Wednesday, December 24, 2008

மாங்கோ மில்க் புடிங் வித் கிறீம்


முதல் கொண்டாட்டம் அணிலுக்கு, பின் கிளிக்கு, அதற்கு பின்னர்தான் மனிதர்களுக்கு.

ஆம் மாமரம் காய்த்து பழுக்கத் தொடங்கும் போதுதான்.

வீட்டில் மரம் இல்லாதவர்கள் இப் பழத்தின் சுவையில் மயங்கி, சந்தையில் கொள்ளை விலை கொடுத்தேனும் வாங்கி பையை நிறைத்து பர்சைக் காலியாக்குவர்.

வயிறு அரை குறைதான் நிரம்பும். வாய் மட்டும் சப்புக் கொட்டும்.

மாம்பழம் சேர்ந்த டெசேட் ஒன்று.

பால், இனிப்புடன் பழமும் சேர்வதால் சுவையுடன் பழச் சத்தும் கிடைக்கும். செய்து உண்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்

1. மாம்பழத் துண்டுகள் - 1 கப்

2. பால் - ¼ கப்

3. சீனி – 4 டேபிள் ஸ்பூன்

4. சவ்வரிசி – 50கிறாம்

5. பிரஸ் கிறீம் - 2 டேபிள் ஸ்பூன்

6. ஜெலி சிறிதளவு (விரும்பிய பிளேவர்)

7. செரி -1

8. வனிலா சிறிதளவு

செய்முறை

இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து சவ்வரிசை போட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சவ்வரிசி வெள்ளை நிறம் மாறி பளபளப்பாக வரும்.

அப்பொழுது சீனி சேர்த்து கிளறுங்கள். சீனி கரைய பால் விடுங்கள்.

கொதித்து வரக் கிளறி மாம்பழத் துண்டுகள் சேர்த்து இறக்கி சற்று ஆற வனிலா சேர்த்து கப்களில் ஊற்றி பிரிஜ்ஜில் வையுங்கள்.

பரிமாறு முன் மேலே பிரஸ் கிறீம், நீளமாக வெட்டிய மாம்பழத் துண்டுகள், ஜெலி போட்டு நடுவில் செரி வைத்து பரிமாறுங்கள்


***** மாதேவி *****

Saturday, December 20, 2008

கீரை வித் மாங்காய் சலட்


சாதாரண கீரை மசியல், கீரைப் பொரியல், இரண்டும் சாப்பிட்டு அலுக்கும் போது இப்படி செய்து கொண்டால் சுவை கொடுக்கும்.

குழந்தைகளும் கீரையை தனியே சாப்பிட அடம் பிடிப்பார்கள். மாங்காய் சலட்டுடன் கலந்து கொடுக்கும் போது அடம் பிடிக்காமல் கீரையைச் சாப்பிடுவார்கள்.

அதில் இரு வகை ருசி இருப்பதால் கலந்து சாப்பிடும் போது வித்தியாசமான சுவையைத் தரும்.

சமைத்துத்தான் பாருங்களேன். கீரைக்கு புளிப்பு சலட் சேரும்போது ஆகா சொல்லத் தோன்றும்.


செய்யத் தேவையான பொருட்கள்

1. முளைக்கீரை – 1 கட்டு

2. பச்சை மிளகாய் - 4

3. சாம்பார் வெங்காயம் - 6-7

4. பூண்டு – 4

5. மிளகு, சீரக்கப் பொடி, பெருங்காயப் பொடி – சிறிதளவு

6. அரைத்த தேங்காய் கூட்டு - 1 டேபிள் ஸ்பூன்

7. கெட்டித் தேங்காய்ப்பால் - 2 டேபிள் ஸ்பூன்

8. உப்பு தேவைக்கு ஏற்ப


சலட் செய்ய

1. மாங்காய் -1

2. சாம்பார் வெங்காயம் - 5-6

3. பச்சை மிளகாய் -1

4. சீனி – 1 ரீ ஸ்பூன்

5. உப்பு தேவைக்கு ஏற்ப


செய்முறை

கீரையைத் துப்பரவு செய்து 4-5 தரம் நீரில் கழுவி எடுத்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் 2-3 துண்டுகளாக வெட்டுங்கள்.

மிளகாய் நீளமாக வெட்டி எடுங்கள்.

பூண்டு பேஸ்ட் செய்து வையுங்கள்.


பாத்திரத்தில் கீரையைப் போட்டு மிளகாய் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள்.

அவிந்ததும் சற்று மசித்து பூண்டு பேஸ்ட் மிளகு சீரகப் பொடி வெட்டிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கிளறுங்கள்.

பின் அரைத்த தேங்காய் கூட்டு, தேங்காய்ப் பால் விட்டு இறக்கி வையுங்கள்.

விரும்பினால் கடுகு வறமிளகாய் தாளித்துக் கொட்டி கலந்து விடுங்கள்.


சலட் செய்முறை

மாங்காயைத் துருவி எடுங்கள்.

புளிமாங்காய் என்றால் சிறிதளவு உப்பு நீர் விட்டு பிழிந்து எடுங்கள்.

வெங்காயத்தை சிறியதாக வெட்டி கலந்து விடுங்கள்.

மிளகாயை 5-6 துண்டுகளாக வெட்டி விடுங்கள்.

சீனி உப்பு சேர்த்து கலந்து விடுங்கள்.

பிளேட் ஒன்றில் கிறீன் லீப் கறியை இரு புறமும் வைத்து சலட்டை நடுவில் வைத்து பரிமாறுங்கள்.

புளிப்புச் சுவையுடன் கூடிய சலட் வித்தியாசமாக இருப்பதால் அனைவரையும் கவரும்.

:- மாதேவி -:

Saturday, December 13, 2008

பாசிப்பயறு முளை சலட்


பயறு வகைளில் நிறைந்த புரொட்டின் இருப்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். பொதுவாகவே சமையலில் நாம் பயன்படுத்தி வரும் கடலை, பருப்பு வகைகள், செமிபாடடைவது சற்று சிரமமாக இருக்கும்.

அதைத் தடுக்க இவற்றை நாம் முளைக்க வைத்த பின் சமையலில் சேர்த்து செய்து கொண்டோமேயானால் விரைவில் அவை சமிபாடடையும். அத்துடன் கூடிய போஷணையைப் பெற்றுக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்

1. முழுப் பாசிப்பயறு – 1 கப்

2. தக்காளி – 2

3. வெங்காயம் - 1

4. குடமிளகாய் - 1 (விரும்பிய வர்ணத்தில்)


முறை 1


ஓலிவ் ஓயில் 1 டேபிள் ஸ்பூன்

பூண்டு பேஸ்ட் ¼ ரீ ஸ்பூன்

உப்பு, மிளகு தூள் தேவையான அளவு

தேசிக்காய் சிறிதளவு


முறை 2


சோயா சோஸ் 2 டேபிள் ஸ்பூன்

மிளகு தூள், உப்பு தேவையான அளவு

ஒயில் 1 ரீ ஸ்பூன்

விரும்பினால் தேசிச் சாறு சிறிதளவு.



செய்முறை

பாசிப்பருப்பை தண்ணீரில் 8-9 மணித்தியாலம் ஊற வைத்து எடுக்கவும்.

வெள்ளை நப்கின் துணியை நீரில் நனைத்து எடுத்து அதில் பயறை வைத்து சுற்றி ஒரு கோப்பையில் போட்டு மூடி வையுங்கள்.

மறுநாள் காலையில் திறந்து பார்த்தால் சிறிது முளை வந்திருக்கும்.

துணி உலர்ந்திருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் மடித்து வைத்து மூடிவிடுங்கள்.

மறுநாள் காலையில் எடுத்தால் நன்றாக முளை விட்டிருக்கும்.

எடுத்து உணவு தயாரித்துக் கொள்ளலாம்.

(இப்பொழுது சுப்பர் மார்க்கட்டுகளில் பக்கற்றுகளாக முளைத்த பயறு கிடைக்கிறது)


சலட் செய்யும் முறை 1


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். ஒரு போலில் போடுங்கள்.

முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

ஒலிவ் ஓயில் அல்லது சலட் ஓயில் உடன் பூண்டு பேஸ்ட், உப்பு மிளகு, தூள் கலந்து எடுத்து, சில துளி எலுமிச்சம் சாறு விட்டு வெஜிட்டபிள் மேல் ஊற்றி கலந்து விடுங்கள்.

பச்சைப் பயறாக நேரடியாக சாப்பிடுவது சிறந்தது.

சலட் செய்யும் முறை 2


தக்காளி, குடமிளகாய், வெங்காயம், நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஓயில் விட்டு முளைப் பயறைப் போட்டு இரண்டு பிரட்டு பிரட்டி உப்பு, சோயா சோஸ், மிளகு தூள், தூவி கலந்து இறக்கி விடுங்கள்.

நல்ல மிளகு வாசனையுடன் இருக்கும்.

அத்துடன் வெட்டி வைத்த மரக்கறிகளை எடுத்து அவற்றிலும் சிறிது உப்பு, மிளகு தூள் கலந்து முளைப் பயறையும் கலந்து விடுங்கள்.

விரும்பினால் தேசிச்சாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிளேட்டில் எடுத்து வைத்து விடுங்கள்.சத்துச் செறிவு மிக்க சலட் உங்களை அழகுடன் சாப்பிட அழைக்கும்.


:- மாதேவி -:

Wednesday, December 3, 2008

பிறந்தநாள் சிற்றுண்டி




அண்மையில் நண்பர் ஒருவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்திருந்தார்கள். இனிதே ஆரம்பமாகியது விழா. பின்னணியில் பாடல்கள் ஒலிக்க அனைவரினதும் வாழ்த்துக்களுடன் கைதட்டல்களுடன் கேக் வெட்டி ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர்.

சிறுவர்கள் பலர் கொண்டாட்டத்தில் பங்கு கொண்டனர். சிறுவர்கள் இருந்தால் ஆரவாரத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவில்லைதானே? குழந்தைகளின் டான்ஸ் ஆரம்பமாகியது. சுப்பர் டான்ஸர்கள் போன்று ஒரே ஆரவாரமும் ஆட்டமும் மகிழ்ச்சியாக நேரம் போனது. அனைவரும் மகிழ்ந்திருந்தனர்.

விருந்தினர்களுக்கு சிற்றுண்டி பரிமாறல் ஆரம்பமானது. அழகான தட்டுக்களில் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன. சாப்பிடத் தொடங்கியதும்தான் பிளேட்டை நோட்டம் விட்டால் லட்டு, கேக், தொதல், டொபி, டோனட், கோர்ன் இனிப்பு என உள்ள அனைத்து உணவுகளுமே இனிப்புச் சுவை உடையதாக இருந்தது தெரிந்தது.

இவ்வளவு இனிப்பு உணவுகளையும் வழங்கிவிட்டு அதற்கு மேல் இரவு உணவு தயார் படுத்தியிருந்தார்கள். குழந்தைகள் விரும்பி உண்பார்கள் எனஅனைத்து உணவுகளையுமே இனிப்பாக செய்திருந்திருப்பார்கள் போலும்.

அனைவருக்கும் ஏற்றவாறு

பலரும் கலந்து கொள்ளும் விழாக்கள் விருந்துபசாரங்களில் உணவுகள் பரிமாறும் போது நோயாளர்கள் வயோதிபர்கள் அனைவரையும் கருத்தில் கொண்டு சகலவிதமான உணவுகளையும் கலந்தே பரிமாறிக் கொள்ளல் சிறப்பானதாக இருக்கும்.

உப்பு காரம் எண்ணெய் இனிப்பு அளவோடு இருத்தல் வேண்டும். வழங்கிய இனிப்பு உணவுகளில சிலவற்றைக் குறைத்து சான்ட்விச், பழவகைகள் பிஸ்கட் சேர்திதிருந்தால் அனைவருக்கும் உகந்ததாக இருந்திருக்கும். குழந்தைகளுக்கு சிறுவயது முதலே அனைத்து உணவுகளையும் சாப்பிடப் பழக்க வேண்டும்.

நாங்கள் எதைக் கொடுத்து வருகிறோமோ அதை அவர்கள் சாப்பிடப் பழகிவிடுவார்கள்.

எனவே குழந்தைகளைக் கவரும் விதமாகவும் சத்துடையதாகவும் சிலவற்றைத் தயாரித்து வழங்கிக் கொள்ளலாம்.

பழவகைகள், காய்கறிகள்

சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்த அன்னாசி, அப்பிள், கொய்யா, கிரேப்ஸ் பழவகைகள், அவித்தெடுத்த கரட், பீன்ஸ், கிழங்கு துண்டுகளுடன் வெள்ளரி;, தக்காளி, வறுத்தெடுத்த சோயா, சொசேஜஸ், இரால், ஏதாவது ஒன்றை ஒரு குச்சியில் குத்தி, பப்பாசி, அன்னாசி, அப்பிள், துண்டுகளில் குத்தி அப்படியே பரிமாறலாம். குச்சியுடன் இருப்பதால் விரும்பி கடித்து உண்பார்கள்.

சான்விச்

சான்விச்சை வித்தியாசமான உருவங்களில் செய்து கொள்ளலாம். சான்விச்சை ரோல் போலச் செய்து கொண்டு கரட் துண்டு ஒன்றை நீளமாக வெட்டி ரோல் பிரியாதபடி நடுவில் நிமிர்தி குத்திவிட்டால் பாரப்பதற்கு அழகாகவும் இருக்கும்.

கலர்புல் சான்விச்சாக செய்து கொள்ளலாம். சானட்விச் பிரட்டை எடுத்து மெல்லியதாக நீளவாட்டில் வெட்டி, அவித்த கரட், பீற்ரூட், மல்லி அல்லது புதினா சட்னி என ஒNர்ஞ், சிவப்பு, பச்சை என மூன்று நிறங்களில் தனித்தனியே பட்டர் மிளகு உப்பு எலுமிச்சம் சாறு கலந்து பிரட்டில் குறுக்கால் பூசி சுவிஸ் ரோல் போலச் சுருட்டி ஓயில் பேப்பரில் சுற்றி பிரிட்ஜில் வைத்தால் இறுகியிருக்கும். எடுத்து வட்டங்களாக வெட்டிப் பரிமாறிக் கொள்ளலாம். கண்ணைக் கவரும் நிறமானதால் விரும்பி உண்பார்கள்.

ஐஸ்கிரீம் வழங்குவதாக இருந்தால் புருட்சலட் கலந்ததாகச் செய்து கொண்டால் பழச் சத்தும் கிடைக்கும்.

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவாக கடலை, பருப்புத் தானியங்கள் செய்து சிறிய கப்களில் வழங்கலாம்.

சத்து மாக்கள் உழுந்து, பயறு, சோயா, கடலைப்பருப்பு, பொட்டுக்கடலை வறுத்தெடுத்து பொரித்த அத்துடன் ஏலப்பொடி சர்க்கரை கலந்து சொகிளட் பேப்பர் அல்லது ரிசூ பேப்பரில் சுற்றிப் பரிமாறலாம். ஆவியில் அவித்து எடுத்த மோதகம் கொழுக்கட்டை உகந்தது பருப்பு வகைகள் சேர்வதால் சத்துடையதாகவும் இருக்கும்.

சான்விச் பிஸ்கட்

கிரக்கர் பிஸ்கட் பரிமாறும் பொழுது சலட் வகைகள் தயாரித்து சானட்விச் போலச் செய்து கொள்ளலாம். லெட்டியூஸ் இலையை வைத்து, வெள்ளரித் துண்டு, தக்காளி, வெங்காயம், உப்பு மிளகு தூள் பிரட்டி எடுத்து வைக்கலாம்.

கோவா உள்பகுதியை சிறிய மெல்லிய துருவிய சீஸ் வடிவில் வெட்டிக் கொண்டு இத்துடன் உப்பு, மிளகுதாள், சிறிது பட்டர் கலந்து எடுத்து பிஸ்கட், பிரட் மேல் தூவிக் கொள்ளலாம். சீஸ் துருவல் போல இருப்பதால் சீஸ் என விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மரக்கறி, மீன், முட்டை, இரால், இறைச்சி ஏதாவதை அவித்து எடுத்து உப்பு மிளகு தூள் கலந்து பிஸ்கட் மேல் வைத்து சிறியளவில் சோஸ் அல்லது சீஸ் துருவல் கலந்து விடலாம்.

பழவகைக் கலவைகள் டேட்ஸ், புதினா சட்னி வைத்து பரிமாறலாம்.

ஸ்டவ்ட் உணவுகள்

கிழங்கு வகைகளை அவித்து எடுத்து மசித்து பட்டர், கடுகு பேஸ்ட், மிளகு தூள் சேர்த்து கிறீம் செய்து பூசியும் ஐசிங் பாக்கில் போட்டு ஸ்டார் பூக்கள் போன்று அழகுபடுத்திக் கொள்ளலாம். கோர்ன் பேஸ்டி போல் செய்து இக் கலவையை நிறைத்தும் பரிமாறலாம்.

சிறிய பண், பேஸ்டி, கறிரொட்டி, செய்து கொள்லாம். பட்டாணி கிழங்கு மரக்கறிக் கலவை, சீனிச் சம்பல், அல்லது இறைச்சி, மீன், முட்டை கறிக்கலவை தயாரித்து நிறைத்துக் கொள்ளலாம். சாதாரண சிறிய பண்ணை எடுத்து நடுவில் குடைந்து கறியை ஸ்டவ் செய்யலாம். அல்லது பண்ணை குறுக்கே வெட்டி சானட்விச்சாகவும் செய்யலாம்.

அவித்த முட்டையை வெட்டி மஞ்சள் கருவை எடுத்து அத்துடன் அவித்த உருளைக்கிழங்கு, சீஸ் மிளகுதூள் தடவி ஸ்டவ் செய்யலாம். இதேபோல அவித்து எடுத்த இறைச்சியாலும் நிறைத்துக் கொள்ளலாம்.

:- மாதேவி -: