Sunday, May 23, 2010

தக்காளி தேங்காய் பால் சொதி + ரசச் சொதி



தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களுமே பயன் தர வல்லன. பாம் (Palm) இனத்தைச் சார்ந்த இதன் தாவரப் பெயர் Cocos Nucifera என்பதாகும்.

coconut எனப் பெரிடப்பட்ட போதும் உண்மையில் Nut வகையைச் சார்ந்தது அல்ல. தேங்காய் நாருடன்(இலங்கையில் பொச்சு என்பர்) அது பழம் (Fruit) எனலாம். உரித்த தேங்காயை (Seed) விதை எனலாம்.


உலகளாவிய ரீதியில் தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, இந்தியா ஆகியன முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன. பிரேசிலை அடுத்து இலங்கை 5ம் இடத்தில் இருக்கிறது.

தெங்கு + காய் = தேங்காய் என அழைப்பர்.

இது வெப்பவலயப்பிரதேசங்களில் நன்கு வளரும்.
இலங்கை, கேரளாச் சமையல்களில் தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு.

தேங்காயைத்துருவி பால் எடுத்து கறி சமைப்பது இலங்கையர் வழக்கம். தேங்காய் அரைத்த கூட்டு இட்டும் சமைப்பார்கள்.

100 கிறாம் தேங்காயில் போசனை அளவு

கொழுப்பு 33.49 சதவிகிதம்
மாப்பொருள் 15.23 கிறாம்
புரதம் 3.39 கிறாம்
நார்ப் பொருள் 9 கிறாம்
பொஸ்பரஸ் 113 மிகிராம்
இரும்பு 2.43 மிகிராம்
பொட்டசியம் 356 மிகிராம்
மக்னீசியம் 32 மிகிராம்
B1, B2, B6, Folate ஆகிய விற்றமின்கள் குறைந்த அளவில் உண்டு
கல்சியம் 14 மிகிராம்

தேங்காய், தேங்காய்ப் பால் இரண்டிலும் கொலஸ்டரோல் நோய்க்கு அடிப்படையான கொழுப்பு இருப்பது தெரிந்ததே.

தேங்காயில் உள்ள கொழுப்பில் பெரும் பகுதி நிரம்பிய கொழுப்பு அமிலமாகும் எனவே இது நல்ல கொழுப்பு அல்ல.

ஆயினும் இது மீடியம் செயின் பட்டி அசிட் என்பதால் ஆபத்து அதிகம் இல்லை என மாற்றுக் கருத்தும் உண்டு.

எனவே இடையிடையே செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

வயிற்றுப் புண்ணுக்கு தேங்காய்ப்பால் நல்லது என்ற கருத்தும் உண்டு. நோயை எதிர்க்கும் சக்தியும் தேங்காய்ப் பாலுக்கு உண்டு என்கிறார்கள்.

முதிர்மையைத் தவிர்ப்பதற்கும், முடி வளர்வதற்கும் உகந்தது எனக் கருதப்படுகிறது. அதனால்தான் கேரளப் பெண்கள் அழகாகவும் கூந்தல் நீளமாகவும் இருக்கிறார்களோ?

சாதம், இடியாப்பம், புட்டு, உணவுகளுக்கு தொன்று தொட்டே தேங்காயைப் பிழிந்து பாலெடுத்து குழம்பு,சொதி செய்வார்கள்.
இன்று பாணுக்கும் சொதி என்றாகிவிட்டது.

பாலுடன் இலைவகைகள், மரக்கறி வகைகள் சேர்த்து செய்யும்போது சத்துக்களுடன் வித்தியாசமான சுவையும் கிடைக்கும்.

வெளிநாட்டுச் சொதியா!! கிறேவி?


வெளிநாட்டினர் கிறேவி எனப் பெயரிட்டு வேறுவிதங்களில் தயாரித்துக் கொள்வர். அவர்கள் தேங்காய்க்கு எங்கே போவது? இப்பொழுது தமிழர் வாழும் இடங்களில் தேங்காய் அதிக விலையில் கிடைக்கிறது.தேங்காய்ப் பாலும் கிடைக்கிறது.

மரக்கறிகள் இறைச்சியிலிருந்து கிறேவி செய்து கொள்வார்கள்.
கோர்ன் பிளவர் சோஸ், பிஸ் சோஸ், சிக்கன் சோஸ், சோயா சோஸ், டொமடோ சோஸ், எக் கிறெவி, கிறீம் கிறேவி, அனியன் கிறேவி, வைட் கிறேவி எனப் பலவாறு செய்து எடுத்து நூடில்ஸ், பேஸ்டா,மக்கரோணி உணவுகளுடன் பரிமாறுகிறார்கள்.

நாவுக்குச் சுவையான இரு சொதி வகைகள் இன்றைய பதிவில் பார்க்கலாம்.

இடியப்பதிற்கு பால் சொதிதான் சூப்பர்.

சொதி வகைகள் பற்றிய முன்னைய எனது பதிவுகள் காண



தேங்காய்ப் பாலில் சர்க்கரை கலந்தெடுத்து இடியப்பம் புட்டுக்கு ஊற்றிச் சாப்பிடுவார்கள்.

அதில் பழ வகைகள் சேர்த்து பழப் பாயாசமும் செய்து கொள்ளலாம்.

தக்காளிச் சொதி
தேவையான பொருட்கள் -

பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
சின்ன வெங்காயம் - 7-8
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
ரம்பை - 1 துண்டு
சோம்பு - ¼ ரீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேங்காய்ப்பால் - 2 கப்

பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, ரம்பை, சோம்பு, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள். அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால் ஆடைகட்டி திரண்டுவிடும்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தக்காளி,பச்சைமிளகாய் வாசத்துடன் சொதி தயாராகிவிட்டது.

தக்காளி தேங்காய்ப்பால் ரசச் சொதி

தேவையான பொருட்கள் -

தக்காளி- 2
பூண்டு – 4
மிளகு- ¼ தேக்கரண்டி
மல்லி -1 தேக்கரண்டி
செத்தல்மிளகாய்; -1
சின்ன வெங்காயம் - 5-6
தக்காளி - 2
கறிவேற்பிலை - 2 இலைகள்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி விரும்பினால் - சிறிதளவு
தேசிச்சாறு – ½ தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 2 கப்
செய்முறை -

வெங்காயம், தக்காளியை வெட்டி வையுங்கள்.

மிளகு, தனியா, செத்தல்பொடிபண்ணி எடுங்கள்.

பூண்டைமுழுதாய்த் தட்டி எடுத்து வையுங்கள்.

இவை அனைத்தையும் பாத்திரத்தில் போட்டு கறிவேற்பிலை, உப்பு, மஞ்சள் சேருங்கள்.

சிறிது தண்ணீர் விட்டு அவியுங்கள்.

அவிந்த பின் தேங்காய்ப் பால் ஊற்றி கலக்கிவிடுங்கள்.

பால்கொதிக்க ஆரம்பிக்கும்போதே கலக்கிவிட வேண்டும் இல்லாவிட்டால்
ஆடைகட்டி திரண்டுவிடும்.
அடிக்கடி கலக்குங்கள்.

இரண்டு மூன்று கொதிவிட்டு இடையிடையே கலக்கி இறக்கிவிடுங்கள்.

தேசிச்சாறு விட்டுக்கலந்து விடுங்கள்.

உள்ளி, மிளகு, தேங்காய்ப்பால் வாசத்துடன் மூக்கைக் கிளறி சாப்பிட அழைக்கும்.

குறிப்புகள் :–
  • தக்காளி அலர்ஜி இருந்தால் தக்காளியைத் தவிர்த்துச் செய்யுங்கள். தேசிச்சாறு சற்றுக் கூடுதலாகச் சேருங்கள்.
  • விரும்பினால் சொதிவைத்து எடுத்தபின் தாளித்துக்கொட்டலாம்.
மாதேவி

0.0.0.0.0.0

Saturday, May 8, 2010

தேங்காய்த் துருவல் ரவா கிச்சடி

"ஈவினிங் ரிபன் என்ன?" "உப்புமா." "உப்புமா வா?" 'ஆமாம்."
கேட்டதுமே முகம் சுளித்துப் போய்விடும்.


முகத்தை மலரச் செய்வோமா?

ரவையில் கிச்சடி, புட்டு, பொங்கல், தோசை, இட்லி, குழிப் பணியாரம், கேசரி, லட்டு, சுஜி ஹல்வா, இனிப்பு வகைகள்,கேக் தயாரித்துக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் மில்க் புடிங் தயாரித்துக் கொள்வார்கள்.

ரவா காதம் - ராம காதம் அல்ல.


ரவை என்பது தமிழ்ச் சொல் அல்ல. மராத்தியில் ரவா என்பதே தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய தென் இந்திய மொழியில் ரவை அல்லது இரவை ஆயிற்று. வட இந்தியாவில் இது சுஜி.

ஆங்கிலத்தில் இது Semolina ஆயினும் இது ஆங்கிலேயரின் சொல்லும் அல்ல. இத்தாலியர்களின் Semola விலிருந்து மருவியதாகும்.

ஆனால் இது இத்தாலியர்களின் சொல்லும் அல்ல. புராதன லத்தீன் மொழியின் சிமிலா (Simila) இருந்து வந்ததாகும். அதன் உண்மையான பொருள் மா என்பதுதான்.

லத்தீன் சிமிலாவானது கிரேக்க மொழியின் செமிடலிஸ் (Semidalis) ஆகும். ஆனால் இவை யாவற்றின் ஆரம்பம் அரேபிய மொழியின் சமீட் (Samid - Sameed) ஆகும் என்று மொழி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

ஆரம்ப காலத்தில் இது டியூரம் என்ற வகை தானிய வகையிலிருந்து தயாரிக்கப்பட்டது. அது சற்று மஞ்சள் நிறமானது. தற்பொழுது பெரும்பாலும் சற்று மென்மையான தானிய வகையான கோதுமையிலிருந்து கிடைக்கிறது. இது நல்ல வெள்ளை நிறமானது.

எமது மூதாதையர்கள் அரிசியை ரவைபோல குறுணல்களாக உடைத்து எடுத்து உப்புமா செய்வதுண்டு.

ரவையில் அடங்கியுள்ள போஷாக்கு அளவு

ரவையை மிகுந்த போசாக்குள்ள உணவு என்று சொல்ல முடியாது. அதில் முக்கியமாக மாப்பொருள் உண்டு.
புரதமும் ஓரளவு இருக்கிறது.
ஆனால் கொழுப்பு மிகக் குறைவாக இருப்பது நல்ல விடயம் (நாம் நிறைய எண்ணெய் சேர்த்து சமைத்து அதைக் கெடுத்துவிடக் கூடாது)

100 கிறாம் ரவையில் போசனை அளவுகளாவன

காபோஹைதரேட் - 72.83
புரதம் - 12.68
நார்ப்பொருள் - 3.9
கொழுப்பு – 1.5

இது சுவையான தேங்காய்த் துருவல் கலந்த கிச்சடி எனச் சொல்லலாமா? பார்க்கும்போது புட்டுப் போலவும் உதிர்ந்து இருப்பதால் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
பொரித்த மரக்கறிகள் சேர்ப்பதால் சுவை கூடும்.

இது எனது அம்மாவின் செய்முறை.


தேவையான பொருட்கள்

ரவை - 1 டம்ளர்
உருளைக் கிழங்கு – பெரியது 1
கரட் - 1
பச்சைமிளகாய் - 2
வெங்காயம் - 2
கடலைப் பருப்பு – 2 ரீஸ்பூன்
உழுத்தம் பருப்பு - 2 ரீஸ்பூன்
கடுகு – 2 ரீ ஸ்பூன்
இஞ்சிப் பேஸ்ட் சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி- தேவையான அளவு.
ஓயில் அல்லது நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 டம்ளர்

செய்முறை

ஈவினிங் செய்வதாக இருந்தால் மதியம் ரவையை வறுத்து ஆறவைத்துவிடுங்கள்.
ஆறிய ரவைதான் இதற்கு கூடுதல் சுவையைத்தரும்.

கிழங்கு, கரட், வெங்காயம் சிறிய துண்டுகளாக தனித்தனியே வெட்டி வையுங்கள்.
மிளகாயை கீறி வைத்துவிடுங்கள்.

தாச்சியில் ஓயில் விட்டுக் கொதிக்க உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டிய உருளைக் கிழங்கை ஓயிலில் போட்டு வதக்குங்கள்.

சற்று வதங்கிய பின் கரட்டையும் உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டி எடுத்து ஓயிலில் போடுங்கள்.

அடுப்பைக் குறைத்து வைத்து தட்டுப் போட்டு ஒரு நிமிடம் மூடிவிடுங்கள்.

இடையே திறந்து பிரட்டுங்கள்.

மெதுமையாக வந்தபின் தாச்சியின் ஓரத்தில் ஒதுக்கிவிட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி பிரட்டிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

ஓரளவு வதங்கிய பின் எல்லாவற்றையும் சேர்த்துவதக்கி எடுத்து கோப்பை ஒன்றில் வையுங்கள்.

அதே தாச்சியில் சிறிது ஓயில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உழுத்தம் பருப்பு, கருவேற்பிலை, இஞ்சி பேஸ்ட் வதக்கி தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்துவிடுங்கள்.

ஒரு டேபிள் தேங்காய்த் துருவலையும் தண்ணீரில் போட்டுக் கலக்கிவிடுங்கள். இதனால் கிச்சடியின் நிறம் வெள்ளையாக இருக்கும்.

தண்ணீர் கொதிக்க ரவையை சிறிது சிறிதாகக் கொட்டிகிளறுங்கள்.

அடுப்பைகுறைத்து சிம் இல் வைத்து கிளறுங்கள்.

நன்கு உதிர்ந்து வர அடுப்பை நிறுத்தி விடுங்கள்.

இடையிடையே கிளறிவிட்டு சற்று ஆறிய பின் பொரித்து எடுத்து வைத்த மரக்கறிகள், தேங்காய்த் துருவல் கலந்து பிரட்டி விடுங்கள்.

பொரித்த மரக்கறிகள் சேர்ந்த வாசமான உதிர்ந்த வெள்ளை நிறக் கிச்சடி தேங்காய் மணத்துடன் கமகமக்கும்.


இதற்கு வாழைப்பழம், மாம்பழம் சுவை தரும்.

காரம் விரும்புவோர் காரச் சட்னி அல்லது உருளைக்கிழங்கு, சோயா பிரட்டல், தக்காளி குழம்பு ஏதாவது ஒன்றுடன் சாப்பிட்டால் சுவையுடன் பாட்டும் வரும்.

என்னவென்று சொல்வதம்மா... கிச்சடி உன்தன்.... சுவை அழகை.

(குறிப்பு - உப்புமா, கிச்சடிக்கு ஆட்டிறைச்சிப் பிரட்டல் நல்ல கொம்பினேசன். )

மாதேவி.