Saturday, August 15, 2009

பயத்தங்காய் பலாக் கொட்டைப் பிரட்டல்

இந்துக்களின் முக்கிய விரத நாட்களில் இக் கறியும் சமைக்கப்படும். திவசம், அமாவாசை, பௌர்ணமி போன்ற பிதுருக்கு படைக்க வேண்டிய படையலில் நிச்சயமாக இக் கறியும் இடம் பெறுவது வழக்கம்.

பீன்ஸ் இனத்தைச் சேர்ந்த இது புரொட்டின் சத்தும் கூடியது. விரத நாட்களில் மட்டுமின்றி வீடுகளில் சாதாரண நாட்களிலும் இது சமையலில் இடம் பிடிக்கும்.

நீண்ட முற்றல் இல்லாத ஊர்ப் பயிற்றங்காயாக இருப்பது சுவையைக் கூட்டும்.


இக்காயுடன் வாழைக்காய் அல்லது உருளைக் கிழங்கு சேர்த்து குழம்பு செய்வதுண்டு.

இத்துடன் தேங்காய்ப்பால் வெள்ளைக்கறியும் சமைக்கலாம்.

பொரியல், கூட்டு செய்வதும் வழக்கம்.

முற்றிய விதைகளைப் பொரித்தெடுத்து சிப்ஸ்சும் செய்து கொள்வார்கள். காய்ந்த விதைகளை அவித்தெடுத்து சுண்டலாக உண்ணுவதும் வழக்கம்.

பொதுவாக முதலில் எண்ணெய் விட்டு, கடுகு வெங்காயம் தாளித்த பின் காயையும் போட்டு நன்கு வதக்கிய பின்பு தேங்காய்ப்பால், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு சமைப்பார்கள்.

இன்றைய முறையில் காயை வதக்காமல் நேரடியாகச் சமைத்த பின்பு தாளித்து சேர்ப்பதால் காய் நன்றாக அவிந்து மென்மையாக இருக்கும்.

கறியும் நல்ல வாசத்துடன் இருக்கும்.

செய்து கொள்வோமே!

பொருட்கள்

பயிற்றங்காய் - ¼ கிலோ
பலாக்கொட்டை – 10
சின்ன வெங்காயம் - 5-6
பச்சை மிளகாய் - 1
வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ரீ ஸ்பூன்
தனியா தூள் - ½ ரீ ஸ்பூன்
சீரகத் தூள் - ½ ரீ ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 ½ ரீ கப்
தேசிப் புளி – 1 ரீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க

ஓயில் - 2 ரீ ஸ்பூன்
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு- ½ ரீ ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4-5
கறிவேற்பிலை – சிறிதளவு

செய்முறை

காயை இரண்டு அங்குல நீள் துண்டங்களாக முறித்து எடுங்கள்.


பலாக்கொட்டையின் மேல் தோலை நீக்கிவிடுங்கள். உட் தோலை விரும்பாதுவிட்டால் தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு தோலைச் சுரண்டி எடுத்துவிடுங்கள். ஆனால் அதில் அதிக ஊட்டச் சத்து உள்ளதை மறந்து விடாதீர்கள்.

பாலாக்கொட்டையை பாதியாக நீளவாட்டில் வெட்டி வையுங்கள்.

வெங்காயம் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

பச்சை மிளகாயை இரண்டு துண்டுகளாக வெட்டி விடுங்கள்.

தாச்சியில் காய், பலாக்கொட்டை, வெட்டிய வெங்காயம் மிளகாய் இவற்றுடன் வெந்தயம், உப்பு, தூள் வகைகள் சேர்த்து, தேங்காய்ப்பாலை ஊற்றி கலக்கி இறுக்கமான மூடி போட்டு அவியவிடுங்கள்.

பத்து நிமிடங்களின் பின் திறந்து தட்டைக் கரண்டியால் பிரட்டிவிட்டு, தீயை சற்றுக் குறைத்து வையுங்கள்.

இரண்டு நிமிடங்களின் பின் மூடியைத் திறந்து பிரட்டிவிடுங்கள்.

தீயை நன்றாகக் குறைத்து வைத்து காய் நன்கு வரண்டு வர தீயை அணைத்து
எலுமிச்சம் சாறு விட்டு பிரட்டி இறக்குங்கள்.

ஓயிலில் தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, சமைத்த காய்களைக் கொட்டி ஒரு தடவை பிரட்டி இறக்கிவிடுங்கள்.

சேவிங் போலில் எடுத்து வையுங்கள்.

கமகம மணத்துடன் பயிற்றங்காய் பிரட்டல் தயார்.

மாதேவி

12 comments:

  1. தலைப்பு மிரட்டலா இருந்திச்சு.. வந்தேன்... ஆனா நான் ஒரு மாமிசஉண்ணி :(

    ReplyDelete
  2. மாதேவி பலக்கொட்டை அவிது புளியிட்டு சமைக்கும் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் இங்கு பலாக்கொட்டை கிடைப்பது ரொம்ப அரிதாக இருக்கு.

    அசத்தலா அதுவும் பய்த்தங்காயுடன் செய்து இருக்கீங்க.

    ReplyDelete
  3. நன்றி ஜலீலா. நீங்கள் கூறியது போல புளியிட்டு சமைக்கும் குழம்பு சுவையானதுதான்.

    ReplyDelete
  4. நன்றி.மாமிச உண்ணிகள் கருவாடு போட்டுச் சமைக்கலாமே. மதுவதனன் மௌ.

    ReplyDelete
  5. நன்றி செந்தழல் ரவி

    ReplyDelete
  6. வித்தியாசமா இருக்கே காம்பினேஷன் - நல்லாருக்கு ஃபோட்டோஸோட!! உங்க ஹெட்டர் கலக்கலா இருக்கு!

    ReplyDelete
  7. மாதேவி,எங்கள் யாழ் மணத்தோடு ஒரு கறி.எனக்கும் பிடிக்கும்.நான் அடிக்கடி சமைத்தும் கொள்வேன்.
    இதோடு இரு ரசம் வைத்தால் அப்பப்பா.எஙக்ள் வீட்டில் பயற்றங்காய் கறிக்குக் கொஞ்சம் பெருஞ்சீரகம் கறிவேப்பிலை வறுத்துப் பொடி பண்ணிப் போடுவோம்.வாசனை தூக்கும்.

    ReplyDelete
  8. நன்றி சந்தனமுல்லை.
    "ஹெட்டர் கலக்கலா இருக்கு!" உங்கள் பாராட்டை சின்னுவிடம் கையளிக்கிறேன்.

    ReplyDelete
  9. வித்யாசமானதொரு சமையல் முயற்ச்சிக்கிறேன்...

    ReplyDelete
  10. http://allinalljaleela.blogspot.com/2009/08/blog-post_25.html


    வாங்க வந்து மாதேவி நான் கொடுக்கும் அவார்டை ஏற்று கொள்ளுங்கள்

    ReplyDelete
  11. நன்றி தர்சினி.முயற்சித்துப் பாருங்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்