, June 1, 2013

இனிக்கவும் காரமாகவும் உழுந்து மா ஆலங்காய் பிட்டு

இது சிறிய வகைத் தாவரம். இதிலிருந்து கிடைக்கும் பருப்பை உழுத்தம் பருப்பு என அழைக்கின்றோம்.

Thanks :- www.indiamart.com
Fabaceae குடும்பத்தைச் சார்ந்த uradbean,bignanungo.  black gram எனவும் அழைக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட தாவர இனம். தெற்காசிய மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருக்கிறது. இப்பொழுதும் இங்குதான் பெரும்பான்மையாக பயிரிடப்படுகிறது. பயிர் விளைந்து 80 - 90 நாட்களில் அறுவடைக்கு வரும். மழை வெள்ளம் கூடினால் பயிர் செய்கை அழிந்துவிடும்.

இலங்கையில் பரவலாக வரண்ட பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. அனுராதபுரம், பொலனறுவ, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, புத்தளம் போன்ற பல மாவட்டங்களிலும் உழுந்து பயிரிடப்படுகிறது.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

சிங்களத்தில் முங் அற்ர, மலையாளத்தில் Uzhuna  தெலுங்கில் minumulu கன்னடம் uddinabele நேபாளி uridemass. என்று அழைக்கிறார்கள்.


சங்ககாலத்தில் உழுத்தம் பருப்பு, உழுத்தம் சோறு, பொங்கல் என்பன திருமண விருந்து, மங்கள நிகழ்ச்சிகளில் பரிமாறப்பட்டன என்று அகநானூறு (86-1-2) பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றது. இலக்கியங்களில் உழுந்து புகழப்பட்டிருக்கின்றது.

தமிழகத்தில் பரவலாகப் பயிரிடப் பட்டதை சங்க இலக்கிய சான்றுகள் கூறுகின்றன 'உழுந்தின் அகல இலை வீசி' என நற்றிணைப் பாடலில் வருகின்றது.


தென்னிந்திய, இலங்கை உணவுகளில் பெரும் பங்கு எடுத்துக் கொள்கிறது.

இட்லி, தோசை, வடை, ஊத்தப்பம்,குழிப்பணியாரம், உழுந்துக் கறி, உழுத்தஞ் சோறு, களி, ஆடிக்கூழ், உழுத்தம் பச்சடி, பப்படம், முறுக்கு, தட்டை, என முக்கிய பங்கு வகிக்கிறது.


பஞ்சாப் சமையலில் மிகவும் பிரசித்தமானது.

ஓரிசாவில் சக்குலிப் பித்தா எனப்படும் அரிசிமா, உழுந்து, நெய், வெல்லம், தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் பாரம்பரியமான உணவு பிரசித்தமானது.

உழுத்தம் பருப்பின் சக்கை ஆடு, மாடு, குதிரைகளுக்கு நல்ல தீவினமாகவும் இருந்து வருகிறது.

உழுந்துடன் நல்லெண்ணெய் சேர்த்து செய்த களி உணவு பூப்படைந்த பெண்களுக்கும் , கர்ப்பிணிப் பெண்களுக்கும் சிறந்த உணவாகக் கொள்ளப்படுகிறது. இது கர்ப்பப்பை இடுப்பு எலும்புகள் பலமடைய உதவும்.

சத்து மா உருண்டைகளில் உழுந்து மாவும் கலக்கப்படுகிறது. மனித உடலுக்கு சத்துக்கள் தரக் கூடிய புரதம், மினரல்ஸ், விற்றமின்கள் அதிகம் அடங்கியுள்ளது.

இன்று அரிசிமாவும் உழுந்துமாவும் கலந்து செய்யப்படும் மாலைஉணவு ஆலங்காய் பிட்டு. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு.

ஏன் பெரியவர்களுக்கும் கூடத்தான்.        
         

அரிசியில் 

கலோரி 365 புரொட்டின் 8.6, நார்ப்பொருள் 3.5, விற்மின் B1, B2, B6 மற்றும் மினரல்ஸ் அடங்கி இருக்கின்றது.

100 கிறாம் உழுந்தில்......


நீரிழிவு நோயாளர்கள் வெல்லம் தவிர்த்து செய்து எடுத்துக்கொள்ளுங்கள். காரத்தாளிப்பு செய்து அதற்குள் போட்டு மெதுவாக ஒரு பிரட்டுப் பிரட்டி எடுத்துக்கொண்டு சுவைத்திடுங்கள்.

தேவையானவை


  • வறுத்த அரிசிமா – 1 கப்
  • வறுத்த உழுந்துமா- ½ கப்
  • வெல்லம் அல்லது சீனி – ¼ கப்
  • தேங்காய் பால் - ½ கப்
  • உப்பு தேவையான அளவு
விரும்பினால்  
  • தேங்காய் துருவல் - 4 டேபல் ஸ்பூன்
  • வெட்டிய முந்திரி, பிளம்ஸ் - 10 -15
  • ஏலப்பொடி சிறிதளவு.


செய்முறை

தேங்காய் பால் உப்பு கலந்து கொதிக்கவிடுங்கள்.

ஏனைய பொருட்களை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பால் கொதித்துவர மாவில் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறுங்கள்  மா உறுண்டு வர வேண்டும்.

பால் போதாமல் இருந்தால் தண்ணீர் தெளித்து உருட்டிப் பிடியுங்கள்.



சிறு சிறு உருண்டைகளாக விரல்களால் உருட்டி வையுங்கள்.

ஸ் ரீமர் பாத்திரத்தில் நீரை கொதிக்க வையுங்கள் நன்கு கொதித்து ஆவி வந்த பின் உருண்டைகளை மெதுவாக பரவலாக கொட்டி 10 -15 நிமிடங்கள் அவியவைத்து எடுங்கள்.

அவியும் பொழுதே வாசம் மூக்கை துளைத்து பசிக்க வைக்கும்.



அவிந்ததும் இறக்கி சிறுகோப்பைகளில் போட்டு சற்று ஆற வைத்து சுவைத்திடுங்கள்.

படிக்க கையில் ஒரு புத்தகமும் இருந்தால் எத்தனை கோப்பையும் உள்ளே போகும்.

0.0.0.0.0
.