Wednesday, December 8, 2010

முக்காற் பணத்தில் முழு விருந்து சுண்டைக்காய்

சுண்டைக் காய்  செடி இனத்தைச் சேர்ந்தது. இது ஒரு வகைக் கத்தரியாகும். கத்தரியில் பல வகைகள் உண்டு. Brinjal, Eggpalnt எனவும் அழைப்பர். தாவரவியல் பெயர் Solnum melongena ஆகும். Eggplant bush, Garden egg, Mad apple, Aubergine போன்றவையும் வேறு பெயர்கள்.


வெள்ளை நிறத்தில் கட்டையாக குண்டாக ஒரு வகை. கத்தரிப்பூ கலரில் நீண்டதாக இன்னொருவகை. இதைவிட கண்டங் கத்தரி என்பது சிறியதாக வெள்ளை மஞ்சள் நிறங்களில் இருக்கும். வட்டுக் கத்தரி பச்சை நிறத்தில் வெள்ளைக் கோடுகள் பூசியது போல பல்ப் வடிவில் இருக்கும்.


மிகவும் சிறியது சுண்டைக் கத்தரிக்காய்கள். Turkey berry. Devil's Fig, Prickly Nightshade, Shoo-shoo Bush, Wild Eggplant, Pea Eggplantஎனவும் சொல்வார்களாம்.
 

தாவரவியல் பெயர் Solanum torvum.
 

பெரிய இலையுடைய மரத்தில் கொத்தாய் வெள்ளைப் பூக்கள் மலர்ந்திருக்கும். காய்கள் கொத்துக் கொத்தாய் பச்சை நிறத்தில் பட்டாணி போன்று இருக்கும்.


பறவைகள் உண்ணும்போது பரம்பலால் இயற்கையாகவே வளரக் கூடிய தாவரம் இது. இரண்டு மூன்று மீற்றர் உயரம் வரை  வளரும். சொர சொரப்பாக இருக்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் காரணம் அவற்றின் மீதிருக்கும் நுண்ணிய வெள்ளை தும்புகளாகும். இரண்டு வருடம் வரை பலன் கொடுக்கக் கூடியது.

பச்சை நிறத்தில் உள்ள காய்கள் கனியும்போது மஞ்சள் நிறமாக மாறும்.


இது புளொரிடா, தெற்கு அலபாமா ஆகிய இடங்களைச் சார்ந்ததாகும். அங்கிருந்தே ஆபிரிக்கா. அவுஸ்திரேலியா, ஆசியா எனப் பரந்தது.

'சுண்டங்காய் காற் பணம், சுமை கூலி முக்காற் பணம்' என்பார்கள். எனினும் இது ஒதுக்கித்தள்ளக் கூடிய காய்கறி அல்ல. நார்ப்பொருள் நிறைய உள்ளது. அத்துடன் சுதேச வைத்திய முறைகளில்  சிறு நீர் பெருகுவதற்கும், உணவைச் சமிபாடடையச் செய்வதற்கும், இருமலுக்கும், ஈரல் நோய்கள் ஆகியவற்றில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தையும் வரச்செய்யக் கூடியது என சொல்கிறார்கள். வயிற்றுப் பூச்சிக்கும் சித்த ஆயுள்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.

இருந்தபோதும் நவீன மருத்துவத்தில் இது பற்றிய ஆய்வு ரீதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

முற்றிய காய்கள் கசக்கும்.

வாங்கியிருந்தால் என்ன செய்யலாம்?

அதற்கும் ஓர் வழி. காய்களை ஒரு வெள்ளைத் துணியில் மூட்டையாகக் கட்டி எடுங்கள்.

ஒரு பலகைக் கட்டையின் மேல் வைத்து, தேங்காய் அல்லது சப்பாத்திக் குளவியால் குத்துங்கள். காய் உடைந்து முற்றிய விதைகள் வந்துவிடும்.

ஒரு வடியில் கொட்டி ஓடும் நீரில் அலசி எடுங்கள். வடிய விட்டு எடுத்து வதக்கிக் கொள்ளலாம். சுவையான குழம்பும் கிடைக்கும். இக் குழம்பு இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும் என்பது ++ செய்தியாகும்.

காய்களை உப்பு, மோர் இட்டு அவித்து எடுத்து வெய்யிலில் உலர்த்தி வற்றலாக்கி இரும்புச் சட்டியில் இட்டு வற்றல் குழம்பு செய்து கொள்வார்கள் எமது பாட்டிமார்.


கூட்டு, மோர்க் குழம்பு, சாம்பார்,பொரியல், அவியல் செய்து கொள்ளலாம். காரக் குழம்பு பிடிக்காதவர்கள் வதக்கி எடுத்து மஞ்சள்பொடி, தனியாப் பொடி சேர்த்து பால்க் குழம்பாகவும் செய்து கொள்ளலாம்.

தக்காளி சேர்த்துக் கொண்டால் சுவை மாற்றமாக இருக்கும்.

காய்க் காரக் குழம்பு

தேவையானவை


காய் - ¼ கிலோ
வாழைக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
பச்சை மிளகாய் - 1
பூண்டு – 4.5 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்ப+ன்
கடுகு ¼ ரீ ஸ்ப+ன்
தேங்காய்ப் பால்- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி-1 ரீ ஸ்ப+ன்.
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்ப+ன்.
உப்பு புளிக்கரைசல் தேவையான அளவு.
கறிவேற்பிலை சிறிதளவு.
ஓயில் - 2 டேபள் ஸ்பூன்.

செய்முறை 

பிஞ்சுக் காய்களாகப் பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். காம்பை உடைத்து அலசி வடிய விடுங்கள். வெங்காயம், பச்சை மிளகாய், தனியே வெட்டிக் கொள்ளுங்கள். பூண்டு நசுக்கி வையுங்கள். வாழைக்காய் சிறியதாக வெட்டி வையுங்கள்.

ஓயிலில் காய்களையும் வாழைக்காயையும் நன்கு வதக்கி எடுத்து வையுங்கள். சிறிது ஓயிலில் கடுகு வெடிக்க வைத்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேற்பிலை போட்டு வதக்குங்கள்.



வெந்தயம் போட்டு வதக்கிய காய்களைக் கொட்டி, புளித் தண்ணீர் விட்டு உப்பு மிளகாய்ப் பொடி, மஞ்சள் தனியாபொடிகள் போட்டு கொதிக்க விட்டு, இறுதியில் தேங்காய்ப் பால் 2 டேபிள் ஸ்பூன் விட்டு இறக்குங்கள்.


பொரித்த வாசத்துடன் மணம்கமழும் குழம்பு உங்களைச் சாப்பிட அழைக்கும்.

கத்தரிச் சமையல் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

பொட்டுக்குள்ளால் எட்டிப் பார்க்கும்

சரக்குத் தண்ணி - பத்திய உணவு

பாட்டியின் மண் சட்டிக் கறி

கத்தரி கடலைக் குழம்பு

பைவ் ஸ்டார் சலட்