Wednesday, January 27, 2010

அம்பரல்லா மசாலாக் குழம்பு


மாங்காய், நெல்லி, ஆப்பிள், அன்னாசி, இவற்றின் சுவையுடன் சேர்ந்த இனிய புளிப்புச் சுவையுடைய காய் இது. மாம்பழமும் அன்னாசியும் கலந்தது போன்ற வித்தியாசமான சுவையுடையது.

வீட்டுத் தாவரமாகவும்

40 அடி உயரம் வரை வளரக் கூடியது. நல்ல மழை வீழ்ச்சியும் குளிர்மையும் உள்ள சூழலில் நன்கு வளரும்.

ஆயினும் வீட்டுத் தாவரமாக வளரக் கூடிய குள்ள இனங்கள் உண்டு. மாடிவீட்டு பல்கனிகளில் பெரிய பீப்பா தகரங்கள் அல்லது பெரிய பிளாஸ்டிக் பாத்திரங்களில் வளர்க்கலாம்.


சிறிய தாவரமாக இருக்கும்போதே காய்க்கத் தொடங்கும். 2-4 வருடத்தில் அதிக காய்களைத் தரக் கூடியது. பச்சை நிறக் காயாக இருக்கும் இது பழுக்கும் போது மெல்லிய மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.


தென்னாசிய நாட்டுக்கான தாவர இனமாகக் கொள்ளப்படுகிறது. ஆசியாவிற்கு வெளியிலும் சில இடங்களில் அபூர்வமாகக் காணும் இனம் இது.

இதன் தாவரப் பெயர் Spondias dulcis ஆகும். ஆயினும் ஆங்கிலத்தில் Golden Apple, Wi-Tree, Otaheite Apple என்றெல்லாம் அழைப்பார்கள்.
பச்சையாகவும்

பச்சையாகவே உண்ணக் கூடியது. ஆயினும் பச்சை நிறக் காய் புளிக்கும். கடிக்கும் போது நொறு நொறுக்கும்.

பதப்படுத்தியும்

இக் காயில் ஊறுகாய், அச்சாறு, சட்னி செய்து கொள்ளலாம். பதப்படுத்தப்பட்டு போத்தல்களில் அடைக்கப்பட்டு சட்னிகள் பாவனையில் உள்ளன.

பானமாகவும்


தோல் நீக்கி துண்டங்களாக வெட்டி எடுத்து தண்ணீர் விட்டு அடித்தெடுத்து வடித்து உப்பு அல்லது சீனி சேர்த்து பானமாக பருகிக் கொள்ளலாம்.

போசாக்கு

விட்டமின் சீ, உடையது, அயன் கூடியளவு உண்டு. முக்கியமாக நார்ப்பொருள் அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு நல்லது.

அம்பிரலா மசாலாக் குழம்பு

தேவையான பொருட்கள்


அம்பிரலா காய் - 5
பெரிய வெங்காயம் - 1
செத்தல் மிளகாய் - 2
கடுகு – ¼ ரீ ஸ்பூன்
கருவேற்பிலை, ரம்பை சிறிதளவு
மிளகாய்ப் பொடி – 1 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி - 2 ரீ ஸ்பூன்
சீரகப் பொடி -1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ ரீ ஸ்பூன்
மசாலாப் பொடி சிறிதளவு
கெட்டித் தேங்காய்ப் பால் - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 1 கட்டி
ஒயில் - 2 ரீ ஸ்பூன்

செய்முறை

அம்பிரலாவைக் கழுவி தோலுடன் நாற்புறமும் துண்டங்களாக வெட்டியெடுங்கள்.
விரும்பினால் விதையுடன் கூடிய உட்பகுதியையும் சேர்த்துச் சமைத்துக் கொள்ளலாம்.

வெல்லத்தை காய்ச்சி வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தலை சிறு துண்டுகளாக வெட்டி எடுங்கள்.

ஓயிலில் கடுகு தாளித்து வெங்காயம் செத்தல் வதக்குங்கள். கருவேற்பிலை ரம்பை சேர்த்து கிளறுங்கள்.

அரைக் கப் தண்ணீர் விட்டு உப்புப் போட்டு காயைக் கொட்டி 2 நிமிடம் அவித்து எடுங்கள்.

மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி, மசாலப் பொடி, சேர்த்துக் கிளறுங்கள்.

கட்டித் தேங்காய்ப் பால் விட்டு, வடித்து எடுத்து வைத்த வெல்லத்தையும் சேர்த்துக் கிளறி இறக்கி வையுங்கள்.

மிகவும் இலகுவாக 5 நிமிடத்தில் புளிப்பு சுவையான அம்பிரலா மசாலாக் குழம்பு தயாராகிவிடும்.

உண்ண உண்ண

பிரியாணி, சாதம், புட்டுக்கு இனிப்புப் புளிப்பு சுவையுடன் சுவை சேர்க்கும்.

விதையுடன் இருக்கும் சதைப் பகுதி கடித்துச் சாப்பிடுவதற்குச் சுவை கொடுக்கும்.

அவசரத்தில் தும்புடன் கடித்து பல்லிடுக்கில் சிக்க விடாதீர்கள். மீன் சாப்பிட்ட பழக்கம் கைகொடுக்கும் அல்லவா? தும்புகள் வாயில் குத்தவும் வாய்ப்பிருக்கிறது.

மாதேவி

Tuesday, January 12, 2010

வாழைக்காய் வறமிளகாய் சட்னி



வாழைக்காய் வறமிளகாய் சட்னி

வாழையின் பயன்கள், போசாக்குகள் பற்றி ஏற்கனவே நிறையக் கூறியாய் விட்டது.

அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்

சோளகக் காற்று வீசும் காலத்திலும் சுழன்றடிக்கும் சூறாவளிக்காற்று வந்த பொழுதுகளிலும் முதலில் முறிந்து விழுவது வாழைதான்.

நிலத்தில் விழுந்த வாழைமரங்களில் இருக்கும் பிஞ்சுக்காய்களை என்ன செய்வது என்பது எல்லோருக்கும் பெரும்பாடாக இருக்கும்.

காயை முழுதாக அவித்தெடுத்து வறை, தேங்காய் சம்பல்,சட்னி,பொரியல் செய்துகொள்வார்கள். இவ் வழியே பாரம் பரியமாக நடைமுறையில் இருந்து வந்த சமையல் முறைதான் இச் செய்முறை.

நமது முன்னோர்கள் மரக்கறிகளின் தோலிலுள்ள சத்துக்கள் பற்றியும் நிறையவே அறிந்திருந்தார்கள்.

சமையலில் உருளைக்கிழங்கு, பூசணிக்காய், பால் பிசுக்கு, போன்ற காய்கறி வகைகளை தோல் நீக்காது தோலுடன் சமைத்து உண்டனர்.

இவ்வாறுதான் வாழைக்காயின் உட்தோலையும் எடுத்து சமையல் செய்து வந்தார்கள்.

இச் சமையல் முறைகள் இப்பொழுது பெரும்பாலும் வழக்கில் இல்லை.

ஒரு வாழைக்காயை வைத்து இருவகைச் சமையல் செய்து விடுவார்கள்.

உட் சதைப்பகுதியை தேங்காய் பால்கறி அல்லது கூட்டு, குழம்பு, காரக்கறியாகச் செய்து கொள்வார் இல்லாது போனால் செய்யும் சாம்பாரிலும் கலப்பர்.

அதன் வெளித்தோலை சட்னி, இடிசம்பல் செய்து விடுவார்கள். பொருளும் வீண்போகாது சத்தும் கிடைக்கும்.

இவை புதிய தலை முறையினருக்கு தெரிந்திருக்கவும் மாட்டாது
உரலில் இட்டு இடிக்கும் சம்பலின் சுவையும் அம்மியில் வைத்து பசையாக கட்டியாக உருட்டி அரைத்தெடுக்கும் சட்னியின் சுவையும் அட ..அட...

உங்கள் நாக்கு உறுண்டு பிரளுதா... அம்மா பாட்டியின் ஞாபகங்கள் வந்து விட்டதா?

கள்ளமாக எடுத்துத் திண்ட சம்பல்களின் ருசி ஞாபகங்கள் வந்திருக்குமே!

திருமணமாகாதவர்கள் உரல்,அம்மி.ஆட்டுக் கல்லுடன் இருக்கும் சம்பலை வாயில் எடுத்து வைத்து ருசி பார்த்தால் கல்யாணத்தன்று கட்டாயம் மழைபெய்யும்.

இதை நான் சொல்லவில்லை முன்னோர்கள் சொல்லுவார்கள்.

எங்கள் சிறுவயதில் சம்பல் இடிக்கும் போது கூறுவார்கள்.

திருமணமானவர்களுக்கு விதிவிலக்கா ? நீங்களே சொல்லுங்கள்.

இன்று இச்சமையலைச் செய்வோமா.

தேவையான பொருட்கள்



வாழைக்காய் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
வறமிளகாய் - 5 - 7 ( காரத்திற்கேற்ப)
சாம்பார் வெங்காயம் - 7 -10
பூண்டு – 2 - 4 பல்லு
சீரகம் - 1 ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை – 2 இலைகள்
உப்பு – ( தேவைக்கேற்ப )
புளி - ( தேவைக்கேற்ப )
ஓயில் - ½ ரீ ஸ்பூன்

செய்முறை


வாழைக்காயின் மேல் தோலை நார்வாங்கி வீசிவிடுங்கள். நாற்புறமும் இருக்கும் உட்தோலை சீவி எடுத்து அலசி சிறிது தண்ணீர்விட்டு அவித்து எடுங்கள்.

ஒயிலில் வறமிளகாய் , பூண்டு தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உரலில் இடிப்பதாக இருந்தால் இப்போதெல்லாம் இது எங்கே???

சிறிய ஈய உரல் வைத்திருப்பவர்கள் செய்து கொள்ளலாம் .


அவித்தெடுத்த வாழைக்காய் தோல்களை 2 அங்குலத் துண்டுகளாக வெட்டி வையுங்கள்.

முதலில் மிளகாயை உரலில் போட்டு இடியுங்கள். இத்துடன் உப்பு சீரகம் சேர்த்து இடித்துவிட்டு பூண்டையும் சேர்த்து இடித்து விடுங்கள்.

அடுத்து கறிவேற்பிலை , வெங்காயம் இரண்டையும் போட்டு புளி சேர்த்து இடியுங்கள்.

தேங்காய் துருவல் சேர்த்து நன்கு இடியுங்கள்.

இதனுடன் வாழைக்காய் துண்டுகளைக் கொட்டி இடித்துக் கொள்ளுங்கள்.

பசையாகும் வாழைக்காய் உலக்கையை எடுக்கவிடாது சற்று இழுத்துக்கொள்ளும். மூச்சைப் பிடித்து கைகளை இழுத்துக் எடுத்துக் கொண்டு (கைகளுக்கும், உடலுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கும்) வாழைக்காய் தேங்காயுடன் சேரும்வரை நன்றாக இடித்து எடுங்கள்.

இப்பொழுது வாய்க்கு சுவைமிக்க வாழைக்காய் சட்னி...

யார் அங்கே உரலுடன் இருக்கும் போது வாயில் வைத்துப் பார்ப்பது? நல்ல பிள்ளையாக சற்றுப் பொறுத்திருங்கள்.

நல்ல காலம் எனது திருமணத்தில் மழை பெய்யவில்லை!!

இதோ கோப்பையில் வைத்துத் தருகிறேன்.

(உரல் வைத்திராதவர்களுக்கு இருக்கிறதே மிக்சி லேசாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.)

மாதேவி

Sunday, January 3, 2010

ரோஜா மலர்களாக நன்றி


ரசனையுள்ளவள் நான். ஆரம்பம் முதல் இயற்கையை விரும்பி ரசிப்பவர்களில் ஒருத்தியாகவே இருந்து வருகிறேன். ஆறு, மலை, கடல் என வெளியில் பரந்து கிடப்பவற்றோடு வீட்டுப் பூந்தோட்டத்துச் செடிகளின் அழகிலும் கிறங்குபவளாக இருக்கிறேன்.

அண்மையில் நுவரெலியா விக்டோரியா பார்க்கிற்கு சென்ற போது அங்குள்ள ரோஜா மலர்களின் அழகில் கிறங்கி நின்றேன்.

அது பற்றிய பதிவு எனது ரம்யம் புள்க்கில் இன்று வெளியாகியுள்ளது.

"ரோஜாத் தோட்டம் கண்ணில் பட்டு அழைத்தது. தனியே பிரத்தியேகமாக உயர்ந்த இடத்தில் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

ரோஜாக்கள் என்றாலே எல்லோருக்கும் ஆனந்தம்தான்..... "

'ரோஜா மலர்வனம் விக்டோரியா பார்க்கில்' மேலும் படிக்க

கிளிக் பண்ணுங்கள்

Saturday, January 2, 2010

முட்டையில்லாத ரிச் கேக்



மேலை நாட்டிலிருந்து இறக்கி எமது வாழ்வின் அங்கமாகிவிட்ட பாண், பண், பிஸ்கட், கேக் இடையேயான வித்தியாசம் என்ன?

சோறு, அரிசிமா கூளுக்கும், களிக்கும், அரியதரத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் போலத்தான் என மேம்போக்காகச் சொல்லிவிடலாம்.

அங்கு அடிப்படை கோதுமைமா, எங்களுக்கு அரிசிமா.
Kaka என்பதே பின்னர் ஆங்கிலத்தில் Cake ஆக மாறியதாம்.

ஐரோப்பாவில் Gateau, Torte எனப்படுவனவும், ஆங்கில கேக்கும் அடிப்படையில் ஒன்றாயினும் அவற்றில் முட்டை, பட்டர், சோக்கிலட் போன்றவை கூடிய அளவில் இருக்கும். அவை கூடியளவில் pastry போலிருக்கும்.

ஜப்பானியரின் Kasutera ஆங்கில கேக்கின் மற்றொரு வடிவம்தான்.

ஆனால் அரிசியில் செய்யப்படும் பிலிப்பைன்ஸசின் Mooncakes மற்றும் Rice cakes அவர்களின் பாரம்பரிய சமையல் முறையில் பிறந்தது.

அதேபோல சமையல் முறையிலும் வேறுபாடுகள் உண்டு.

நாங்கள் நீரில் அவிப்பது, ஆவியில் அவிப்பது, எண்ணெயில் வேகவைப்பது என ஒரு திசையில் பயணப்பட்டோம்.

அவர்கள் சமையல் முறையில் போறணை முக்கிய பங்காக இருந்தது.

குளிரான பிரதேசத்தில் விறகை எரிப்பதால் பிறக்கும் வெப்பம் வீணாகாமல் போவதற்காக போறணை போல மூடி வைத்து அதற்குள் தயாரிக்க வேண்டியிருந்து. உணவை வைத்து வேகவைத்தார்கள்.

அதுதான் பேகிங்.

அதில் சமைப்பதின் ஆரம்பம் பாண்.
கூர்படைந்த வடிவம் கேக் எனலாம்.


தேவையான பொருட்கள்

ரவை – 500 கிராம்
மார்ஜரின் - 500 கிராம்
சீனி - 350 கிராம்
டே;டஸ் - 500 கிராம்
ரின் பால் - 1 ரின்
தண்ணீர் - 1 ரின் அளவு
தேயிலைச்சாயம் -1 கப்


பிரிசேவ்ஸ்

பம்கின் - 200 கிராம்
கன்டிட் பீல் - 200 கிராம்
சௌசௌ - 200 கிராம்
ஜின்ஜர் - 200 கிராம்
சேர்ரி - 200 கிராம்
ரெஸ்சின் - 200 கிராம்
கஜூ - 200 கிராம்

எசென்ஸ் வகைகள்

வனிலா – 4 ரீ ஸ்பூன்
ரோஸ் - 2 ரீ ஸ்பூன்
ஆமென்ட் - 2 ரீ ஸ்பூன்
கோல்டன் சிரப் - 2டேபிள் ஸ்பூன்

பவுடர் வகைகள்

பேகிங் பவுடர் - 4 ரீ ஸ்பூன்
சோடியம் பைகார்பனேட்- 2 ரீ ஸ்பூன்
ஸ்பைசெஸ் - 2 ரீ ஸ்பூன்

செய்முறை-

தயாரிப்பதற்கு 12 மணித்தியாலம் முன்பு டேட்சை சிறியதாக வெட்டி அல்லது அரைத்து எடுத்து வையுங்கள்.

ரீ சாயத்தில் சோடியம் பைகார்பனேடை கரைத்து எடுத்து டேட்ஸ் மேல் ஊற்றி பிரட்டி வைத்துவிடுங்கள். ரவையை லேசாக வறுத்து எடுத்து வையுங்கள்.

12 மணித்தியாலயத்தின் பின்பு மார்ஜரின், சீனி இரண்டையும் மெதுவாகும் வரை கலக்கி ரின் பால் சிறிது சிறிதாக விட்டுக் கலக்குங்கள்.

நன்கு கலங்கிய பின் தண்ணீர் ஒரு கப் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கலக்கிவிடுங்கள்.

ரவையில் பேகிங்கை போட்டு நன்னு சேர்த்துவிடுங்கள்.

அடித்த கலவையுடன் சிறிது சிறிதாக ரவையைப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஊற வைத்த டேட்ஸ்சைப் போட்டு கலந்து விடுங்கள்.

பிரிசேவ் வகைகள் யாவற்றையும் சேர்த்து, கோல்டன் சிரப், ஸ்பைஸ் பவுடர், எசன்ஸ் வகைகள் யாவற்றையும் விட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பேகிங் ரேயின் அடியில் ஒயில் பேப்பர் வைத்து, மார்ஜரின் பூசி, கேக் கலவையை ஊற்றி 180 டிகிரியில் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.


சாப்பிடுவதற்கு 2 வாரங்களுக்கு முன் செய்து கொள்ள வேண்டும்.
செய்து ஒரு வாரத்தின் பின் கட் பண்ணி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஓயில் பேப்பரில் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாரம் கேக்கின் மணத்தில் வாயையும் கையையும் கட்டி வைத்திருப்பது உங்களில்தான் தங்கியுள்ளது.

மிகவும் சுவையான முட்டையில்லாத சைவ ரிச் கேக் தயார்.

நாட்கள் செல்லச்செல்ல சுவையும் அதிகரிக்கும்.

1 ½ மாதம் அளவில் கெடாமல் இருக்கும். நீங்கள் சாப்பிட்டு முடிக்காவிட்டால்.

மாதேவி