Thursday, September 4, 2008

அம்மன் கோவில் ஞாபகம் வந்திடுச்சே ஆசையில் ஓடிப் போனேன்.


பரந்த வெளி. சுழற்றி வீசும் அனல் காற்றின் வெப்பம். துடித்துப் பதைத்து மதிய வெப்பத்தில் பாதம் சிவக்க ஓடினால் வாவா என அழைக்கும் ஆல மரக் கூடல். வேர் விட்டு கிளை பரப்பி விசாலித்து நிழலைத் தந்து கொண்டு வழிப்போக்கர்களின் ஓய்விடமாய்…

மரத்தைத் தாங்கும் விழுதுகளில் தொங்கி ஆடும் சிறுவர்களின் கூச்சல் கல்லடுப்புகளில் அவியும் நீர்ப்பாளையம். படைப்பதின் மணம் காற்றில் பரவி ஊரெங்கும் கமழும். கோடை நோய்களைத் தணிக்க, வெப்பத்திற்கு இதமாக அம்மனுக்கு குளிர்த்தி செய்யும் அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்.

பூசைப் படையலுக்கு கற்பூர ஆரத்தி!

“எப்படா முடியும்” என ஆவலுடன் கைகளில் வாழை இலை துண்டு, ஆலமிலைத் தட்டம், கொட்டாங்குச்சி ஏந்திய வண்ணம் இருக்கும் கூட்டம். அந்த நீர்ப்பாளையத்தின் ருசியையும் மணத்தையும் சொல்வதற்கு வார்த்தைகள் உண்டா?


சாம்பார் சாதம், அவிசு, ஒண்டாக் காச்சல், கறிச்சோறு


இப்படி எத்தனையோ பெயர்களில் அழைக்கலாம்.


தேவையான பொருட்கள்


நாட்டுப்புழுங்கல் அரிசி – 1கப்

(அல்லது சம்பா)


கிராமத்து காய்கறிகள்


மரவள்ளி – ¼ கிலோ
மஞ்சள் பிஞ்சுப் பூசணி (தோலுடன்) - ¼ கிலோ
பயித்தங்காய் - 150 கிராம்
கத்தரிக்காய் - 150 கிராம்
வாழைக்காய் - 150 கிராம்
புடலங்காய் - 150 கிராம்
பலாக்கொட்டை – 10
முளைக்கீரை சிறிய கட்டு -1
தக்காளி -3
கரட் -1 (விரும்பினால்)
துவரம்பருப்பு – ¼ கப்
வறுத்துத் தோல் நீக்கிய பாசிப்பயறு – ¼ கப்
தேங்காய்ப்பால் -1 கப்
மிளகாயத்தூள் -2 தேக்கரண்டி
தனியா -1தேக்கரண்டி
சீரகத் தூள் - 1தேக்கரண்டி
மஞ்சள்பொடி சிறிதளவு
புளி – இரண்டு சிறிய எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு


தாளிக்க


சாம்பார் வெங்காயம் - 6-7

செத்தல் -1
கடுகு – ½ ரீ ஸ்பூன்
உழுத்தம் பருப்பு – 1 ரீ ஸ்பூன்
நெய் - 2 டேபில் ஸ்பூன்


சேர்த்துக் கொறிக்க சிப்ஸ்


மரவள்ளி – ¼ கிலோ

மிளகாய்த்தூள் - ¼ ரீ ஸ்பூன்
உப்பு சிறிதளவு
பொரிப்பதற்கு தேங்காய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - ¼ லீட்டர்


மேலதிக தேவைக்கு

வாழை இலை -1

மண்சட்டி -1
கொட்டாஞ் சோறு ருசிக்கு 1 வெற்றுத் தேங்காய் மூடி


செய்முறை


மரக்கறிகளை நடுத்தர அளவான துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், செத்தல் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.

நாட்டுப் புழுங்கல் என்றால் மரக்கறியும் அவிவதற்கான தண்ணீரையும் சேர்த்துவிட்டு, அரிசி பருப்பை அவியவிடுங்கள். அரைவேக்காடு அவிந்ததும் மரக்கறிகள், மிளகாய்ப் பொடிவகைகள், உப்பு சேருங்கள்.

(சம்பா என்றால் அரிசியுடன் பருப்பு மரக்கறிகள் (கீரை, தக்காளி தவிர) சேர்த்து பெரிய ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அரிசி மரக்கறிகள் மூடும் அளவிற்கு தண்ணீர்; விட்டுவிடுங்கள். மிளகாயப் பொடிவகைகள், உப்புச் சேர்த்து அவிய விடுங்கள்.)

15 நிமிடத்தின் பின் திறந்து பிரட்டி மூடிவிடுங்கள். 10 நிமிடங்களின் பின் கீரை தக்காளி சேர்த்து மூடிவிடுங்கள். 5 நிமிடத்தின் பின் புளிக்கரைசல் ஊற்றி கிளறுங்கள். பின் தேங்காய்ப்பாலையும் விட்டுக் கிளறி சிம்மில் வையுங்கள். இறுக நெய்விட்டு தாளித்துக் கொட்டிக் கிளறுங்கள்.


கொட்டாஞ் சோற்றுக் கோப்பைக்கு

தேங்காயின் அடி மூடியை எடுத்து வாள்பிளேட் கொண்டு வெளித் தும்பை நன்றாகச் சுத்தம் செய்து, 6-7 மணித்தியாலம் தண்ணீரில் ஊறப் போட்டு Steal வூல் கொண்டு உட்புறம் வெளிப்புறம் தேய்த்து உப்பு நீரில் கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

சிப்ஸ்

மரவள்ளியை 2-3 அங்குல நீள் துண்டுகளாக மெல்லியதாகச் சீவி சற்று வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது பேப்பர் ஒன்றில் போட்டு பான் காற்றின் கீழ் வைத்துவிட்டால் ஈரம் உலர்ந்திருக்கும். பொன்னிறமாகப் பொரித்து எடுத்து, உப்பு மிளகாய்த்தூள் தூவிவிடுங்கள். ஒரு மாதமளவில் கெடாமல் இருக்கும். விரும்பிய பொது கொறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது சமைத்த சாம்பார் சாதத்தை எடுத்து வாழையிலையில் வைத்து இறுக்கமாக மடித்து வையுங்கள்.

கொட்டாஞ் சோற்றுக் கோப்பை, சட்டி இதிலும் போட்டுக் கொள்ளுங்கள்.

உங்கள் விருப்பமான சுவைக்கு ஏற்ப அம்மன் கோயில் சாதம் அம்மாவின் சட்டிக் கைமணம், கொட்டாஞ் சோற்று நினைவுகளுடன் உண்டு மகிழுங்கள்.

குறிப்பு

பிரஸர் குக்கர், ரைஸ்குக்கர், மைக்ரோ விலும் செய்து கொள்ளலாம். கிராமத்து காய்கறிகள் இல்லாத இடத்தில் பீன்ஸ், கரம், கோவா சேர்த்து செய்து கொள்ளலாம். மசாலா விரும்பினால் பட்டை, கராம்பு, சோம்பு சேர்த்துக் கொள்ளலாம்.

-: மாதேவி :-

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நன்றி எலன்.வருகைக்கும் ரசனைக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்