Thursday, December 31, 2009

தண்ணீர் காவியம்


குழாயடிச் சண்டைகளை ஏளனமாகப் பார்த்தவர்கள் நாம். பத்திரிகைகளில் இவை பற்றிய ஜோக்ஸ் ஏராளம்.

நாங்கள் மாடி வீட்டுக்காரர்கள். எல்லா வசதிகளும் வீட்டுக்குள்ளேயே உண்டு. எங்களளவில் எங்களுக்கு நாங்களே ராஜா ராணிகள் என்ற இறுமாப்பு.

மழை கொட்டினால் என்ன, புயல் வீசினால் என்ன, கோடை வரண்டு நீர்நிலைகள் வற்றினால் என்ன எங்களுக்கு என்ன கவலை?

காலம் மலை ஏறிவிட்டதா? அல்லது எனது தொடர் மாடிக்கு வந்த கேடா? புரியவில்லை.

ரம்யம் பதிவுகளில் முன்னர் போட்ட பதிவு. இன்று மீள்பதிவாக ....

தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

Wednesday, December 30, 2009

தேங்காய் சாதம்


தென்னை வெப்ப மண்டலப் பிரதேசங்களுக்கானது.
கடற்கரை பிரதேசங்களில் பெரும்பாலும் பயிர் செய்யப்பட்டிருக்கும்.


இதன் அனைத்துப் பொருட்களும் பயன்படக் கூடியவை.

இளநீர், தேங்காய், கொப்பரை, எண்ணை சமையலுக்காகவும்
புண்ணாக்கு கால்நடை உணவாகவும்,
கள்ளு போதைக்காகவும்,
தென்ஓலை, காய்ந்த ஓலை குடில்மேய, வேலி அடைக்கவும்,
காய்ந்த பாகங்கள் விறகிற்காக.
சிறட்டை கரிக்காகவும் பயன்படுகிறது.

இளம்காய்கள் இளநீராக அருந்தவும் செவ்விளநீர் என்பது சிறப்பாக இளநீருக்கானது. இளநீரை வழுக்கையுடன் கலந்து குடிப்பதிலுள்ள சுவை தனிதான்.


முற்றிய தேங்காய் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை, தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவின் சமையல்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

யாழ்ப்பாணச் சமையலில் தேங்காய் உபயோகப் படுத்தாத சமையல்களே கிடையாது.

தேங்காய் சம்பலின் சுவை உங்களுக்குத் தெரியும் தானே!

நன்கு முற்றிய காய்களை உலரவைத்தெடுத்து கொப்பரை ஆக்கி சமையலில் பயன்படுத்துவர்.

மிகவும் உலர்ந்த கொப்பரைகளை அரைத்துப் பிழிந்து தேங்காய் எண்ணை எடுப்பர்.

தேங்காயுடன் மசாலாக்களை வைத்து அம்மியில் அரைத்தெடுத்த பாட்டியின் கூட்டுக்கறிகளின் சுவை உங்கள் நாக்கில் நீர் ஊறவைக்கிறதா ?

சாதங்கள் பல வகையானவை.

தேங்காய் சாதம்


பாரம்பரியமாக இருந்துவருவது இந்த தேங்காய் சாதம்.
மிகுந்த சுவையானது.
அவசர சமையலுக்குப் பெரிதும் ஏற்றது.
பட்சலருக்கு மிகவும் இலகுவாகச் செய்யக்கூடியது.

தேங்காயில் கொழுப்பு அதிகம் இருக்கிறதுதான் எப்போதாவது ஒருதடவை சாப்பிடுவதில் தவறில்லையே.



தேவையான பொருட்கள்


சாதம் - 1 கப்
தேங்காய்துருவல் - ½ கப்
கடலைப்பருப்பு -2 டேபல் ஸ்பூன்
செத்தல் மிளகாய் - 4
கஜு – 10
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 2 ரீ ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
நெய் அல்லது மாஜரின் - 2 டேபல் ஸ்பூன்.



செய்முறை


கடலைப்பருப்பு ,செத்தல் மிளகாய் வறுத்துப் பொடித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு டேபிள் நெய்யில் கடுகு, உழுத்தம் பருப்பு, கறிவேற்பிலை தாளியுங்கள்.

அடுப்பைக் குறைத்து வைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறுங்கள்.

இத்துடன் கஜு சேர்த்து வறுத்துவிடுங்கள்.

சாதத்தைக் கொட்டி பொடித்த கடலைப் பருப்பு ,செத்தல் பொடி உப்பையும் கலவுங்கள்.

நன்கு கிளறி மேலே மிகுதி நெய்யை விட்டு கிளறி இறக்குங்கள்.

வறுத்த உழுத்தம் பருப்பு கஜுவுடன் தேங்காயின் மணம் கமழும் தேங்காய்சாதம் உங்களை சாப்பிட அழைக்கும்.

சைவம் சாப்பிடுவோர் கிழங்குப் பிரட்டல் பொரித்த பப்படங்களுடனும் பரிமாறலாம்.

அசைவம் சாப்பிடுவோர் மசாலாச் சிக்கன் சேர்த்துக்கொண்டால் சாதத்தின் சுவை அதிகமாகும்.

மாதேவி

Tuesday, December 29, 2009

ஈரப்பலா ஸ்பெசல் கறி, சிப்ஸ்

செவ்வாய் காலை பரபரப்பாகவே விடிந்தது.

காலை உணவு முடித்து விரைந்தேன் வெள்ளவத்தை மார்க்கட்.

கண்கள் சுற்றி வந்தது எதை வாங்கலாம், எப்படிச் சமைக்கலாம்?

கத்தரி, பாவல், வெண்டி, புடொல், முள்ளங்கி...எனப் பரவியிருந்தது.

அதை அடுத்து ....

இன்றைக்கு சந்தைக்கு வந்துவிட்டதே!
மனம் துள்ளியது.

தம்பி ரிஷான் கேட்டிருந்த பொருள் அல்லவா?

விற்றுக்கொண்டிருந்த
'மல்லி'யை நோக்கி

'தெல் கீயத ?'

'திகாய் அக்கே கண்ட'


இன்று என்ன இவ்வளவு மலிவாகச் சொல்கிறான்.

கிடைத்தது மிச்சம்.

பையனிடம் மீண்டும் வாய் கொடுக்காமல், வந்த சிரிப்பையும் அடக்கி
வாயைக் கடித்தபடி நல்ல காயாகப் பார்த்துப் பொறுக்கினேன்.

'யாழ்ப்பாணத்துச் சனங்களுக்கெண்டால்' சாதாரண விலையிலும் 10-20 ருபா கூட விற்பார்கள்.

காசை கொடுத்துவிட்டு காயை வாங்கிக் கொண்டேன்.

அட சற்று அவன் பார்வை சரி.....இல்லை.

அட பயப்படாதீர்கள் என்னை நோக்கியல்ல!

தான் தந்த பலாக்காய் போட்ட ரிசுப் பையின் மேல்தான்! அவன் ஏக்கப் பெரு மூச்சு விடாத குறை.

யாழ்தேவிப் வாசகர்களுக்கு என்று தெரிந்துவிட்டால்......விலையும் மூன்று மடங்காகிவிடும்.

புகை வண்டிபோல் கூவிச் சத்தமிடாது, கடுகதியில் அடுத்த கடையை நோக்கிப் பாய்ந்தேன்.

இப்படி சமைத்தகாய் இருமடங்காகச் சுவைக்கும்தானே.

வெப்பவலயப் பிரதேசங்களில் இது வளரும். மலாய்தீவு, மேற்குப் பசுபிக் தாயகமாகக் கொண்ட மரம்.

இலங்கையின் தென்பகுதிகளில் கூடுதலாகப் பயிரிடப்பட்டிருக்கும்.
ஏனைய பிரதேசங்களிலும் பரவலாகவுள்ளது.

பயன்கொடுக்கும் காலத்தில் ஒரே மரம் இருநூறுக்கும் மேற்பட்ட காய்களைத் தரக் கூடியது.

காபோஹைதரேற் கூடியளவு உள்ளது. விற்றமின் சி யும் உண்டு.

முற்றிய பலாக்காயை தேர்ந்தெடுப்பது ஒரு கலை.
அனுபவம் கை கூடவேண்டும்.

வெளித்தோல் விரிந்த கட்டங்களாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பேன்.

விரலால் சுண்டிப் பார்த்தால் காயிலிருந்து 'டங்' என சத்தம் தெறிக்கும்.

தெறித்தது.

அப்படி எடுத்த காயில், சமைத்த கறியின் ருசியைச் சுவைத்துப் பார்க்க வாங்களேன்.

ஈரப்பலாக்காய்க் கறி


தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய ஈரப்பலாக்காய் -1
வெங்காயம் -1
பச்சை மிளகாய் -1
தேங்காய்ப் பால் - ¼ கப்
பூண்டு- 4 பல்லு
இஞ்சி – 1 துண்டு
மிளகுப்பொடி- ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப்பொடி -1 ரீ ஸ்பூன்
மல்லிப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
புளிப்பேஸ்ட் அல்லது எலுமிச்சம்சாறு - தேவைக்கேற்ப
கடுகு- சிறிதளவு
கறிவேற்பிலை- சிறிதளவு
ஒயில் - 1 ரீ ஸ்பூன்

செய்முறை


பலாக்காயை பெரிய நீள் துண்டுகளாக வெட்டியெடுங்கள்.

உள்ளிருக்கும் சக்கையுடன் கூடிய நடுத் தண்டின் பாகங்களையும், வெளித்தோலையும் சீவி நீக்கி விடுங்கள்.

தண்ணீர்விட்டு அவித்து எடுத்துக்கொள்ளுங்கள்.

ஆறியதும் 2அங்குல அகலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

வெங்காயம் மிளகாய் வெட்டி எடுங்கள்.

ஒயிலில் கடுகு தாளித்து வெங்காயம் மிளகாய் வதக்குங்கள்.

வதங்கிய பின் நசுக்கிய இஞ்சி,பூண்டு வதக்கி கறிவேற்பிலை சேர்த்துவிடுங்கள்.
தேங்காய்ப்பால் ஊற்றி பலாக்காய், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, புளிப்பேஸ்ட் சேர்த்து கொதிக்க விடுங்கள்.

நன்கு கொதித்து வர கிளறி இறுகிவர, மிளகுப் பொடி தூவி இறக்குங்கள்.

மிளகு வாசத்துடன் தாளித்த மணமும் பரவி நிறையும்.

பலாக்காய் சிப்ஸ்



பலாக்காயை மிகவும் மெல்லிய 2' நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

அடுப்பை மிதமாக வைத்து ஒயிலில் அவற்றைப் போட்டு கவனமாக அடிக்கடி கிளறுங்கள்.

பொரிந்து நன்கு கலகலப்பாக வந்ததும் எடுத்து எண்ணையை வடியவிடுங்கள்.

மிளகாய் பொடி, உப்பு பொடி சேர்த்துப் பிரட்டுங்கள்.

ஆறியதும் கண்ணாடிப் போத்தலில் காற்று நுளையாதபடி அடைத்து வையுங்கள்.

நல்ல மொறுமொறுப்பாய் இருக்கும்.

இரண்டுகால் எலிகள் தின்னாது விட்டால் 2-3 நாட்களுக்கு கெடாது இருக்கும்.

(பொரித்த பின் மிளகாய் பொடி, உப்பு பொடி என்பவற்றை குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்ப வகை வகையான காரத்தில் சேர்க்கலாம்)

மாதேவி

காற்றில் பறந்து பருகும் மணநாள் பான விருந்து

யாழ்தேவி பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எனது நன்றி. இவ்வார நட்சத்திர பதிவராக இருக்க அழைத்ததற்கு.

மணநாள் மகிழ்ச்சியானது. அதுவும் பான விருந்துடன் கொண்டாடினால் கேட்கவும் வேண்டுமா? இந்தப் பான விருந்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் எனது ரம்யம் பதிவில் வெளியானதை இன்று மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பதிவைப் படிக்க இங்கே
கிளிக் பண்ணுங்கள்

Thursday, December 24, 2009

உழுந்துமா பிடிக்கொழுக்கட்டை



கொழுக்கட்டைகள் பலவிதம். இது சிறுவர்கள் தாங்களும் கூடவே வந்து பிடித்துத் தயாரிப்பதில் பங்களித்து மகிழக் கூடியது.

இடியப்ப மற்றும் புட்டு மா மிஞ்சினால் அவற்றை வீணாக்காது கொழுக்கட்டையாகப் பிடிப்பதுண்டு.

பலரும் அரிசி மாவில் செய்வர். உள்ளே பருப்பு வைத்துச் செய்வது மற்றொரு வகை.

இது அரிசி மாவுடன் உழுந்து மா கலந்து செய்தது.

போசணையுடையது


சிவப்பு அரிசியில் மிகுந்த (365) கலோரி, மினரல்ஸ், விற்றமின்கள், அடங்கியுள்ளன. புரோட்டின் 8.6 சதவிகிதம், நார்ப்பொருள் 3.5 சதவிகிதம், விற்ற மின் B1, B2, B6, அடங்கியுள்ளன.


சத்துச் செறிவான உழுந்துமாவுடன், பாசிப்பயறும் சேர்த்து செய்து கொண்டால் புரொட்டின் அளவு மேலும் அதிகரிக்கும். ஏனெனில் பாசிப்பயறு, உழுந்து ஆகியவற்றில் 24 சதவிகிதம் புரதம் இருக்கிறது.

உழுந்தில்
Vitamin A, B1 and B3, ஆகிய விற்றமின்களும், Potassium, Phosphorus and Calcium ஆகிய மினரல்ஸ் உண்டு. ஓரளவு Sodium இருக்கிறது. இரும்புச் சத்து சிறிதளவு மட்டுமே உண்டு. 100 gm உழுந்திலிருந்து 347 கலோரி கிடைக்கும்.

பாசிப் பயறில் அதே அளவு கலோரி (347) கிடைக்கும். கல்சியம், மக்னீசியம், பொட்டசியம், பொஸ்பரஸ் ஆகிய மினரல்ஜ் உண்டு. நார்ப் பொருள் 16.3 சதவிகிதம் கிடைக்கிறது.

சிற்றுண்டியாக

சினக்சுக்குப் பதில் ஈவினிங் உணவாக இவற்றைத் தயாரித்து குழந்தைகளும் பெரியவர்களும் உண்ணலாம்.

சுவைக்கு தேங்காய்த் துருவல், வெல்லம், வெண்ணெய் கலந்தால் தித்திக்கும்.

நீரிழிவு நோயாளர் வெல்லம் தவிர்த்து உப்பு சேர்த்து செய்தால் இரத்த குளுக்கோஸ் கூடாது இருக்கும்.

தேவையான பொருட்கள்


வறுத்த அரிசிமா – 1 கப்
வறுத்த உழுந்துமா – ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - ¼ கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - ¼ கப்
உப்பு சிறிதளவு

செய்முறை

பாசிப் பருப்பை 20 நிமிடங்கள் நீரில் ஊறவிடுங்கள்.


மா வகைகளுடன், வெல்லம், தேங்காய்த் துருவல், ஊறிய பருப்பு, வெண்ணெய் கலந்து கிளறுங்கள்.

சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, கையால் கிளறி, சேர்த்து பிடிக்கும் பதத்தில் மாவைத் தயார்படுத்துங்கள்.

மாவைக் கையால் அமத்தி நீள்வடிவத்தில் பிடித்து ஓரத்தில் சங்கு போல விரல்களால் அமத்தி விடுங்கள். இவ்வாறே எல்லாவற்றையும் பிடித்து வைத்துக் கௌ்ளுங்கள்.

ஸ்டீமர் அல்லது இட்லிப் பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி வந்ததும் கொழுக்கட்டைகளை வைத்து 15-20 நிமிடங்கள் அவித்து எடுங்கள்.

வறுத்த உழுந்து மா வாசத்துடன் பருப்பு, தேங்காய்த் துருவல் வெல்லமும் சேர்ந்து மணங் கமழும்.

சத்துச் செறிவான உழுந்துமா பிடிக் கொழுக்கட்டை வயிற்றைக் கிளறும்.

கையும் நகர்ந்து எடுத்து வாயில் தள்ளும். இனிப்பில் சொக்கி அடுக்கடுக்காக வயிற்றுக்குள் தள்ளுவீர்கள்.

மாதேவி

Tuesday, December 8, 2009

கலர் கலராகச் சாதங்கள்



மரக்கறி உணவுகள் என்றாலே முகம் சுழிப்பார்கள் குழந்தைகள். அவர்களுக்கு இப்படியான உணவுகள் சாப்பிடுவது என்பது வெறுக்கத்தக்க நேரம்தான்.

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்.

கண்ணுக்குக் கவர்ச்சியாக மாற்று முறையில் தயாரித்துப் பரிமாறினால் பலவகை மரக்கறி உணவுகளையும் சாப்பிட வைத்துக் கொள்ள முடியும்.

பீன்ஸ், கோவா, பீட்ரூட், வெண்டைக்காய், முள்ளங்கி, பாவற்காய், வாழைமொத்தி, கோஹில தண்டு, போன்ற பெயர்கள் பல பெரியவர்களுக்குக் கூடப் பிடிப்பதில்லை.

கலர் கலரான சாப்பாடு

பீட்ரூட்டை தனியே சமைத்துக் கொடுப்பதை குழந்தைகள் விரும்பாத போது சாதத்திற்குள் கலந்து செய்து கொடுக்கலாம். கண்கவரும் சிவத்த சாதத்துடன் சுவை சேர்க்க நெய். கஜீ, சேர்த்துக் கொண்டால் விரும்பி உண்பார்கள்.

பீட்ரூட்டை கூடிய நேரம் சமைத்தால் அதிலுள்ள மிக முக்கியமான போசனைப் பொருட்கள் யாவும் அழிந்துவிடும். பச்சையாக உண்பது சமிபாடடையச் சிரமமாக இருக்கும்.

எனவே நீராவியில் அவித்தெடுத்துச் செய்து கொண்டால் சத்துக்கள் அழியாது இருப்பதுடன், விரைவில் சமிபாடும் அடையும்.

போஷாக்கு உள்ளது


நார்ப்பொருள் அதிகமுள்ளது. Vitamin C, Folic acid அதிகமுள்ளது. Vitamin A, Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6 and Pantothenic Acid ஆகியன ஓரளவு உண்டு

பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொஸ்பரஸ், ஆகியன அதிகம் அடங்கியுள்ளது. ஆனால் கல்சியம், சின்க், செலினியம் ஆகியன ஓரளவே உண்டு.

அதில் குறைந்தளவு கலோரிச் சத்தே உண்டு. 100 கிராம் பீட்டில் 43 கலோரி மட்டுமே உண்டென்பதால் எடை குறைப்புச் செய்ய விரும்புபவர்கள் சலட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

நோயெதிர்ப்பு

இரத்தசோகையை குறைக்கும். இரும்புச் சத்து அதிகமுள்ளது.

பீட் ஜூஸ் அருந்துவது உயர்இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் எனக் கூறுகிறார்கள்.

புற்றுநோயைத் தடுக்கும் பீட்டாஅமினோ அசிட் இதில்
அடங்கியுள்ளது.

ஜூஸ் ஆக அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்


மலச்சிக்கலைத் தடுக்கும்.
நாட்பட்ட மலச்சிக்கலுக்கும் சுகம் தரும்.

உடல் இளைக்க பீட்ரூட்டை அடித்து எடுத்து உப்பு, மிளகு, சிறிது தேசிக்காய் விட்டு அருந்தலாம்.

பீட்ரூட் சாற்றை தனியே குடிக்க முடியாதவர்கள் தோடம்பழச் சாறு, ஆப்பிள் சாறு கலந்து குடிக்கலாம்.

பீட்ரூட் கிழங்கைச் சேமித்து வைத்தல்

ஈரலிப்பான மண் நிலத்தில் வைத்துப் பாதுகாக்கலாம். பிரிட்ஸ்ல வைத்தால் ஓரிரு வாரம் இருக்கக் கூடியது.

வைன், சீனி


Rum, Tuzemak, Vodka போன்ற மதுவகைகளுக்கும், சீனி தயாரிப்பிற்கும் வெவ்வேறு விசேடமான பீட் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்குப் பயன்படுவதிலிருந்து இவை வேறுபட்டவையாகும்.


வழமையான ரெட் பீட்டிலிருந்து சிறந்த வைன் தயாரிப்பார்கள். இதைப் பதப்படுத்திச் செய்ய நீண்டகாலம் எடுக்கும்.

பீட்ரூட் சாதம்


சாதம் - 1 கப்
பீட் பெரியது – 1
பம்பாய் வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கருவேற்பிலை – 2 இலைகள்
கஜூ - 10
மிளகாய்ப்பொடி – 1 ரீ ஸ்பூன்
உப்பு தேவைக்கு ஏற்ப

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் அல்லது மாஜரின் - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

தோலைச் சீவி பீற்றூட்டைத் துருவி வையுங்கள்.

மெல்லிய நீள் துண்டுகளாக வெங்காயத்தை வெட்டி வையுங்கள்.

மிளகாயை நாலு பாகமாக வெட்டிவிடுங்கள்.

கஜூவை உடைத்து வையுங்கள்.

சிறிது மாஜரினில் கஜூவைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

ஒரு டேபிள் மாஜூரினில் உப்பு, மிளகாய்த்தூள் பிரட்டி எடுத்த வெங்காயத்தைப் பொரித்து எடுத்து வையுங்கள்.

மிகுதி மாஜரீனை விட்டு கடுகு, உழுத்தம் பருப்பு தாளித்து பச்சை மிளகாய் கருவேற்பிலை போட்டு துருவிய பீட் போட்டு வதக்கி, உப்பு மிளகாய்ப் பொடி இட்டு சாதம் சேர்த்துக் கிளறி எடுங்கள்.

பரிமாறும் பிளேட்டின் பாதியில் அரைவாசி போட்டு மேலே பொரித்த கஜூ, வெங்காயம் தூவி விடுங்கள்.

தயிர்ச் சாதம்

சாதத்தில் தயிர் உப்பு, பெருங்காயப் பொடி கலந்து சாதா தயிரச்சாதம் செய்வதை விட வெங்காயம், பச்சை மிளகாய், கரட்,வெள்ளரிக்காய். இஞ்சி கருவேற்பிலை,மாதுளைமுத்துக்கள் கலந்து செய்து கொள்ளலாம்.

தயாரிக்க

சாதம் - 1 கப்
தயிர் - ½ கப்
துருவிய கரட் - 1
துருவிய வெள்ளரிக்காய் -1
மாதுளைமுத்துக்கள் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1-2
சாம்பார் வெங்காயம் - 10-15
கருவேற்பிலை- 2 இலைகள்
மல்லித்தழை - சிறிதளவு
இஞ்சி – துருவியது 1 ரீ ஸ்பூன்
உப்பு, பெருங்காயம் சிறிதளவு

தாளிக்க

கடுகு – 1 ரீ ஸ்பூன்
கருவேற்பிலை 2 இலைகள்.
ஓயில் 1 ரீ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், மிளகாய், கறிவேற்பிலை,மல்லித்தழை சிறியதாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு கருவேற்பிலை தாளித்து சாதத்தில் கொட்டிக் கலந்து விடுங்கள்.

தயிரை நன்கு கலக்கி எடுத்து உப்பு, பெருங்காயம்,கலந்து சாதத்தில் ஊற்றிகலந்துவிடுங்கள்.

துருவிய கரட்,வெள்ளரி இஞ்சி,வெங்காயம், மிளகாய் கறிவேற்பிலை,மல்லித்தழை,மாதுளை, கலந்து கிளறிவிடுங்கள்.

பீட் சாதம் வைத்திருக்கும் பிளேட்டின்
மறுபகுதியில் வைத்து பாருங்கள்
தெரியும் அழகு.

அழகில் முழுவதையும் நீங்களே சாப்பிட்டு விடாதீர்கள்.

குழந்தைகள் வரும்வரை காத்திருங்கள்.

ஓடோடி வந்து குழந்தைகள் முடிப்பார் பிளேட்டை. பிறகென்ன உங்கள் முகத்தில் ஆயிரம் வோல்ட் பல்ப் மகிழ்ச்சி தெரியும்.

மாதேவி