வருடம் பிறந்ததும் முதலில் இனிப்பான உணவை உண்பார்கள். வருடம் முழுவதும் அதிர்ஸ்டத்துடன் இனித்திடும் என்ற நம்பிக்கைதான்.
அன்று பெரும் பாலும் இந்துக்களின் வீடுகளில் சைவஉணவுகள்தான் சமைப்பார்கள். காலை உணவு, மதிய உணவு, மாலை உணவு, இரவு உணவு எல்லாம் தடபுடலாக நடக்கும்.
அதற்கு நாங்களும் விதிவிலக்கு அல்ல. புதுவருட பிரியாணி செய்துவிட்டோம்.
என்ன ஸ்பெசல் என்கிறீர்களா?
- புது வருட பிரியாணி என்பதால்தான் ஸ்பெசல்.
- அத்துடன் கடையில் வாங்கும் பிரியாணி மசாலாக்கள் ஒன்றும் சேர்க்கப்படவில்லை.
- எல்லாமே எங்கள் வீட்டுத் தயாரிப்பு. கலப்படம் அற்றது என்பதால் சிறந்ததுதானே!
பிரியாணி சாப்பிடும்போது வீட்டில் கேட்டார்கள் ......
"முதல் நாளே பிரியாணி என்றால் ஒவ்வொரு நாளும் பிரியாணிதானே?"
நாள்தோறும் சாப்பிட்டால் என்ன ஆகும்? என்று கேட்டு அவர்கள் வாயை மூடவைத்தேன்.... ஆகா தப்பித்தேன்.
சங்க காலத்திலும் பிரியாணி
பிரியாணி பற்றிச் சற்றுப் பார்ப்போம். சங்க காலத்தில் பிரியாணி சோற்றின் ஆரம்பம் தொடங்கப்பட்டுவிட்டது எனலாம். சங்க இலக்கியத்தில்'ஊன் சோறு' பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. 'ஊன்றுவையடிசில்' என்கிறார்கள்.
படைவீரரும் அரிசியுடன் மாமிசத்தைக் கலந்து சமைத்து உண்டிருக்கிறார்கள்.
பெரும்தேவனார் பாடலில் 'மைஊன் புழுங்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன்' என தலைவி கூகையோடு பேசுவதாக நற்றிணை 83ல் வருகிறது.
அகநானூற்றில் இறைச்சியோடு சேர்ந்த நெய்ச் சோறு ஆக்கிப் படைத்தலும் மணவிழா நாளில் நிகழ்ந்திருக்கின்றன.
Briyani என்பது Persian மொழிவழிச் சொல்லாகும்.Persia என்பது இன்றைய ஈரான் ஆகும். சமைக்கு முன் அரிசி, மரக்கறிகள், மீன், இறைச்சி ஆகியவற்றை நெய்யில் வதக்கி வாசனைகள் சேர்த்து சமைப்பதாகும்.
இம் தயாரிக்கும் சமையல் முறை பல்வேறு நாடுகளிலும் அவர்களது பாரம்பரிய சமையல் முறைகளில் இருந்திருக்கின்றன.
பிரியாணி பல வழிகளில் தயாரிக்கப்படுகிறது. 'தம்' வைத்து சமைக்கும் பிரியாணிகள் சுவையில் கூடியவை.
- ஒவ்வொரு ஊர்களின் பெயரைக் கொண்டும் வெவ்வேறு வகைப் பிரியாணிகள் இருக்கின்றன.
- இந்தியன் பிரியாணி, சிறிலங்கள் இடியப்பப் பிரியாணி, ஈரானியன், இந்தோனீசியன், மலேசியன், காஸ்மீர், ஹைதரபாத், தாய், பிலிப்பினொ என அடுக்கிக் கொண்டே போகலாம்.
- இந்தியாவில் மட்டும் 26 வகைகளுக்கு மேற்பட்ட பிரியாணிகள் தயாரிக்கிறார்களாம்.
பிரியாணி பிரியர்களே ஓடத் தயாராகுங்கள் ஹோட்டல்களை நோக்கி......
இடியப்பப் பிரியாணி பற்றிய எனது முன்னைய பதிவு
எந்த அரிசி
எந்த வகையான அரிசியில் தயாரிக்கலாம். ஆரம்ப காலத்தில் நீண்ட ப்ரவுண் அரிசியில் தாயாரித்தார்கள். அதன் பின்னர் சிறிய வெள்ளை அரிசி வகைகளைப் பயன்படுத்தினார்கள். இப்பொழுது பெரும்பாலும் பசுமதி அரிசியைத்தான் பயன்படுத்துகிறோம்.
புதுவருட கரட் வெங்காய பிரியாணி
பசுமதி ரைஸ் - 1 கப்
பெரிய கரட் - 2
வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 2 கப்
உப்பு - சுவைக்கு
நெய் - 2 ரீ ஸ்பூன்
ஓயில் - 2 ரீ ஸ்பூன்
வீட்டுத் தயாரிப்புத் தூள்கள்
மிளகாய்த் தூள் - ½ ரீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
சோம்புத் தூள் - ¼ ரீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ ரீ ஸ்பூன்
வாசனைக்கு
பட்டை - 2
ஏலம் - 4
பிரிஞ்சி இலை - 1
ரம்பை இலை - 4 துண்டு
பூண்டு இஞ்சி பேஸ்ட் - 2 ரீ ஸ்பூன்
தயாரிப்பு
பசுமதி அரிசியை 15 நிமிடங்கள் தண்ணிரில் ஊற வையுங்கள்.
கரட்டை மெல்லிய சிறிய 1 ½ அங்குல நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
வெங்காயம் நீளப் பக்கமாக மெல்லியதாக நறுக்குங்கள்.
மிளகாய் 4 நீள் பகுதிகளாக வெட்டி விடுங்கள்.
ஒரு ரீ ஸ்பூன் நெய்;யை சோஸ்பானில் விட்டு மெல்லிய தீயில் வடித்து எடுத்த அரிசியை 2 நிமிடம் வறுத்து விடுங்கள்.
இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அவித்து சாதத்தை எடுத்து ஆறவிடுங்கள்.
ஒரு ரீ ஸ்பூன் நெய் ஒரு ரீ ஸ்பூன் ஓயில் தாச்சியில் விட்டு பட்டை, ஏலம், பிறிஞ்சி சேர்த்து பூண்டு இஞ்சி பேஸ்ட் கலந்து வதக்குங்கள்.
பச்சை மிளகாயைப் போட்டு பொரிய விடுங்கள்.
வெங்காயம் கலந்து உப்புப் போட்டு கிளறி, சற்று வதக்குங்கள் கரட் துண்டுகளைச் சேருங்கள்.
வதங்கிய பின் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து கிளறுங்கள். பின் ஆறிய சாதத்தைக் கலந்து நன்கு சேருங்கள்.
பரிமாறும் பாத்திரத்தில் போட்டு வறுத்த கஜீவைத் தூவி விடுங்கள்.
புதுவருடப் பிரியாணி மூக்கைத்துளைத்திடும் உண்பதற்கு தயாராக.
ஏற்கனவே சமைத்து வைத்த பருப்பு, பிரட்டல் கறிகள், சிப்ஸ், சலட், துணையிருக்க சுவைத்திடுங்கள்.
இனிய வருடத்தின் ஆரம்பமாக!!!
பிரைட் ரைஸ் இதுவும் ஒரு வகை பிரியாணிதான்.
:- மாதேவி -:
0.0.0.0