Sunday, January 6, 2013

முல்லை நிலம் எங்கும் தேடி முல்லை கொய்து வந்தேனே!!


ஐவகை நிலத் திணைகளில் காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலமென அழைக்கப்படும். இந்த நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.


சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒரு பகுதியாக முல்லைப் பாடலும் இருக்கிறது. இது முல்லைத் திணைக்குள்ள நூலாகும்.

நம்பூதனார் கவிநயத்தோடு எழுதியது முல்லைப் பாட்டு.

முல்லை மலர் என மல்லிகையில் மிகுந்த நறுமணமுள்ள ஒரு இனம் உள்ளது. Jasminium auriculatum  oleacea குடும்பத்தைச் சார்ந்தது. நீண்ட காம்புடன் கூடிய வெண்நிற சிறிய மல்லிகை இனம் இது. கொத்துக் கொத்தாக மலரும் செடி. பெரிய மரமாக வளரக் கூடியது முல்லை மல்லி என அழைப்பார்கள்.

நன்றி விக்கிபீடியா

முல்லைக் கொடி படர்வதற்கு தனது தேரைக் கொடுத்த பாரி வள்ளலும் நமது இலக்கியங்களில் வருகின்றார். முல்லை எனும் சொல் வனமுல்லையைக் குறிக்கும் என்கிறார்கள். பாரி வள்ளல் தேரை வழங்கியது இம் முல்லைக்குத்தான்.

நன்றி விக்கிபீடியா
 இதற்குக் காய்களும் இருக்கின்றனவாம்.

நன்றி விக்கிபீடியா
 முல்லைப் பூக்களில் பல வகைள். சாதி மல்லி,

நன்றி விக்கிபீடியா

நித்திய மல்லி, மௌவல் எனப்படும் மரமல்லி இது நள்ளிரவில் பூத்து மணக்கும்.

நன்றி விக்கிபீடியா
 முல்லை ஆறும் இருக்கின்றது.

இலங்கையில் முல்லைத் தீவு என்ற ஊரும் இருக்கிறது. திருக்கருகாவூர், வடதிருமுல்லைவாயில், திருக்காவிரிப்பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர். கோயில்களில் முல்லை தலமரமாக அமைந்து சிறப்புப் பெறுகிறது.

இப்பொழுது முல்லை என அழைக்கப்படும் முல்லை மல்லிகை செடி பூவுடன் நன்றி விக்கிபீடியா

200 மைல்களுக்குப் பிரயாணம் செய்து முல்லை நிலமெல்லாம் ஏறி இறங்கி நான் தேடிக் கொய்து வந்தது முல்லை என அழைக்கப்படும் கீரை வகை இலைச் செடி.


இந்த இலைக்கும் இயற்கை வாசம் உண்டு. இலையை ஒடித்தால் மணம் கமழும்.

கிராமத்தில் எங்கள் வீட்டில் எப்பொழுதும் செடி இருக்கும். மழைக்கால உணவாகவும் பலதடவை கை கொடுத்திருக்கின்றது.

எங்கள் வீட்டில் எங்களுக்காக வளர்ந்திருந்து காத்திருந்த முல்லைச் செடி

எமது கிராமத்துக் காணிகளில் தேடித் திரிந்து பறித்து வந்திருக்கின்றேன். இதற்கு விலை கொடுக்க முடியுமா? தேடினாலும் நகரங்களில் கிடைக்காதது. இவ் இலைகளை வைத்து சுவையாகச் சமைக்க முடியும்.

பால்சொதி, குழம்பு, செய்து கொள்ளலாம். முல்லை இலைக் கஞ்சி, ஒடியல் ஊழ், என்று பலவும் சமைக்கலாம்.


முல்லை இலை வாசத்துடன் சொதி கமகமக்க சாதத்தில் விட்டு குழைத்து சுவையாக உண்ணலாம்.

இடியப்பம், பிட்டு, பாணுக்குச் சுவைக்கும்.


எங்கள் அம்மா மீன் தலையுடன் முல்லை இலைகளைப் போட்டு சொதி வைப்பார்கள். முல்லை முருங்கை இலைகள் இரண்டையும் கலந்தும் சொதி செய்வோம்.

முல்லை இலைச் சொதி

தேவையானவை

முல்லை இலை

கட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம்  - 6-7
முல்லை இலைகள் - 15-20
தேசிப்புளி - 1 ரீ ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்யும் முறை

நல்ல இலைகளாக தேர்ந்து எடுங்கள்.

இவ்வாறு பூச்சி பிடித்த இலைகளை தவிருங்கள்

இலைகளின்; காம்புகளை நீக்கி விடுங்கள். நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் வெங்காயம் வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தில் இலைகள், பச்சை மிளகாய் வெங்காயம் உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள். அவியும்போதே வாசம் தூக்கும்.

அவிந்த பின் தேங்காய்ப்பால் ஊற்றி தேசிப்புளி சிறிதளவு விட்டு கலக்குங்கள்.

கொதிக்கத்தொடங்க கலக்கி விட்டு மீண்டும் ஒரு கொதிவர இறக்குங்கள். பின்பு மீதி தேசிப்புளியைக் கலந்து கோப்பையில் ஊற்றி வையுங்கள்.


கமகம வாசத்துடன் முல்லை இலைச் சொதி தயாராகிவிட்டது.
( விரும்பினால் தாளித்துக் கொட்டுங்கள் )

:- மாதேவி -: