Wednesday, March 12, 2014

தலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.

யாழ் மண்ணில் பிறந்து வளர்ந்த நாங்கள் முதல் முதலாக தலைநகர் கொழும்பு பார்க்க செல்ல இருக்கின்றோம். 'நீங்கள் எல்லோரும் அழுக்குப் போக நன்கு தேய்த்துக் குளித்து தங்கம் போல தகதகவென இருந்தால்தான் கொழும்பில் எல்லோரும் உங்களை மதிப்பார்கள்' என்று அம்மா கூறினார்.



நன்கு எங்களுக்கு அழுக்குப் போக உடல் எங்கும் தேய்த்து குளிக்க வார்த்தார். நாங்களும் தலைநகர் பார்க்கும் மகிழ்ச்சியில் உடல்நோவையும் மறந்து இருந்தோம்.

எம்மைப் பார்க்க எமக்கே பெருமைபிடிபடவில்லை. தங்க விக்கிரகங்கள் போல ஆகிவிட்டோமே நாம். மறுநாள் பக்கத்து வீட்டு அக்காவுடன் பிரயாணித்து 200 மைல்களுக்கு மேல் பல ஊர்களையும் கடந்துகொழும்பு வந்து சேர்ந்தோம்.

வான் உயர்ந்த பெரிய மாடிக் கட்டிடங்களையும் தலைநகரையும் பார்த்த மலைப்பில் இருந்தோம் நாங்கள்.

எங்களையும் அழைத்துக் கொண்டு அக்கா தமது உறவினர் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவர்கள் எம்மைக் கண்டதும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தங்கங்களே வாருங்கள் எனஅன்பாக அணைத்து கூட்டிச் சென்றார்கள்.

யாழ்ப்பாணத்து தங்கங்கள்
சற்றுஅன்றைய காலத்துக்கு செல்வோம் வருகிறீர்களா?

Thanks :- Stock food
அன்றைய காலம் பனம் பாத்தி கிண்டுவதென்றால் வீடே விழாக் கோலம் கொண்டுவிடும். அதிகாலையில் வானத்தைப் பார்த்து மழை வராமல் இருக்க குலதெய்வத்தை வேண்டிக் கொண்டே கூலிஆளை வரவழைத்து பனம்பாத்தியின் மேலுள்ள உமல்களை நீக்கி தென்மேற்கு மூலையில் இருந்து வெட்டி கிழங்குகளை எடுக்கத் தொடங்குவார்கள்.

Thanks :- ourjaffna.com

காலையில் தொடங்கும் வேலை சாயந்தரம் அளவில் முடிவிற்கு வரும். சில இடங்களில் அன்று பனம் பாத்திக்கு சோறு மாமிசம் சமைத்து வைத்து படையலும் நடக்கும்.  கார்த்திகை விளக்கீட்டு நாளில் பனம்பாத்திக்கும் விளக்கு ஏற்றிவைப்பார் அம்மா.

இரவு வீட்டில் திருவிழாத்தான். அன்று சுற்றுச் சூழ அக்கம் பக்கத்தார் மாமா, மாமி எனத் தொடங்கி சித்தப்பா குழந்தைகள் வரை உறவுக் கூட்டங்கள் யாவும் மாலை 6 மணிக்கு வந்து கூடிவிடுவார்கள்.வீடே நிறைந்திருக்கும்.

இரவு லைட் வெளிச்சம் இல்லாது போய்விட்டால் உதவுவதற்கு பெற்ரோமக்ஸ் இரண்டும் மாமாவின் கையால் தூசிதட்டி எண்ணெய் விட்டு புது மன்டில் கட்டித் தயாராகிவிடும். முற்றத்தில் பனங்கிழங்கு மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

Thanks :- ta.wikipedia.org
வீட்டுப் பின் முற்றத்தில் சிமெந்துக் கல்லு  மூன்று வைத்து அவற்றில் அண்டாக்கள் இரண்டைவைத்து நீர் நிறைத்துத் தயாராக இருக்கும்.

முற்றத்தில் கிடக்கும் கிழங்குகளில்  நன்றாகவிளைந்த கிழங்குகளை எடுத்து பெண்கள் யாவரும் கூடிப் பேசி தோலுரித்து மூள் வெட்டி ஓரிடத்தில் வைப்பார்கள். சித்தப்பா மாமா அவற்றைச் சுமந்து சென்று அண்டாக்களுக்குள் இட்டு  தாம்பாளத்தால் மூடிவிடுவர். பாட்டி அம்மா அடுப்பை மூட்டி வைப்பார்கள்.

அப்பா தன் பங்கிற்கு இலங்கை வானொலியைப்  போட்டுவிடுவார். சௌந்தரராஜன் சுசீலாவின் பாடல்கள் அலறும்.  கூட்டு குழு வேலைகள் தொடரும்.

அவித்த கிழங்குகளை ஓலைப் பாயில் விறாந்தையின் ஓர் ஓரமாகக் கொட்டி வைப்பர். அடுத்த தொகுதி பச்சைக் கிழங்கு மீண்டும் அண்டாவிற்குள் அலறத் தொடங்கும். ஆறிய கிழங்கின் தோலைச் சீவி எடுப்பார்கள். சிறுவர்கள் நாம் கிழங்கைக் கிழித்து நடுவே உள்ள பீலியின் நுனியின் இனிப்பைச் சுவைத்து இன்புறுவோம்.

பெண்களின் வாய்கள் ஊர்க்கதைகள் பேச கைகளும் தம்பாட்டில் இயங்கும். அம்மா மணக்க மணக்கப் போட்ட காப்பி விநியோகம் ஆகும். இரவுச் சாப்பாட்டிற்காக புட்டும் குழம்பும் முட்டைப் பொரியலும் சம்பலும் அடுக்களையிலிருந்து சாப்பிட அழைக்கும்.


இரவு பத்து பன்னிரண்டு வரை வேலைகள் தொடரும். சிலர் வீடு செல்வர். சிலர் விடிய நான்கு ஐந்து மணிவரை விழித்திருந்து தோல்சீவிய கிழங்குளை புளுக்கொடியலுக்கென இரண்டாகக் கிழத்து வைப்பர். அன்றைய இரவுப் பொழுது பூங்காவனத் திருவிழாகத்தான் விடியும். சிறுவர்கள் நாமும் ஓடிப் பிடித்து விளையாடுவோம். அவித்த கிழங்கைச் சப்புவதும் ஓரிரு கிழங்குகளைச் சீவுவதும் தூங்கி வழிவதும் எழும்புவதுமாக இருப்போம்.

வீட்டில் முற்றத்தில் பாய்களை விரித்து அவித்த கிழங்குகளைக் கொட்டி வெயிலில் உலர விடுவர். கயிற்றில் கட்டியும் தொங்கவிடுவார்கள்.

அவிக்காமல் இருக்கும் நோஞ்சான் கிழங்குகளை மறுநாட்களில் கிழித்து வெயிலி;ல உலர வைத்துவிடுவர். காய்ந்த பின் மாவாக்கி ஒடியல் புட்டுமா, கூழுக்கு வைத்துக் கொள்வார்கள்.

பனங்கிழங்கில் காபோகைரேட், நார்பொருட்கள் இருக்கின்றன. மலச்சிக்கலுக்கு உகந்தது.  சாயந்தர உணவாக சாப்பிடலாம்.


  1. பனங்கிழங்கு அவித்து குந்து (நார்) எடுத்து உடைத்து அப்படியே சாப்பிடலாம்.  
  2. வட்டமாக வெட்டி எடுத்து தேங்காய்ப் பல்லுடன் சாப்பிடச் சுவைக்கும்.  
  3. காரம் விரும்புவோர் உப்பு மிளகுதூளுடன் தொட்டுச் சாப்பிடலாம். 
  4. தீயில் சுட்ட பனங் கிழங்கு தேங்காய்ச் சொட்டுடன் சுவைத்திடுவோம் மாலை நேரச் சிற்றுண்டியாக. 
  5. துவையல்கள் ( சிற்றுண்டியாக) செய்துகொள்ளலாம்.


உறைப்பு துவையல்

தேவையானவை
கிழங்கு - 10-15
பச்சை மிளகாய் - 4
உள்ளி - 4
சின்ன வெங்காயம் - 6
மிளகு - 10
உப்பு தேவையான அளவு

மிளகு பச்சை மிளகாய் உள்ளி வெங்காயம் உப்பு சேர்த்து இடித்து வெட்டிய கிழங்குகளை கலந்து நன்கு இடித்து உருண்டைகளாக உருட்டி எடுத்து சாப்பிடுங்கள்.

மேலேயுள்ளவை உறைப்பு உருண்டைகள் கீழேயுள்ளவை இனிப்பு உறைப்பு உருண்டைகள் 

இனிப்பு 

கிழங்கு- 10-15 சீனி 4 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள்

இனிப்பு உறைப்பு

கிழங்கு - 10-15 உள்ளி 4, பச்சை மிளகாய் 4, சீனி 2 மேசைக் கரண்டி, உப்பு , தேங்காய்ப் பூ (துருவல்) 4 மேசைக் கரண்டி கலந்து இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் மிகசுவையாக இருக்கும்.

விரும்பியவாறு செய்து சாப்பிடுங்கள்.

பனம் பணியாரம் சாப்பிட கிளிக் பனம் பணியாரம்

- மாதேவி -

Saturday, October 19, 2013

குண்டாவதைத் தடுக்கும் குண்டுப் பூசணிக்காய்


கொடிக்காய் இனத்தைச் சேர்ந்த படர்கொடித் தாவரம்.


பறங்கிக் காய் பிஞ்சாக இருக்கும்போது பச்சையாக இருக்கும். நன்றாக முற்றிய பின்னர் பழுப்பு நிறத்தில் இருக்கும். வெட்டினால் உள்ளே மஞ்சள் நிறச் சதைப் பகுதி இருக்கும். பறைபோன்று உள்ள காய் என்ற பொருளால் பறங்கிக்காய் ஆனது என்கிறார்கள்.

பூசணிக்காய் என்பது பச்சை நிறத்தின் மேல் வெண்படலாம் பூசியது போல இருக்கும். உள்ளே வெண்சதைப் பகுதி இருக்கும். இதை வெள்ளைப்பூசணி, நீர்த்துப்பூசணி எனவும் அழைப்பார்கள்.


பூசுணைக்காய் என்ற பெயர்தான் பூசணிக்காய் ஆகிவிட்டது. டுபாய் பூசணி என்ற சிறுவகை இனமும் இருக்கின்றது.


16ம் நூற்றாண்டில் குண்டு வடிவமான புதுவகைப் பூசணிக்காய் அறிமுகமானது. அது பறங்கியர் நிறத்தைப் போன்று இருந்ததால் பறங்கிப் பூசனி என அழைத்தார்கள்.

என்ன யெபர் வைத்தாலும் நம்ம பூசணிதான்

இலங்கையில் பறங்கிக் காயையும் பூசணி என்றே சொல்கிறார்கள். சிங்களத்தில் வட்டக்கா என்கிறார்கள்.

பல்வேறு மொழிகளிலும்  இவ்வாறு அழைக்கிறார்கள்.

Afrikaans - Pampoen
Arabic      - Kara' Safra
Chinese(Mandarin) Nangua
French   Potiron
Hindi Kaddu
Marathi Lal Bhopala
Japan Kabocha
Malayasia Labu
Russia  Tikba

ஆண் பூவும் பெண் பூவும்



இதன் தாயகம் வட அமெரிக்கா வடக்கு மெக்சிக்கோ என்கிறார்கள். தாவரவியல் பெயர் Banincasa hispida ஆகும்.

பேணிப் பாதுகாக்கப்படும் காய்களில் ஒன்று. பல மாதங்கள் வரை முழுக்காய்கள் பழுதடையாது இருக்கும்.

பூசணியின் பயன்கள்

இக்காய் பிதுர் விரத நாட்களுக்கு சிறப்பாகச் சமைக்கப்படும்.

அலங்காரக் கலைப் பொருளாகவும் அனைவரையும் கவர்ந்து இழுக்கின்றது. லாம் ஷேட், ப்ளவர் வாஸ் என பல அலங்காரங்கள் இருக்கின்றன.

முக அலங்காரத்திற்கும் சருமப் பொலிவிற்கும் பூசணிகாய் கூழ் பயன்படுத்தப்படுகின்றது.


கரட்டீன் சத்து அதிகம் இருக்கிறது. வெப்ப காலத்தில் உடலில் அதிகரிக்கும் வெப்பத்தை நீக்குகிறது.

நீர்ச் சத்து இருப்பதால் சிறுநீரக நோய்களுக்கு நல்லது. நார்ப் பொருள் இருப்பதால் மலச்சிக்கலைப் போக்கும்.


பூசணி விதைகள் டயற்றில் இருப்போருக்கு சிறந்தது என்பார்கள். கலோரி குறைவாக இருப்பது காரணமாகும். கொழுப்பும் குறைந்தது.

பூசணியின் போசனை

கலோரி 33
கொழுப்பு 0.2 கிராம்
புரதம் 1.3 கிராம்
கல்சியம் 18 மிகி
இரும்பு 0.6 மிகி
நார்ப்பொருள் 0.5 கிராம்
சர்க்கரை 2.8 கிராம்
விற்றமின் சி -11 மி.கி
விற்றமின் பி1 - 0.06 மி.கி
கரோடின் 2400 மைக்ரோ கிராம்

பூசணியின் போசனை அளவுகளைக் கவனித்தால் அதில் உடலைக் குண்டாக்கும் கொழுப்புப் பொருள் இல்லை எனவும் அளவிற்கு (0.2 கிராம்) குறைவாகவே உள்ளது. அதேபோல எடை அதிகரிப்பிறகு மற்றொரு காரணியான  காலோரி அளவும் (கலோரி 33) மிகக் குறைவாகவே உள்ளது.

எனவே பூசணியானது தான் குண்டாக இருந்தாலும் எம்மைக் குண்டாக விடாது என்று நம்பலாம். தாராளமாகச் சுவைத்து  உண்ணலாம்.

பூசணியின் இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன. அவித்து எடுத்து அவித்த கிழங்கு இறைச்சி மீன் வகைகளை வைத்து சுற்றி எடுத்து சோசில் தோய்த்து உண்ணலாம். கிராமத்தில் பொரியல் செய்துகொள்வோம். இங்கு கிடைப்பதில்லை.

பூசணிப் பூவும் பொரியல் செய்வோம். வெளிநாட்டில் ஸ்டாட்டர் ஆகவும் டீப் ப்ரை செய்து உண்கிறார்கள்.


ரோஸ்டட் விதையிலிருந்து ஓயில் தயாரிக்கிறார்கள். சமையலுக்கும், சலட் டிரெஸிங்கிக்கும்.      பூசணி விதைகளை பச்சையாகவும் வறுத்தும் சுட்டும் உண்ணலாம். சூப், சலட் வகைக்கும் கலந்து கொள்ளலாம்.

பிரபல பூசணி்கள்

அமெரிக்காவில் டல்லே பாரி பூசணிக்காய் எறியும் போட்டி ஒன்றும் நடாத்துகிறார்கள். ஆரம்பத்தில் கைகளால் தூக்கி எறிந்த போட்டி இப்பொழுது பீரங்கியில் வைத்து அடிக்கும் போட்டியாக மாறிவிட்டது. பீரங்கியில் வைத்து அடித்தபோது கால் மைலுக்கு மேல் சென்று விழுந்தது. ரீவி நிகழ்ச்சி ஒன்றில் காட்டினார்கள்.

மிகவும் பெரிய பறங்கிக் காய் அமெரிக்காவில் கிறிஸ்டீபன்ஸ் என்பவரது தோட்டத்தில் விளைந்தது. இதன் நிறை 821 கிலோகிறாம். பூசணியின் அகலம் 15 அடி.


இலங்கையில் முன்னேரியா கல்வானை பகுதியில் 30கிலோ எடையுடைய வெளிநாட்டு வகையைச் சேர்ந்த பூசணிக்காய் சரத் குருவிட்ட என்பவரது தோட்டத்திலே அண்மையில் விளைந்தது.

'பேக்ட் பம்கின் பை' ஐக்கிய ராச்சியத்தின் பாரம்பரியம் மிகவும் பிரபலமான உணவு. எமது நாடுகளில் எரிசேரி, பச்சடி, அல்வா, துவையல், என பலவும் செய்துகொள்கிறார்கள்.


இக்காரக்கறி சாதத்துக்கு ஏற்றது. இன்னுமொரு இலகுவழி இரவு ரொட்டி, சப்பாத்தி, தோசை,இட்லிக்கு பகல்வைத்த கறியை நன்கு மசித்து விட்டால் சட்னிபோல தொட்டுக்கொள்ளலாம் புளிப்பாகவும் இனிப்பாகவும, காரம்சேர்ந்தும்; இருக்கும்;.

பூசணிகாய் காரக்கறி


பழப்பூசணி காய் - ¼ கிலோ
வெங்காயம்  - 1
பூண்டு - 5 பல்லு
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் -சிறிதளவு
கட்டித் தேங்காயப் பால் - 1 டேபிள் };பூன்
உப்பு புளி தேவைக்கு ஏற்ப
தண்ணீர் சிறிதளவு.

தாளிக்க

கடுகு - ¼ ரீ ஸ்பூன்
செத்தல் -  1
உழுத்தம் பருப்பு - ¼ ரீ ஸ்பூன்
வெங்காயம் சிறிதளவு
கறிவேற்பிலை, ரம்பை இலை


செய்முறை

காய்களை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் செத்தல் இரண்டையும்வெட்டி வையுங்கள்.

பூண்டை தட்டி எடுங்கள்.

காய், தண்ணீர், உப்பு, வெங்காயம,; பூண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் கலந்து வேக விடுங்கள்.

வெந்த பின் புளித் தண்ணி ஊற்றி கொதிக்க விட்டு தேங்காய்ப் பால் ஊற்றி கிளறிவிடுங்கள்.


தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து கொட்டிக் கிளறுங்கள்.

:- மாதேவி -:
0.0.0.0.0



Sunday, September 22, 2013

தொட்டால் சிவக்கும் வடிவழகி தரும் சுவை என்ன?

கரட்,முள்ளங்கியைப் போன்றதே பீற்ரூட் இனமும். வேர்க்கிழங்கு தாவரம். ஆங்கில மரக்கறி, வெள்ளைக்காரன் மரக்கறி, வெளிநாட்டு மரக்கறி என முன்னர் அழைத்தார்கள்.சிகப்புக் கிழங்கு என பாட்டிமார் சொல்வார்கள். பலருக்கும் பிடிக்காத மரக்கறிகளில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம்.

நிறத்தில் மயக்கும் இது சுவையில் சுமார்தான்.

'பீற்ரூட் நிற அழகி' என கானா பாடல்களில் பெண்ணை வர்ணித்து இருக்கிறார்கள்.





பொதுவாக வருடம் பூராவும் விளையும் பயிராகும். வீட்டுத்தோடங்களிலும் பயிரிடப்படுகிறது. சாடிகளுக்கும் உகந்த பயிர்தான். வெளிநாடுகளில் கிடைக்கும் காலங்களில் புரோசன் செய்யப்பட்டு பாதுகாத்தும் வைக்கிறார்கள். நம் நாடுகளில் எல்லாக் காலங்களிலும் தாராளமாகக் கிடைக்கும்.


தோட்டங்கள் சிகப்பு முளைத்ததுபோல பார்க்க அழகாக இருக்கும். பச்சை இலையும் சிகப்பு கலந்த வர்ணம் கவர்ந்திழுக்கும்.

வட அமெரிக்காவில் டேபிள் பீற், கார்டன் பீற், ரெட் பீற் எனப் பலவாறு அறியப்பட்டது.


போசாக்கு

100 கிராமில்

கலோரிச் சத்து 180 KJ
காபோஹைரேட் 9.96 கிராம்
நார்ப்பொருள் 2.0 கிராம்
இனிப்பு 7.96 கிராம்
புரதம் 1.68 கிராம்
கொழுப்பு 0.18 கிராம்
பொட்டாசியம் 305 மை.கி
சோடியம் 77 மை. கி
பொஸ்பரஸ் 38 மை .கி
இரும்பு 0.79 மை.கி
கல்சியம் 16 மை. கி
விற்றமின ஊ 3.6 மை.கி
நியாசின் 0.331 மை. கி


ஹெல்தியாக இருக்க விரும்புவோர்கள், முகம் பொலிவுடனும் முகப் பருக்கள் தோன்றாமல் இருக்கவும் பீற்ரூட் சாறு அருந்துவது நல்லது. குழந்தைகளுக்கானது கீழே

இனிப்பு இருப்பதால் நீரிழிவாளர்கள் அளவோடு சாப்பிட வேண்டும்.

உடல் எடைக் குறைப்பிற்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பீற்ரூட் உதவுகின்றது.

இரத்தக் குழாய்களை விரியச் செய்யும் நைட்ரேட் பீற்ரூட்டில் அதிகம் இருப்பதால் உயர் அழுத்தத்தைக் குறைக்கும் என ஒரு ஆய்வு சொல்கிறது.
70 ml of beetroot juice இல் சுமார் 5 mmol of nitrate இருக்கிறதாம்

ஆயினும் இது சிறு ஆய்வு எனவும், இதனால் குறையும் இரத்த அழுத்தமானது 24 மணிநேரத்;திற்கு பிறகும் தொடர்ந்து இருக்குமா? என்பது பற்றியும் சர்ச்சைகள் உள்ளன. மேலும் படிக்க

Beetroot's effect on blood pressure is uncertain


  • கிழக்கு ஐரோப்பாவில் பீற்ரூட் சூப் பிரபலமான உணவாகும்.
  • பென்சில்வேனியாவில் டச் டிஸ் பாரம்பரியமான ஒன்று அவித்த முட்டைகளை பீற் சாறில் இட்டு ஊற வைத்து ரோஸ் கலராகச் செய்வது.  
  • வடஅமெரிக்காவில் பீற் ஊறுகாய் பாரம்பரிய உணவாக இருக்கின்றது. 
  • அவுஸ்திரேலியா, நியூசிலந்து, அரபிய நாடுகளில் ஹம்பேஹர் உடன் பீற் பிக்கிள் பரிமாறப்படுகிறது.

பீற்றின் பச்சை இலைகள் அவித்து எடுக்கப்பட்டு அல்லது ஸ்டீம் பண்ணப்பட்டு பரிமாறப்படுகிறது. இவை பசளைக் கீரையை ஒத்த சுவையைத் தருகின்றன.

க்றில் செய்து அவித்தும் ரோஸ்ட் செய்தும் உண்கிறார்கள்

வைன், பீற்ரூட் யூஸ், சூப், கேக், அல்வா, கட்லட், சான்விச், பிரியாணி, கலர்சாதங்கள், சலட், பொரியல், கறிவகைகள் என பலவாக சமைக்கப்படுகின்றன.

பீற்றூட்டில் இனிப்பு இருப்பதால் கறி இனிக்கும் அதனால் காரத்தை கூட்டி போட்டு சமைப்பது சாப்பிடக் கூடியதாக இருக்கும்.

பீற்றூட் பிரட்டல்

தேவையானவை

பீற் -1
வெங்காயம் - ½
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
விரும்பினால் மசாலா தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
கட்டிதேங்காய்ப் பால் -1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - அவியவிடுவதற்கு

தாளிக்க தேவையானவை

ஓயில் - 1 டே ஸ்பூன்
வெங்காயம் -சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
கறிவேற்பிலை - சிறிதளவு

செய்முறை





பீற்ரூட்டை தோலுடன் நன்கு கழுவி எடுங்கள். பீல் செய்துவிட்டு மெல்லிய சிறு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.


வெங்காயம் சொப்ஸ் செய்து வையுங்கள்.

பச்சை மிளகாயை கீறி எடுங்கள்.

பாத்திரத்தில் போட்டு தண்ணீர் உப்பு கலந்து மூடி போட்டு அவித்து எடுங்கள்.
அவிந்த பின் மிளகாய் தூள் போட்டு கிளறுங்கள்.

தேங்காய்ப் பால் ஊற்றி கலந்து சுரூண்டு வர மசாலாத் தூள் சேர்த்து எடுத்து வையுங்கள்.

ஓயிலில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து

பீற்ரூட் கறியை தாளிதத்தில் கொட்டி ஒரு நிமிடம் கிளறுங்கள்.

தாளித்த வாசத்துடன் பீற்ரூட் மணக்கும்.

அடுப்பை அணைத்து தேசிசாறை விட்டு பிரட்டி கோப்பையில் எடுத்து வையுங்கள்.



 பீற்ரூட் பற்றிய மற்றொரு (முன்னைய) பதிவு 

பீற்ரூட் சாதம்

-மாதேவி-