Wednesday, June 10, 2009

வாழை இலை விருந்து

இலை, பூ, காய், பழம், நார், தார், தண்டு, மடல் என அனைத்துமே பயன் பெறப்படும் ஒரே இனம் வாழைதான்.

கதலி, கப்பல், இரதை, ஆனை, சீனி, அம்பன், புளி, செவ்வாழை, மருத்துவ வாழை, மொந்தன், சாம்பல் எனப் பல் இனங்களாக.


உண்பதற்கு சுவை கொடுக்கும் பலவித ருசிகளாக ....


மடலை உலர வைத்து அழகிய கைப்பைகள், கைவினைப் பொருட்கள் என அலங்காரப் பொருட்களாக உருமாற்றுவர்.


இந்துக்களின் மங்கல, அமங்கல தினங்களிலும் மற்றும் கோவில் திருவிழாக்கள் பூசைகளிலும் வாசலில் தலைதாழ்த்தி வரவேற்கும். பச்சிளம் குழந்தையாய் தலைவாசலில் கழைகட்டும்.


நவீன தற்காலத்தில் அடுக்குமாடி பல்கனிகளில் கூட வளர்ந்து நின்று அழகேற்றும். அழகூட்டலுடன் மருத்துவ குணமும் மிக்கது. ஆதியில் விசக்கடிப் பொழுதுகளில் தார்களிலிருந்து பிழிந்தெடுத்த நீரை கடிவாசலில் பூசி உடனடி விச நீக்கியாகப் பயன்படுத்தினர்.


மணிகாட்டி பாவனையில் வராத வேளை இரவில் குழந்தைகள் பிறந்தபோது கதலிவாழையை நடுவே வெட்டிவிடுவார்கள். மறுதினம் காலையில் குருத்து வளர்ந்திருக்கும் நீளத்தை அளவையாகக் கொண்டு நேரம் கணித்து எடுத்தனர்.


வாடிய இலைகளும் வாழைக்குத்திகளும் விவசாயத்திற்கு பசளையாக தோட்ட மண்ணில் உட்புகுந்தன.


விரத காலங்கள், வெள்ளிக்கிழமை, வைபவங்கள், திருவிழாக் காலங்கள் உணவு படைத்து உண்ண இலைகள் பயன்படுகின்றன.

பூக்கள், மாலைகள் வாடாதிருக்கவும், சமைத்த உணவை மடித்துக் கொடுக்கவும், பொங்கல், தொதல், கேசரி, அல்வா போன்றவை செய்து கொட்டி வெட்டவும், உணவுகள் பழுதடையாமல் இருக்கவும் இலைகளை உபயோகித்தனர்.

வாரக்கணக்கில் முருங்கைக் காய் வாடாமல் இருக்க வாழை மடலில் சுற்றி யாழ்தேவியில் பயணித்தனர்.


கோயில்களில் சூடம் ஏற்றவும் பயன்படுத்தினர். இழைத்த காய்ந்த மடல்களை உணவு உண்ணப் பயன்படுத்தினர். இதனை வாழை மடல் அல்லது தடல் என்றும் அழைத்தனர்.


வாழைச்சாறு பட்டால் உடைகள் கறை நீங்காது படிந்து போய் இருக்கும். கைகளில் கறை படியாமல் தடுக்க உப்புத் தூளை கைகளில் தடிவிய பின் காயை நறுக்கிக் கொள்வது நன்று.


வாழைத்தண்டு மருத்துவத்திலும் பெரும் பங்கு வகிக்கின்றது.


சிறுநீரகக் கல் நோய்க்கு வாழைப் பூ, தண்டு போன்றவற்றை கூடியளவில் உணவில் பயன்படுத்துவார்கள். தண்டிலிந்து சாறு எடுத்தும் பருகுவர். மூலவியாதி உள்ளவர்கள் வாழைக்கிழங்கு, தண்டு சமைத்து உண்டு வந்தால் சுகத்தைத் தரும் என்பர். வாழைத்தண்டு உடலில் உள்ள தேவையற்ற நீரைப் போக்கி உடல் இளைப்பதற்கும் உதவி புரிகின்றது என ஹெல்த் உணவாகவும் உண்கிறார்கள்.


பச்சிளம் குழந்தைகள் உடலில் நல்லெண்ணெய் பூசி வாழையிலையில் கிடத்தி காலைச் சூரிய ஒளியில் படுக்க வைப்பர். இளம் சூரிய ஒளியினின்று பெறப்படும் விட்டமின் டி யையும், இலையினின்று கிடைக்கும் குளிர்மை மற்றும் விற்றமின்களைப் பெற்று சரும நோயின்று பாதுகாத்தனர்.


மோர்க் குழம்பு, கூட்டு, காரப்பிரட்டல், தேங்காய்ப் பால் கறி, பொரித்த குழம்பு, பொரியல்,சிப்ஸ், பொடிமாஸ், சட்னி, சம்பல், கட்லட், பஜ்ஜி என மெனுக்கள் பலவாக உருவாகும்.


வாழை இலைக் குளியல் அழகு சாதனக் குளிப்பாக பிரசித்து பெற்று வருவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். இவ்வளவு நன்மைகளும் இருப்பதனால் போலும் வாழையடி வாழையாக குலம் தளைத்து வாழ்க என முன்னோர் வாழ்த்தினர்.


வாழை இலையில் விருந்துண்ண ஆசையாக இருக்கிறதா?
இதோ எங்கள் வீட்டு விருந்தும் தயாராகி இருக்கிறது.
வருகிறீர்களா விருந்துண்ண!


தலை வாழையிலையைப் போட்டு, அளவான சூட்டுடன் இருக்கும் நாட்டரிசி சோறு இட்டு பருப்பு மேல் உருக்கிய நெய்விட்டு கமகமக்கும் வாசத்துடன் இன்னும் சுவை சேர்ப்பதற்கு கீரை மசியல், கூட்டு, குழம்பு, கரட் சம்பல், பயிற்றங்காய்க் கறி, வாழைக்காய் சிப்ஸ், பப்படம், தயிர், பாற்சொதி, வாழைப்பழம் சேர்த்து விருந்துச் சாப்பாடு சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

இதோ ஞாபகத்திலிருந்து ஒரு பழைய நொடி.

என்ன?

அன்னம்
என்ன அன்னம்?
சோத்து அன்னம்
ஏன்ன சோறு?
பழம் சோறு
என்ன பழம்?
வாழைப்பழம்
என்ன வாழை?
திரிவாழை
என்ன திரி
விளக்குத் திரி.
என்ன விளக்கு
குத்து விளக்கு.
என்ன குத்து?
இந்தக் குத்து.






இந்தக் குத்து என்று சொல்லியபடி முஸ்டியை மடக்கி அக் காலக் குழந்தைகள் குத்துவிடுவார்கள்.



நீங்கள் அவ்வாறு குத்து விட்டதில்லையா?


மாதேவி

17 comments:

  1. மாதவி நானும் வரேன்,


    எனக்கு ஒரு இலைய போடுங்கள் வாழையிலையில் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது.

    ReplyDelete
  2. //மச்சானை பாத்திங்களா? மல வாழை தோப்புக்குள்ளே.//

    //தலைவாழை இலை போடுங்கள், அவரை விருந்துக்கு வர சொல்லுங்கள். //

    இந்த பழைய ஹிட் பாடல் தான் ஞாபகம் வருது வாழை தோப்பு பார்த்ததும்.

    ReplyDelete
  3. வாழையைப் பற்றிய நல்ல தகவல்களை விளக்கமாக பரிமாறி இருக்கிறீர்கள் இலை போட்டு. நன்றி. அந்த விளையாட்டு பாடல் எங்கள் ஊரில் வேறு விதமாக இருக்கும்:)!

    ReplyDelete
  4. hi maadevi

    eppidi sugam. very nice to even see it . how nice can i take it. food s not only taste its reflect our life stle,culture.

    nandhu
    nandhuzn@yahoo.com

    ReplyDelete
  5. யாழ் தேவி -ன்னா என்னங்க ?

    ReplyDelete
  6. நன்றி ஜலிலா. வெள்ளவத்தை மார்க்கற்றில் வெள்ளி, பறுவம் மற்றும் விரத நாட்களில் வாழையிலை கிடைக்கும்.
    வாங்க சாப்பிட.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி. உங்கள் ஊரில் பாடும் அந்த விளையாட்டுப் பாடலை உங்கள் புளக்கில் பதிவிடலாமே.
    பலரும் அறியவும், பிள்ளைகள் பாடி விளையாடவும் உதவுமே.

    ReplyDelete
  8. உண்மைதான் நந்து. பாரம்பரிய உணவுமுறைகள் எமது பண்பாட்டின் வெளிப்பாடுதானே. ஆனால் அவற்றைப் பயன்படுத்த எமது அவசர வாழ்க்கை முறைக்கு நேரம் ஏது?

    ReplyDelete
  9. நன்றி Karuthu Kandasamy. யாழ்தேவி என்பது யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையே முன்பு நடந்த ஒரு விரைவு ரயில் சேவை. மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. போர் காரணமாக கடந்த 25 வருடங்களாக முடங்கிப் போயிற்று.

    ReplyDelete
  10. வாழைக்கு இவ்வளவு உபயோகங்களா. நல்லதொரு கருத்து நிறைந்த பதிவைக் கொடுத்துஇரிக்கிறீர்கள் மாதேவி. மீண்டும் படிக்கத்தோன்றுகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  11. //என்ன குத்து?
    இந்தக் குத்து.//

    அது கும்மாங் குத்து இல்லீங்களா? நாங்க அப்படி சொல்லித்தான் குத்துவோம் :)

    ReplyDelete
  12. வல்லிசிம்ஹன்.உங்கள் பாராட்டுக்கு நன்றி

    ReplyDelete
  13. நன்றி பாசகி. ஊருக்கு ஊர் நொடிப்பாடல்களில்தான் எவ்வளவு மாற்றங்கள். அறிந்ததில் மிகுந்த சந்தோஷம்.

    ReplyDelete
  14. ஆ கும்மா குத்து வலிக்குதே :))

    அருமையான பகிர்தல் மாதேவி!

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி ரம்யா. விளையாட்டுப் பருவத்தில் வலித்தது, இன்று மீள நினைக்கும் போது இனிக்கும் அல்லவா?

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்