Wednesday, December 8, 2010

முக்காற் பணத்தில் முழு விருந்து சுண்டைக்காய்

சுண்டைக் காய்  செடி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு வகைக் கத்தரியாகும். கத்தரியில் பல வகைகள் உண்டு. Brinjal, Eggpalnt எனவும் அழைப்பர். தாவரவியல் பெயர் Solnum melongena ஆகும். Eggplant bush, Garden egg, Mad apple, Aubergine போன்றவையும் வேறு பெயர்கள்.


வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.


மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள். Turkey berry. Devil's Fig, Prickly Nightshade, Shoo-shoo Bush, Wild Eggplant, Pea Eggplantஎனவும் சொல்வார்களாம்.
 

தாவரவியல் பெயர் Solanum torvum.
 

பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.


பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை  வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.

பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.


இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.

'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில்  சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

முற்றிய காய்கள் கசக்கும்.

வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?

அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.

ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.

ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.

காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.


கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.

தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.

காய்க் காரக் குழம்பு

தேவையானவை


காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.

செய்முறை 

பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.



வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.


பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.

கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

பாட்டியின் மண் சட்டிக் கறி

கத்தரி கடலைக் குழம்பு

பைவ் ஸ்டார் சலட்

Sunday, November 14, 2010

கனவாகிப்போன அடுக்களைப் பண்ட பாத்திரங்கள்

மொஸபத்தேமியா சிந்து வெளி நாகரீக காலத்தில் உபயோகிக்கப்பட்ட மட்பாண்டப் பொருட்கள் பலவும் அகழ்வாரச்சிகளில் கிடைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அக்கால நாகரீக மக்கள் வாழ்க்கை, கலைகலாசாரங்களை அறிந்து கொள்ளுகின்றோம்.

தற்பொழுது வழக்கொழிந்துபோன,  சில தலைமுறைகளுக்கு முந்திய அடுக்களைப் பொருட்களை நினைவு மீட்போமா?


ஆதியிலிருந்து வந்த மட்பாண்டப் பொருட்கள் சட்டி, பானை, முட்டி என்பன பெரும்பாலும் பாவனையில் இல்லை என்றே சொல்லலாம்.கிராமங்களில் கூட உபயோகம் குறைந்துவிட்டது. மிக அருமையாக ஒரு சிலர் சட்டியில் சுவைக்காக சமையல் செய்வதுண்டு.

எமது கிராமத்தில் உள்ள வீடுகளில் சிலவற்றின் பரணிலிருந்து தேடி எடுத்த பொருட்களை எனது கமராவில் அடக்கிக் கொண்டேன்.

எங்கள் பாட்டிமார் சட்டியில் பால் காய்ச்சி அதைச் சுண்ட வைக்க அடுப்பில் உமியிட்டு தணலில் வைத்து விடுவார்கள். பால் நன்றாகச் சுண்டி சூடேறி உமி வாசம் கமழத் தொடங்கவும்  இரண்டு கால் பூனைகளும் அடுப்புப் பிட்டியில் குந்திக் காத்திருக்கும். பால் ஆடை திரள்வதை ஆசையுடன் பார்த்திருக்க நாவில் சுவை ஏறும்.


வயல்நெல்அரிசிச்சாதத்தை மண்பானையில் சமைத்தெடுப்பர். இறக்கி வைத்து வெளியே சாம்பல் போகக் கழுவிய பின்னர் பானையைச் சுற்றி மூன்று குறியாக திருநீறு பூசி விடுவர்.அன்னம் இடும்பாத்திரம் லஷ்மிஎன்பர்.


புட்டு, இடியப்பம் செய்வதற்கு வாய் ஒடுங்கிய பானைகள் இருந்தன. களி கிண்ட  மாவறுக்க பெரிய மண் சட்டியும்,  பொரியல் செய்ய தட்டையான சட்டியும், கறிச்சட்டியும், உலைமூடியும், அரிசி கிளைய மண் அரிக்கன் சட்டியும் வைத்திருந்தனர்.

மண்சட்டித் தயிரின்சுவை நாக்கில் ஊறுகிறதா? மண்பானையில் தண்ணீர்வைத்திருப்பர் வெய்யிலுக்கு குடிக்க ஜில் என்று இருக்கும்.
நிலாச்சோறு எப்படி?



வெண்கலப் பாத்திரங்கள் குடிபுகுந்தன. வெண்கலச் சருவச்சட்டி, குடம், செம்பு, பானை, அண்டா, குண்டா,கரண்டி, இட்லிப் பானை, தாம்பாளம், குத்துவிளக்கு, கைவிளக்கு, வெற்றிலைத்தட்டு, செம்பு என்பன புளக்கத்தில் இருந்தன.


வெண்கலக் கடைக்குள் ஆனை புகந்தாற் போல் தடாம்...டமார்.... சத்தங்களுக்கும் குறைவிருக்கவில்லை.

வெற்றிலைத் தட்டும் பூட்டுச் செம்பும்

பிரயாணத்தின் போது காப்பி எடுத்துச் செல்ல பூட்டுச் செம்பு பேணியுடன் இருந்தது. வெண்கலச் சருவச் சட்டியில் கறி செய்வதாக இருந்தால் உட்புறம் ஈயம் பூசி வைத்திருந்தார்கள். மூக்குப் பேணி, வெண்கலப் பேணி,  காப்பி ரீ அருந்த உபயோகமாக இருந்தன.


கூஜா, தூக்கு வாளி என்பன பிரயாணத்தில் சாப்பாடு எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன. தூக்கு வாளியுள் சாதத்தையிட்டு இடுக்குச் சட்டியில் கறிகளை வைத்து எடுத்துச் சென்றனர்.

இரும்புப் பாத்திரங்கள் தாச்சி, கண் அகப்பைக் கரண்டி, தோசைக் கல்லு, தட்டு அகப்பை(தோசை திருப்பி), கேத்தல் போன்றவை நீண்ட காலம் அழியாது உழைத்தன. பெரிய இரும்புத் தாச்சிகள் கச்சான், பயறு, உழுந்து, மிளகாய் அரிசிமா வறுக்கவும் இருந்தன. சிறிய தாச்சியில் குழம்பு, பொரியில் செய்து கொள்வர். இதில் சமைத்த வத்தல் குழம்பு மிகுந்த சுவையைத் தரும்.

காம்புச் சத்தகம்

இரும்பாலான காம்புச் சத்தகம், இது மரக்கறி வெட்டவும் பயன்பட்டது. நீண்ட காம்புடன் முன் பகுதிவளைந்திருக்கும் பெட்டி இளைக்கும்போது காம்பால் குத்தி ஓலையைத் தள்ளிப் பின்னுவார்கள். தோக்கத்தி தேங்காய் உடைக்கவும் மரங்கள் வெட்டவும் பயன்பட்டன.

வெட்டுக் கத்தி இறைச்சி மீன் வெட்டவும் பயன்பட்டது. இரும்பாலான மேசைக் கத்தியும் பாவனையில் இருந்தது.


திருவலகை

தேங்காய் துருவ திருவலகை மரக்கறி வெட்ட அரிவாள் மனை என்பனவும் கை கொடுத்தன.

கொக்கைத் தடி

கொக்கச் சத்தகம் உயர்ந்த தடியில் கட்டி வைத்திருப்பர் தோட்டத்தில் தேங்காய்,மாங்காய்,முருங்கக்காய் பறிப்பதற்கு.


அந் நாட்களில் வீட்டுக்கு விருந்தினர் வந்தால் "வெத்தலைத் தட்டைக் கொண்டு வா" என அம்மா மகளுக்கு ஓடர் போடுவாள். வெற்றிலைத் தட்டில், பாக்கு வெட்டியும் இருக்கும்.

பாக்கு வெட்டி

பாக்கு வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலை ஆகியனவும் இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

சீன ஜாடிகள் ஊறுகாய், உப்பு, புளி, எண்ணெய், நெய் சேமிக்க உதவின.  கண்ணாடிப் போத்தல்கள் சீனி, தேயிலை, கோப்பி, மிளகாய்ப் பொடி, மா வகைகள், தின் பண்டங்கள் சேமித்து வைக்க உதவின.

அலுமினிய ஈயப் பொருட்கள் பாவனையில் வந்தன. ஈயத்தில் அரிசி அரிப்பதற்கு அரிக்கன் சட்டி இருந்தது. சட்டி, தோசைக் கல்லு, குளிப் பணியாரக் கல்லு, தாச்சி என்பனவும் இடம் பிடித்தன.


குசினியில் தண்ணி அள்ளி வைத்துப் பிழங்குவதற்கு தகர வாளி இருந்தது. குடமும் உபயோகித்தனர்.

மரத்தாலான இடியாப்ப உரல்,முறுக்கு உரல், கரண்டி, அகப்பை,மோர்கடைய மத்து, இருந்தன.ஆப்பைக்கூடு துளையுள்ளது தட்டகப்பை ,மத்து,கரண்டி செருகிவைத்து தொங்க விட்டிருப்பார்கள்.


மத்து உருட்டும் பெண்

பனைநாரால் செய்யப்பட்ட திரிகணை சட்டி பானையை இறக்கி வைப்பதற்கு இருந்தது. பனங் சார்வோலையை வெட்டி  வெயிலில் காய வைத்து எடுத்து ஓலைப் பெட்டி, மூடியுடன் இளைத்து வைத்திருப்பர். புட்டு இடியப்பம் பலகாரங்கள் வைத்து மூடி வைப்பர்.

தட்டுப் பெட்டி, வெங்காயம் மரக்கறி, மிளகாய் பரப்பி வைப்பதற்கு உதவின. நிலத்தில் போட்டு இருப்பதற்கு தடுக்கு வைத்திருந்தனர்.வைபவங்களுக்கு சோறு சமைத்து ஆறப்போடச் சோற்றுப் பாய் இருந்தது. சாப்பிட பந்திப் பாய் வைத்திருந்தனர்.


சுளகு, இடியாப்பத் தட்டு, ஓலைத் தட்டு

ஐஞ்சறை ஓலைப் பெட்டி மசாலா சரக்கு சாமான்கள் வைப்பதற்கும், சுளகு புடைப்பதற்கும், நீத்துப் பெட்டி புட்டு அவிக்கவும், இடியாப்பத் தட்டுக்கள்,பனங்கட்டிக்குட்டான் இருந்தன.

நீத்துப் பெட்டி, முறுக்கு இடியாப்ப உரல்கள்

பனை நாரில் உறிகட்டி சமைத்த உணவை பாதுகாத்தனர்.கடகம், குஞ்சுக்கடகம் தானியசேமிப்புக்கும் தோட்டத்தில் மரக்கறிபிடுங்கவும் உதவியது.வியர்க்கும்போது விசுறுவதற்கு பனைஓலை விசிறி வைத்திருந்தனர்.


சந்தைக்கு எடுத்துச் சென்று மீன் மரக்கறி வாங்க பன் உமல் இப்பொழுது உள்ள சொப்பிங் பாக் போலப் பயன்பட்டது. இவை சாயமிடப்பட்ட ஓலையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

அடுக்களைக் கனவுகள் தொடரும் .......

மாதேவி

Sunday, October 24, 2010

பழம் வாங்கலையோ... பழம் .... பிளம் பழம்

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் அக்ரிலை ஆய்வு நிறுவனம் செய்த ஒரு ஆய்வானது பிளம், பீச் பழங்களில் புற்றுநொயைத் தடுக்கும் மருத்துவ குணம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.


பினோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருட்களான குளொரோஜெனிக் மற்றும் நியோ குளேராஜெனிக் அமிலம் போன்ற இராசாயனங்கள்தான் புற்றுநோய் அணுக்களை அழிக்கிறது. இந்த இராசாயனங்கள் பழவகைகள் யாவற்றிலும் காணப்படுகின்றன. இருந்தாலும் பிளம்பழத்தில் கூடுதலாக இருக்கிறது என்கிறார்கள்.

எமது நாட்டில் பயிரிடப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கொம்பிலக்ஸ்களில் விற்பனையாகின்றன.


மென்மையான வட்டமான வழவழப்பான தோலையுடைய சதைப்பிடிப்பான இனிய பழம் இது.


மஞ்சள், வெள்ளை பச்சை, சிகப்பு,ஊதா கலர்களில் இருக்கும்.

பச்சை நிறத்தை அண்டிய வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும்.


தேனீக்கள் தேன் உண்ண முயலுகையில் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது.

Autum காலத்தில் இலைகளை உதிர்த்து Early Spring ல் பூக்களைக் கொடுக்கும்.

பெரிய பழம் 3-6 செ.மீ அளவிருக்கும்.

முற்றிய பழத்தின் மேலே வெள்ளை படர்ந்தது போல இருக்கும்.

மரம் 5-7 மீற்றர் உயரம் வரை வளரக் கூடியது. ரோசேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. அறிவியல்பெயர் பிருனஸ்சலிசினா.

உலரவைத்த பிளம்ஸ் ப்ருனே Prunes என அழைக்கப்படும்.

வடஅமெரிக்க, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில் இயற்கையில் காணப்பட்டது. ரோமானியர்கள் வடக்கு ஐரொப்பாவில் அறிமுகப்படுத்தினர்.

இதில் பெரும்பாலும் நான்கு வகை இருக்கிறது.
  1. யூரோப்பியன் பிளம், 
  2. ஜப்பானிய பிளம், 
  3. Damsons and mirabeels
  4. Cherry plums.

ஐரோப்பிய இனத்தை விட ஜப்பானிய இனப் பிளம் பெரியதாக இருக்கும்.

"பழம் வாங்கலையோ பழம்.." என இடுப்பில் கடகம் ஏந்தி,
கூவியழைத்து பழ விற்பனைக்கு வந்தாள் சின்னு.
சின்னப் பெண்ணாக இருக்கையில் ....

போட்டியில் பரிசுபெற்ற சின்னுவை, அவளின் வெற்றியின் ரகசியம் என்ன என வினவுகின்றனர்.

பழக்காரியாக சின்னு

ஜப்பானிய பிளம், சைனீஸ் பிளம் என்றே அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் ஜப்பான் 200-300 வருடங்களுக்கு முன்பிருந்தே சைனாவில் இருந்து இறக்குமதி செய்தது. சைனா 1000 வருடங்களாகவே பயிரிட்டு வந்திருக்கிறது. ஜப்பான் உலக நாடுகளுக்குப் பரப்பியதால் ஜப்பானிய பிளம் எனப் பெயர் வந்தது. ஜப்பானிய பிளம் ஏற்றுமதியில் கலிபோனியா பிரபல்யமான இடத்தை வகிக்கிறது.

நேரடியாக பழத்தை உண்பதுடன் கான்களில் கிடைக்கும். யூஸ், ஜாம், சிரப் தயாரித்துக் கொள்வார்கள்.

பிளம் யூசிலிருந்து பிளம் வைன், பிரண்டி தயாராகும்.

ஆசியாவில் ‘பிக்கிள்ட் பிளம்’ ஒரு வகையாகத் தயாரிக்கப்படுகிறது.

சலட்டாக தயாரித்தும் உண்ணலாம். 

காபோஹைதிரேட் கூடுதலாக உள்ளது. குறைந்தளவு கொழுப்பு உள்ளது.
எடை குறைப்பிற்கு ஏற்ற  உணவு.
விற்றமின் சீ அதிகஅளவில் இருப்பதால் தடிமன் சளியை அண்டவிடாமல் தடுக்கும் என்கிறார்கள்.
நார்சத்தும் அதிக அளவில் இருக்கிறது.

100 கிராமில் உள்ள போசனை


காபோஹைதிரேட் 13.1 கிராம்,
கொழுப்பு 0.62 கிராம்,
Fiber  2.2 கிராம்.
நீர்ப்பிடிப்பு 84 சதவிகிதம்,  
Energy 55 kcal,
புரொட்டின் 0.8 கிராம்.
விற்றமின் சீ 5 மிகி
B1 0.02 மிகி.
B2 0.3 மிகி.
B6 0.10 மிகி.
Vitamin E 0.7>  
Vitamin A 18 ug ,  
Potassium- K 172mg,  
Calcium-ca 4 mg.   

பிளம் சலட் செய்துகொள்வோமா.

தேவையான பொருட்கள்
  • பிளம் பழம் - 2
  • பச்சை ஆப்பிள் - ½
  • கிறேப்ஸ் விதையில்லாதது - 5-6
  • துளசி இலை – 6-7
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்
  • லெமன் ஜீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
  • சோல்ட், பெப்பர்பவுடர் - சிறிதளவு

செய்முறை

பழங்கள், துளசி இலைகளைக் கழுவி எடுங்கள.;

பிளம்,ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.கிரேப்ஸ் முழுதாகப் போட்டுக்கோள்ளலாம்.

துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

லெமென் சாற்றுடன், உப்பு. பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு போலில் பழங்களைப் போடுங்கள்.  கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள்.

வெட்டி எடுத்த துளசி இலையை  தூவி விடுங்கள்.

புதிய சுவையில் சலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.




 பழங்கள் பற்றிய எனது ஏனைய பதிவுகளுக்கு

பயன் தரும் பழங்கள் 2

மாதேவி

Sunday, October 3, 2010

தேங்காய்ப் பால் கஞ்சி - மூதாதையரின் மாரிகால இலகு சமையல்

எனது பாட்டி சொல்லக் கேட்டது இது.


“பழைய காலத்தில் வாழ்ந்த எமது மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் சிரமமானது.” என்பதாகும்.

நவீன விஞ்ஞான யுகத்தில் எமக்கு வீட்டிற்குள்ளேயே சமையல் அறை குளியல் அறை, குளிருக்கு குளிக்க ஹொட் வாட்டர், வெப்பத்திற்கு ஏசி என வாழ்க்கை சகல வசதிகளுடன் கூடி சுகபோகமானது.

பழைய காலத்தில் வீடுகள் ஓலைகளால் வேயப்பட்டு சிறியனவாக இருந்தன.

சமையல் அறையோ வீட்டின் கூரையிலிருந்து இறக்கப்பட்ட பதிவான பத்தியாலான சிறிய ஒரு இடமாகவே இருந்து வந்தது.

நமது குடிசைகள் அல்ல, பிலிப்பைன்ஸ்
அவர்களுக்கான தண்ணீர் பெறும் இடங்கள் தெருவுக்கு ஒன்றாக ஆழக் கிணறுகளாக இருந்திருக்கின்றன. ஆவற்றில் இருந்தே அவர்கள் தங்கள் அன்றாட சமையல், குடிநீருக்கான தண்ணீரை பெற்று வந்தனர்.

குளிப்பதற்காகவும், உடைகள் அலசுவதற்காகவும், அவற்றை நாடியே செல்ல வேண்டியிருந்தது. மழைகாலத்தில் சொல்லவே வேண்டியதில்லை. மிகவும் சிரமங்கள் இருந்தன. வீடுகள் மண் குடிசைகளாக இருந்ததால் நிலம் களி மண்ணால் ஆனது. அதனால் சாணத்தால் மெழுகியிருப்பர்.

மழைகாலத்தில் நிலங்களில் கசிவு இருப்பதால் தாழ் நிலமாக இருப்பின் நிலம் இளகி சொதசொதப்பாகி, கால் வைக்கும்போது கால் புதையத் தொடங்கிவிடும். மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். நிலத்தின் குளிர் உடலில் ஏறி காச்சல், குளிர் நடுக்கம் ஏற்படுவதுண்டு. கை மருந்துகள்தான் பலன் கொடுக்கும்.

குளிரிலிருந்து விடுபட வீட்டின் ஒரு மூலையில் நான்கு மூலைகளிலும் கற்களை அடுக்கி அதன்மேல் பனங் குற்றிகளைப் பரப்பி பரண் அமைத்து அதன் மேல் சாக்குகள், பாய்கள் போட்டு வைத்திருப்பர். அதன் மேல் படுப்பார்கள்.

பகலில் தொடர்ந்து அடை மழை பெய்யும்போது குளிருக்கு ஏறியும் இருப்பார்கள். முக்கிய பொருட்களை வைத்து எடுப்பதற்கும் கயிற்றினால் கட்டி பலகை வைத்த சிறிய பரண்களைத் தொங்க வைத்திருப்பார்கள்.

நவீன பரண்?

 அடுக்களையிலும் சமையல் பொருட்கள் வைக்க சிறிய பரண் இருக்கும்.

உறியில் சமைத்த உணவை வைப்பர். விறகு அடுப்பு மட்டுமே பாவனையில் இருந்ததால் மழை காலத்திற்கு வேணடிய விறகுகளை குடிசைக்கு வெளியே பின்புறத் தாழ்வாரங்களில் கயிற்றுப் பரண்களில் சேகரித்து வைத்திருப்பர்.

மழைக்காலத்தில் கூரையியிலிருந்து வடியும் மழை நீரை எடுத்து பாத்திரங்கள் கழுவதற்கும் குளிப்பதற்கும் உடைகள் அலசுவதற்கும் உபயோகித்து வந்திருக்கிறார்கள்.

பச்சை அரிசியும் பாசிப்பயறும்
மாரி காலத்தில் அவர்களின் உணவு மிக இலகுவாகச் சமைக்கக் கூடியதாகவும், சத்து மிக்கதாகவும் இருந்ததுடன் குளிருக்கு இதமூட்ட சுடசுடச் சாப்பிடும் உணவுகளாகவும் இருந்தன.

இவ்வகையில் தேங்காய்ப் பால் கஞ்சி, ரொட்டி, பிட்டு வகைகள் இருந்தன.

இடை உணவுகளாகச் சாப்பிடுவதற்கு கோடையில் செய்து சேர்த்து வைத்திருந்த பினாட்டு, புழுக்கொடியல், பனங்கட்டி உதவின. இம் முறையில் ஊறுகாய், வற்றல் மிளகாய், வடகம், கருவாடு என்பனவும் கை கொடுத்தன.

சாதத்துடன் சம்பல் செய்தும் உண்டனர். கஞ்சியுடன் கடிப்பதற்கு பச்சை மிளகாய், வெண்காயம், சுட்ட கருவாடு என்பன துணை போயின. இல்லாதபோது பினாட்டை தொட்டுக் கொண்டே குடித்தனர்.

இவ்வாறு தொடங்கிய எமது பாரம்பரிய உணவுகளை எங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதோடு சமைப்பதற்கும் பழகிக் கொள்ளுவோம்.

சிவப்பு பச்சை அரிசியுடன் பாசிப் பருப்பும் சேர்வதால் சத்தும் மிக்கது.

தேவையான பொருட்கள். 


  • தீட்டல் சிவப்பு பச்சை அரிசி – 1 கப்
  • வறுத்து உடைத்த பாசிப் பருப்பு – ¼ கப்
  • தேங்காய்ப் பால் - 1 கப்
  • பச்சை மிளகாய் - 2
  • சின்ன வெங்காயம் - 10
  • தேசிப் புளி – ¼ பழம்
  • உப்பு தேவையான அளவு.
காரச் சட்னி
காரச் சட்னி ஒன்றும் தயாரித்து வையுங்கள்.

செய்முறை

அரிசி பருப்பைக் கழுவி 4 கப் நீர் விட்டு அவித்து எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் 5-6 விசில் வைத்து எடுக்கலாம்.

தேங்காயப் பால் கஞ்சி

பின் உப்பு தேங்காப் பால் விட்டு ஒரு கொதி விட்டு இறக்குங்கள்.

கஞ்சியை இரண்டு பாகமாகப் பிரித்து ஒரு பாகத்தில் சிறிதாக வெட்டிய  மிளகாய், வெங்காயம், தேசிப்புளி கலந்து விடுங்கள்.

மற்றைய பகுதியை காரச் சட்னியுடன் பரிமாறுங்கள்.

இரு வேறு சுவைகளில் சுடச் சுட பால் கஞ்சி அசத்தும்.

சிறுவர்களுக்கு இனிப்பு விரும்பினால் சரக்கரை சேர்த்து இனிப்புக் கஞ்சி தயாரிக்கலாம்.

மாதேவி
 :-:-:-:-:-:-:-:-:-

Sunday, September 19, 2010

மைதா கீரைப்பிட்டு


மகளுடன் நீண்ட இனிய விடுமுறையைப் பகிர்ந்து கொண்ட நான் மீண்டும் ஒரு கிராமத்து விருந்துடன் உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

கீரை என்ற பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடும் சிறுவர்களும், பிட்டு என்பதால் விருப்பத்துடன் உண்பார்கள். எங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் பிடித்தமான உணவு இது. மைதாவில் தயாரிக்கப்படும் பிட்டின் சுவை முதற் தரமானதன்றோ?

தவிடு நீக்கிச் சுத்திகரிக்கப்பட்ட மா இது என்பதால் சத்துச் செறிவற்ற உணவு என்பதே பொதுவான கருத்தாகும். இதில் காபோஹைரேட் மிகுதியாக இருக்கிறது, பைபர் எனப்படும் நார்ப்பொருள் மிகவும் குறைவாக இருக்கும்.


அதனால் நோயாளர்களுக்கு ஏற்ற உணவல்ல என்று சொல்வார்கள். அதையும் சத்துச்செறிவுள்ளதாக மாற்றிக் கொண்டால் தரம் உயர்ந்ததாகிவிடும்.

மைதாவுடன் கீரை கலந்து கொள்வதால் நீரிழிவு, கொலஸ்டரோல், இருதய நோயாளர்களும் உண்ணலாம்.

இவர்கள் பிட்டில் கலக்கும் தேங்காய்த் துருவலைத் தவிர்த்துக் கொள்ளலாம். அல்லது நன்கு குறைத்துக் கொள்ளலாம்.


இதில் முளைக் கீரை கலந்துள்ளேன்.


முருங்கைக் கீரை கலந்தும் செய்து கொள்வார்கள். அது சற்றுத் துவர்ப்பாக இருக்கும்.

கீரை வகைகள் பற்றியும் அவற்றின் போசாக்கு பற்றியும் மேலும் வாசிக்க எனது முன்னைய பதிவான
கீரை சாப்பிட வாங்க லிங்கை கிளிக் பண்ணுங்க.

அமெரிக்கன் மா(All Purpose Wheat Flour) என அழைக்கப்படும் இது பாண் தயாரிப்பில் முதல் இடம் வகிக்கிறது. ஐரோப்பியரின் முக்கிய உணவாக இருந்த இது இப்பொழுது எல்லா இடங்களில் உள்ளவர்களையும் பற்றிக் கொண்டுவிட்டது. கேக், பேஸ்டி வகைகள், பிஸ்கற், பான்கேக், எனத் தொடர்ந்து பரோட்டா, நான், ரொட்டி,பூரி,இடியப்பம் என எமக்கும் இசைவாகிவிட்டது.

மைதா மாவில் உள்ளவை

  • ஒரு கப் ( 125கிராம்) மாவில் 95.4 கிராம் காபோஹைரேட் இருக்கிறது. இதன் கலோரி பெறுமானம் 455 ஆகும்.
  • கொழுப்பு 1.2 கிராம். இதிலிருந்து 11 கலோரிகள் கிடைக்கிறது.
  • நார்ப்பொருள் 3.4 கிராம்,
  • சோடியம் 2 மில்லிகிராம்,
  • பொட்டாசியம் 133 மில்லிகிராம்,
  • இவற்றிற்கு மேலாக புரதம் 12.9 கிராம் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையானவை

அவித்த மைதாமா - 2 கப்
உப்பு சிறிதளவு
கீரை சிறிய கட்டு - 1
சின்ன வெங்காயம் - 10-15
பச்சை மிளகாய் - 2-4 (காரத்திற்கு ஏற்ப)
தேங்காய்த் துருவல் - ¼ கப்


செய்முறை

மைதா மாவில் உப்புக் கலந்து வையுங்கள்.

நீரை நன்கு கொதிக்க வைத்து எடுத்து சிறிது சிறிதாக ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறி பிட்டு மா தயாரியுங்கள்.

கீரை, வெங்காயம், மிளகாய், கழுவி சிறிதாய் வெட்டி எடுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக செந்நிறமாகப் பழுத்த மிளகாயை உபயொகித்தால் காரத்தை தள்ளி வைப்போருக்கு எடுத்து வீச இலகுவாக இருக்கும்.

சிறிது உப்புப் பிரட்டிக் கலந்துவிடுங்கள்.

இட்லிப் பாத்திரத்தில் அல்லது ரைஸ் குக்கரில் நீர் விட்டு ஸ்ரீம் தட்டுப் போட்டு பிட்டு மாவை ஒரு பக்கமும், கீரை கலவையை ஓர் பக்கமும் வைத்து, மூடி போட்டு 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

பிட்டு அவியத் தொடங்கும்போதே கீரை, வெங்காய மிளகாய் வாசத்துடன் மூக்கைக் கிளறும்.

அவிந்ததும் பெரிய பாத்திரத்தில் போட்டு தேங்காய்த் துருவலையும் சேர்த்து கரண்டிக் காம்பால் கிளறிவிடுங்கள். உடனேயே சாப்பிடும் ஆசையும் கிளம்பிவிடும்.

தக்காளிக் குழம்பு அல்லது பொரித்த குழம்பு ஜோடி சேர்ந்தால் சூப்பர் சுவைதான். காரச் சட்னியுடனும் சாப்பிடலாம்.

சுடச் சுடச் சாப்பிட மிகுந்த சுவை தரும்.

சிவப்பு அரிசி மா குழல் பிட்டு பற்றிய எனது முன்னைய பதிவில் ரிச் நட்ஸ் குழல் பிட்டு பார்க்க மண் சுமக்க வைத்தது லிங்கை கிளிக் பண்ணுங்கள்

மாதேவி

Thursday, July 1, 2010

யாழ்ப்பாண மிளகாய்த் தூள்

யாழ்ப்பாண உணவுப் பொருட்கள் மிகவும் பிரபலம் பெற்றவை.
மிகவும் இனிப்பான கறுத்தக் கொழும்பு மாம்பழத்தின் சுவை சொல்லும் தரமன்று. தென்பகுதி மாம்பழம் வெறும் பச்சை நிறமாய் இருபது முப்பது ரூபாவிற்கு விற்கும். வாங்கி வாயில் வைத்தால் ஒன்றில் பச்சைத் தண்ணீர், அல்லது வாய் புளித்துப் போய்விடும். ஏனடா வாங்கினோம் என்றாகும்.

பென்னம் பெரிய குலைகளாய் விளையும் திண்ணைவேலி இரதை வாழைப்பழம் ஒரு வேளை உணவுக்கு ஒரு பழமே போதுமானதாய் இருக்கும்.

இவற்றுடன் பலாப்பழமும், யாழ் முருங்கைக்காயும் சேர்ந்துகொள்ளும். இவையெல்லாம் வெளியூர்களில் வசிக்கும்போது நினைவில் தோன்றி மறைவதில் வியப்பில்லை.

இது போன்றே யாழ் மிளகாய்த் தூளும். தரத்தில் உயரிடம் பிடித்தது. மிகவும் இலகுவான சமையல் முறைக்கு ஏற்ற தயாரிப்பு. வாசனையும் மிக்கது. பக்கற்றுகளில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகிறது. உலகெங்கும் இலங்கைத் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் உணவில் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது.

மிளகாய்த் தூள் என்று இலகுவாக வாயினால் சொல்லி விடலாம்.
பைக்கற்றை உடைத்து டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அள்ளிக் கறியில் போட்டுவிட்டால் சரியாகிவிடும்.

இதன் தயாரிப்பில் உள்ள சிரமங்கள் எத்தனை?

குறைந்தது நாலு ஐந்து நாட்கள் எடுக்கும். யாழ்ப்பாணப் பெண்கள் இந்த விடயத்தில் மிகுந்த பொறுமைசாலிகள்தான்.

முதலில் கடைக்குச் சென்று நல்ல சிவத்த புதுச் செத்தல் மிளகாய் தேடி வாங்க வேண்டும். அத்துடன் அதற்கான மசாலாச்சரக்குப் பொருட்கள் சேகரிக்க வேண்டும்.


பின் வீட்டிற்குக் கொண்டு வந்து சூரிய பகவானை வேண்டி
"மழையைத் தராதே மழையைத் தராதே'
'நல்ல வெயிலைத் தா"
எனப் பாடி
இரு கரம் கூப்பி வணங்குங்கள்.

செத்தல் மிளகாயை எடுத்து கஞ்சல் குப்பை எல்லாம் பொறுக்கி நீக்கி,
நாலு ஐந்து தடவை இருமித் தும்மி முடித்து விடுங்கள்.

நீரில் கழுவி வட்டியில் போட்டு வடிய விட்டு வெயிலில் உலர்த்துங்கள்.


அவ்வாறே மசாலாப் பொருட்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கழுவி காயவிடுங்கள்.

கறிவேற்பிலையையும் வெயிலில் காயவிடுங்கள்.


மூன்று நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பகலில் மழை வந்தால்
ஓடிச்சென்று உள்ளே எடுத்து வைத்து
பெய்த மழையை திட்டித் தீருங்கள்.
மழைமுடிந்து சூரியன் வந்தால்
வெளியே எடுத்துவையுங்கள்.

மறுநாள் சூரியன் வருமா என ஆகாயத்தையே பார்த்துப் பார்த்து எடுத்துக் காயவிடுங்கள்.

அப்பாடா ஒருவாறு மிளகாய் மசாலாக்கள் காய்ந்து விட்டது.
அடுத்தது என்ன?
செத்தல் மிளகாயை எடுத்து
ஒன்றொன்றாய்க் காம்பை ஒடித்து
அதை மூன்று நான்கு துண்டுகளாய் வெட்டி எடுங்கள்.

தும்மி, இருமி, கண்ணீர் சிந்தி
முகம் கை எல்லாம் எரிவு வர
ஓடிச் சென்று சோப் போட்டு கை முகம் கழுவுங்கள்.

இது ஒரு நாளில் முடியாது. நறுக்கி எடுக்க இரண்டு நாள் எடுக்கும்.

இடுப்பும் பிடிக்கத் தொடங்கிவிட்டது. அடிக்கடி இடுப்பையும் தடவிக் கொள்ளுங்கள். ஒருவாறு வெட்டிமுடிந்து விட்டது.

முதல் நாள் இரவு எல்லாப் பொருட்களும் சரியாக இருக்கிறதா என கவனத்தில் கொள்ளுங்கள்.

நாளை சுப முகூர்த்தம் அல்லவா? அதிகாலை மலர்ந்துவிட்டது.

பெரிய தாச்சியைக் கழுவி எடுத்து, அடுப்பில் ஏற்றி விடுங்கள். இனி வறுத்து எடுக்கும் வேலைகள் ஆரம்பம்.

முதலில் மிளகாயைப் போட்டால் கெட்டுவிடும். வீடே பற்றி எரியும். அதனால் முதலில் போட வேண்டியவர் மல்லியார்தான். இவருக்கு சூடு சுரணை குறைவு. நீண்ட நேரம் சூடு ஏற்றினால்தான் கோபம் வந்து உடைவார்.அளவாக அடுப்பைவைத்து நன்கு வறுத்துஎடுங்கள்.


அடுத்து சட்டியில் புகலிடம் மசாலாச் சரக்காருக்குத்தான்.
அவர்களை ஒன்றாகவே போட்டுக் கொள்ளலாம்.
இவர்களுக்கு விரைவில் சூடு ஏறிவிடும்.
பறக்கத் தொடங்கிவிடுவார்கள்.
பதமாய் கிளறினால்தான் உருப்படுவார்.
இல்லாதுவிட்டால் கரித் துண்டுகள்தான்.

பதமாய் வறுத்து எடுங்கள்.
ஒருவாறு அரைவேலை முடிந்துவிட்டது.

இருக்கவே இருக்கு சிகப்பு இராட்சசி. இதை நினைக்கவே பயம் வரும்.

'நீயா நானா' பார்த்திடுவோம்.

வெப்பத்தை அளவாய் வைத்து மூன்று நாலு கிளறு கிளறவே இராச்சசிக்கு கோபம் ஏறிவிடும்.

வேலையைக் காட்டத் தொடங்கிவிடுவாள்.

அச்.. அச், கொக்... கொக் மூக்கு வாயெல்லாம் எரிக்கிறாளே.

கண்ணீர்விட ஒருவாறு இறங்கி வருவாள். 'அடிமைப் பெண்ணானாளே' எனத் திரும்ப, மிகுதி நாங்கள் இருக்கிறோமே என சிரிப்பார்கள் ஓர் புறம் உள்ளவர்கள்.

"சரி சரி இருங்கடி உங்களுக்கு ஒரு வேட்டு" என்றபடியே
முதல் இராட்சசிகளை கொட்டி உலர்த்திவிட்டு
இவளுகளை எடுத்து சட்டியில் கொட்டவும்
உலர விட்டவர்கள் ஊரையே கூட்டி
அடுத்த வீட்டு கமலா அன்ரியையும்
மேல் வீட்டு அக்காவையும்
குசினி யன்னலுக்கு அழைத்து விடுவார்கள்.

"என்ன உங்கை மிளகாய் வறுகிறியளே" என குசல விசாரிப்புகள் தொடங்கிவிடும்.

"நான் சென்ற மாதந்தான் வறுத்தேன்" என்பாள் ஒருத்தி.
மற்றவளோ "நான் திரிக்க வேணும்" என அழுவாள்.

அதற்கிடையே சட்டியை நாலு தட்டு தட்ட வேண்டும்.
விரைவாக வறுபட்டு வாங்கடி எனச் சபித்தபடியே
சரக்.. சரக்தான்.

இதோ நெருங்கிவிட்டார் வெற்றிக் கம்பத்தை அடைய
ஒரே நிமிடம். ஆ... ஆ வென்று விட்டேனே.
முடிந்தது வேலை.
வெற்றி எனக்குத்தான்.

இவர்கள் எல்லாம் ஆறப் போடப் பட்டுள்ளார்கள். சாதாரண நிலைக்கு வருவதற்கு.

அதற்குள் நானும் வோஷ் எடுத்து மேக் அப் போட்டுவிடுவேனே.

எல்லோருக்கும் சின்னு ரேஸ்டியின் யாழ்ப்பாண மிளகாய்த் தூளின் இடைவேளை.

பிளீஸ் கம்பக் ஆவ்டர் வன் அவர்.

ஆமாம் வந்துவிட்டோம்.

வெல்கம் பக்.

வறுத்த பொருட்கள் யாவும் பெரிய கடுதாசிப் பக்கற்றுக்குள் அடைபடப் போவதைக் காணுங்கள். அடுத்து கிறைன்டிங் மில்லை நோக்கிய பயணம்தான். வெயிட் போட்டுக் கொடுத்து உடனே தருவீர்களா அல்லது சென்றுவிட்டு ஒரு அவரில் வரவா என்ற கேள்விதான்.

கடையெல்லாம் சுற்றிவிட்டுச் சென்று நமது 'பொக்கஷ'த்தை வாங்கிவர வேண்டும். கையில் கிடைத்ததும் எமது முகத்தில் ஒளிவட்டம் வீசுமே. அதைக் காண கண் கோடியும் வேண்டும். பிறகென்ன மகாராணி நடைதான்.

இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குத் தாக்குப் பிடிக்குமே என்ற சந்தோசம்தான். அந்த நடையை நீங்களும் வாழ்க்கையில் ஒரு தடவை நடந்துதான் பாருங்களேன்.

வீட்டுக்கு வந்தாயிற்று.

சுளகு எடுத்து கடதாசிப் பேப்பரை விரித்து, கொண்டு வந்த 'பொக்கிஷத்தை'க் கொட்டி ஆறவிட்டு விட்டு மதியச் சமையலுக்கு தயார் செய்ய வேண்டியதுதான்.

சமையல் முடிய தூளாரும் ஆறியிருப்பார்.
எடுத்து அரிதட்டில் இட்டு
அரித்து இருமித்...தும்மி...
கட்டையைக் கொட்டிவிட்டு
தூளாரை காற்றுப்போகாத பெரியபோத்தல்களில் அடைத்து வைக்க வேண்டியதுதான்.


அடைத்தாயிற்று!

அப்படியே சென்று தயாரிப்பாளர் குளியல் அடித்துவிட்டு வருவதுடன்
முடிவுக்கு வந்துவிடுவார் யாழ்ப்பாண மிளகாய்த் தூளார்.

மீண்டும் மூன்று மாதத்தில் பயணத்தை ஆரம்பிப்பார்.

தயாரிப்புக்கு சேகரித்தவை

செத்தல் மிளகாய் 1 கிலோ
மல்லி 1 கிலோ
பெருஞ்சீரகம் 100 கிராம்
சின்னச் சீரகம் 100 கிராம்
மிளகு 100 கிராம்
வெந்தயம் 50 கிராம்
கறுவா, இறைச்சிச் சரக்கு பைக்கற் சிறியது 1
மஞ்சள் 5-6 பல்லு
கறிவேற்பிலை 1 கொத்து

சிலர் குளம்பு தடிப்பாக வரவேண்டும் என்பதற்காக உழுந்து, அரிசி வறுத்துச் சேர்ப்பார்கள்.

ஆனால் இது நீண்ட நாட்களுக்கு பழுதடையாது இருக்குமா என்பது கேள்விக் குறி.

நீங்கள் எப்போ சேகரிக்கப் போகிறீர்கள்?

மாதேவி