Discoreaceae குடும்பத்தைச் சேர்ந்தது. பலநாடுகளிலும் பல்வேறு இனங்களில் பயிரிடப் பட்டு வருகிறது.இவற்றில் 200 க்கு மேற்பட்ட இனங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.
இலங்கையில் சட்டிக் கரணை அல்லது கரணைக்கிழங்கு எனவும் அழைப்பார்கள். இந்தியாவில் சேனைக்கிழங்கு என்கிறார்கள். மேல்தோல் மண்நிறத்தில் இருக்கும்.
ஆங்கிலப் பெயர் Elephant foot yam. யானையின் பாதம் போல பெரியதாக, சொரசொரப்பாக, சட்டியை போலவும், தோற்றமளிப்பதால் யானைப் பாதக்கிழங்கு Elephant foot yam.என அவர்களும் சட்டிக்கரணை என நாமும் அழைப்பது பொருத்தம் போலவே தோன்றுகிறது.
மரவள்ளி. வத்தாளை, மோதகவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு. இராசவள்ளிக் கிழங்கு, சிறுவள்ளிக் கிழங்கு போல இதுவும் ஒருவகை. மஞ்சள் பயிரிடப் பட்ட தோட்டங்களில் வரம்பில் சேனை பயிரிட்டு இரட்டிப்புப் பலன் பெறலாம். இரண்டின் காலமும் ஒரேஅளவானது என்கிறார்கள்.
பயிரிடப் பட்டு 8 - 10 மாதங்களில் பலன் கொடுக்கும். சிறப்பான விடயம் விளைந்தபின் 6 மாதங்கள் வரை சேமித்து வைத்து உபயோகிக்க முடியும். மழைக்காலத்திற்கு வாங்கி வைத்துக்கொள்ளலாம். தோல் கடிக்கும் தன்மையுடையது.
முதன்முதல் ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பயிரிடப் பட்டது என்கிறார்கள். மேற்கிந்திய பசுபிக் தீவுகளிலும் பயிரிடப் படுகிறது. காபோவைதரேற் அதிகமுள்ள உணவு இது. நார்ப் பொருள், பொற்றாசியம், மக்னீசியம், விற்றமின் சி அடங்கியுள்ளது. கொழுப்பு குறைந்த உணவு என்பதால் நல்லஉணவு. கொலஸ்ரோலைக் கட்டுப் படுத்தும் உடல்எடையையும் அதிகரிக்காமல் தடுக்கும்.
இன்று கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு செய்யலாம். எண்ணை தவிர்க்க விரும்புவோர் அவித்தெடுத்து சமைத்தபின் எலுமிச்சம் சாறு விட்டுப் பிரட்டுங்கள்.
இக்கிழங்கில் சிப்ஸ், தேங்காய்ப் பால் பிரட்டல், கூட்டு, அவியல், பொரியல், வறுவல், பொடிமாஸ், புட்டு, சாப்ஸ், கட்லட், வடை, எனப் பலவும் செய்து கொள்ளலாம்.
கரணைக்கிழங்கு பொரித்த குழம்பு
தேவையான பொருட்கள் -
கரணைக்கிழங்கு – 1/2 கிலோ
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4
வெந்தயம் - ½ ரீஸ்பூன்
கடுகு – ¼ ரீஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்.
மிளகாய்ப் பொடி – 1 ரீஸ்பூன்
தனியாப் பொடி - 1 ரீஸ்பூன்
சீரகப்பொடி - ½ ரீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபல் ஸ்பூன்
வறுத்து பொடித்து எடுக்க – கறுவா, சோம்பு, கராம்பு
பொரிக்க எண்ணை - 4 -5 டேபல் ஸ்பூன்
புளி – தேவைக்கு
உப்பு - தேவைக்கு
தண்ணி – ½ கப்.
கிழங்கு கடிக்கும்!
பல்லு இருக்கா என்று கேட்காதீர்கள்.
சொரசொரப்பு என்பதால் கிளவுஸ் போட்டு கிழங்கின் தோலை சீவி எடுங்கள். துண்டங்களாக வெட்டி நன்கு கழுவி எடுங்கள்.
மெல்லிய சிறுதுண்டுகளாக வெட்டுங்கள்.
இதன் பின் கிளவுஸ் களட்டிக்கொள்ளலாம்.
கையில் எலுமிச்சம் புளி அல்லது எண்ணை தடவியும் வெட்டலாம்.
வெங்காயம்,பூண்டு சிறியதாக வெட்டுங்கள். மிளகாயை கீறிவையுங்கள்.
வெறும் தாச்சியில் வறுக்க வேண்டியதை வறுத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள்.
பொரிக்கும் எண்ணையை விட்டு வெட்டிய கிழங்குகளைப் போட்டு மெல்லிய ப்ரவுண் நிறத்தில் பொரித்தெடுத்து வடிய வையுங்கள்.
சிறிது ஒயிலில் கடுகு தாளித்து, பூண்டு, வெங்காயம்,பச்சை மிளகாய் கறிவேற்பிலை தாளித்து இறுதியில் வெந்தயம் சேர்த்து சிவத்ததும் இறக்கி பிரஷர் குக்கரில் கொட்டுங்கள்.
பொரித்த கிழங்கு, பொடிகள், உப்பு, புளி, தண்ணி, தேங்காய்ப் பால் அனைத்தையும் விட்டு கலக்கி மூடிபோட்டு 3 விசில் வைத்து விடுங்கள்.
பொரித்த வாசத்துடன் குழம்பு மூடி திறக்க முன்பே கமகமக்கும்.
ஆற எடுத்து பரிமாறும் கோப்பையில் விடுங்கள். நன்கு அவிந்த மிகவும் மெதுவான கரணைக்கிழங்குக் குழம்பு விரைவில் காலியாகிவிடும.
(கிழங்கு பிஞ்சாக இருந்தால் பொரித்தபின் குழம்பை பிரஷர்குக்கரில் வையுங்கள். முற்றிய கிழங்கு என்றால்பொரித்த பின் பாத்திரத்தில் வைத்தும் எடுக்கலாம்.)
காரகுழம்புடன் சுவைசோ்க்க இனிப்பு பூசணி, இரும்புச்சத்துக்கு இலைப் பொரியல், ரசம் அல்லது மோருடன் சாப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.