Wednesday, June 8, 2011

இமயமலை அடிவாரச் செடியில் எமது வீட்டில் பால்கறி

உச்சாணிக் கொப்பிலே உலக்கை கட்டித் தொங்குது!

அது என்ன?

அவர் இவர்தான்.

அனைத்து மண்ணிலும் வளரக் கூடிய மரம். சிறப்பாக வரட்சியான மணற்தரையில் சிறந்த பயன் தரும். இது 30 அடி உயரம் வரை வளரக் கூடியது. அதிக கிளைகளைக் கொண்டிருக்கும்.


வீ ட்டு வேலிகளிலும், முற்றத்திலும், கொல்லையிலும் நாட்டி இருப்பார்கள். தோட்டங்களிலும் பயிரிடப் படுகிறது. ஆறுமாதத்தில் பலன் கொடுக்கும்.


மரத்தின் பூர்வீகம் இமயமலையின் அடிவாரம் என்கிறார்கள். பின்பு பங்களாதேஸ், பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆபிரிக்கா,  இந்தியா,  இலங்கை எனப் பரவி தாய்லந்து, தாய்வானிலும் பயிரப்படுகிறது.

Moringa ceae குடுப்பத்தைச் சேர்ந்தது. Moringa Oleifera என்கிறார்கள். கோடையில் தாரளமாகக் கிடைக்கும் காய் இனம் இது. மழை இதற்கு எதிரி. விளைச்சல் பாதிக்கப்படும். பூக்களை உதிர்க்கும்.

இதில் சிறிய கட்டைக் காய் இனம், ஒரு மீட்டர் வரை நீண்ட காய் இனம், களிக்காய் என மொத்தமான காய்,  எனப் பல புதிய ரகங்கள் இருக்கின்றன.

செடி இனம். விதை வைத்துப் பயிரிடப்படும். ஏனையவை கொப்புகளை வெட்டிப் பதியிட்டு வளர்ப்பர்.

  • பெங்காளியில் shojne,  
  • தெலுங்கு Munagakaya,  
  • தமிழ் முருங்கைக் காய். 
  • மலையாளம் Muringa.   
  • ராஜஸ்தானியில் Shenano,  
  • பிலிப்பினோ Malunggay.

100 கிராமில் கொழுப்பு 0.1 கிராம், காபோஹாரேட் 3.7 கிராம், நார்ச்சத்து 4.8 கிராம், புரதம் 2.5 கிராம், விற்றமின் C 120 மி.கிராம். விற்றமின் A 110 மி.கிராம், கல்சியம் 30 மி.கிராம்,

இதில் பலவகையான பைரோநியூரியன்டஸ் (Phytonutrients) பல உண்டு. Alpha-carotene, Beta-Carotene, Beta-cryptoxanthin, Lutein, Zeaxanthin and Chlorophyll. இவை உடலிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் 46 மேற்பட்ட வகையான ஒட்சிசனெதிரிகள் (antioxidants) இருக்கின்றன.

மரத்தின் இலை, பூ, பட்டை என சகலதுமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தக் கூடியது. மருத்துவப் பொக்கிஸங்கள் என்கிறார்கள். தமிழ் வைத்தியத்தில் நரம்புத் தளர்ச்சிக்கும், பசியின்மைக்கும் அருமருந்து என்கிறார்கள்.

குழம்பு,  வரட்டல்,  சாம்பார்,  தீயல்,  கூட்டு,  பொரித்த குழம்பு, முருக்கைக்காய்ப் பிரட்டல், காரக் கூட்டு முருக்கைக்காய்சரக்குத் தண்ணி - பத்திய உணவு , சூப்,  கட்லட்,  வடை,  வடகம்,  பொரியல்,  சாதம்,  அசைவம் கலந்த குழம்பு,  மிக்ஸ்ட் வெஜிற்றபில் சொதி எனப் பல வகையாக சுவை கொடுக்கும்.


தேங்காய்ப் பால்கறி
தேவையான பொருட்கள்

முருங்கைக் காய் - 2
பலாக்கொட்டை - 10
கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாம்பார் வெங்காயம் - 6-7
கட்டித் தேங்காய்ப்பால் - 4 டேபிள் ஸ்பூன்
தேசிப்புளி  -1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - 1 இலை
உப்பு தேவையான அளவு

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 1
கறிவேற்பிலை -1 இலை
எண்ணெய் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


காயை விரலளவு துண்டங்களாக வெட்டி தோலை சீவி எடுங்கள். துண்டுகளை முக்காற் பாகம் வரை கீறிவிடுங்கள். 

பலாக்கொட்டையின் மேல்தோலை நீக்கி எடுத்து நீளவாட்டில் இரண்டாக வெட்டுங்கள்.

கிழங்கை தோல் சீவி விரும்பியபடி துண்டங்களாக வெட்டி மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் நீள் துண்டுகளாக வெட்டிவிடுங்கள்.

பாத்திரத்தில் காய்களைப் போட்டு கிழங்கு பலாக்கொட்டை மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி போட்டு, 5 நிமிடங்கள் அவியவிடுங்கள்.

பின்பு பிரட்டி மூடிவிடுங்கள். 2 நிமிடத்தில் திறந்து தண்ணீர் வற்றிய பின்  தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு கொதி வர இறக்கி தேசிப்புளி விடுங்கள். பிரட்டிவிடுங்கள்.

தாளித்து கலந்துவிடுங்கள்.

( பத்தியக் கறியாகத் தயாரிக்கும்போது தாளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்  )

முருங்கையின் பயன்கள் பற்றிய மேலும் பல தகவல்களை அறிய கீழே யூ ரியூப் கிளிக் பண்ணுங்கள்
முருங்கை அற்புதத் தாவரம்.

:- மாதேவி-:

Saturday, April 23, 2011

கனவாகிப்போன அடுக்களைப் பொருட்கள்

சமையலறையை யாழ் தமிழில் அடுப்படி மற்றும் அடுக்களை என்றும் சொல்லுவார்கள்.


குசினி என்றும் பலர் பேசிக் கொள்வார்கள். குசிய எனச் சிங்களத்தில் சொல்லுவார்கள். போர்திக்கீசிய மொழியிலிருந்து பெற்றதாக ஞாபகம். குசினி என்னும் இச்சொல் Cozinha (குசினா) என்ற போர்திக்கீசிய மொழியிலிருந்து இலங்கைக்கு வரப்பெற்றதாக( சமையலறை.) தமிழ் விக்கிபீடியா உறுதிப்படுத்துகிறது.


அடுக்களையில் மேலதிகமான பாத்திரங்களை வைத்தெடுக்கவும் அரிசி, பருப்பு பண்டங்களை வைக்கவும் நீண்ட பலகையால் செய்யப்பட்ட பரண்கள் குசினியில் தொங்கவிடப்பட்டிருந்தன. அவை பொருட்களை எட்டி எடுக்கக் கூடிய உயரத்தில் இருக்கும்.


நிலத்தில் இருந்து வேலை செய்வதற்கு பலகை ஆசனங்கள் வைத்திருந்தனர். பலகைக் கட்டை என்பர்.

மரத்தாலான அகப்பைக்கூடு துளைகள் உள்ளது தொங்கவிடப் பட்டிருக்கும். அகப்பை, மத்து ,கரண்டி, தட்டகப்பை, போன்றவற்றை அவசரத்திற்கு எடுப்பதற்காகச் செருகி வைத்திருப்பர்.

அகப்பை கூடு

வெண்கலம், ஈயம், அலுமினியப் பொருட்களின் பிற்பாடு எனாமல் பூசப்பட்ட பாத்திரங்கள் பாவனைக்கு வந்தன.

கறிக் கோப்பைகள், பேசின், ரிபன் கரியர், கேத்தல், பிளேட்ஸ், ரீ யக் ( Jug )    ரீ பொட்; (Pot) இருந்தன. பல வர்ணங்களில் அழகாய் இருந்தன. ஒரே ஒரு குறை  நிலத்தில் விழுந்து அடிபட்டால் எனாமல் எடுபட்டு அசிங்கமாகும். பின்னர் அவ்வடத்தில் பாத்திரத்தில் ஓட்டை வந்து விடும்.




சீன தயாரிப்புப் பீங்கான் பிரபலமாக விற்பனைக்கு வந்தது. சுத்தம் செய்வது இலகு என்பதால் பலரும் விரும்பி வாங்கிக் கொண்டனர். இவற்றில் ரீசெட், டினர்செற் பிரபலமாக அறிமுகமாகி இருந்தது. இப்பொழுதும் வீடுகளில் இடம் பிடித்து இருக்கிறது.



அடுத்து ஆட்கொல்லி பிளாஸ்ரிக் அறிமுகமாயிற்று . தொடக்கத்தில் மனிதரைக்கொல்லும் என்பதை அறிந்திருக்கவில்லை. உடையாது, இலகுவானது என வாங்கிக் கொண்டார்கள். இது பல் தொகையாகப் பெருகிகாணும்இடம் எல்லாம் இடம்பிடித்து சுற்றுச் சூழலையும் கேடாக்கி நிற்கிறது. இதைப்பற்றி தனிப் பதிவே போடலாம்.


ஸ்ரெயின்லெஸ் பாத்திரங்கள் வந்தன. இதற்கு ஏகக் கிராக்கி இருந்தது. மெலமின்கோப்பைகள்அறிமுக மாயின. 

இதைத்தொடர்ந்து பைரக்ஸ் அவன் (oven) பாத்திரங்கள் பிரபல்யம் ஆகியது. நொன்ஸ்ரிக் சமைக்கும் பாத்திரங்கள், மைக்ரோ பாத்திரங்கள், என பல்வகையும் உபயோகத்தில் இருக்கின்றன.       

அரிக்கன் லாம்பு (விளக்கு)
இரவில் வெளிச்சம் ஏற்ற கைவிளக்கு, குப்பி விளக்கு, அரிக்கன் விளக்கு, வைத்திருப்பார்கள்.


நமக்கும் மின்சாரம் இல்லாத சண்டைக்காலத்தில் இவ்விளக்கு நல்ல அனுபவம்.


மண்ணெண்ணை லீற்றர் 250ரூபா விற்றது. அதுவும் கிடைப்பதற்கு அரிது. கண்ணாடி (ஜாம்) போத்தலின் அடியில் தண்ணீரை விட்டு அதன்மேல் தேங்காய் எண்ணை சிறிதளவு ஊற்றி சைக்கிள் ரியூப் வாலில் திரியைச் செருகி விளக்கு எரித்திருக்கிறோம். மேலே கம்பிகட்டி கைபிடியும் இருக்கும் எடுத்துச்செல்வதற்கு.

காஸ்,மின்சாரம், இல்லாதகாலம் விறகு அடுப்பொன்றும் அக்காலத்தில் புதிதாக அறிமுகமாகி அனைவருக்கும் கைகொடுத்தது.


இரு அடுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று பக்கத்தே தொடுத்ததாய் இருக்கும் முன்பகுதியில் எரித்தால் பக்கத்திலே சற்று உயர உள்ள சிறிய அடுப்பிலும் சூடுபரவி இரண்டு சமையல் செய்யலாம்.அத்துடன் விரைவில் சமையலும் முடியும்.

கைக் கோடரி

விறகு தட்டுபாடான காலம் அது. . மறக்கக்கூடியவையா இவை எல்லாம்.  

சமைப்பதற்கு ஆதியில் விறகு அடுப்பு. நிலத்தில் மூன்று கல்லை வைத்து பாத்திரத்தை அதன் மேல் வைத்துச் சமைப்பர்.

கல்லடுப்பு

பின் களிமண்ணால்  அடுப்பு பிடித்து வெப்பத்திற்கு உடையாதிருக்க அதன் மேல் சாணம்பூசி வைத்திருப்பார்கள். குமட்டி அடுப்பும் இருந்தது.

இரும்பு அடுப்பு

குமட்டியில் தணலைப் போட்டு சமைத்த குழம்பை ஆறாமல் வைத்திருப்பார்கள். மரத்தூள் அடுப்பும் தகரத்தால் செய்யப் பட்டது இருந்தது. மரத்தூளை அடைந்து எரியவைத்துச் சமைப்பர். 

பின் இரும்பால் செய்த அடுப்புக்களை வைத்து சீமேந்தால் பூசிக் கட்டினார்கள். காலப் போக்கில் இவை வெப்பத்தால் வெடிக்கத்தொடங்கின. அத்துடன் மண்ணெண்ணை பாவனைக்கு வர இவையும் இல்லாது போயின.

மண்ணெண்ணை ஸ்ரவ், குக்கர், பாவனையில் இருந்தது. ப்ரஷர் குக்கர், ப்ரிஜ் வந்தன. இலகு மின்சார அடுப்புகள் வர  பலரும் மின்சார, காஸ் அடுப்புகளுக்கு மாறினர். ரைஸ்குக்கர் குடியேறியது.

அம்மி
கல்லாலான ஆட்டுக்கல்லு, அம்மி, தோசை, இட்லி மா, சட்னி, மசாலாச் சரக்கு, அரைப்பதற்கும்.
ஆட்டுக்கல்லு

திரிகை, பயறு, உழுந்துமா திரிக்கவும், உடைக்கவும் பயன்பட்டன.

உரல், உலக்கை அரிசி குத்தவும். மா இடிப்பதற்கும் உபயோகித்தனர்.
 
திரிகை
 இலங்கையில் விசேடமாக இடிசம்பல் இடிப்பதற்கும், பனம்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, துவைக்கவும்; பயன்பட்டன.


பின் விறாந்தையில் கல்லுரல், திரிகை

மிக்ஸி, கிரைண்டர், அரங்கேற கல்லுரல்கள் வீட்டின் பின் விறாந்தைகளில் தஞ்சம் புகந்தன. காலம் போக பின்புறம் வாழைப்பாத்திகளுக்குள்ளும் உட்கார்ந்திருந்து அழுதன..

இன்னும் சில கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள் 

பழையன ஒழிந்து சமையலறையும் புதுப்பொலிவுடன் கிச்சன் யூனிற் பூட்டப் பட்டு புதுப்பொலிவு பெற்றன. தூசி தட்டும் ஒட்டடைக் கம்புக்கும் வேலை இல்லாது போய் விட்டது. வக்கூம் க்ளீனரும் வந்தது.

இப்பொழுது மின்சார . காஸ்அடுப்புகளுடன். சூரிய அடுப்பு, மைக்ரோ. இன்டெக்சன் என பவனி தொடர்கிறது….

டிஸ்வோசர் பூட்டப் பட்டு கிச்சன் அழகிய மாளிகையாகியது. மாளிகையில் அழகிய பொருட்கள் கண்ணைச் சிமிட்டிநிற்கின்றன…

சமையலோ பல வீடுகளில் அம்போ…. ஆகிவிட்டது.

ரெஸ்ரோறன்ஸ் பக்கற்றுகள் ப்ரிஜ்ஜில்அடைக்கப்பட்டு மூச்சுத்திணறி… மைக்ரோவில் சூடேறி பலவீட்டு டைனிங் டேபல்களில் சிரித்திருக்கின்றன……

Wednesday, March 30, 2011

கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

கரணை

Discoreaceae  குடும்பத்தைச் சேர்ந்தது. பலநாடுகளிலும் பல்வேறு இனங்களில் பயிரிடப் பட்டு வருகிறது.இவற்றில் 200 க்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.


இலங்கையில் சட்டிக் கரணை அல்லது கரணைக்கிழங்கு எனவும் அழைப்பார்கள். இந்தியாவில் சேனைக்கிழங்கு என்கிறார்கள். மேல்தோல் மண்நிறத்தில் இருக்கும்.

ஆங்கிலப் பெயர் Elephant foot yam. யானையின் பாதம் போல பெரியதாக, சொரசொரப்பாக,  சட்டியை  போலவும், தோற்றமளிப்பதால் யானைப் பாதக்கிழங்கு Elephant foot yam.என அவர்களும் சட்டிக்கரணை என நாமும் அழைப்பது பொருத்தம் போலவே தோன்றுகிறது.

மரவள்ளி. வத்தாளை, மோதகவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு. இராசவள்ளிக் கிழங்கு, சிறுவள்ளிக் கிழங்கு போல இதுவும் ஒருவகை.   மஞ்சள் பயிரிடப் பட்ட தோட்டங்களில் வரம்பில் சேனை பயிரிட்டு இரட்டிப்புப் பலன் பெறலாம். இரண்டின் காலமும் ஒரேஅளவானது என்கிறார்கள். 


பயிரிடப் பட்டு 8 - 10 மாதங்களில் பலன் கொடுக்கும். சிறப்பான விடயம் விளைந்தபின் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து உபயோகிக்க முடியும். மழைக்காலத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோல் கடிக்கும் தன்மையுடையது.

முதன்முதல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பயிரிடப் பட்டது என்கிறார்கள். மேற்கிந்திய பசுபிக் தீவுகளிலும் பயிரிடப் படுகிறது. காபோவைதரேற் அதிகமுள்ள உணவு இது. நார்ப் பொருள், பொற்றாசியம், மக்னீசியம், விற்றமின் சி அடங்கியுள்ளது. கொழுப்பு குறைந்த உணவு என்பதால் நல்லஉணவு. கொலஸ்ரோலைக் கட்டுப் படுத்தும் உடல்எடையையும் அதிகரிக்காமல் தடுக்கும்.

இன்று கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு செய்யலாம். எண்ணை தவிர்க்க விரும்புவோர் அவித்தெடுத்து சமைத்தபின் எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டுங்கள்.

இக்கிழங்கில் சிப்ஸ், தேங்காய்ப் பால் பிரட்டல், கூட்டு, அவியல், பொரியல், வறுவல், பொடிமாஸ், புட்டு, சாப்ஸ், கட்லட், வடை, எனப் பலவும் செய்து கொள்ளலாம்.



கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு

தேவையான பொருட்கள் -

கரணைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
வெந்தயம் - ½ ரீஸ்பூன்
கடுகு – ¼ ரீஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்.
மிளகாய்ப் பொடி – 1 ரீஸ்பூன்
தனியாப் பொடி - 1 ரீஸ்பூன்
சீரகப்பொடி  - ½ ரீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபல் ஸ்பூன்

வறுத்து பொடித்து எடுக்க – கறுவா, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை - 4 -5 டேபல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தண்ணி – ½ கப்.

கிழங்கு கடிக்கும்!
பல்லு இருக்கா என்று கேட்காதீர்கள்.

சொரசொரப்பு என்பதால் கிளவுஸ் போட்டு கிழங்கின் தோலை சீவி எடுங்கள். துண்டங்களாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.

இதன் பின் கிளவுஸ் களட்டிக்கொள்ளலாம்.
கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவியும் வெட்டலாம்.

வெங்காயம்,பூண்டு சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.

வெறும் தாச்சியில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.

சிறிது ஒயிலில் கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை தாளித்து இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.

பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணி, தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.

பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.

(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)


காரகுழம்புடன் சுவைசோ்க்க இனிப்பு பூசணி, இரும்புச்சத்துக்கு இலைப் பொரியல், ரசம் அல்லது மோருடன் சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.