Tuesday, May 14, 2013

பூவாகி காயாகி வடகமும் ஆகி - வேப்பம் பூ

கிராமங்களில் வீட்டு முற்றத்து வாயிலில் நிழலுக்காக நாட்டி இருப்பார்கள். பல இடங்களில் தெய்வமரமாகவும் வழிபடப்படுகின்றது. பழைய காலத்தில் தோப்புக்களாகவும் இருந்தன.

இதனின்று வீசும் இதமான காற்று உடலுக்கு நன்மைகள் தரும். இள வேனிற் காலத்தில்; பூக்கும் வேப்பம் பூவின் வாசம் காற்றில் கலந்து வந்து சுகந்த மணத்தை தரும்.

இந்தியா,இலங்கை, பர்மாவில் வளரும் மூலிகை மரம் இது. 15- 20 மீற்றர் உயரம்வரை வளரக் கூடியது. 5 வருடங்களின் பின் பூத்துக் காய்கும்.


தாவரவியல் பெயர் Azadirachta  Indica.  குடும்பம் Meliaceae .  ஹிந்தியில் கடன் வாங்கி ஆங்கிலத்தில் Neem என்கிறார்கள். Indian Lilac என்றும் சொல்வதுண்டு.

4000 ஆண்டுகளுக்கு முன்பு தொட்டே இந்தியாவில் அறிமுகமாகி இருந்தது என்கிறார்கள்.

மருத்துவ குணம் நிறைந்த மரம். சர்வரோக நிவாரணி மருந்தாகவும் இருந்து வருகின்றது. சமஸ்கிருதத்தில் நிம்பா என்றழைத்தார்கள். மரம், இலை, பூ, காய், பட்டை, வேர், எண்ணை, பிசின் என அனைத்துமே மருந்தாகப் பயன் படுத்தப்படுகின்றது.

  • இலை தோல்நோய்களை நீக்கும். 
  • பழம் குடல்கிருமிகளை ஒழிக்கும். 
  • நெருப்புக்காச்சல், டெங்கு தொற்றுநோய்கள் வராமல் இருக்க வேப்பம் குச்சியை அவித்துக் குடிப்பார்கள்.

கை,கால், தொண்டை நோவுக்கு எண்ணை பூசுவார்கள் மருந்தாகவும் குடிப்பார்கள்.

முன்னைய காலம் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு வேப்பம் எண்ணையை பூசிவிடுவார்கள்.

அம்மை நோய் வந்தவர்களுக்கு இலைகளைப் பரப்பி அதன்மேல் படுக்க விடுவார்கள். இவ் இலைகள் நோயை தணிக்கும் என்பார்கள்.

கரகம் ஆடுபவர்கள் கரகத்தில் வேப்பிலை கட்டி இருக்கும். அறிவியல் வளர்ச்சி நெருங்காத பின்தங்கிய கிராமங்களில் பேயை விரட்ட வேப்பிலையால் அடிக்கும் வழக்கம் இருந்தது.

உடல் உழைவு, நோவுகளுக்கு இலை, பட்டையை அவித்த நீரில் குளிப்பார்கள். பழைய காலத்தில் குழந்தை பெற்ற தாய்மாருக்கு கிருமி தொற்று வராமல் இருக்க பட்டை அவித்த நீரை ஊற்றுவார்கள்.

கிராமங்களில் காய்ந்த வேப்பம் பழங்களைப் பொறுக்கி எடுத்து வைத்து நெருப்பில் இட்டு புகை போட்டு நுளம்பை விரட்டுவார்கள்.

உறுதியான மரத்தளபாடங்கள் செய்ய முற்றிய மரம் பயன் கொடுக்கிறது.

பயிர்களுக்கு பாதுகாப்புத் தரும் கிருமி நாசினியாகவும், பசளையாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்பெல்லாம்  வீடுகளுக்கு வந்து வேப்பம் குழைகளை வெட்டி மாட்டு வண்டிகளில் கட்டி எடுத்து தோட்டத்துக்கு கொண்டு செல்வதை கண்டிருக்கின்றோம். அன்றைய பொழுது எமக்கும் குழை விளையாட்டில் கழியும்.


ஒரு மரம் சராசரியாக 20- 30 கிலோ பழங்களை கொடுக்கும் இப் பழவிதைகளை கூட்டெரு தயாரிக்கும்போது கலந்து பயன்படுத்தினால் பூச்சித் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

கோவா பயிரைத்தாக்கும் வெட்டுப் புழக்களையும் கட்டுப் படுத்தலாம். அவரை, பூசணியை தாக்கும் வண்டுகளையும் தடுக்கலாம் என்கிறார்கள். வேப்பம் பிண்ணாக்கு சிறந்த சேதனப் பசளையாகும்.

எங்களது வீட்டிற்கு பக்கத்தில் ஒரு காணி இருந்தது. மின்சாரம் இல்லாத போர்க் காலத்தில் அங்கு வளர்ந்திருந்த பெரிய வேப்ப மரத்தின் தண்மையான காற்று எங்களுக்குஇரவுகளில் நிம்மதியான தூக்கத்தைக் கொடுத்தது.

அந்த மரத்திலிருந்து விழும் பூக்களால் எமது முற்றம் மெத்தையென மென்மையாகக் படர்ந்து கிடக்கும்.

வானில் இருந்து விமானங்கள் குண்டு வீச்சு நடந்த காலத்தில் அதிலிருந்து தப்புவதற்காக இந்த மரத்தின் நிழலில் ஒரு பங்கர் அமைத்திருந்தோம்.

நீம் சோப்பாகவும் கிடைக்கின்றது. கொசுவர்த்தியும் பாவனையில் உண்டு.

குருத்து இலைகளில் சட்னி செய்து உண்பார்கள்.

ஜனவரி -மார்ச் மாத காலத்தில் பூக்கும். மரம் பூக்கள் நிறைந்து காணப்படும். மரத்தின் கீழ் பாயை விரித்து வைத்து பூக்களை எடுப்பார்கள். சிலர் மரத்தில் ஏறி பறித்து வெயிலில் காயவைத்து எடுப்பார்கள்.


பூவை துவையலாகவும், பச்சடிகளாகவும், ரசமாகவும் செய்யலாம்.

உலர்த்திய பூவை நெய்யில் வதக்கி எடுத்து சாப்பிடுவார்கள்.

பூவில் வடகம் செய்து சாப்பிடுவது நம்ம ஊரில் பாரம்பரிய வழக்கம். வயிறு சுத்தமாகவும், ஏப்பத்தை போக்கவும் வேப்பம் பூ உதவுகிறது. இன்று வேப்பம்பூ வடகம் செய்வோம்.




தேவையானவை –

வேப்பம் பூ - 3 கப்
உழுந்து – 1 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
செத்தல் மிளகாய் - 10 -15
பெரும் சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – ½  ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – தேவையான அளவு.
சுவைக்கு விரும்பினால் எள்ளு – ¼ கப்

செய்முறை -


மறுநாள் நன்கு வெயில் வரவேண்டுமென என சூரியனை வேண்டிக்கொள்ளுங்கள்.

உழுந்தை 3 – 4 மணிநேரம் ஊற வைத்து அதிகாலையில் எடுத்து வடைக்கு அரைப்பதுபோல நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

கல் மண் இருந்தால் பூவை நன்கு நீரில் கழுவி அரித்து வடிய விடுங்கள்.

செத்தல்,வெங்காயம், கறிவேப்பிலை சிறியதாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அனைத்துப் பொருட்களையும் அரைத்த மாவுடன் நன்கு கலவுங்கள்.

சிறிய உருண்டை அளவில் எடுத்து சிறிய வடைகளாக தட்டி ஓலைபெட்டி அல்லது ஸ்ரெயின் லெஸ் தட்டுகளில் வைத்து நன்கு வெயிலில் காய விடுங்கள்.




இடையே மழை வந்தால் ஓடிப் பிடித்து எடுங்;கள்.

மாலையானதும் எடுத்து உள்ளே வையுங்கள்.

2 -3 நாட்கள் காய்ந்த பின் மறுபுறம் பிரட்டி காயவையுங்கள்.

3 - 5 நாட்கள் நன்கு காய்ந்த பின் எடுத்து டப்பாக்களில் அடைத்து வையுங்கள்.


தேவையானபோது எண்ணையில் அளவான தீயில் பொரித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு வடக மணத்தில் பசி பிடிக்க நீங்கள் சுவையாக ரசித்து சாப்பிடுங்கள்.

-: மாதேவி :-

Saturday, April 27, 2013

கோடையை குளிர்விக்கும் பழங்கள்


கோடையின் நடுப் பகுதிக்கு வந்துவிட்டோம் எனச் சொல்லலாம். இப்பொழுது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என்கிறார்கள்.

இடைநிலை பருவப் பெயர்ச்சிக் கால நிலையால் காற்றின் வேகம் குறைந்து காணப்படுகிறது. இதனால் உஷ்ணம் அதிகமாக உணரப்படும். பொலநறுவை மாவட்டத்தில் 32- 34 செல்சியஸ்சுக்கு மேல் வெப்பம் இருக்கிறது. ஏனைய இடங்களிலும் வெப்பத்துக்கு குறைவில்லை.

செரி பழம்

இந்நேரம் உடலுக்கு குளிர்சி தரும் பழவகைகள், சலட்ஸ், இளநீர், நுங்கு, மோர், மல்லித் தண்ணீர், நன்னாரி நீர், கூழ் வகைகள், கஞ்சி வகைகள், களி போன்ற நீராகாரங்கள் அதிக அளவில் பருகி உடல் வெப்பத்தைத் தணிக்கலாம்.


பழங்களில் தர்ப்பூசணியில் 98 வீத நீர்ச் சத்தும், வெள்ளரியில் 95 வீதமும், ஒரேஜ் 87 வீதமும், அப்பிள் 85 வீதமும், திராட்சை 81 வீதம், வாழைப்பழம் 75 வீதம் அளவில் இருக்கின்றன.

மனிதன் தோன்றிய காலத்தில் காடுகளில் கிடைத்த பழ வகைகள், கிழங்குகள், கீரை வகைகளை உண்டு வாழ்ந்து வந்தான்.

விழிம்பிக் காய்

காடுகளில் பாலைப்பழம், கூளாம் பழம், முரளிப் பழம், வீரைப் பழம், கரம்பைப் பழம், பனிச்சம் பழம், சூரைப் பழம், உலுவிந்தம் பழம், நறுவிலிப்பழம், கரையாக்கண்ணிப் பழம், துடரிப்பழம், அணிஞ்சில் பழம், ஈச்சம் பழம், என பல பழங்கள் இருந்திருக்கின்றன.

செரி காய்
 பெயர்களும் பலருக்குத் தெரிந்திருக்காது. இவற்றை எல்லாம் கதைகளில்தான் படித்திருப்போம். இப்பொழுது சில மிகவும் அரிதாகவே கிடைக்கும் என்றாகிவிட்டது.

நகர மயமாதலின் விளைவாக காடுகள் அழிந்து போய்விட்டன.


காடுகள், மலைகளிலிருந்து இயற்கை நமக்கு அளித்து வந்த பழ வகைகளும்; பெரிதும் அழிந்துவிட்டன.

பெலிங் பழம்

காட்டுப் பழங்களைத் தேடி ஓடிப்போக வேண்டாம்.


கிராமங்களில் கிடைக்கும் பலவித பழங்களையும், உடனுக்குடன் பிரஸ்சாக உண்டு நலமடைவோம். வீடுகளில் சிறிதளவு நிலம் இருப்போரும் பழமரங்களை நட்டு நலம்பெறலாம்.


குளிரூட்டியில் பல்நெடுங்காலமாக பேணப்பட்டு மருந்துகள் தெளிக்கப்பட்ட விற்றமின்கள் அழிந்து போன வெளிநாட்டுப் பழங்களைத் தவிர்த்து.........



.............. நம் ஊரில் சீசனில் கிடைக்கும் பழங்களை உண்டு மகிழ்வோம்.


"கொல்லையிலே கொய்யா மரம்..." என்ற நாட்டுப் பாடலும், "வில்வம்பழம் பித்தம் போக்கிடுமே பனம் பழம் பசியைத் தூண்டிடுமே" என்பவற்றையும் நினைவில் கொள்வோம்.

வில்வம் பழம்

நீரிழிவு நோயாளர்களும் தினமும் பழங்களை உண்ணும்படி அறிவுறுத்துகிறார்கள். பழங்களில் இருந்து விட்டமின்கள், தாதுப் பொருட்கள் கிடைக்கின்றன.


பழங்களை அதிகமாகச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் எடை கூடாது. உடல் எடையைக் குறைக்க உதவும், மலச்சிக்கலைத் தடுக்கும்.


பெரும் குடல்புற்று நோய்கள் வராமல் தடுக்கும் சக்தியும் பழங்களுக்கு இருக்கின்றன.


"வாடா மாப்பிளே வாழைப்பழத் தோப்பிலே பொலிபோல் ஆடலாமா..."


ஆடலுடன் நிற்காமல் இயற்கை அள்ளித் தரும் பழங்களை நேரடியாகவும்,


புருட்சலட், ஜீஸ், மில்க் ஷேக், பஞ்சாமிருதமாகவும் உண்டு உடல் நலம் காப்போம்.

கோடை வெப்பத்திலிருந்து தப்புவோம்.

ஜம்பு பழம்

மரங்களை நாட்டி வளர்ப்போம். பழமுதிர்சோலைகளாக இல்லாதுபோனாலும் இருக்கும் மரங்களை அழியாது பொக்கிசமாகக் காப்போம். நலம்பெறுவோம்.


-: மாதேவி :-
0.0.0..0.0.0

Thursday, April 11, 2013

வீசி எறியாதீர் விருந்தாகும் வெங்காயத் தார்

வெங்காயத்தை எகிப்தியர்கள் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பண்டைய எகிப்து நீதி மன்றங்களில் வெங்காயத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்ததாம்.


இனிமேல் 'அடே வெங்காயமே' என கூறக் கூடாது.

யூதர்கள் 'அனியன'; என்று ஒரு நகரையே நிறுவியிருந்தார்களாம். பண்டைய எகிப்து நாட்டில் வெங்காயத்தை கடவுளாகவே வணங்கியுள்ளார்கள். வெங்காயத்தை முக்கிய நிகழ்ச்சிகளிலும், உறவினர் வீடுகளுக்கு செல்லும்போது பரிசுப் பொருளாகவும் எடுத்துச செல்வார்களாம்.

இங்கிலாந்தில் பிளேக் நோய் வந்து 1664ல் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால் வெங்காயம் பூண்டு விற்ற கடைக்கார்களை பிளேக் நோய் தாக்கவில்லை என்கிறார்கள். மம்மிகளிலும் வெங்காயத்தை வைத்து புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெங்காயம் இல்லாமல் நம் நாடுகளில் சமையல் இல்லை. பொன்விலைக்கு ஏறியது நினைவில் இருக்கின்றதுதானே. காய்கறி வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அசம், நீருள்ளி எனவும் அழைப்பர். சிங்களத்தில் லுணு என்பார்கள்.

தாவரவியல் பெயர் alliumcepa ஆகும். அல்லியம் குடும்பத்தைச் சார்ந்தது. இலங்கை, இந்தியா,பாகிஸ்தான் ,ஈரான், ஆப்கனிஸ்தானில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தாயகம் ஈரான் பாகிஸ்தான் என்கிறார்கள்.

மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் இலங்கை இந்தியாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பண்டைய காலத்திலேயே பயிரிடப்பட்டுள்ளது.

கிராமத்தில் எங்கள் காணியில் வெங்காயத் தோட்டம்

இலங்கை இந்தியர்களும் பண்டையகாலம் தொட்டே பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் பயரிடப்படுகிறது. உலகில் வெங்காய உற்பத்தியில் சீனா ,இந்தியா முதலிடம் வகிக்கின்றன.

 இராட்சத வெங்காயம் peter glaze brook என்பவரின் தோட்டத்தில் விளைந்தது.

Thanks:- big oni - keithfoster.wordpress


Thanks:- big oni - keithfoster.wordpress

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பம்பாய் வெங்காயம் என வகைகள் இருக்கின்றன. சின்ன வெங்காயத்தில் பாலிபீனால் அதிகம் இருப்பதால் சிறந்தது என்கிறார்கள்.

வெங்காயம் உரிக்கும்போது வரும் கந்தக அமிலம் கண்ணீரை வரவழைக்கிறது. கண்களில் நீர் வருவதைத் தடுக்க  தண்ணீரில்போட்டுவெட்டிக் கொள்ளுங்கள். பிரீசரில் 5-10 நிமிடங்கள் வைத்து எடுத்தும் கொள்ளலாம். அல்லது முதல் நாள் பிரிஜ்ஜில் வைத்தும் எடுக்கலாம்.

கந்தக அமிலம் வருவது பற்றிய விஞ்ஞானக் குறிப்பை கீழே ஆங்கிலத்தில் தருகிறேன்.

"Onions produce the chemical irritant known as syn-propanethial-S-oxide. It stimulates the eyes' lachrymal glands so they release tears. Scientists used to blame the enzyme allinase for the instability of substances in a cut onion. Recent studies from Japan, however, proved that lachrymatory-factor synthase, (a previously undiscovered enzyme) is the culprit (Imani et al, 2002)." Why does chopping an onion make you cry?

வெங்காயத்தில் உள்ள புரொட்டீன்கள் முதுமையைத் தடுக்கும். முகச் சுருக்கம், சர்ம நோய்கள் வராமல் தடுக்கும். என அழகுகலை நிபுணர்கள் கூறுகிறார்கள். மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தியும் இருக்கின்றது என்பது சிறப்பானது.


உடல் பருமனைக் குறைக்க பெருமளவு உதவுகின்றது. ஜீரண சக்தி அதிகரிக்கும், தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும், வாய்புண்கள் குணமாகும், இரத்தசோகையைத் தடுக்கும், கொலஸ்டரோலைக் குறைக்கும் தன்மையும் இருக்கிறது என்கிறார்கள். மூலவியாதிக்கும் நல்லது என்கின்றனர்.

உணர்வைத் தூண்டும் வேதிப் பொருள் இருப்பதால் கோவில் உணவுகளிலும் விரத உணவுகளிலும் தவிர்கிறார்கள்.

சூப், வெங்காயப் பச்சடி, வெங்காயச் சம்பல், வெங்காயக்குழம்பு, பகோடா, பஜ்ஜி,  என சுவைக்கும்.

வெங்காயப் பொரியல் நமது நாட்டில் பிரபலமான உணவு.

வெங்காயப் பொரியலுக்கு இங்கே செல்லுங்கள்..... மண் சுமக்க வைத்தது

கிழங்கு, வாழைக்காய், இறால், மீன், கருவாடு, ஈரல் பொரிக்கும்போது அரைவேக்காட்டின் பின் உப்பு மிளகாய் தூள் பிரட்டிய வெங்காயத்தைக் கொட்டி பொரிய விட்டு எடுத்து சுவைத்துப் பாருங்கள். அதன் சுவையே தனிதான்.

பருவம் வந்ததும் வெங்காயத்தில் தாறு தோன்றி பூக்கும் இதை வெங்காயத்தாறு என்போம்.



வெங்காயம் என்றொரு படமும் வந்தது ஞாபகத்திற்கு வருகிறது.

வெங்காயத் தாறு முட்டை வறை


தேவையானவை


வெங்காயப்பூ -1கட்டு
முட்டை – 2 - 3
செத்தல் மிளகாய் -1
சின்னச் சீரகம் - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி -¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு  -  தேவையான அளவு
ஓயில் - 2 ரீ ஸ்பூன்



செய்முறை

வெங்காயத்தின் பூவையும் அடிப்பாகத்தையும் வெட்டி எறியுங்கள்

நன்கு ஓடும் நீரில் கழுவி எடுங்கள்.

வடிய வைத்து சிறிதாக வெட்டி எடுங்கள்.

செத்தல் மிளகாயை சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

ஓயிலில் செத்தல், சீரகம் தாளித்து வெட்டிய வெங்காயத்தாரை போட்டு பிரட்டுங்கள்

உப்பு, மிளகாய்ப் பொடி கலந்து வேகவிடுங்கள்.

முட்டையை உடைத்து சிறிதுஉப்பு, மஞ்சள் பொடி, கலந்து நன்கு அடித்து எடுங்கள்.

வெந்த வெங்காயத்தாறில் முட்டையை ஊற்றி நன்கு கிளறுங்கள்.

முட்டை வெங்காயத்தாறு பொரியல்  சுருண்டு வரும். மணமும் கூடவே வரும்.

வெங்காயத் தாரின் போசனை

Onoin (Allium cepa),  raw,
Nutrition value per 100 g.
(Source: USDA National Nutrient data base)
Principle Nutrient Value Percentage of RDA
Energy 40 Kcal 2%
Carbohydrates 9.34 g 7%
Protein 1.10 g 2%
Total Fat 0.10 g 0.5%
Cholesterol 0 mg 0%
Dietary Fiber 1.7 g 4.5%
Vitamins

Folates 19 µg 5%
Niacin 0.116 mg 1%
Pantothenic acid 0.123 mg 2.5%
Pyridoxine 0.120 mg 9%
Riboflavin 0.027 mg 2%
Thiamin 0.046 mg 4%
Vitamin A 2 IU 0%
Vitamin C 7.4 mg 12%
Vitamin E 0.02 mg 0%
Electrolytes

Sodium 4 mg 0%
Potassium 146 mg 3%
Minerals

Calcium 23 mg 2%
Copper 0.039 mg 4%
Iron 0.0.21 mg 3%
Magnesium 10 mg 2.5%
Manganese 0.129 mg 5.5%
Phosphorus 29 mg 4%
Zinc 0.17 mg 1.5%
Phyto-nutrients

Carotene-beta 1 µg --
Cryptoxanthin-beta 0 µg --
Lutein-zeaxanthin 4 µg --


-மாதேவி-

0.0.0.0.0.0