Friday, February 11, 2011

இராசவள்ளி டெசேர்ட்

சுவையான பல சிற்றுண்டிகளைச் செய்வதற்கு ஏற்ற ஒரு கிழங்குதான்  இராசவள்ளிக் கிழங்கு ஆகும்.


 இதில் பல வகைகள் உள்ளன. கிழங்குகள் மங்கலான பழுப்பு நிறத்தில் இருக்கும். உள்ளேயுள்ள சதைப்பகுதி ஊதா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.
 
இலங்கையில் ஊதா நிற இராசவள்ளிக் கிழங்கு கிடைக்கிறது.

முளையை நட்ட ஒரு மாதத்தில் முளைத்து வளர ஆரம்பிக்கும். இலைகள் வெற்றிலைபோல இருக்கும் தண்டு அழகிய ஊதா நிறத்தில் இருப்பதால் கொடி அனைவரையும் கவரும்.

கொடிகள் வளர்ந்துவர பட்டமரக் கொப்புகள் அல்லது மூங்கில் தட்டிகள் வைத்துப் படர விடுவார்கள். இரண்டு மாதத்தில் களைகள் பிடுங்கி மண் அணைத்து விட வேண்டும்.


இலைகள் மஞ்சள் நிறம் கலந்து பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும்போது நிலத்தில் வெடிப்புகள் ஏற்படும் அப்போது அறுவடைசெய்து கொள்ளலாம். வீட்டுத்தோட்டங்களில் நாட்டிக் கொள்வார்கள். நவீனத்தில் பூச்சாடிகளில் வளர்த்து பல்கனிகளில் அழகுக்குப் படரவிடுவதுடன் கிழங்கும் பெறலாம்.

விநாயக ஷஷ்டி இருபது நாட்களும் கோவில்களில் விநாயகருக்கு நாள்தோறும் ஒரு நிவேதனம் படைக்கப்படும். அதில் இக்கிழங்கும் ஒருநாள் படைக்கப்படும் அளவு முக்கியத்துவம் பெற்றது. சர்க்கரை வள்ளிக் கிழங்கைப்போல இதில் இனிப்பு அதிகம் கிடையாது.

தாவரவியில் பெயர் Dioscorea  alata  ஆகும். இதில் water yam,  winged yam,  purple yam என மூன்று வகைகள் உண்டு. தெற்கு ஆசியாவில் முதன்முதல் பயிரிடப்பட்டது. 

பிலிப்பைன்ஸ் இல் Ube என்கிறார்கள். பலவிதமான இனிப்பு டெசேட்களில் பயன் படுத்துகிறார்கள். 

வியட்னாமில் khoaimo என்பர். பிரதானமாக சூப்பில் கலக்கிறார்கள். இந்தியாவில் ratalu  அல்லது violet yam பெருவள்ளிக் கிழங்கு என்றும் அழைப்பார்கள். 

ஹவாயில் Uhi   என அழைப்பர். 


இலங்கையில் இராச வள்ளிக் கிழங்கு என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது.

போசனை

100 கிராமில் 20.6 கலோரி, புரதம் 1.4 கி, கொழுப்பு மிகக் குறைவு 0.2 கி, நார்ப்பொருள் 8.8 கி, நீர்ப்பிடிப்பு 72.4 மி.லி, பொட்டாசியம் 256 மி.கி, மக்னீசியம் 15 மிகி, கல்சியம் 15 மிகி, சோடியம் 9 மிகி, இரும்புச் சத்து 0.8மிகி. Zinc 0.3 மிகி. B3 0.2மிகி, விட்டமின C 15மிகி வரையே இருக்கிறது.

கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும், Antioxidant அதிகம் இருப்பதும் இதன் நன்மைகளாகும். ஓஸ்டியோபொரோசிஸ் சைத் தடுக்கும் தன்மையும் இருப்பதாக நம்பப்படுகிறது.

எங்கள் பாட்டி இக்கிழங்கை சீவி எடுத்து பொரித்து ஒருவகை சிப்ஸ் செய்து தருவார்.

கிழங்கை அவித்து மசித்து சர்க்கரை தேங்காய்ப் பால் விட்டு கட்டியாக வருவதற்காக  உழுந்துமா கலந்து கிளறி ஆறவைத்து துண்டுகளாக வெட்டிப் பரிமாறுவார்கள்.

டெசேர்ட்


தேவையான பொருட்கள்.


கிழங்கு – ½ கிலோ
சீனி – 4 - 5 டேபல் ஸ்பூன்
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபல் ஸ்பூன்
முந்திரி பிளம்ஸ் சிறிதளவு.
உப்பு - சிறிதளவு.
ஆமன்ட் அல்லது வனிலா எசென்ஸ் சில துளிகள்.

செய்முறை –


சொறியும் தன்மையுள்ளது இக்கிழங்கு கைக்கு கிளவுஸ் உபயோகியுங்கள். கிழங்கை தோல் சீவி நன்கு கழுவி எடுங்கள். சிறு சிறு மெல்லிய துண்டுகளாகச் சீவுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கிழங்கின் ¾ பாகம் தண்ணீர்விட்டு அவித்தெடுங்கள்.
நன்கு அவிந்ததும் மசித்து விடுங்கள். சீனி , உப்பு, முந்திரி, பிளம்ஸ் சேருங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றிக் கலக்கி இறக்கிவையுங்கள்.

சற்று ஆறியபின் எசன்ஸ் கலந்து டெசேட் கப்களில் ஊற்றுங்கள். மேலே வறுத்த முந்திரி தூவி  நன்கு ஆறவையுங்கள்.

ப்றிச்சில் குளிரவைத்துப் பரிமாறுங்கள். கலர்புல் டெசேட் காணாமல் போய்விடும். மியா மியாப் பூனைகளும் வந்துவிடும்.  

மாதேவி

Wednesday, January 12, 2011

‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’

காலையில் எழுந்ததும் பழைய சோற்றுத் தண்ணீரை பானை மூடியில் விட்டு குடித்துப் பழகியவர்கள் எமது முன்னோர்.

ஆரம்பத்தில் தெருச் சந்தியில் அண்டாவை வைத்து தேத்தண்ணி போட்டு கொண்டு வந்து வீடு வீடாகக் தட்டிக் கூப்பிட்டு கோப்பைகளில் ஊற்றி குடிக்கப் பழக்கிக் கொடுத்துத்தான் தேநீரைக் குடிக்கப் பழக்கினார்களாம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்.

பிரிட்டிஷ் மகாராணியின் சின்னம் பதித்த தேநீர் குவளை

இது என்ன கசக்கிறதே என முகம் சுளித்தனர் பிற்பாடு குடிக்கக் குடிக்கப் பழகி இப்போது ஒரு நாளைக்கு 5- 6 தடவைகள் குடிப்போரும் இருக்கவே செய்கிறார்கள்.        

‘தேத்தண்ணி போட்டாச்சே’ இக் கேள்வியுடன் தான் இலங்கையின் காலைப் பொழுதுகள் விடிவிற்கு வரும். அத்துடன் இடையிடையே ‘ஒரு தேத்தண்ணி குடிப்பமே’ என்ற கேள்விகளும் வீடுகளில் தொடரும். ‘கஹட்ட’, ‘சாயா’, ‘பிளேன் ரீ’ எனப்பலவாறு அழைப்பர்.

தேத்தண்ணி குடிக்க வாறீங்களா?

வெறும் தேத்தண்ணி, பசுப்பால் தேத்தண்ணி, ரின்பால் தேத்தண்ணி, பால் பவுடர் தேத்தண்ணி, என இன்னும் பலவும் தயாராகும்.

கொழுத்தும் வெயிலில் கூட விருந்தாளிகளை வரவேற்று “தேத்தண்ணி குடியுங்கோவன்” என இனிக்க உபசரித்து தேநீர் போட்டு வழங்குவார்கள்.

இந்தியர்கள் பால் காப்பிக்கு அடிமையானது போல இலங்கையர் தேநீருக்கு சலாம் போடுவார்கள்.காப்பியைவிட ரீயில் காபைனின் செறிவு கிட்டத்தட்ட அரைவாசி குறைவாக உள்ளமை தேநீரின் நன்மையாகும்.

தேயிலை பயரிடப்படும் இடங்கள்

முதன் முதல் 1824 தேயிலைச் செடி பிரிட்டிஷசாரால் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டு ரோயல் பொட்டனிக்கல் கார்டன் பேரதெனியாவில் நாட்டப்பட்டது. 1867ல் ஜேம்ஸ் ரெயிலரால் தொழிற்சாலை அறிமுகப்படுத்தப்பட்டது. லுணகந்தவில் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பின்னர் பரவின.



உலகம் பூராவும் பிரபலமானது இலங்கைத் தேயிலை. சிலோன் ரீ, பிளக் ரீ, வைற் சில்வர் ரீ, என தயாரிக்கப்பட்டது. இப்பொழுது பலவித ப்ளேவர்களிலும் கிடைக்கிறது. தேயிலையின் தரம் பயிரிடப்படும் இடத்தின் உயரத்தையும் கால நிலையையும் பொறுத்து அமையும். இலங்கையில் ஆறு இடங்களில் தேயிலை பயிரிடப்படுகிறது. காலி, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, ஊவா, டிம்புல்ல


தேயிலைக்குப் பெயர்பெற்ற நுவரெலியாவின் ஒரு  தேயிலைத் தோட்டம்

1500 மீற்றருக்கு மேல் நன்கு வளரும் தேயிலை. நுவரெலியாத் தேயிலை 6000 அடிக்கு மேல் வளர்வதால் சிறந்ததாக இருக்கும்.

ஆரம்பத்தில் தேயிலை இலை மருத்துவமாக பாவிக்கப்பட்டது. ஆதிதொட்டு பல இலைவகைகள் மருந்தாக உபயோகிக்கப்பட்டன. தேங்காய்ப்பூக் கீரை, கொத்தமல்லி, கற்பூரவல்லி, தூதுவளை, முடக்கொத்தான். மணத்தக்காளி, பொன்னாங்காணி போன்ற பலவும் நோயுற்ற வேளைஅவித்துக் குடிப்பார்கள். பசும் இலைகள் புதினா, கொத்தமல்லி,வெற்றிலை, துளசியும் அடங்கும்.

சீனாவின் பேரரசர் சென்னா முதல் முதலாக தேயிலையின் ருசியைக் கண்டு பிடித்தவராவார். குடிப்பதற்காக நீரைச் சுட வைக்கும்போது காய்ந்த தேயிலை இலை தண்ணீரில் விழுந்து தண்ணீரின் நிறம் மாற்றமடைந்தது. அந்த நீரைக் குடித்தபின் மிகுந்த புத்துணர்ச்சி கொடுத்தது. அவ்வாறு பிறந்ததுதான் தேநீர்.

சீனர்கள் தேநீர் தயாரிப்பதை ஒரு கலையாகவே செய்கிறார்கள். தயாரிக்கும் இடம் பாத்திரங்கள் யாவும் சுத்திகரிக்கப்பட்டு மிகவும் அழகுற இருக்கும். மிகவும் பக்குவமாக நிதானத்துடன் தயாரிப்பார்கள்.

இலங்கை ரீயின் பின்னணியில் மலையகக் கண்ணீரும் பல கதைகள் கூறும் என்பதை மறக்க முடியாது.

உறையும் குளிரில் உழைக்கும் இவர்களின் கண்ணீர் தேநீர் ஆகிறதா?

தேநீருக்கும் எமக்குமான உறவு சிறிய வயதில் ஆரம்பிக்கிறது. காய்ச்சல் வந்தால் 2-3 நாட்களுக்கு சாப்பாடுகிடையாது வெறும் தேத்தண்ணி குடிப்பதுதான் வழக்கமாக இருந்தது. அந்நாளில் பாடசாலை சென்றால் வீட்டிலிருந்து தேநீர் தயாரித்து எடுத்துவருவார்கள் எமது பாட்டிமார்.   காச்சல் விட்டபின் மொறுமொறு என இருக்கும் ரோஸ்பாணை தேநீருடன் தொட்டுச் சாப்பிடக்கொடுப்பர். மறுநாள்தான்; அப்பம் சோறு கிடைக்கும்.

ஆமணக்கு எண்ணை பேதி குடித்த அனுபவம் உங்களில் யாருக்காவது இருக்கிறதா?  அந்நாள்முளுவதும் பீளேன் ரீ மட்டும் குடிப்பார்கள். காலை மதிய உணவு ஒன்றும் கிடையாது.

தேயிலை பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. தடிமன் வந்த நேரம் தேயிலையை சுடுநீரில் போட்டு கை வைக்கும் சூட்டுடன் அள்ளியெடுத்து முகத்தில் ஊற்றிக் கழுவுவார்கள். சுடச்சுட ஊற்றிக் கழுவுவதால் சளி நீங்கிச் சுகம் கிடைக்கும்.

மூக்கடைப்பு இருக்கும்போது தேயிலையைக் கொதி நீரில் போட்டு ஆவி பிடிப்பார்கள்.

சர்க்கரை, பால்சேர்க்காத ரீ குடிப்பது உடல் நலத்திற்குச் சிறந்தது எடையையும் அதிகரிக்காது. 

அன்ரிஓக்சிடனற் (Antioxidant) இருப்பதால் கான்சருக்கு எதிரானது. சூலகப் புற்றுநோய்கான சாத்தியத்தைக் குறைக்கும். கொலஸ்டரோல், பிளட் பிரசரைக் குறைக்கும். தடிமன் தொற்றுக்கும் எதிரானது என்றும் சொல்கிறார்கள்.
 

கிறீன் ரீ பற்றி இப்பொழுது அதிகம் பேசப்படுகிறது. சீனர்களின் பாரம்பரிய பானமான இது பல மருத்துவக் குணங்களை கொண்டது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய்கள், இருதய நோய்களுக்கு எதிரானது. கெட்ட கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதன் மூலம் இருதய நோய்களைக் குறைக்கிறது எனத் தெரிகிறது. எடை குறைப்பிற்கும் நல்லது என்கிறார்கள்.

பலவித பிளேவர்களிலும் ரீ பாக்ஸ் கிடைக்கிறது. ஒரேன்ஜ், லெமன், மொறாக்கன் மின்ற், றம், இவற்றின் விலைகள் சற்று அதிகமாக இருக்கும். வாங்கினால் ஓரிரு இன பைக்கற்தான் முடியுமட்டும் தொடர்ந்து யூஸ் செய்ய வேண்டியதாய் வரும்.

சாதா தேயிலையுடன் ஒரு நேரத்திற்கு ஒரு சுவையாக தயாரித்து வீட்டில் உள்ளோரையும் அசத்தலாம். குளிருக்கு இதமாகவும் அருந்தலாம்.

லெமென் ரீ, ஆரேஞ் ரீ,

ரீயைத் தயாரித்த பின் குடிக்கும் அளவான சூட்டில் சீனி கலக்கியபின் சில துளி பழச் சாற்றை மேலே விட்டு சேர்த்து அருந்தலாம்.



கறுவா ரீ

தேயிலையுடன் கறுவாவைப் போட்டு சுடுநீர் ஊற்றி மூடி போட்டு வைத்து  வடித்தெடுத்து சீனி சேர்த்து குடிக்கலாம்.

கராம்பு ரீ

கராம்பை லேசாகத் தட்டி ரீயுடன் போட்டு மூடி வைத்து எடுத்தால் சற்றுக் காரமான ரீ கிடைக்கும்.

ஏலம், கறுவா, இஞ்சி

ஏலம் ரீ

வாசமான  கமகம ஏலம் ரீ இதே போலத் தயாரிக்கலாம். இந்த ரீ பசியைத் தூண்டும் என்பார்கள்.

வனிலா ரீ

வனிலா ப்ளேவர் விட்டும் தயாரிப்பார்கள் சிலர்.

ஜஸ் ரீ

தேநீரைத்தயாரித்து ஆற குளிரவைத்தெடுத்து ஜஸ் கட்டிகள் போட்டு வெப்பத்துக்கு குடிக்க இதமாய் இருக்கும்.

இஞ்சி ரீ

சிறிய இஞ்சித் துண்டைத் தோல் நீக்கி கழுவி எடுத்து தட்டி தேயிலைத் தூள் போட்டுகொதிநீர் விட்டு முடிவைத்து வடித்தெடுப்பர். இது வயிற்றுப் போக்கு, சத்தி, சமிபாடடையாமையைத் தடுக்கும் என்பர்.

மசாலா ரீ

கராம்பு 1, ஏலம் 1, பட்டை ஒரு துண்டு கலந்து ரீயுடன் போட்டு குடிக்கலாம். இத்துடன் பாலும் கலந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஏலம், மிளகு, பட்டை, கராம்பு, இஞ்சி, திப்பலி, சுக்கு, பெரும்சீரகம் பொடியாக தேநீருடன் கலந்து இருமலுக்குக் குடிப்பார்கள்.



கிறீன் ரீ, பாவற்காய் டயபற்றிஸ் ரீ,  ஹேபல் ரீ, வல்லாரை ரீ எனப் பலவும்
பைக்கற்களில் கிடைக்கின்றன.

மாதேவி

Wednesday, December 8, 2010

முக்காற் பணத்தில் முழு விருந்து சுண்டைக்காய்

சுண்டைக் காய்  செடி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு வகைக் கத்தரியாகும். கத்தரியில் பல வகைகள் உண்டு. Brinjal, Eggpalnt எனவும் அழைப்பர். தாவரவியல் பெயர் Solnum melongena ஆகும். Eggplant bush, Garden egg, Mad apple, Aubergine போன்றவையும் வேறு பெயர்கள்.


வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.


மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள். Turkey berry. Devil's Fig, Prickly Nightshade, Shoo-shoo Bush, Wild Eggplant, Pea Eggplantஎனவும் சொல்வார்களாம்.
 

தாவரவியல் பெயர் Solanum torvum.
 

பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.


பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை  வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.

பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.


இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.

'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில்  சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

முற்றிய காய்கள் கசக்கும்.

வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?

அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.

ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.

ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.

காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.


கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.

தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.

காய்க் காரக் குழம்பு

தேவையானவை


காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.

செய்முறை 

பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.



வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.


பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.

கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

பாட்டியின் மண் சட்டிக் கறி

கத்தரி கடலைக் குழம்பு

பைவ் ஸ்டார் சலட்