Sunday, January 6, 2013

முல்லை நிலம் எங்கும் தேடி முல்லை கொய்து வந்தேனே!!


ஐவகை நிலத் திணைகளில் காடும் காடு சேர்ந்த இடமும் முல்லை நிலமென அழைக்கப்படும். இந்த நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.


சங்க இலக்கியத்தில் பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒரு பகுதியாக முல்லைப் பாடலும் இருக்கிறது. இது முல்லைத் திணைக்குள்ள நூலாகும்.

நம்பூதனார் கவிநயத்தோடு எழுதியது முல்லைப் பாட்டு.

முல்லை மலர் என மல்லிகையில் மிகுந்த நறுமணமுள்ள ஒரு இனம் உள்ளது. Jasminium auriculatum  oleacea குடும்பத்தைச் சார்ந்தது. நீண்ட காம்புடன் கூடிய வெண்நிற சிறிய மல்லிகை இனம் இது. கொத்துக் கொத்தாக மலரும் செடி. பெரிய மரமாக வளரக் கூடியது முல்லை மல்லி என அழைப்பார்கள்.

நன்றி விக்கிபீடியா

முல்லைக் கொடி படர்வதற்கு தனது தேரைக் கொடுத்த பாரி வள்ளலும் நமது இலக்கியங்களில் வருகின்றார். முல்லை எனும் சொல் வனமுல்லையைக் குறிக்கும் என்கிறார்கள். பாரி வள்ளல் தேரை வழங்கியது இம் முல்லைக்குத்தான்.

நன்றி விக்கிபீடியா
 இதற்குக் காய்களும் இருக்கின்றனவாம்.

நன்றி விக்கிபீடியா
 முல்லைப் பூக்களில் பல வகைள். சாதி மல்லி,

நன்றி விக்கிபீடியா

நித்திய மல்லி, மௌவல் எனப்படும் மரமல்லி இது நள்ளிரவில் பூத்து மணக்கும்.

நன்றி விக்கிபீடியா
 முல்லை ஆறும் இருக்கின்றது.

இலங்கையில் முல்லைத் தீவு என்ற ஊரும் இருக்கிறது. திருக்கருகாவூர், வடதிருமுல்லைவாயில், திருக்காவிரிப்பூம்பட்டினம், திருக்கருப்பறியலூர். கோயில்களில் முல்லை தலமரமாக அமைந்து சிறப்புப் பெறுகிறது.

இப்பொழுது முல்லை என அழைக்கப்படும் முல்லை மல்லிகை செடி பூவுடன் நன்றி விக்கிபீடியா

200 மைல்களுக்குப் பிரயாணம் செய்து முல்லை நிலமெல்லாம் ஏறி இறங்கி நான் தேடிக் கொய்து வந்தது முல்லை என அழைக்கப்படும் கீரை வகை இலைச் செடி.


இந்த இலைக்கும் இயற்கை வாசம் உண்டு. இலையை ஒடித்தால் மணம் கமழும்.

கிராமத்தில் எங்கள் வீட்டில் எப்பொழுதும் செடி இருக்கும். மழைக்கால உணவாகவும் பலதடவை கை கொடுத்திருக்கின்றது.

எங்கள் வீட்டில் எங்களுக்காக வளர்ந்திருந்து காத்திருந்த முல்லைச் செடி

எமது கிராமத்துக் காணிகளில் தேடித் திரிந்து பறித்து வந்திருக்கின்றேன். இதற்கு விலை கொடுக்க முடியுமா? தேடினாலும் நகரங்களில் கிடைக்காதது. இவ் இலைகளை வைத்து சுவையாகச் சமைக்க முடியும்.

பால்சொதி, குழம்பு, செய்து கொள்ளலாம். முல்லை இலைக் கஞ்சி, ஒடியல் ஊழ், என்று பலவும் சமைக்கலாம்.


முல்லை இலை வாசத்துடன் சொதி கமகமக்க சாதத்தில் விட்டு குழைத்து சுவையாக உண்ணலாம்.

இடியப்பம், பிட்டு, பாணுக்குச் சுவைக்கும்.


எங்கள் அம்மா மீன் தலையுடன் முல்லை இலைகளைப் போட்டு சொதி வைப்பார்கள். முல்லை முருங்கை இலைகள் இரண்டையும் கலந்தும் சொதி செய்வோம்.

முல்லை இலைச் சொதி

தேவையானவை

முல்லை இலை

கட்டித் தேங்காய்ப்பால் - 2 கப்
பச்சை மிளகாய் - 4
சின்ன வெங்காயம்  - 6-7
முல்லை இலைகள் - 15-20
தேசிப்புளி - 1 ரீ ஸ்பூன்
உப்பு -  தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு

செய்யும் முறை

நல்ல இலைகளாக தேர்ந்து எடுங்கள்.

இவ்வாறு பூச்சி பிடித்த இலைகளை தவிருங்கள்

இலைகளின்; காம்புகளை நீக்கி விடுங்கள். நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய் வெங்காயம் வெட்டி வையுங்கள்.

பாத்திரத்தில் இலைகள், பச்சை மிளகாய் வெங்காயம் உப்புப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அவிய விடுங்கள். அவியும்போதே வாசம் தூக்கும்.

அவிந்த பின் தேங்காய்ப்பால் ஊற்றி தேசிப்புளி சிறிதளவு விட்டு கலக்குங்கள்.

கொதிக்கத்தொடங்க கலக்கி விட்டு மீண்டும் ஒரு கொதிவர இறக்குங்கள். பின்பு மீதி தேசிப்புளியைக் கலந்து கோப்பையில் ஊற்றி வையுங்கள்.


கமகம வாசத்துடன் முல்லை இலைச் சொதி தயாராகிவிட்டது.
( விரும்பினால் தாளித்துக் கொட்டுங்கள் )

:- மாதேவி -:

18 comments:

  1. அன்பு மாதேவி, எங்கள் ஊரிலும் கிடைக்குமா. முல்லைப்பூ கிடைக்கிறது.சொசைட்டியில் கேட்டுப் பார்க்கிறேன். மிக மிக நன்றி. உங்கள் காவியமாக மணக்கிறது அம்மா.

    ReplyDelete
  2. முல்லை சொதி மிக நன்றாக இருக்கும் போலவே மாதேவி.(எங்கள் ஊரில் முல்லை இலை வேறு மாதிரி இருக்கும்)
    அருமையான பகிர்வு.
    படங்கள் எல்லாம் அழகு.
    திருகடையூரிலும் முல்லைதான் தலவிருட்சம்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு முல்லைக்கு

    ReplyDelete
  4. கம கம என மணம் பரப்பி மனம் மகிழ்வித்த அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. முல்லைப் பூவை, சங்க இலக்கியத்தில் (முல்லைப் பாட்டு) தொடங்கி சமையலறை வரை மணக்கச் செய்தமைக்கு நன்றி! தமிழ்நாட்டில் பெரும்பாலும் முல்லைப் பூவை பெண்கள் தலையில் சூட்டிக் கொள்ளத்தான் ஆசைப்படுவார்கள். சமையல் செய்வதில்லை.

    ReplyDelete
  6. முல்லை போல மணம் வீசும் அழகிய பல தகவல்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. முல்லைப்பூவுக்கு ஒரு சரித்திரமே சொல்லிப்போட்டீங்கள் மாதேவி.முல்லையில் சொதியா....வாசனை எல்லோருக்கும் பிடிக்குமா பார்க்கலாம் !

    ReplyDelete
  8. ஆமாங்க முல்லைப்பூவை தலையில் சூடித்தான் பார்த்திருக்கிறேன். இதிலும் சமையலா ? அறிய தகவல் நன்றிங்க.

    ReplyDelete
  9. அவசர பயணம் போகவேண்டி வந்ததால் உடன் பதில் தர முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

    வருகைதந்து கருத்துக்கள் கூறிய
    முனைவர் குணசீலன்.
    வல்லி சிம்ஹன்.
    கோமதி அரசு.
    கவியாழி கண்ணதாசன்.
    இராஜராஜேஸ்வரி.
    தமிழ் இளங்கோ.
    கோபால கிருஷ்ணன்.
    ஹேமா.
    சசிகலா.
    உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  10. முத்தான முல்லை மலரின் பதிவு.
    அருமை தோழி.
    ஆனால் எங்களால் இந்த மாதிரி சமைக்க முடியாது.
    எங்கே... கிடைத்தால் தானோ சமைப்பதற்கு.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  11. வாருங்கள் அருணா செல்வம்.

    ஆமாம் நீங்கள் கூறியதுபோல இக்காலம் கிராமத்திலேயே கிடைப்பது சிரமமாக இருக்கின்றது. தற்போது இவ்வகை சமையல்களை செய்பவர்களும் அரிது.

    விரும்பினால் மரக்கறி சொதி பாருங்கள்.
    http://sinnutasty.blogspot.com/2008/08/blog-post.html

    வருகைக்கு மிக்கநன்றி.

    ReplyDelete
  12. முல்லை பற்றிய தகவல்களும் முல்லை இலைகள் கலந்த குழம்பும் முல்லை மலர் போல மணக்கின்றன! எங்கள் ஊரின் பெயரும் முல்லைவாசல்!

    ReplyDelete
  13. முல்லைப் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி,அதில் சொதி செய்து அசத்திட்டீங்க,இதுவரை அதனை சமையல் செய்வார்கள் என கேள்விபட்டதில்லை...

    ReplyDelete
  14. உங்கள் ஊரின் பெயரும் இனிதாக மணக்கின்றது.

    வருகைக்கு மிக்கநன்றி மனோ சாமிநாதன்.

    ReplyDelete
  15. இது ஒருவகை இலைக்கீரை இனம்.

    வருகைக்கு மிக்க நன்றி மேனகா.

    ReplyDelete
  16. முல்லைப்பற்றிய அத்தனை தகவல்களும் அருமை.முல்லை இலை சேர்த்த குழம்பு புதுமை.

    ReplyDelete
  17. வாருங்கள் ஸாதிகா.

    இது பாரம்பரிய வகை. இப்பொழுது இதைஎல்லாம் மறந்தாகிவிட்டது.

    பலரும் அறிந்திருக்கட்டும் என்று பகிர்ந்தேன்.
    மிக்கநன்றி ஸாதிகா.

    ReplyDelete
  18. முல்லை பற்றிய பகிர்வு அர்மை.சொதி குறிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்