Thursday, December 13, 2012

கோழி இறைச்சி தேங்காய்ப் பால் குழம்பு


இவற்றில் பல்வகை இனங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் உண்ணும் பறவைகளாகும். பலருக்கும் பிடித்தமானது. காட்டுக் கோழியிலிருந்துதான ஏனைய இனங்கள் தோன்றின.


நாட்டுக் கோழி,




புரெயிலர், கறிக்கோழி, பாம்கோழி,




முட்டைக் கோழி, கினிக் கோழி,





சண்டைக் கோழி,




யப்பானிய காடை, வான்கோழி,




ஈமு கோழி



எனப் பல்வேறு இனங்கள் உள்ளன. உலகில் உள்ள பறவை இனங்களில் அதி கூடிய எண்ணிக்கையில் இருப்பது இவ்வினம்தான்.

2003 கணக்கீட்டின்படி உலகில் 24 பில்லியன் இருந்ததாகக் கணக்கிட்டிருந்தார்கள். முட்டைக்காகவும் இறைச்சிக்காகவும் வீடுகளிலும், பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றது.

கூட்டுக் கோழியாகவும்,


திறந்த கோழி வளர்ப்பு முறையிலும்,




வளர்க்கின்றார்கள். சேவல் சண்டைக்காக ஆசியா,ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டு காட்டுக் கோழி இனத்திலிருந்துதான் ஏனைய இனங்கள் தோன்றின. கி.மு 5ம் நூற்றாண்டு அளவிலேயே கிரேக்கத்திற்கும்,சின்ன ஆசியாவுக்கும் இந்தியாவிலிருந்து உள்ளுர்க் கோழிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்கிறார்கள்.




சேவல் இனத்திற்கு பூவென அழைக்கப்படும் சிவப்புக் கொண்டை இருக்கும். இறகுகள் கழுத்தில் நீட்டிக் கொண்டிருக்கும். வாலும் விரிந்து காணப்படும்.

Phasianidae குடும்பத்தைச் சேர்ந்தது. செல்லப் பிராணியாகவும் பலர் வளர்க்கிறார்கள். கொழும்பு மாநகரிலே சில மாடிகளில் செல்லமாக வளர்க்கும் சேவல் அதிகாலையில் கூவித் துயில் எழுப்புகின்றது.

கோழி வளர்ப்பு வருமானமும் கொடுக்க வல்லது. நோய் ஏற்படாதவாறு பாதுகாத்தல் வேண்டும். தடுப்பு ஊசிகள் வழங்கப்படல் வேண்டும். நோய் வாய்ப்பட்ட கோழிகளைப் பிரித்துவிட வேணடும்.

உலகில் கோழி வளரப்பில் வரிசைக்கிரமமாக
1.    ஐக்கிய அமெரிக்கா
2.    சீனா
3.    பிரேசில்
4.    மெக்சிகோ
5.    இந்தியா
6.    பிரித்தானியா
7.    தாயலாந்து
இடம் வகிக்கின்றன.

தமிழகத்தில் நாமக்கல் முதன்மையாக விளங்குகிறது. இந்தியாவிலிருந்து கோழிகள் இலங்கை, வங்காளம், நேபாளம் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
முட்டைகள் அமீரகத்திற்கும், குவெய்த்திற்கும், ஓமானுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

இலங்கையின் கால்நடை உற்பத்தியில் 70வீதம் கோழியிறைச்சி முட்டை மூலம் ஈடு செய்யப்படுகிறது. கோழி இறைச்சியும் முட்டையும் அதிகளவில் நுகரப்படுகின்றது. கோழித் தீவனமும் உற்பத்தி செய்யப்படுகின்றது.





சிறிய கோழிக் குஞ்சுகள் பலருக்கும் பிடித்தமானவை. எனக்கும் செல்லமாக வளர்க்க பிடிக்கும். எங்கள் வீட்டில் ஒருபொழுதும் வளர்ததில்லை 15 வயதில் மிகவும் விரும்பிக் கேட்டதில் ஒரு அம்மாக் கோழியையும் 22 குஞ்சுகளையும் கூட்டுடன் வாங்கி வந்து கொடுத்தார் அப்பா. விடுமுறையில் மிக மகிழ்ச்சியாக வளர்த்து அவற்றை மேய்த்து வந்தேன். பல மாதங்கள் இருந்தன. சிறிய செட்டைகள் முளைத்து வளர்ந்து வந்தன. பிறகு வாங்கியவரிடமே கொடுத்துவிட்டோம்.




மகளுக்கும் கோழிக் குஞ்சு வளர்க்க மிகவும் பிடிக்கும். கோழிக்கறி சாப்பிடவும் பிடிக்கும்.

இரண்டு குஞ்சை வாங்கி வளர்ப்போம் எனச்சொல்வாள். வீடுகள் சிறியன என்பதாலும் க்ளீன் செய்ய வேண்டும் என்பதாலும் வளர்ப்பதில்லை.




100 கிராம் சிக்கன பிரெஸ்ட் (ரோஸ்ட்டில்) போஷணை
கலோரி 171.0 kcal
காபோஹைதடீரட் 1.7 g
புரதம் 26.5 g
கொழுப்பு 6.5 g
நார்ப்பொருள் 0.0 g

நாட்டுக் கோழியின் சுவையே மிகவும் ருசியானது.அதன் மணம் சமைக்கும்போதே ஊரைக் கூட்டி நிற்கும். நாட்டுக்கோழி சமைக்கும்போது சிறிது நேரம் எடுக்கும். இதன் இறைச்சி விறைப்பானதாக இருக்கும். புறைலர் கோழி மென்மையானது விரைவில் அவிந்துவிடும்.

கோழிசமையல்கள் பற்றி கூறவே தேவையில்லை கோழி பிரியாணி,சூப், வறுவல், செட்டிநாட்டு கோழிக் குழம்பு, ம.க.உ சிக்கன், சைனீஸ் சிக்கன், பிரை, சிக்கன் 65, டிரம்ஸ்ரிக், எனப் பற்பல.....; ஒருகாலம் நான் முட்டையும் இறைச்சியும் என வயிறு முட்ட பிடி பிடித்திருக்கின்றேன். இப்போது பல வருடங்களாக சைவ உணவுதான்.




மகள் லீவில் வந்தபோது மகளுக்காக சமைத்த காரக் குழம்பு.

தேவையான பொருட்கள்

கோழியிறைச்சி - ¼ கிலோ
பம்பாய் வெங்காயம் பெரியது  - 1
கட்டித் தேங்காய்ப்பால் - ½ கப்
தண்ணித் தேங்காய்பால் - ½ கப்
பச்சை மிளகாய் - 1
கறிவேற்பிலை  - சிறிதளவு
ரம்பை - சிறிதளவு
மிளகாய்;த் தூள் - 2 ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1ரீ ஸ்பூன்
சீரகத்தூள் - ½ ரீஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ரீ ஸ்பூன்
பூண்டு, இஞ்சி பேஸ்ட் - 1 ரீ ஸ்பூன்
உப்பு  - தேவையானஅளவு
ஓயில் - 1 டேபிள் ஸ்பூன்
இறைச்சிச் சரக்கு - ¼ ரீ ஸ்பூன்
தேசிப்புளிச் சாறு - 1 ரீ ஸ்பூன்


செய்முறை


இறைச்சியை கழுவி பிழிந்து எடுங்கள்.; மிளகாய்த் தூள்;, மல்லித் தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், பூண்டு, இஞ்சி பேஸ்ட், உப்பு தேவையான அளவு கலந்து நன்கு பிரட்டி அரை மணித்தியாலம் ஊறவிடுங்கள்.

பச்சை மிளகாய்,வெங்காயத்தை வெட்டி எடுங்கள்.

ஓயிலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை, ரம்பை தாளித்து இறைச்சியைக் கொட்டி பிரட்டி மூடி போட்டு 2 நிமிடங்கள் விடுங்கள்.

பின்பு கிளறி மீண்டும் இரண்டு நிமிடம் வேகவிடுங்கள். ஓயிலில் பொரிந்து நன்கு வாசனை வரும். திறந்து தண்ணிப் பால் ஊத்தி மூடி போட்டு 5 நிமிடங்கள் விடுங்கள்.

கறி மணம் ஊரைக் கூட்ட கோழிஅவிந்துவிடும்.

மூடியைத் திறந்து கட்டிப் பால் ஊற்றி இறைச்சிச் சரக்கைப் போட்டு இறக்கி வையுங்கள்.

தேசிப்புளி கலந்து பிரட்டி மூடிவிடுங்கள்.

தேங்காய்ப் பால் இறைச்சிக் குழம்பு கமகமக்கும்.

பிரியாணி, சாதம், இடியப்பம், பிட்டு, பாண், ரொட்டி, சப்பாத்தி பரோட்டாவிற்கு சுவைக்கும்.